வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17)

 ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. புதிய ஆந்திர மாநிலம் உருவாக்க நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து ‘விடுதலை’ ஏட்டில வந்த செய்திகள்:

பிரகாசம் - வாஞ்சு சந்திப்பு 100 நிமிடம் பேச்சு: பல்வேறு தரப்பினரும் நீதிபதி வாஞ்சுவிடம் தம் கோரிக்கைகளை முன் வைத்தனர். தோழர் டி. பிரகாசம் நேற்று நீதிபதி வாஞ்சுவைக் கண்டு சுமார் 100 நிமிட நேரம் ஆந்திரப் பிரிவினைப் பிரச்சனைகளைக் குறித்துத் தமது கோரிக்கைகளை வெளியிட்டதாகவும் சென்னையில் இரு இராஜ்ஜியங்களின் தலைநகரங்களும் இருக்க வேண்டு மென்று வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. (விடுதலை 11.01.1953)

கம்யூனிஸ்டுகள் சந்திப்பு: ஆந்திரக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்குழுவினர்களாகிய தோழர்கள் டி. நாகி ரெட்டி, சி. ராஜேஸ்வரராவ், பி. வெங்கடேசுவரலு, ஓய். ஈஸ்வராரெட்டி, ஓய்.வி. கிருஷ்ணாராவ் ஆகியவர்கள் நீதிபதி வாஞ்சுவை நேற்று பிற்பகல் கண்டு ஒரு மணி நேரம் வரை விவாதித்தனர். பொது கவர்னர், பொது உயர்நீதிமன்றம், பொது பப்ளிக் சர்வீஸ்ஸ்கமிஷன் போன்ற எதுவுமற்ற விசால ஆந்திரா மார்சு 16ஆம் தேதிக்குள் நிறுவப்படவேண்டுமென்று வற்புறுத்தியதாகத் தெரிகிறது. (விடுதலை 11.01.1953)

பொதுவுடைமைக் கட்சியைப் பொறுத்தவரை சென்னை தமிழ்நாட்டுக்குச் சொந்தம், சித்தூர் மாவட்டமும் திருப்பதியும் ஆந்திராவுக்குச் சொந்தம் என்ற கொள்கை உடையவர்கள். ஆந்திரத்தின் தலைநகர் ஆந்திரத்திலேயே இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி யுள்ளனர். இதுகுறித்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் சென்னை சட்டசபையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பி. இராமமூர்த்தி மாநிலச் சீரமைப்பு மசோதாவின் மீது பேசியதை, அன்றைக்கு நிதிமந்திரி சி. சுப்ரமணியம் குறிப்பிடு கையில், “தமிழகத்தின் வட பகுதிகளை இராமமூர்த்தி ஆந்திரா மாகாணத்திற்கு விட்டுக் கொடுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டார். அதே மாதிரி ஆந்திர முதலமைச்சர் கோபால் ரெட்டி ஆந்திரக் கம்யூனிஸ்டுகளைப் பற்றிப் பேசும்போது, “தமிழர்களுக்கு அடிமைகளாகி விட்டார்கள்” என்று குறிப்பிட்டார். (சட்டமன்ற விவாதங்கள் பக். 296 நாள் 31.12.1956) ஆந்திராவில் பொதுவுடைமைக் கட்சியினர் சென்னை தமிழ்நாட்டுக்கு உரியது என்று பிரச்சாரம் செய்தனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் வாஞ்சு சந்திப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் கே. காமராஜ், எம். பக்தவச்சலம், டாக்டர் பி. சுப்பராயன், பி.எ. சுப்பையா, டி. செங்கல்வராயன் ஆகியவர்களைக் கொண்ட காங்கிரஸ் கமிட்டியின் தூதுக்குழுவொன்று தோழர்கள் எம்.ஏ. முத்தையா செட்டியார், ஆர். குழந்தைவேலு ஆகியவர்களுடன் நீதிபதி வாஞ்சுவைக் கண்டு ஒரு மனுவைக் கொடுத்தனர். சென்னை நகரம் தமிழ்நாட்டைச் சேர்ந்தது என்றும், ஆந்திராவின் தலைநகரமும், உயர்நீதி மன்றமும் சென்னைக்கு வெளியில்தான் இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்கள் என்று தெரிகிறது. (விடுதலை 11.01.1953)

இந்தக் குழுவில் ம.பொ.சி. இல்லை என்பது கவனிக்கத் தக்கது. நீதிபதி வாஞ்சு தன் பணியை 30.12.1952இல் தொடங்கினார். 7.2.1953இல் வாஞ்சு குழுவின் அறிக்கையை இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். அவர் தம் பரிந்துரையில்,

“சென்னை ஆந்திராவின் தற்காலிகத் தலை நகராக 3 முதல் 5 ஆண்டுகள் வரை இருக்கலாம். ஆந்திரர்களுக்குச் சென்னையின் மீது எவ்வித உரிமையும் இல்லை. விருந்தாளிகளைப் போல அல்லது வாடகைதாரர்களைப் போல அவர்கள் இருக்கலாம். அந்தக் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அவர்கள் சென்னையில் இருக்கக் கூடாது”. அதற்குள் தாங்கள் மாநிலத்தில் புதிய தலைநகரை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இமாச்சல பிரதேசத்தின் தலைநகர் சிம்லாவில் இருந்தபோதும், இமாச்சல அரசு சிம்லாவின் மீது எந்த உரிமையையும் கொண்டாட முடியவில்லை என்பதை வாஞ்சு உதாரணமாகக் காட்டியுள்ளார். இது என் சொந்தக் கருத்து என்றும் கூறியுள்ளார். (வாஞ்சுகுழு அறிக்கை பக்.5)

சென்னையைத் தற்காலிகத் தலைநகராகக் கொடுத்தால் அதன் பிறகு ஆந்திரர்கள் போகமாட்டார்கள் என்று சென்னையில் உள்ள மற்றவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

ஆந்திர அரசின் அனைத்து அலுவலகங்களையும் உடனடியாக மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். சென்னையிலேயே ஆந்திர உயர்நீதிமன்றம் தற்காலிகமாக 5-10 ஆண்டுகள் வரை இருக்கப் பரிந்துரை செய்கிறேன். (பக். 8) அதற்கு உதாரணத்தை யும் வாஞ்சு காட்டியுள்ளார். ஒரிசா 1936இல் பிரிந்தாலும் அதனுடைய உயர்நீதிமன்றம் 1947 வரை பீகாரிலேயே இருந்தது என்கிறார். (பக்.9) ஆந்திராவின் தலை நகரமும் ஆந்திராவின் உயர்நீதிமன்றமும் உடனடியாகச் சென்னைவிட்டுப் போகவேண்டும் என்று ஆந்திரர் அல்லாதவர்கள் கூறுகிறார்கள். அது உடனே முடியக் கூடிய காரியமல்ல. (பக். 10)

சென்னை மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் 36ரூ இடங்களை 25 ஆண்டுகளுக்கு ஆந்திரர்களுக்கு ஒதுக்கித் தரவேண்டும். அந்த இடங்களுக்கான மாணவர் பெயர்ப் பட்டியலை ஆந்திர அரசு கொடுக்கும். (பக். 12) இக்குழு பெல்லாரி மாவட்டத்தைக் கர்நாடகாவுடன் சேர்க்கப் பரிந்துரை செய்தது. (பக். 2) மற்ற 11 மாவட்டங்களைக் கொண்ட ஆந்திர மாநிலம் அமைத்துக் கொள்ள வழிவகுத்தது. சென்னை நகருக்கு ஈடாக ரூ. 2.3 கோடியை புதிய ஆந்திர அரசுக்குக் கொடுக்கப் பரிந்துரை செய்தது. (பக்.26)

அனைத்துக் கட்சிக் கூட்டம் : வாஞ்சு அறிக்கையைப் பற்றிப் பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கும் சேதிகள் அநேகமாக உண்மையென்றே விஷயம் தெரிந்த மக்களிடையே பேசப்படுகிறதை உத்தேசித்து அதைக் கண்டித்து டில்லி முதன் மந்திரிக்குக் (பிரதமர்) கண்டனம் அனுப்புவதற்காக 13.02.14 மாலை 4 மணிக்குச் சென்னை மேயர் செங்கல்வராயன் அவர்கள் முன் முயற்சியின் மீது கார்ப்பரேஷன் தியாகராயர் கட்டிடத்தில் 13.02.1953இல் சென்னைப் பிரமுகர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது.

அக்கூட்டத்திற்குச் சர். முகமது உஸ்மான், பெரியார் ஈ.வெ.இராமசாமி, மேயர் டி. செங்கல்வராயன், மாஜி மந்திரிகள், எம். பக்தவச்சலம், டி. பரமேஸ்வரன், எஸ். முத்தையா முதலியார், மாஜி மேயர்கள், ராமநாதன் செட்டியார், ராதா கிருஷ்ணபிள்ளை, சிக்யதுல்லா சாயுபு, மாஜி ஐக்கோர்ட் ஜட்ஜ் பி. பாஷ்யம் அய்யங்கார், மாஜி அட்வகேட் ஜெனரல் குட்டி கிருஷ்ணமேனன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உபதலைவர் என்.எல். கரையாளர், பார்லிமென்ட் மெம்பர் பி.எம். லிங்கேஸ்வரன், எம்.எல்.சி., ம.பொ.சிவஞான கிராமணி, எம்.எல்.ஏ. கே. விநாயகம், டாக்டர் வி.கே. ஜான், எம்.பி. தாமோதரன், லக்கபராய், நஜீர் உசைன், தெ.பொ. மீனாட்சி சுந்தரம், மீனம்பாள் சிவராஜ், செரியன் ஆகிய தமிழ், கேரள, கர்நாடக நாட்டுப் பிரதிநிதிகளான முக்கியஸ்தர்கள் அழைக்கப்பட்டு விஜயம் செய்திருந்தார்கள். வந்திருந்தவர்கள் யாவரும் கலந்து ஆலோசித்து, பண்டித நேருவுக்கு ஒரு மெமோரண்டம் அனுப்புவது என்றும் அதன் சுருக்கத்தைத் தந்தியில் உடனே அனுப்புவது என்றும், ஒரு மனதாக முடிவு செய்தனர். மெமோரண்டத்தில் மேற்கண்டவர்கள் கையெழுத்து செய்தார்கள். பிறகு 16ஆம் தேதி திங்கட்கிழமை திருவல்லிக்கேணி கடற்கரையில் ஒரு சென்னை ராஜ்யப் பொதுக்கூட்டம் கூட்டித் தீர்மானம் நிறைவேற்றி டில்லிக்கு அனுப்புவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் முடிவு:-

நீதிபதி வாஞ்சு இந்திய சர்க்காருக்கு ஆந்திர ராஜ்ய அமைப்புப் பற்றிச் செய்துள்ள சிபாரிசுகளைக் குறித்துப் பற்பல கவலைகளைக் கொடுக்கக்கூடிய தகவல்கள் பத்திரிக்கை மூலமாகவும் வெளிவந்திருக்கின்றன. ஆந்திர ராஜ்ய அமைப்பில் மிகவும் முக்கியமான அம்சங்களைப் பற்றிய மேற்கூறிய தகவல்கள் எங்களுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்திருக்கின்றன. ஆந்திர ராஜ்யத்தின் தலைநகரமானது. உயர்நீதி மன்றமாவது தற்காலிக ஏற்பாடாகக்கூட சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று மீண்டும் வற்புறுத்திக் கூற விரும்புகிறோம். ஆந்திரத் தலைநகரையும், உயர்நீதி மன்றத்தையும் சிறிது காலத்திற்குச் சென்னை நகரில் “விருந்தாளியாகக்கூட” இருப்பதற்கு அனுமதிப்பதால் அனாவசியமான தொல்லை களும் சர்ச்சைகளும் ஏற்படும். இதனால் நிர்வாகக் கஷ்டங்களும் தொல்லைகளும் ஏற்படும்.

ஆந்திர ராஜ்ய அமைப்பு மிகவும் சௌகர்யமாகவும் நேசமனப்பான்மையாகவும் அமல் நடத்தப்பட வேண்டியது அவசியம். ஆகவே ஆந்திரத் தலைநகரை எந்த வகையிலும் சிறிது காலத்திற்குக் கூட சென்னையில் வைத்தால் அனாவசியமான தகராறுகளுக்கும் சர்ச்சைகளும் ஏற்படும். ஆகவே பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின், தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சொற்ப காலத்திற்குக் கூட ஆந்திரத் தலைநகரமோ உயர்நீதி மன்றமோ சென்னை நகரத்தில் இருக்கக் கூடாதென்று ஏக மனதாக அபிப்ராயப்படுகிறார்கள். ஆந்திரர்களில் சிலர் இன்னும் சென்னை நகரத்தில் பாத்தியதை கொண்டாடிக் கிளர்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஆந்திரத் தலைநகரைச் சென்னை நகரில் ஏற்படுத்துவது மிகவும் ஆட்சேபகரமானது. சென்னை நகரம் பாக்கியுள்ள சென்னை ராஜ்யத்தின் தலைநகராக இருக்கும். ஆகவே பலமான எதிர்ப்பை அலட்சியம் செய்து, ஆந்திர தலை நகரையும், உயர்நீதி மன்றத்தையும், தற்காலிகமாகக்கூட சென்னை நகரத்தில் ஏற்படுத்துவதென்று முடிவு செய்யாமலிருக்குமாறு இந்திய சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறோம். (விடுதலை 14.02.1953)

சென்னை மேயர் தலைமையில் 13.02.1953இல் கூடிய கூட்டத்தில் பெரியார் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட்டு பிரதமர் நேருவுக்கு அன்றே உடனடியாகத் தந்தி அனுப்பப்பட்டது. விரிவான கோரிக்கை விண்ணப்பத்தையும் அனுப்பி வைத்தார்கள்.

சென்னை நகரமேயர் ஏற்பாடு செய்து திருவல்லிக் கேணிக் கடற்கரையில் 16.02.1953 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிப் பொதுக்கூட்டத்தில் பெரியார் பேசியதாவது:

“மாட்சிமிக்க மேயர் அவர்களே, தாய்மார்களே, தோழர்களே, நான் உங்கள் ஆரவாரத்திற்கு நன்றி செலுத்துகிறேன்.

ஆனால் இந்த ஆரவாரத்திற்கு ஏற்ப நீங்கள் இப்போது என்னிடம் உங்களுக்கு உற்சாகமும் உணர்ச்சியும் ஊட்டத் தகுந்த ‘காரசாரமான’ பேச்சை எதிர்பார்த்து ஏமாற்ற மடையக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இன்று என் பேச்சு அப்படி இருக்காது.

இந்தக்கூட்டம் பல கருத்துக் கட்சிகள் கூட்டமாகும். இதில் ஆளும் கட்சியும் அங்கம் வகித்திருக்கிறது. காங்கிரஸ் கலந்துகொண்ட இந்தக்கூட்டத்தில் எனக்குத் தலைகாட்டவும் பேசவும் கிடைத்த ஒரு வாய்ப்பை நல்ல வாயப்பென்றே கருதுகிறேன். ஆதலால் இந்தக் கூட்டத்தின் தன்மைக்கு ஏற்றபடிதான் நான் பேசுவேன். வேறு எதையாவதைப் பேசி அவர்களுக்குத் தொந்தரவோ, சங்கடமோ ஏற்படும்படி பேசமாட்டேன். அப்படி எதை யாவதை நான் பேசிவிட்டால் அப்புறம் அவர்கள் என்னைக் கூப்பிட மாட்டார்கள். அன்றியும் எல்லோருடனும் சேர்ந்து எல்லோருக்கும் ஏற்ற முறையில் நமது குறைபாடுகளுக்கு ஒரு பரிகாரம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால் அது நமக்கு எவ்வளவு பெரிய இலாபம் என்று எண்ணிப் பாருங்கள்.

நம் காரியம்: நாம் செய்ய வேண்டிய - செய்யப் போகும் காரியம் இருக்கவே இருக்கிறது. அதை எடுத்துச் சொல்ல நமக்கு வேறு பல மேடைகளும் இருக்கின்றன. சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. நாம் கடிவாளம் இல்லாத குதிரைகள். மற்றவர்கள் எல்லோரையும் அப்படி எதிர்பார்க்கக் கூடுமா?

இந்தக் கூட்டம் நான்கு நாட்களுக்கு முன் மேயர் காரியாலயத்தில் பல பிரமுகர்கள் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட காரியத்திற்காகவே கூட்டப்பட்ட கூட்டடமாகும். ஆகவே அந்தக்காரியம் நடைபெறும் அளவுக்கே நமது எல்லை இருக்க வேண்டும். ஆதலால் நான் மேயர் அவர்களின் தீர்மானத்தை ஆதரிக்கிற அளவுக்குப் பேசுகிறேன்.

தோழர்களே! ஆந்திரா பிரிவினை விஷயத்தில் ஜ.டி. வாஞ்சு அவர்கள் அறிக்கையைக் கண்டித்துப் பண்டித நேரு அவர்களுக்கு நமது கருத்தைத் தெரிவிக்கும் தீர்மானத்தை உங்கள் ஆதரவு மீது இப்போது நிறைவேற்றப்பட வேண்டும்.

அதைப்பற்றிப் பேசுவதென்றால், அந்த அறிக்கையின் கேட்டையும் பற்றிப் பேச வேண்டும். அப்படிப் பேசுவதில் எனக்கு முன் பேசிய மாட்சிக்குரிய மேயர் அவர்களும் பெருமைக்குரிய பக்தவச்சலம் அவர்களும் மற்றும் பெரியோர்களும் பேசினார்கள். அந்தப்பேச்சுகள் பெரிதும் வாஞ்சுவையும் ஆந்திரக்காரரையும் கண்டிப்பதாகவும், அவர்கள் மீது அதிருப்திப்படுவதாகவும் தான் காணப்பட்ட னவே தவிர, அதன் மூலாதாரத்தைக் கண்டித்ததாகவோ, அதைப்பற்றிப் பேசியதாகவோ ஒன்றும் தெரியவில்லை.

காரணமானது அவர்களுக்குத் தெரியவில்லையோ, அல்லது அது பெரிய இடத்துச் சங்கதி என்ற தாட்சண்யமோ எனக்குத் தெரியவில்லை.

நான் இப்போது வெளிப்படையாய்த் தெளிவாய்ச் சொல்லுகிறேன். தவறு இருந்தால் மேயர் அவர்கள் அருள்கூர்ந்து திருத்தவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நான் இப்போது சொல்லப் போவது, ஜனவரி 2ஆம் தேதி மேயர் அவர்கள் வீட்டில் கூடிய சென்னை எல்லாக் கட்சிப் பிரமுகர் கூட்டத்திலும், ஜனவரி 5ஆம் தேதி மைலாப்பூர் இலட்சுமிபுரம் யுவசங்கத்தில் கூடிய ஒரு பொதுக்கூட்டத்திலும் பிப்ரவரி 1ஆம் தேதி பீச்சில் ஒரு இலட்சம் பேர் கூடிய மாபெரும் கூட்டத்திலும், பிப்ரவரி 13ஆம் தேதி கார்ப்பரேஷன் கட்டிடத்தில் மேயர் காரியாலத்தில் கூடிய எஞ்சிய 3 நாட்டின் பிரமுகர்கள் கூட்டத்திலும் சொன்னவைகளேயாகும்.

ஆனால் இங்கு அதைத் திரும்பவும் ஆதாரப் பூர்வமாக எடுத்துச் சொல்லி ஆதாரமும் காட்டப் போகிறேன். என் சங்கதி எப்போதும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எந்தச் சங்கதியும் எங்கும் பேசப்படுவதாக இருக்கும். ஆகையால் சொல்லுகிறேன். தயவு செய்து காது கொடுக்கக் கோருகிறேன்.

நேருவே மூலப் புருஷர்: வாஞ்சு அவர்கள் அறிக்கைக்கு வாஞ்சு அவர்களோ, இலங்கா சுந்தரம் அவர்களோ மூலப் புருஷர்கள் அல்ல; அந்தப் பிரச்சனைகளுக்கு அதாவது ஒரு ஐகோர்ட், ஒரு கவர்னர் சென்னைக்கும் ஆந்திராவுக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற யோசனை தோன்றியதானது பண்டிதர் நேரு அவர்களின் மூளை யிலேயாகும். அவர்தான் டாக்டர் இலங்கா சுந்தரம் அவர்களுக்கு இந்தப்படி செய் என்று யோசனை சொன்னவர். நேரு அவர்கள் உபதேசத்தாலேயே இதைச்சொல்லி வலியுறுத்தி “இந்தப்படி இல்லாவிட்டால் ஆந்திரருக்கு ஆந்திர ராஜ்யமே வேண்டாம்” என்று சொல்லும் நிலையை அடைந்தார். ஆந்திரர்களையே கூப்பிட்டு நீங்கள் இந்தமாதிரி செய் யுங்கள் என்று நேரு அவர்கள் சொல்லி இருப்பார்களேயானால், ஜஸ்டிஸ்ஸ்வாஞ்சு அவர்களி டம் சொல்லி அனுப்புவது அவருக்கு முடியாததாகவோ கூடாததாகவோ இருந்திருக்க முடியுமா? இதோ பாருங்கள் 18.12.1952ஆம் தேதியில் நேரு அவர்கள் இலங்கா சுந்தரம் அவர்களுக்குச் சொன்ன உண்மையை இலங்கா சுந்தரம் அவர்கள் ஜனவரி மாதம் 18இல் நீதிபதி வாஞ்சு அவர்களிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.

“சென்னை நகரம் பொது நிர்வாக சர்க்கார், நிர்வாக வட்டாரமாக்கப்பட வேண்டும். ஆந்திராவின் தலைநகரும் அந்தச் சென்னை நகரிலேயே அமைக்கப்படவேண்டும்”

“புதிய ராஜ்யத்துக்காக அனாவசியமாக இரட்டிப்புச் செலவு செய்ய வேண்டியதில்லை என்று பிரதமர் நேரு 18.12.1952இல் என்னிடம் தெரிவித்தார். மற்றும் ஆந்திரா ராஜ்ய துவக்கக் காலத்திலாயினும் இரு ராஜ்யங்களுக்கும் ஒரே கவர்னரும், ஒரே உயர்நீதி மன்றமும் இருக்கவேண்டுமெனவும் பிரதமர் நேரு தெரிவித்தார். நான் பிரதமர் நேருவின் கருத்தை முழு அளவுக்கு ஒப்புக் கொள்கிறேன். ஆந்திரப் பொதுமக்களும் அவரின் இந்த யோசனையை முழு அளவுக்கு ஆதரிப்பார்களென்பதில் எனக்குச் சந்தேகமில்லை” என்று கூறியிருக்கிறார். இது ஜனவரி 19ஆம் தேதி ‘இண்டியன் எக்ஸ்பிரசில்’ வெளியாக்கப்பட் டிருக்கிறது. அதில் கண்டுள்ள ஆங்கில வாசகமாவது (பெரியார் கடற்கரைப் பொதுக் கூட்டத்தில் 2ஙூ இலட்சம் மக்கள் முன்னிலையில் ‘இந்தியன் எக்ஸ்பிரசு’ ஆங்கில நாளேட்டில் வந்திருந்த செய்தியைப் படித்துக் காட்டினார்.)       

 (தொடரும்)