ஜப்பான் நாட்டு நாணயமான ‘யென்’னின் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்துகொண்டே போவதால், புல்லட் ரயில் திட்டத்திற்காக இந்தியா பெற்ற கடன்தொகையில் திடீரென ரூ. 6 ஆயிரத்து 160 கோடியை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திட்டப்பணிகளே இன்னும் துவங்கப்படாத சூழலில் கடன்மதிப்பு- அதுவும் ஒரே ஆண்டில் ரூ. 6 ஆயிரம் கோடி அதிகரித்துள்ளது ரயில்வே துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டு கடனுதவியுடன் மும்பை – அகமதாபாத் இடையே 508 கி.மீ. தூரத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி செலவில் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ‘இந்தியாவின் முதலாவது அதிவேக புல்லட் ரயில் திட்டம்’ என்றும் இத்திட்டத்தை அவர் அழைத்தார்.

மேலும், குஜராத் தேர்தலையொட்டி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை இந்தியாவுக்கே நேரில் வரவழைத்து கடந்த ஆண்டு அகமதாபாத்தில் புல்லட் ரயில் திட்டத்தை மோடி துவக்கி வைத்தார்.

அப்போதே இத்திட்டத்திற்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இந்தியா போன்ற நாட்டில் சாதாரண மக்களும் பயணிக்கும் வகையிலான ரயில்களை இயக்குவதுதான் சரியாக இருக்கும். புல்லட் ரயில் எல்லோருக்கும் பயன்படாது. இப்படியொரு திட்டத்திற்கு ரூ. 1 லட்சம் கோடியை முடக்க வேண்டியதில்லை. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-யைப் போல இதுவும் தோல்வி அடையும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தற்போது புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலமெடுக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் அவர்களின் வாழ்விடத்திலிருந்து விரட்டப்பட்டு வருகின்றனர். தங்களின் கிராமங்கள் முற்றிலுமாக அழியும் நிலையில் பழங்குடி மக்கள் வேதனையுடன் போராடி வருகின்றனர்.

மத்திய பாஜக அரசோ, 2018-க்குள் நிலமெடுக்கும் பணிகளை முடித்துவிட்டு, 2019 ஜனவரியில் புல்லட் ரயில் திட்டப் பணிகளை துவங்கி விடுவது என்று தீவிரமாக உள்ளது.

இந்நிலையில்தான் புல்லட் ரயில் திட்டத்திற்கான கடன்மதிப்பு திடீரென அதிகரித்து, மோடி அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புல்லட் ரயில் திட்டத்திற்காக இந்தியா ரூ. 1 லட்சம் கோடியை செலவிட உள்ளது. இதில் ரூ. 88 ஆயிரம் கோடியை ஜப்பான் அரசிடம்தான் 0.1 சதவிகித வட்டிக்கு இந்தியா கடன் வாங்கியுள்ளது. இதனை 50 ஆண்டுகளுக்குள் இந்தியா திருப்பிச் செலுத்த வேண்டும். கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி, புல்லட் ரயில் கடன் திட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியா கடன் வாங்கியபோது, போரெக்ஸ் சந்தை நிலவரப்படி ஜப்பான் நாட்டு நாணயமான ‘யென்’ மதிப்பு 57 பைசாவாக இருந்தது. இது கடந்த ஜூலை 25-ஆம் தேதி 61 பைசாவாகவும், ஜூலை 31 அன்று 62 பைசாவாகவும் உயர்ந்துள்ளது.இதனால் இந்தியா ஜப்பானுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை, வாங்கிய கடன்தொகையைக் காட்டிலும் திடீரென ரூ. 6 ஆயிரத்து 200 கோடி அளவிற்கு உயர்ந்துள்ளது. இதில் வட்டி சேர்க்கப்படவில்லை. அதையும் சேர்த்தால் பல ஆயிரம் கோடிகளை ஜப்பானுக்கு அள்ளித்தர வேண்டும்.யென் நாணய மதிப்பு மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தியாவின் கடன்மதிப்பும் வட்டியும் பலமடங்கு அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் கடந்த 10 ஆண்டுகளாகவே இந்திய ரூபாய்க்கு நிகரான ஜப்பான் நாட்டின் யென் மதிப்பு அதிகரித்து வருகிறது. 2007-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி ரூபாய்க்கு நிகரான யென் பரிவர்த்தனை மதிப்பு 0.3517 பைசாவாக இருந்தது என்றால், அதுவே 2017 செப்டம்பர் 15-இல் 0.5786 பைசாவாக உயர்ந்தது. தற்போது 62 பைசாவையை நெருங்கியுள்ளது.

இதனால், தற்போது ஒரே ஆண்டிலேயே திடீரென ரூ. 6 ஆயிரத்து 160 கோடி அதிகரித்துள்ளது.

அப்படியிருக்க, ஜப்பானிடம் வாங்கிய கடனை 50 ஆண்டுகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் எனும்போது அதற்குள்- வட்டி அல்லாமல் கடன் மதிப்பிலேயே எவ்வளவு தொகையை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும்? என்பதை நினைத்து ரயில்வே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.