கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு சாதிகள், சமூக-பொருளாதார அந்தஸ்துள்ள சமூகங்களுக்கு இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் நிலவும்போது, இடஒதுக்கீடு என்பது அர்த்தமுள்ள நடவடிக்கைதான். அதேசமயம், நாடு குடியரசான புதிதில் அறிமுகப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை, இன்றைய நவீன யுகத்தில் மறுபரிசீலனை செய்வது அவசியம். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்வோம்.

எல்லோருக்கும் இடஒதுக்கீடு?

பொருளாதாரரீதியாகப் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு 10% ஒதுக்கீட்டை அரசியல் சட்ட (124ஆவது திருத்த) மசோதா-2019 உறுதியளிக்கிறது. நாடாளுமன்ற விவாதத்தில் பல்வேறு அடிப்படைக் கூறுகள் விவாதிக்கப்பட்டாலும் இந்த மசோதா இது பற்றி மவுனம் சாதிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பாக ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ (கிரீமி லேயர்) என்று அடையாளம் காண அடிப்படையாகக் கருதப்படும் ‘ஆண்டுக்கு 8 இலட்ச ரூபாய்’ என்ற அடிப்படையே இதற்கும் கொள்ளப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ என்று நிர்ணயிக்கப்பட்டதற்குக் காரணம், வசதியானவர்களை ஒதுக்குவதற்காக. தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு (என்எஸ்எஸ்) 2011-12 தரவுகளின்படி குடும்பங்களின் ஆண்டு நபர்வாரிச் செலவு 99% அளவுக்கு இந்தத் தொகைக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இந்திய மனிதவள வளர்ச்சி சர்வே (ஐஎச்டிஎஸ்) கணக்கெடுப்பின்படி 98% குடும்பங்களின் வருடாந்திர வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவு. மசோதாவில் கூறியுள்ள சொந்த வீட்டின் பரப்பளவு, சொந்த நில அளவு ஆகியவற்றையும் சேர்த்துப் பரிசீலித்தால்கூட 95%-க்கும் அதிகமான மொத்த குடும்பங்கள் இந்த வருமான வரம்புக்குள்தான் இருக்கின்றன. அப்படியென்றால் நாம் யாரை ஒதுக்குகிறோம்? யாரையும் அல்ல. எல்லோருக்கும் இடஒதுக்கீடு என்பது சாத்தியமாகுமா?

பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டால் கிடைக்கும் பலன்கள் மிகக் குறைந்தபட்சமாகவும், அதற்கான விலை அரசு எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவும் இருக்கும். முதல் அம்சம், இடஒதுக்கீடுகளுக்கான இடங்கள் போக எஞ்சிய இடங்கள் அனைத்துப் பிரிவினரும் போட்டியிடுவதற்கானது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடிகள் ஆகியோருக்கும் பொதுப் பிரிவினருக்குமானது அந்த இடம். அதிலிருந்து 10% குறைக்கப்பட்டால், இப்போது இடஒதுக்கீடு பெறும் சமூகத்தவருக்கு மேலும் 10% குறைக்கப்படுகிறது. இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். காரணம் மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 52% அல்லது அதற்கும் மேல். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 27% தான் என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்.

சாதிச் சான்றிதழ்கள்

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் மிகவும் சவாலானது. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழ் பெறுவது ஏற்கெனவே சிரமமான வேலையாக இருக்கிறது. ஆனால் பொருளாதார அடிப்படையில் தன்னைப் பின்தங்கியவராக ஒருவர் எளிதாக சான்றிதழ் பெற்று விடலாம்; பொருளாதாரம் மாறக் கூடியது; ஜாதி மாறாதது.