நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’

• இடஒதுக்கீடு, சமூக நலனுக்கான திட்டங்கள், மாநில சுயாட்சி, இந்தித் திணிப்பு எதிர்ப்பு, பெண்களை அதிகாரப்படுத்தல், மதவெறி யற்ற - மக்களின் ஒற்றுமை, மூட நம்பிக்கையற்ற அறிவியல் சமுதாயம் - இவை திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுக்குத் தந்த அடையாளங்கள். அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய திட்டங்களை உருவாக்குவது என்பதே நமது தமிழ்நாட்டின் தனித்துவம்.

• இந்த அடையாளங்கள், இப்போது ஒன்றிய ஆட்சியால் அழிக்கப்படுகின்றன; படிப் படியாக மறுக்கப்படுகின்றன; இதை எதிர்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டங்களை நடத்திக் கொண்டு வருகிறார். திட்டங்களை வகுத்து செயல் படுத்துகிறார். அதில் வெற்றி களையும் குவித்து வருகிறார்.

• தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டு எடுப்பது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் வலிமையான தமிழகத்தை கட்டமைப்பதற்கான திட்டங்களை உருவாக்குவது என்று, முதலமைச்சர் ஒரு கையில் வாளும், மற்றொரு கையில் கேடயமும் ஏந்தி நிற்கிறார். இதுதான் நாம் கூறும் “திராவிட மாடல்”.

என்ன நடக்கிறது?

• பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்ட உயர்ந்து கொண்டே இருக்கிறது; இடையில் தேர்தல் வந்தால் வாக்குக் கிடைக்காதே என்று தற்காலிகமாக விலை ஏற்றத்தை நிறுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் விலையேற்றம் தொடங்கி விடுகிறது. சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்த்துவதைவிட, பாஜக ஆட்சி மக்களிடமிருந்து பிழிந்து எடுக்கும் கலால் வரி தான் மிகவும் அதிகம். 2014-இல் பெட்ரோல் டீசலுக்கு கலால் வரி, அதாவது மத்திய அரசு போடும் வரி மூலம் ஒன்றிய அரசுக்குக் கிடைத்த வருவாய், ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 65 கோடி; அதே நேரத்தில் அம்பானி அதானி, ஜிண்டால், மார்வாடி பன்னாட்டு தொழிலதிபர்களுக்கு கோடி கோடியாக சலுகைகள் வாரி வழங்கப் படுகின்றன. (கார்ப்ரேட் வரி 30% லிருந்து 25% குறைக்கப்பட்டது)

• உங்களுக்குத் தெரியுமா? கொரானா கோரத் தாண்டவமாடிய 2021ஆம் ஆண்டில் மட்டும் குஜராத்தி பெருமுதலாளி அதானி கூடுதலாக சேர்த்த சொத்து மதிப்பு ரூ.1.18லட்சம் கோடி. 2016இல் இதே குஜராத்தி அதானிக்கு ஸ்டேட் வங்கி கடனாக மக்கள் பணத்திலிருந்து வாரிக் கொடுத்தது எவ்வளவு தெரியுமா? 72 ஆயிரம் கோடி ரூபாய். இந்தக் கடன்காரர்தான் உலகப் பணக்காரர்கள் வரிசையில் 10 இடத்துக்குள் நிற்கிறார். பணக்கார பனியா ‘இந்து’களுக்குக் கொடுக் கிறார்கள்; ஏழை-எளிய இந்துக்களின் எரிவாயு மான்யத்துக்குக் கூட ‘பட்டை நாமம்’!

• அதானி, அம்பாணி, ஸ்டெர்லைட் வேதாந்தா போன்ற நிறுவனங்கள் வாங்கிய கடனில் 2018 தள்ளுபடியான தொகை ரூ.6.8 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களில் 80 சதவீதம் கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்கள்.

• மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது என் பிணத்தின் மீதுதான் ஜிஎஸ்டி வரி வரும் என்று கூறினார்; அவரே பிரதமராக வந்த போது மாநில அரசுகளின் வரி விதிப்பு உரிமையைப் பறித்து ஜிஎஸ்டி-யைக் கொண்டு வந்தார். மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகை தருவோம் என்று உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி எதுவும் நடக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி மூலம் கிடைக்க வேண்டிய நிலுவை, ரூ.16,725 கோடி.

• 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இரயில் கட்டண சலுகை திடீரென ரத்து செய்யப்பட்டது. அரசு நிறுவனங்களான ஏர் இந்தியாவை அடிமாட்டு விலைக்கு விற்றார்கள். கோடிக்கணக்கில் அரசக்கு இலாபம் ஈட்டித் தந்த எல்.அய்.சி பங்குகளையும் விற்பனை செய்யத் துவங்கி விட்டார்கள்.

கொரோனா காலத்தில் என்ன நடந்தது?

• மக்கள் பசி பட்டினியால் துடித்தார்கள், தவித்தார்கள், சொந்த ஊருக்கு வெளி மாநிலங்களுக்குப் பயணம் போகக் கையில் காசில்லை. ஆனால் இரயிலுக்கு சிறப்புக் கட்டணம் விதித்தது ஒன்றிய ஆட்சி. தடுப்பூசி போடுவதற்கும் கட்டணம் கட்ட வேண்டும் என்று கேட்டார்கள். தமிழ்நாட்டுக்குத் தேவையான தடுப்பூசி வழங்குவதிலும் பாகுபாடு காட்டினார்கள். நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு தான் இவைகள் நீக்கப்பட்டன.

இந்த ஏழை எளிய மக்கள் யார்?

• இவர்களும் இந்துக்களாக பிறந்தவர்கள் தானே பா.ஜ.க. பார்வையில்; இந்து மக்கள் உரிமைக்காக நாங்கள் கட்சி நடத்துகிறோம், இது இந்துக்களின் நாடு என்று மார் தட்டுகிறவர்கள், ஏழை எளிய இந்துக்களைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டு, அம்பானி, அதானி போன்ற பெரும் முதலாளி இந்துக்களை கொழுக்க வைப்பதுதான் இவர்களுடைய இந்து இராஜ்ஜியத்தின் கொள்கை.

• இடஒதுக்கீட்டுக் கொள்கையை எதிர்த்து வந்த பார்ப்பனர்களுக்கு அவர்கள் கேட்காமலே 10 சதவீத ஒதுக்கீடு அளித்து சட்டத்தைத் திருத்தினார்கள். உழைக்கும் மக்களின் உணவான மாட்டிறைச்சித் தடை; சாப்பிட்டால் அடித்துக் கொலை; பசுவை தெய்வமாக வணங்கு; வேதத்தைப் பரப்பு; சமஸ்கிருதமே நமது பண்பாட்டு மொழி; பல்லாயிரம் கோடியில் ராமனுக்குக் கோயில்; அதே நேரத்தில் உழைக்கும் ஏழை எளிய இந்து மக்களை வாட்டி வதைப்பது; சுரண்டும் பார்ப்பன பெரு முதலாளி இந்துக்களைக் கொழுக்க வைப்பபது; இதுதான் இவர்கள் பேசும் ‘இந்து’ உரிமை; இவர்கள் பேசும் ‘இந்து’க்கள் ஆட்சி.

• டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களான வ.உ.சி, குயிலி, வேலு நாச்சியார் ஆகியோர் படங்களை அனுமதிக்காமல் தமிழர்களை அவமதித்தது யார்? ஒன்றிய ஆட்சி தானே. ஆனால் இராமன், அனுமான், வேத பாட சாலை,வேதம் கற்பிக்கும் பண்டிதர்கள் இவர்கள்தான் இந்தியாவின் தேசிய விடுதலை வீரர்களாக அணிவகுப்பில் சித்தரிக்கப் பட்டார்கள். செக்கிழுத்த வ.உ.சி.யைவிட இராமனும், அனுமானும் இவர்கள் பார்வையில் தேச பக்தர்களாம்.

• தமிழ்நாட்டுக் கல்விக் கொள்கையை சிதைத்து, தேசிய கல்விக் கொள்கையைத் திணித்து மாநிலத்தின் கல்வியை நாங்களே தீர்மானிப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள்.

• 5, 8,10, 12ஆம் வகுப்புகளுக்கு அரசுப் பொது தேர்வாம் ! எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் படிப்பை விட்டு விட்டு, தொழில் பயிற்சி எடுக்கலாமாம்! குலத் தொழிலுக்குப் போ என்கிறார்கள். புரிகிறதா? இதுதான் இராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டம்.

• நீட் தமிழகத்தில் சமூக நீதிக்கு எதிரானது என்று இரண்டு முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், அதை ஆளுநர் மாளிகையில் குப்பைத் தொட்டியில் போட்டு வைத்திருக்கிறார். சட்டமன்ற உரிமைகளை விட மாநில ஆளுநர்களின் மாளிகைகள் தான் அதிகாரம் மிக்கதா? இது நியாயம் தானா? இப்போது மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப் படிப்பில் சேருவதற்கும் நுழைவுத் தேர்வு வந்து விட்டது. (ஊரவந தேர்வு) தமிழ்நாடு சட்ட மன்றம் எதிர்த்து தீர்மானம் போட்டிருக் கிறது.

• சமஸ்கிருதத்திற்கு ஏனைய தேசிய மொழிகளை விட ஏழு மடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு. சமஸ்கிருதம் பேசும் ஏதாவது ஒரு மாநிலமாவது இருக்கிறதா?

• “இந்தியே தொடர்பு மொழி; ஆங்கிலம் வேண்டாம்” என்று இப்போது அமித்ஷா கூறுகிறார். ஒன்றிய ஆட்சியின் 70 சதவீதப் பணிகள் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாற்றி விட்டோம் என்கிறார். உள்துறை அமைச்சகத்தில் 100% நிர்வாகம் இந்தியில் மட்டுமே நடக்கிறது என்று கூறுகிறார். இந்தியா இந்தி நாடா? அனைத்து மொழி களையும் பேசும் இன மக்கள் வாழுகின்ற நாடா ? நாம் சிந்திக்க வேண்டாமா?

• ஒவ்வொருத் துறையிலும் நாம் போராட வேண்டியிருக்கிறது. தமிழக அரசும், முதல்வரும் புதிய புதிய திட்டங்களை அறிவிக்கிறார்கள். தொழில் வளர்ச்சி, நவீன தொழில் நுட்ப வளர்ச்சி, மக்களுக்கான மருத்துவம், மக்களைத் தேடிச் செல்லும் கல்வி, பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம், கல்லுரி படிப்பு வரை மாணவி களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், தமிழ் தெரிந்தவர்களுக்குத் தான் தமிழ்நாட்டில் வேலை என்று ‘திராவிட மாடல்’ வளர்ச்சி யடைந்து கொண்டே வருகிறது. பிற மாநிலங்களுக்கும் இதுவே வழிகாட்டும் ‘மாடல்’ என்பதை வரலாறு உணர்த்தப் போகிறது.

• இளைஞர்களே வாருங்கள்! திராவிடன் மாடல் நமக்கான அடையாளம்! மதவாதத்தை வீழ்த்த, மாநில உரிமைகளை மீட்க, தமிழ்நாட்டை பொற்காலம் நோக்கி அழைத்துச் செல்ல அனைத்துப் பிரிவினரும் உள்ளடக்கிய சமூக நீதியை உறுதி செய்வோம். அதுவே அடையாளம்; நமக்கான சுயமரியாதை; நமக்கான வளர்ச்சி; நமக்கான பெருமை.

- திராவிடர் விடுதலைக் கழகம்

(குறிப்பு: மண்டல மாநாடு பரப்புரைப் பயணத்துக்கான துண்டறிக்கை)

‘திராவிட மாடல்’ பரப்புரைப் பயணத்துக்குத் தோழர்கள் தயாராகிறார்கள்

நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ மண்டல மாநாடு ஒட்டி மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல்களை நடத்தி தோழர்கள் பயணத்துக்கு திட்டமிட்டு வருகிறார்கள்.

சென்னை : கடந்த ஏப்ரல் 02, 03 ஆகிய நாட்களில், ஈரோட்டில் நடைபெற்ற தலைமைக்குழு, செயலவையில், மண்டலம் வாரியாக மாநாடு நடத்துவது என்றும், மாநாட்டிற்கு முன்னதாக 15 தெருமுனைக் கூட்டங்கள் மாவட்டம் வாரியாக நடத்த வேண்டும் என்றும், முடிவுகள் எடுக்கப்பட்டன.

செயலவை முடிவுகளின் படி, சென்னை மாவட்டம் சார்பாக மாநாடு மற்றும் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது பற்றி சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல், 05.04.2022 செவ்வாய் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை இராயப்பேட்டை வி.எம் தெரு பெரியார் படிப்பகத்தில், மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் நடைபெற்றது.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், அன்பு தனசேகர், மாவட்டத் தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உட்பட மாவட்ட, பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் - தருமபுரி - கிருட்டிணகிரி : கூட்டம் 09.04.2022 சனி காலை 11.00 மணிக்கு சேலம் கருப்பூர் சக்திவேல் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.

சேலம் - தருமபுரி - கிருட்டிணகிரி மாவட்ட மண்டல மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டு 01.05.2022 ஞாயிறு சேலம் ஏற்காட்டில் துவக்க விழா நிகழ்ச்சி தொடங்குவதெனவும் அதனைத் தொடர்ந்து 04.05.2022 முதல் 06.05.2022 வரை சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி கிருட்டிணகிரி மாவட்டத்தில் நிறைவு விழா நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

பிரச்சாரப் பயணத்தில் பறை முழக்கம், இசை நிகழ்ச்சி, வீதி நாடகம் ஆகியவை நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்தில் 28 தோழர்கள் கலந்து கொண்டனர். தோழர்களுக்கு மதிய உணவு கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்தார். கலந்துரையாடல் கூட்டம் மதியம் 1.30 மணியளவில் முடிவடைந்தது.

கோவை - திருப்பூர் - திண்டுக்கல் : மாநில உரிமையைக் கல்வி உரிமையைப் பறிக்காத; மதவெறியை திணிக்காதே; நமக்கான அடையாளம் திராவிட மாடல் தெருமுனைக் கூட்டங்கள் மண்டல மாநாடு நடத்துவது பற்றிய கோவை மாநகர கலந்துரையாடல் கூட்டம் 10.04.22 ஞாயிறு கோவை நிர்மல் மதி இல்லத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் மாநகர தோழர்கள் இராமச்சந்திரன், பன்னீர் செல்வம், வெங்கட், மாதவன் சங்கர், நிர்மல், நேருதாசு, கிருஷ்ணன், இராஜாமணி, புரட்சித் தமிழன், சக்கரவர்த்தி, சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கலந்துரையாடலில் சுவர் எழுத்து விளம்பர பொறுப்பாளராக கிருஷ்ணன், மேடை ஒலிபெருக்கி அமைக்கும் பொறுப்பை நேருதாசு வரவு செலவு கணக்கு பொறுப்பு சூலூர் பன்னீர்செல்வம் மாநாட்டுக்கான போட்டோ வீடியோ பொறுப்பு தோழர்கள் டிட்டோ சிவராஜ், ஆனைமலை கணேஷ், கிருஷ்ணன்,திருப்பூர் தனகோபால் பார்த்துக்கொள்வார்கள் என முடிவு செய்யப் பட்டது.

மேலும், சி.டி. வடிவில் ஸ்டிக்கர் தயார் செய்து இரு சக்கர வாகனத்தில் ஒட்டிக்கொண்டு விளம்பரப்படுத்துதல்; மேட்டுப்பாளையத்தில், கோவை மாநகரில் சுவர் விளம்பரம் செய்வது; தெருமுனைக் கூட்டங்களில் தோழர்கள் புரட்சித் தமிழன், கிருஷ்ணன், அமிலா பாடல் பாடுவது;

மாநாட்டில் கலை நிகழ்ச்சிகள் அல்லது மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரை அழைப்பது மற்றும் தெருமுனை கூட்டங்கள் மாநாடு நடத்துவதற்கான காவல்துறைக்கு அனுமதி கடிதம் தருவது;

தனிநபர் வசூலுக்கு குழுவாக செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற புரட்சித் தமிழன் 10ஆயிரம் ரூபாய்; இராஜாமணி பிளக்ஸ் அடிக்கும் செலவிற்காக 2000 ரூபாய் ; மாநாடு, தெருமுனைக் கூட்டங்களில் பயன்படுத்த விளம்பர டிசைன்களை அமிலாசெய்து தருகிறார்; இசைமதி பாடல் பாடுவது மற்றும் விளம்பரத்திற்கு குரல் வடிவில் பேசி இணைய தளங்களில் விளம்பரம் செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளார்.

எந்தெந்த இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்துவது என பட்டியல் தயார் செய்யப்பட்டது.

தனிநபர்களுக்கும் முன்கூட்டியே பட்டியல் தயாரித்து வைத்து அவர்களை சந்திப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடலின் இறுதியில் கோவை மாவட்ட தலைவர் இராமச்சந்திரன் மற்றும் கிருஷ்ணன் பிறந்தநாள் பாடல் மற்றும் கடவுள் மறுப்பு கூறி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் : 7.4.2022 மாலை மாவட்ட தலைவர் மகாலிங்கம் தலைமையில் மயிலாடுதுறை மாவட்ட கலந்துரையாடல் நடைபெற்றது. மாவட்ட நகர கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நமக்கான அடையாளம் ‘திராவிட மாடல்’ என்கிற பிரச்சாரக் கூட்டங்களை மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் 15 கூட்டங்கள் நடத்தி முடிப்பது எனவும் நிறைவு நிகழ்வாக மண்டல மாநாட்டை 4.5.2022 அன்று மயிலாடுதுறையில் சிறப்பாக நடத்துவது எனவும், கடலூர் நாகை மாவட்ட தோழர்களின் மூலம் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி அவர்களை மாநாட்டில் பங்கேற்கச் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை தோழர்கள் முன்வைத்தனர்.