நடுவண் அரசே! இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சீரழிக்கும் உயர்ஜாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்! தமிழக அரசே; 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்காதே! என்ற கோரிக்கைகளை முன் வைத்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஜூலை 29, 2019 மாலை 4.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். மருத்துவர் எழிலன் (இளைஞர் இயக்கம்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), செந்தில் (இளந்தமிழகம்), முனைவர் சுந்தரவள்ளி (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம்), மருத்துவர் இரவீந்திரநாத் (சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம்) ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.
சமூக நீதி தத்துவத்தின் நோக்கம் - இடஒதுக்கீடு சந்தித்த தடைகள் - 10 சதவீத இடஒதுக்கீட்டைத் திணித்து இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கும் மனுதர்ம சூழ்ச்சி - பா.ஜ.க ஆட்சியின் தேசிய கல்விக் கொள்கையின் ‘வர்ணாஸ்ரம-குலக்கல்வி’ கருத்துகள் என்று பல்வேறு அம்சங்களை பெரியாரியல் பார்வையில் பேச்சாளர்கள் ஆழமான கருத்துகளை முன் வைத்தனர். ஆர்ப்பாட்டமாக இருந்தாலும் சமூக நீதிக்கான கருத்தரங்கமாகவே நிகழ்வு அமைந்திருந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தனது உரையில், தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி 10 சதவீத ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் தராத நிலையிலேயே தமிழக முதல்வரின் தனிச் செயலாளரை தலைவராகக் கொண்டு செயல்படும் ‘ரெப்கோ’ வங்கியில் உயர்ஜாதிப் பிரிவினருக்கு அவசர அவசரமாக 10 சதவீத ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். ஸ்டேட் வங்கியில் பார்ப்பனர் ‘கட் ஆப்’ மார்க் 28 என்று நிர்ணயித்தவர்கள், இப்போது அஞ்சலக கிளை மேலாளர் வேலைக்கு உயர்ஜாதியினருக்கு 42 மதிப்பெண்ணும், பட்டியல் பிரிவினருக்கு 94.8 ஆகவும், பிற்படுத்தப்பட்டோருக்கு 95 ஆகவும் ‘கட் ஆப்’ நிர்ணயித்துள்ளதை சுட்டிக் காட்டினார். (இது குறித்து விரிவான செய்தி தனியே வெளியிடப்பட்டுள்ளது) 150க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். ‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட அமைப்பாளர் யுவராஜ், நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார்.
பேராசிரியர் சுந்தரவள்ளி தனது உரையில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் களப் பணிகளை மனம் திறந்து பாராட்டினார். நிகழ்வில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், அன்பு. தனசேகரன், தென்சென்னை மாவட்ட கழகத் தலைவர் வேழவேந்தன், செயலாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏசுகுமார், பாஸ்கர், முனுசாமி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பொறுப்பாளர்களும் ஆதரவாளர்களும் ஏராளமான கழகத் தோழர்களும் பங்கேற்றனர்.
ஜாதி ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்
தொடரும் ஜாதி வெறித் தாக்குதல்கள், ஜாதிய ஆணவப் படுகொலைகளை அலட்சியப்படுத்தும் தமிழக அரசைக் கண்டித்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 23/07/2019 செவ்வாய் மாலை நான்கு மணியளவில் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் துறையின் தடையை மீறி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
தலைமை நிர்மல்குமார் (கோவை மாநகர செயலாளர்), முன்னிலை ப கிருட்டிணன் (கோவை மாநகர அமைப்பாளர்), வரவேற்புரை மா.நேருதாசு (கோவை மாநகர தலைவர்), கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், பொருளாளர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், தலைமைக் குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், நாமக்கல் மாவட்ட தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் ராமச்சந்திரன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில்ராசு உள்ளிட்டோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் குழு உறுப்பினர்கள் ஆர். எஸ். சக்தி, காவலாண்டியூர் ஈசுவரன், ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திக ஜோதி, சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் எழிலன் மற்றும் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, கோபி, மேட்டூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக கழக வழக்கறிஞர் ர.சிலம்பரசன் நன்றி கூறினார்.