ஜனவரி 19,2022 அன்று வெளிவந்த ‘இந்து’ ஆங்கில நாளேட்டில், உர்மினிஷ் என்ற பத்திரிக்கையாளரின் கட்டுரை தமிழ்நாட்டின் ‘திராவிடன் மாடல்’ உ.பி.யில் பாஜக வின் இந்துத்துவ அரசியலுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்கி இருப்பதை படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. கட்டுரையாளர் மாநிலங்களவை தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராகவும் பணியாற்றியவர்.

அடுத்த பிரதமர் பதவிக்கு ஆர்.எஸ்.எஸ். தயார் செய்யும் ஆதித்யநாத் உபி முதல்வராக படுதோல்வியை சந்தித்திருக்கிறார் என்றும் இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி இந்துக்களை அணி திரட்டும் இந்துத்துவா வலையில் வீழ்வதற்கு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களும் குறிப்பாக இளைஞர்களும் தயாராக இல்லை. அவர்கள் சமூக நீதி கோட்பாட்டை பேசத் தொடங்கி விட்டார்கள் என்றும் அவர் கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

உபி மாநிலம் சட்ட மன்றத் தேர்தலை எதிர் கொள்ளும் நிலையில் அமைச்சரவையில் இருந்து பிற்படுத்தப்பட்ட அமைச்சர்கள் சட்ட மன்ற உறுப்பினர்கள் விலகி வருகிறார்கள். மண்டல் சமூக அரசியலிலிருந்து ‘கமண்டல்’ என்ற இந்துத்துவ அரசியலுக்கு உபியை மாற்ற முயன்றது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ஸும் ஆனால் கடந்த 5 அல்லது 7 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் இந்துத்துவ அரசியலில் ஆர்வம் காட்டாமல் அதிலிந்து விலகி தங்கள் சமூகத்திற்கான கல்வி, வேலை வாய்ப்பு, வாழ்வுரிமை, முன்னேற்றம் ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகிறார்கள். பாஜக ஆட்சி இவற்றைப் பற்றிக் கவலைப்படாது. வகுப்பு வாத அரசியலுக்கு மட்டுமே முன்னுரிமை தருவதை அவர்கள் இப்போது உணரத் தொடங்கிவிட்டனர் என்று சுட்டிக்காட்டுகிறார் கட்டுரையாளர்.

பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவ உயர் பட்டப்படிப்புகளில் இட ஒதுக்கீடு வழங்க மறுத்த பாஜக ஆட்சி முன்னேறிய ஜாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டில் துடிப்புடன் செயல்பட்டதும், விவசாயிகளின் போராட் டத்தை அலட்சியப் படுத்தியதும், மோடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான தலைவர் என்ற பிம்பத்தை குலைத்துவிட்டது என்றும் கூறுகிறது அக்கட்டுரை.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி தொடர்ந்த வழக்கின் வழியாக மருத்துவ உயர்கல்வியில் அனைவருக்கும் 27% இட ஒதுக்கீடு கிடைத்ததை சமூக வலைதளங்களில் உபி,பீகாரில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டு வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டனர். (in this case the efforts of a regional party DMK in Tamilnadu to restore reservation has drawn applause from among backward communities in UP and Bihar. Social Media has been flooded with complementary messages for Tamilnadu Chief Minister M.K.Stalin)

கடந்த சில ஆண்டுகளாக, ஒரு சில படித்த அறிஞர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த நாராயண குரு, அய்யங்காளி, பெரியார், சாகு மகராஜ், ஜோதி ராவ் பூலே மற்றும் சமூக சீர்திருத்த தலைவர்களின் பெயர்கள் அவர்களது கருத்துகள் இப்போது இந்தி பேசும் ஒவ்வொரு கிராமங்களிலும் ஒலிக்கத் தொடங்கி யிருக்கிறது. சமூக ஊடகங்களில் இளைஞர்களின் பதிவுகள் தான் இதற்கு மிகப் பெரும் தூண்டுதல் சக்தியாக அமைந்திருக்கிறது. என்பதை பல்வேறு தரவுகளுடன் விருவியிருக்கிறது அந்த கட்டுரை. தமிழ்நாட்டின் திராவிட மாடல் உபியில் பாஜக இந்துத்துவாவிற்கு நெருக்கடியை உண்டாக்கி இருப்பதை மையமாக வைத்து இந்தக் கட்டுரை இப்படி ஏராளமான செய்திகளை பதிவிட்டு இருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்