டிசம்பர் 2 அன்று மேட்டுப்பாளையம் அருகே தலித் மக்கள் கண்களில்படக் கூடாது என்ற நோக்கில் கட்டப்பட்ட ஜாதிச் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான மரணங்கள் தமிழகத்தையே உலுக்கியது. சென்னை மாவட்டக் கழக சார்பில் டிசம்பர் 3ஆம் தேதி அண்ணா சாலை பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை : திராவிடர் விடுதலைக் கழகம் ஒழுங்கு செய்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் மற்றும் கரு. அண்ணாமலை, மயிலைப் பகுதி தோழர்கள் சுகுமார், இராவணன், மனோகர், கன்னியப்பன், எட்வின் பிரபாகரன், திருவான்மியூர் வெங்கடேசன், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் செந்தில், மே 17 இயக்கத் தோழர்கள் மற்றும் எஸ்.டி.பி.அய். மக்கள் அதிகாரம் அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும் பங்கேற்றனர்.

dvk agitation chennai salemசேலம் : சேலத்தில் டிசம்பர் 4ஆம் தேதி மாலை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். நாட்டாண்மை கழகக் கட்டிடம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேட்டூர் கழகத் தோழர்களும் தோழமை அமைப்பினரும் 150 பேர் பங்கேற்றனர். 72 தோழர்கள் கைது செய்யப்பட்டு, இரவு 8 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

“மேட்டுப்பாளையத்தில் மழையில் சுவர் இடிந்து விழுந்து 17 தலித் மக்கள் கொல்லப்பட்டுள்ளதில் ஆபத்தான நிலையில் இருந்த சுவரை பராமரிக்காத உரிமையாளரை கைது செய்யாமல், கொல்லப்பட்ட ஏழை எளிய தலித் மக்களுக்காக போராடிய தோழர்களைக் காவல்துறை அநாகரீகமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசு, கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு மட்டுமல்லாமல், சுவரைப் பராமரிக்காமல் தலித் மக்களின் மரணத்திற்குக் காரணமானவர்களை உடனடியாக தீண்டாமை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

கொல்லப்பட்ட தலித் மக்களுக்கு உடனடியாக இழப்பீடும், வீடிழந்த மக்களுக்கு உடனடியாக புதிய வீடுகளும் கட்டித்தரவும் தமிழக அரசு முன் வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி.காலனியில் 2.12.2019 அன்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக ஒரு சுவர் இடிந்து விழுந்தது என்றும் அதன் காரணமாக அருகில் இருந்த குடியிருப்பு பகுதியில் 17 பேர் இறந்து விட்டதாக செய்திகள் வந்தன.

ஆனால் இதன் உண்மை நிலை, அந்தப் பகுதி ஒரு குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்ட பொழுது (லேஅவுட்) அருகில் இருக்கும் தலித் மக்களின் குடியிருப்புகள் வெளியே பார்வைக்கு தெரியக் கூடாது என்கிற நோக்கத்தில் 22 அடி உயரத்தில் கருங்கல்லினால் ஆன ஒரு தற்காலிக சுவரை 12 ஆண்டுகளுக்கு முன் எழுப்பி இருக்கிறார்கள். வெறும் மண்ணினால் கட்டப்பட்டு மெல்லிய சிமெண்ட் பூச்சால் அமைக்கப்பட்ட வலிமையற்ற சுவர் அது. அந்த சுவர் மிகவும் வலுவிழந்து இருக்கிறது என்றும் ஏற்கனவே பல முறை மழை பெய்த பொழுது அதில் அடைப்பு ஏற்பட்டு நீர் கசிவுகள் வருகிறது என்றும் அந்த பகுதியில் குடியிருக்கும் தலித் மக்களின் பிரதிநிதிகள் அரசுக்கு தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இதை கண்டுகொள்ளாத தமிழக அரசும் நிர்வாகமும் அந்த மக்களின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. சுவரை வலுப்படுத்தவோ அதனை பராமரிக்கவோ சுவற்றின் உரிமையாளரும் முன் வரவில்லை.

தலித் மக்களின் குடியிருப்புகளை மறைத்து எழுப்பப்பட்ட அந்த சுவருக்கு மறுபுறம் சக்கரவர்தி துகில் மாளிகை எனும் நிறுவனத்தின் நிறுவனர் சிவ சுப்பிரமணியம் என்பவர் இல்லம் அமைந்துள்ளது.

இந்நிலையில் அந்த 22 அடி உயர கருங்கல்லினால் ஆன ஆபத்தான மண் சுவர் பராமரிப்பின்மை காரணமாக நேற்று பெய்த மழையில் அதிகாலை

4.00 மணி அளவில் இடிந்து தலித் மக்களின் குடியிருப்புகள் மீது விழுந்துள்ளது. அதில் பெண்கள் குழந்தைகள் உட்பட 17 தலித் மக்கள் இறந்துள்ளனர்

இறந்த தலித் மக்களின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று காலை போராடிய தலித் மக்களின் பிரதிநிதிகளைக் காவல்துறை மிக மோசமான முறையில் வன்முறையை ஏவி அடிப்பது, தரதரவென்று இழுத்து செல்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் கைது செய்து சிறைப்படுத்தி வைத்துள்ளார்கள்.

இந்த மரணத்திற்கு காரணமான சுவர் அமைத்தவர்களை, பராமரிக்காதவர்களை கைது செய்யாமல் தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழ் புலிகளின் கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன், திராவிட தமிழர் கட்சித் தலைவர் வெண்மணி, சமத்துவ கழகத் தலைவர் கார்க்கி, களப்பிரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் நேருதாஸ் ஆகியோர் உள்ளிட்டத் தோழர்களை தமிழக காவல்துறை கைது செய்து சிறை வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

கைது செய்யப்பட்ட தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், மரணமடைந்த தலித் மக்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு அவர்களுக்கு புதிய வீடு கட்டித் தரவும் தமிழக அரசு முன்வர வேண்டும்.

தமிழக அரசு உடனடியாக இந்த கோரிக்கை களை நிறைவேற்றாமல் போராட்டங்களை வன்முறையை ஏவி ஒடுக்க நினைத்தால் மேலும் கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கிறோம்.”   

நீதிக்காகப் போராடிய தோழர்கள் பிணையில் விடுதலை

மேட்டுப்பாளையம் நடுவூரில் 17 தலித் மக்கள் உயிரிழந்த செய்தி கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து நீதி கேட்டுப் போராடிய தோழர்கள், பொது மக்கள் மீது காவல்துறை மூர்க்கத்தனமாக தடியடி நடத்தி கைது செய்தது.

தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகக் கோவை மாநகர கழகத் தலைவர் நேரு தாசு, திராவிடர் தமிழர் கட்சியைச் சார்ந்த வெண்மணி, வழக்கறிஞர் கார்க்கி உள்ளிட்ட 28 தோழர்கள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 5 நாளுக்குப் பிறகு டிசம்பர் 7 அன்று நாகை திருவள்ளுவன் தவிர மற்ற தோழர்கள் பிணையில் விடுதலையானார்கள்.