ஈஷாவின் முன்னாள் சீடர் அம்பலப்படுத்துகிறார்

ஜக்கி வாசுதேவ் உரைகளால் ஈர்க்கப்பட்டு, பிறகு தெளிவு கிடைத்த பிறகு அதிலிருந்து வெளிவந்த அனுபவத்தை வாசுகி பாஸ்கர் என்ற முன்னாள் சீடர் முகநூலில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.

ஈஷா மையம் சட்டத்துக்கு புறம்பாக நடப்பது மட்டுமே நாம் ஈஷாவை எதிர்ப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அது அரசியல். சட்டப் பிரச்சினை, பாரதப் பிரதமர் மோடியே சிவனை திறந்து வைக்க வருவதால் சட்டப் பிரச்சினைகள் வலுவிழந்து போகுமென்பதை குழந்தைகூட கணிக்கும். ஜக்கிவாசுதேவ் இந்து மத அடையாளத்தோடு இருப்பதால், இதை எதிர்ப்பது, இந்து மதத்திற்கு எதிரான வழக்கமான பிரச்சாரமாக வும் நிறையப் பேர் நினைக்கக் கூடும். நாம் எவ்வளவு விளக்கினாலும் அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் நாம் ஒருவரை ஆதரிக்க, எதிர்க்க வலுவான காரணம் இருக்க வேண்டும்.

ஜக்கியின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற புத்தகம் ஒரு நண்பர் மூலம் எப்படியோ எனக்கு வந்து சேர்கிறது. ஒருவித வெறுப்போடு தான் படிக்க ஆரம்பித்தேன். இறை நம்பிக்கை சம்பந்தப்பட்டது என நினைத்திருந்த எனக்கு ஏமாற்றம். ஒவ்வொரு பக்கமும் சுவாரசியமாக நகர ஒரே மூச்சில் அந்த புத்தகத்தைப் படித்து முடித்தேன். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து புத்தகம் வாங்க ஆரம்பித் தேன். சி.டி.க்கள் பரவலாக இல்லாத காலத்தில் ஜக்கிவாசுதேவின் வீடியோ தொகுப்புகளை 325 , 250 ரூபாய் என செலவு செய்து அவரது உரைகளைக் கேட்க ஆரம்பித்தேன். ஜக்கிக்கு முழுமையான பின் தொடர்பாளர் ஆனேன். சில காலம் ‘தத்துவமாக’ பேச ஆரம்பித்தேன். ஈஷா போனேன், ஒரு கட்டத்தில் அங்கேயே தொண்டராக சேர்ந்து விடலாமா என்று கூடத் தோன்றியது உண்டு. இதில் இருந்து மீண்டு வெளியே வர எனக்கு உதவி செய்ததே ஜக்கி தான்.

சில பல வருடங்கள் அவரின் மொத்தப் பேச்சுக்களையும் தொடர்ந்து கேட்டு வந்த எனக்கு பல முரண்பாடான கேள்விகள் துளைத்தன. ஜக்கியிடம் அதைக் கேள்வியாய் வைத்தால் சிரித்து விட்டு சமாளிக்கக் கூடிய பதிலை வைத்திருப்பார் என்று தெரியும். இருந்தும் எனக்குள்ளே எழுந்த கேள்விகள் என்னை வேறு தளத்துக்கு அழைத்துச் சென்றது. புத்தர், ஓஷோ, ஜே. கிருஷ்ணமூர்த்தி மற்றும் வரலாறு, புவியியல் என்று மொத்தமாய் படித்த கலவையை தனக்கே உரித்தான பாணியில் ஜக்கி சாமர்த்தியமாக பேசுவது புலப்பட்டது. நான் மேற் கொண்டு படித்த பல விவகாரங்களின் மறு வடிவமாகத் தான் அவை பெரும்பாலும் இருந்தன. அதுவும் தவறில்லை; குழந்தைக்கு சாதத்தைக் குழைத்துக் கொடுப்பதைப் போல ஒரு குரு கொடுக்கிறார் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் குழந்தை வளர்ப்பில், பருவ வயது குறித்து ஜக்கி முன்னே சொன்னதற்கு நேர் எதிர்மறையாக அவரது ஆசிரம செயற்பாடுகள் இருப்பதையும், அந்த போதனைகள் மேட்டிமைச் சமூகத்துக்கு மட்டுமே பயன்பட்டதும் என்னை நாளடைவில் நெருட செய்தது. கண்விழித்து சமூகத்தைக் கவனிக்கத் தொடங்கிய நேரம் என்று சொல்லலாம். ஜக்கி வாசுதேவை விட்டு விலக ஆரம்பித்த நேரம் நான் உணர்ந்த முக்கியமான கேள்வி ‘அனைத்திற்கும் எப்படி ஒருவன் குருவாக முடியும்? தொண்டர் என்கிற பெயரில் இளம் பெண்களை, ஆண்களை மொட்டையடித்து தன் கூடவே வைத்துக் கொள்ளும் ஒருவன் எப்படி குருவாக முடியும்?’ என்பதுதான். மத குரு என்பவன் யார்? அது என்ன அந்தஸ்து?

கண்டிப்பாக மதத்தின் குரு என்பவனுக்கு மலைக் கழுகின் குணம் அவசியம். மலைக் கழுகு தன் குஞ்சுகளை ஒரு கட்டத்தில் மலையில் இருந்து கீழே தள்ளி விடும். குஞ்சுகள் பறந்தே ஆக வேண்டும். தனக்கான உணவைத் தானே தேட வேண்டும். ஆண்டாண்டு காலமாய் தவமிருந்தாலும் கிடைக்காத அந்த மனநிலையை அந்தக் கழுகு இயல்பிலேயே வைத்திருக்கிறது. தள்ளி விடும் குஞ்சுகள் பறக்கக் கற்று, வளர்ந்து, மீண்டும் தாய்க் கழுகையேகூட கொத்த நேரிடலாம். அது குறித்து அந்த தாய்க் கழுகு யோசிக்கவில்லை, குஞ்சுகள் தன்னைப் போல இந்த உலகத்தை வட்டமிட்டு, தன்னைப் போலவே சகலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்கிற பரிசுத்தமான எண்ணம் அந்தக் கழுகுக்கு உண்டு. ஒரு மதத்தின் குருவின் உச்ச ஸ்தானம் இது தான். சிஷ்யனே விரும்பினாலும் ஒரு கட்டத்திற்கு மேல் தன்னைச் சார்ந்தே தன்னிடம் பயின்றவன் இருந்து விடுவது, குருவின் தோல்வி. உலகத்தை எதிர்கொள்ள முடியாமல், தன்னைக் குறுக்கிக் கொள்கிற ஒருவன் எதைப் பேசினால் என்ன? பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து, இந்தச் சமூகத்தின் மொத்த அழுத்தங்களை யும் எதிர்கொண்டு வாழ்கிற ஒரு ஏழை அப்பாவிடம் இல்லாத பக்குவமா, ஞானமா, வாழத் தெரியாமல் காட்டிற்கு ஓடி மறைபவனிடம் இருக்கப் போகிறது?

தீர்க்கக் கூடிய இடத்தில் இருப்பவன் வேறு ஒருவனிடம் தீர்வுகளுக்கு ஆலோசனை கேட்பதை விட ஒரு முரண், வாழ்க்கையில் இருக்க முடியுமா? சிறு வயதில் இருந்து இந்த வயது வரை நமக்கு எத்தனை எத்தனை குருக்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம்மை வழி நடத்திச் செல் கிறார்கள். ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு உலக உயிரும்கூட நமக்கு பல நேரங்களில் குருவாக வழிகாட்டிக் கொண்டு தான் இருக்கிறது. ‘குரு’ என்பது நபர் அல்ல; அது ஒரு நிலை; அது எங்கும், எதிலும் கிடைக்கும். ஆனால் மொத்த வாழ்க்கைக்கான எல்லா கேள்விகளுக்கும் என்னிடம் பதில் உண்டு என ஒருவன் சிரித்துக் கொண்டு காலம் முழுக்க உபதேசங்களை வழங்கி கொண்டு அமர்ந்திருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு பெரிய மோசடிக்காரனாய் இருப்பான்? உனக்கு பதில் நான் சிந்திக்கிறேன் என்று ஒருவன் சொன்னால் அது எவ்வளவு அபத்தம்?

காலம் முழுக்க என்னோடு பணி செய்து கிட என எத்தனையோ வீட்டுப் பிள்ளைகளை மொட்டையடித்து அடிமைப்படுத்தி வைத்திருப்பதை, ‘நாங்கள் அடிமைப்படுத்தப்படவில்லை’ என்று அந்த பிள்ளைகளே சொல்வதானால் அது அடிமைத்தனம் இல்லாமல் ஆகிவிடுமா? இயங்கு கிறவர்களை நம்மால் அடையாளம் காண்பிக்க முடியும். இயக்குகிறவரை நம்மால் அடையாளம் காண்பிக்க முடியாது, அதை முதலீடாக்கித் தான் பலர் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பாதிக்கப்படுகிறவர்களும் சேர்ந்து அதற்கு இசைவதால் நம்மால் குற்றத்தை நேரடியாக நிரூபிக்க முடியாது. அப்படியான ஒரு குற்றவியல் மையம் தான் ஈஷா மையம் Racing, Flying, Dancing, Singing என்று அத்தனைக்கும் ஆசைப்படும் ஒரு குரு Costume, Design, Ambience, Lifestyle என்று அத்தனையும் தன்னைச் சுற்றி மிக ரசனையாக வடிவமைத்துக் கொள்ளும் ஒரு குரு, தன்னைத் தேடி வருபவர்களை மட்டும் மனநோயாளிகளாக உருவாக்குவதைச் சிந்தியுங்கள். எண்ணிக்கையில்லா புத்தகங்களை வாசித்து உங்களை நீங்களே கேள்வி கேட்டுக் கொண்டு, விடை தேடும் பரந்த சிந்தனையாற்றலை வளர்க்க விடாமல், ஒரே ஒரு புத்தகம் உங்களுக்கு அனைத்தையும் தரும் என்று யாரேனும் பரிந்துரைத் தால் அதை/அவனை ஆய்வுக்கு உட்படுத்துங்கள்.