நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 போன்ற மதிப்பெண்களை பெற்றிருந்த போதும் அவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வினாக்களுக்கும் தலா 4 மதிப்பெண்கள் என மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படுகிறது. இயற்பியல், வேதியல், உயிரியல் போன்ற பாடங்களில் இருந்து

தான் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை ஒவ்வொரு ஆண்டும் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ முடிவு செய்கிறது.

இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் 0, -1 மதிப்பெண்களை பெற்றிருந்த மாணவர்கள் கூட பணம் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லுரிகளில் மருத்துவம் பயின்று வருகின்றனர். தகுதி மதிப்பெண்களை பெற்றிருந்தால் போதும், தனித்தனியாக பாட வாரியாக தேர்ச்சி பெற வேண்டியதில்லை என்ற காரணத்தினால் அவர்களுக்கு தனியார் கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.

முதல் முறையாக நீட் அறிவிப்பு வெளியான நேரத்தில் குறைந்தபட்சம் நீட்தேர்வின் ஒவ்வாரு தாளிலும் மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அடுத்தடுத்து வெளியான அறிவிப்புகளில் பாடவாரியான தேர்ச்சி பற்றி பேசப்படவில்லை. மொத்தமாக குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும் தேர்ச்சி என அறிவிப்பாணை வெளியானது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு நீட் தேர்வில் 150-க்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்று தற்போது மருத்துவம் படித்து வரும் பலரும் வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் பூஜ்யத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்துள்ளது.

இயற்பியலில் -2 மதிப்பெண்கள், வேதியியலில் 0 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் உயிரியல் பாடத்தில் 131 மதிப்பெண்கள் பெற்றதால், மொத்தமான தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர். இப்படிப்பட்ட மாணவர்கள் தனியார் கல்லூரியில் பல லட்சம் கொடுத்து மருத்துவம் படித்து வருகின்றனர். நீட் தேர்வில் பாஸ் மதிப்பெண்கள் பெற்றால் போதும், ஒரு சில பாடத்தில் மிக மோசமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கூட, பணம் இருந்தால் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடுகின்றனர். பெரும்பாலான இத்தகைய மாணவர்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலே பயில்கின்றனர். இத்தகைய மாணவர்களுக்கு அத்தகைய நிகர்நிலை பல்கலைக்கழகங்களே எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வையும் நடத்துகின்றன. இவர்கள் இத்தகைய தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும், பயிற்சி மருத்துவராக பணி செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.