தமிழர் ஒருங்கிணைப்பு சார்பில் 9.3.2009அன்று தியாகராயர் நகரில் நடந்த கூட்டத்தில் த.தே.பொ.க. பொதுச்செயலாளர் பெ.மணியரசன் ஆற்றிய உரை:

கொளத்தூர் மணி, சீமானை கைது செய்ய வேண்டும் என்று காங்கிரசுகாரர்கள் சொல்லும்போது இந்தியாவின் இறையாண்மை கெட்டுவிட்டது என்று சொல்வதில்லை. நீங்கள் பத்திரிகையில் அப்படி படித்திருக்க முடியாது. வழக்கு போடுகிற காவல்துறையும், தமிழக அரசும் அப்படி இணைத்துப் போடுகிறதே தவிர காங்கிரசுகாரர்கள் சொல்லும்போது அன்னை சோனியா காந்தியை இழிவுப்படுத்திவிட்டார்கள். ராஜீவ் காந்தி மரணத்தை கொச்சைப் படுத்தி விட்டார்கள் என்று தான் சொல்லுகிறார்கள். சட்டத்திலே சோனியா காந்தியை இழிவுபடுத்தியதாலே ஒரு தேசிய பாதுகாப்போ, பிரிவினை தடை சட்டப்படியோ வழக்குப் போட முடியாது. அதுபோலத்தான் ராஜீவ் காந்தி மரணம் பற்றி விமர்சித்ததற்காக வழக்குப் போட முடியாது. காங்கிரசுகாரர்களை திருப்திப்படுத்துவதற்காக சிந்தித்து தமிழக அரசும், காவல்துறையும் வழக்கு நிற்க வேண்டும் என்பதற்காக இறையாண்மைக்கு ஆபத்து என்ற ஒரு சரக்கை சேர்த்துக் கொள்கிறார்கள். காங்கிரசுக்காரர்களுக்கே இறையாண்மை என்றால் என்ன என்று தெரியாது. காங்கிரசுகாரர்களுக்கு மேல் இடத்தில் கோள் சொல்லி நன்மை பெறுவதைவிட வேறு ஒன்றும் தெரியாது.

காங்கிரசு பண்பாடு என்பது தன்னுடைய தலைவியிடம், தலைவனிடம் சக காங்கிரசு கோஷ்டியைப் பற்றி கோள் சொல்லி தான் ஒரு காங்கிரசுகாரனாக தமிழ்நாட்டில் துடிப்போடு இருப்பதாக காட்டி சீட் பெறுவதும் தான் அவர்களுடைய தொழில். கோள் சொல்வது அவனுடைய பழக்கம். தங்கள் கோஷ்டிகளுக்கிடையே கோள் சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள் இப்பொழுது தமிழினத்திற்கு எதிராக கோள் சொல்லுகிறார்கள். அது அவனுடைய பழக்கம். சோனியா காந்தியை விமர்சிக்கிறோம். அந்த அம்மையார் ஈழத்தில் நம் இனத்தை படுகொலை செய்வதற்கான போரை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த அம்மையாரை கண்டனம் செய்கிறோம். இதில் என்ன அந்த அம்மையாரை இழிவுப்படுத்தி விட்டோம். பார்த்தால் பசு போன்ற தோற்றம். உள்ளத்திலே ஓநாய் உணர்ச்சி. அந்த வடிவம்தான் சோனியாகாந்தி (கைதட்டல்) . இதில் என்ன இழிவுப்படுத்திவிட்டோம். இது என்ன குற்றம்.

இந்த சனவரி 1 ஆம் தேதி பிறந்ததிலிருந்து பிப்ரவரி வரை 2200 ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். சோனியா காந்தி கொடுத்த ஆயுதத்தை பயன்படுத்தி, சோனியா காந்தி கணவர் ஊழல் செய்த போபர்சு பீரங்கிகளை கொடுத்து, 2200 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தக் கணக்கை இலங்கை நாடாளுமன்றத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த 20 உறுப்பினர்கள் சொல்லி கையெழுத்துப் போட்டு அய்.நா. மன்றத்திற்கும், சர்வதேசத்திற்கும் அனுப்பியிருக்கிறார்கள். நாங்கள் துடிக்க மாட்டோமா, சோனியா காந்திக்கு துடிப்பு வராது. எங்காவது இத்தாலிக்காரனை சுட்டுக் கொன்றால் அந்த நாட்டுக்கு ஆயுதம் தருவாரா, எங்காவது பஞ்சாபிகளை சுட்டுக் கொன்றால் மன்மோகன்சிங் அந்த நாட்டுக்கு இராணுவ உதவி செய்வாரா? எங்காவது மலையாளிகளை சுட்டுக் கொன்றால் அந்த நாட்டுக்கு இராணுவ உதவி செய்வாரா ஏ.கே. அந்தோணி? வங்காளிகளை சுட்டுக் கொன்றால் போர் நிறுத்தம் கோர மாட்டேன் என்று பிரணாப் முகர்ஜி சொல்லுவாரா? பாழ்பட்ட தமிழினம் கேட்க அரசியல் நாதியற்ற தமிழினம் உலக அரங்கத்தில் குரல் எழுப்ப வாய்ப்பே இல்லாத தமிழினம் கொல்லப்படுகிறது.

சிங்களவனுடைய மக்கள் தொகை ஒன்றரை கோடி பேர். தமிழர்களுடைய மக்கள் தொகை என்ன? உலகத்தில் சிங்களவர்கள் வாழக்கூடிய ஒரே ஒரு நாடு இலங்கை தான். அவர்கள் அகதிகளாக 100 பேர் கூட எங்கும் வாழவில்லை. மிகச் சிறிய சின்ன இனம். ஆனால் ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட சிங்கள நாட்டை சீனா அங்கீகரிக்கிறது, ஆயுதம் தருகிறது. தமிழர்களை கொல்ல பாகிஸ்தான் அங்கீகரித்து ஆயுதம் தருகிறது. தமிழர்களை கொல்ல அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு போன்ற நாடுகள் நிதியுதவி செய்கின்றன. ஏன்? சிங்களவருக்கு ஒரு நாடு இருக்கிறது. 10 கோடி தமிழர்கள் உலகத்தில் இருக்கின்றோம். நமக்கு ஒரு நாடு இல்லை. இது தானே அடிப்படை பிரச்சினை?

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் படையெடுத்தது. சனவரி மாதம் நான், கொளத்தூர் மணி, சீமான் ஆகிய மூன்று பேரும் கோவை சிறையில் இருந்தோம். பத்திரிகையில் படித்தோம். மனம் பதைபதைத்தது. அவர்களும் நம்மை போல் பாதிக்கப்பட்டவர்கள். யாசர் அராபத் போன்ற உயர்ந்த தலைவர்கள் தலைமை தாங்கிய அமைப்பு அது. விமானத்தில் இருந்து ‘கிளஸ்டர் பாம்’ என்று சொல்லக் கூடிய கொத்து வெடிகுண்டுகளை போட்டு கொல்லுகிறார்கள். போர் நிறுத்தம் வேண்டும் என்று பல நாடுகள் அங்கு கோரின. அய்.நா. மன்றத்திலே அந்த தீர்மானம் வந்தது. அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்த தீர்மானத்தை எதிர்த்தது. ஆனாலும் 142 நாடுகள் ஆதரித்து போர் நிறுத்தத் தீர்மானம் நிறைவேறியது. 19வது நாள் போர் நிறுத்தம் நடைபெற்றது. 20வது நாள் டேங்குகளை இழுத்துக் கொண்டு இஸ்ரேலுக்குள் போனது யூத அரசு. எப்படி நிகழ்ந்தது 19 நாட்களுக்குள். ஒன்றரை வருடங்களாக போர் நடக்கிறது. மிகத் தீவிரமாக செப்டம்பர், அக்டோபரிலிருந்து நடக்கிறது.

அக்டோபர் 2-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் எல்லோரும் சேர்ந்து போர் நிறுத்தம் கேட்கத் தொடங்கியதிலிருந்து தொடர்ந்து போராட்டம் நடந்து கொண்டே இருக்கின்றது. ஆறு மாதம் ஆகப் போகிறது. நம்மால் ஏன் போர் நிறுத்தம் கொண்டுவர முடியவில்லை. பாலஸ்தீனர்கள் பாதிக்கப்பட்டிருந்தா லும் ஒரு நாடு அல்ல பல நாடுகள் அந்த இனத்திற்காக இருக்கிறது. அவர்கள் அரபு இனத்தை சேர்ந்தவர்கள். முஸ்லீம் இனத்தைச் சார்ந்தவர்கள் அவர்களுக்கு பல நாடுகள் உண்டு. பல சனாதிபதிகள் உண்டு. ஆனால் 10 கோடி தமிழர்களுக்கு ஒரு நாடும் கிடையாது. ஒரு ஜனாதிபதியும் கிடையாது. அந்த அரபு நாடுகள் எண்ணெய் வியாபாரம் செய்கிறார்கள். பல வர்த்தகம் செய்கிறார்கள். அப்படி வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகள் அந்த அரபு நாடுகளின் கோரிக்கைக்கு செவி சாய்க் கின்றன. போர் நிறுத்தம் கோரிய 142 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

நமது குரல் அய்.நா. மன்றத்திலே கேட்பதற்கு யார்? என்ன வாய்ப்பு? நமக்கு ஒரு நாடில்லை. இன்னேரம் தமிழ்நாடு மட்டும் தனி நாடாக இருந்திருந்தால் ஈழத்திலே நமது தமிழ் மக்களை பாதுகாத்து இருக்க முடியும். (கைதட்டல்) தமிழ்நாட்டிற்கு ஒரு குடியரசு தலைவர், ஒரு பிரதமர் அவர்களுக்கு ஒரு பிரதிநிதி, அய்.நா. மன்றத்திலே இருந்தால் இந்த துயரத்தை பேசியிருக்க மாட்டார்களா? ஒன்றரை கோடி சிங்களவனுக்கு செவி சாய்க்கக்கூடிய அய்.நா. மன்றம் ஆறரை கோடி தமிழ் மக்களுக்கு செவி சாய்த்திருக்காதா இந்த எண்ணம் என்ன குற்றமானதா? நயவஞ்சகமானதா? இந்தியா தமிழ் மக்களை கைவிட்ட பிறகு, வஞ்சகமாக கொலை செய்த பிறகு “பாலை பார்க்காவிட்டாலும் பால் பண்ணையையாவது பார்” என்ற பழமொழி இருக்கிறதே. நீ ஈழத் தமிழனைப் பார்க்கா விட்டாலும் இந்தியாவிற்குள் சிக்கிக் கிடக்கும் ஆறரை கோடி தமிழனை நீ பார்க்கவில்லை. அதன் பிறகு எங்களுக்கு என்ன தான் வழி. ஒட்டு மொத்தமாக அழிந்து போவதா? எனவேதான் ஈழத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுங்கூட இங்கே நமக்கு ஓர் அரசு வேண்டும். நமக்கும் இறையாண்மை வேண்டும். (கைதட்டல்)

ஆயுதத்தை கீழே போடுங்கள் என்று சொல்லுகிறார்களே, விடுதலைப்புலிகள் ஆயுதத்தைக் கீழே போட்டப் பிறகுதான் போர் நிறுத்தம். பிரதிபாபட்டீல் இந்தியாவின் ஜனாதிபதி நாடாளுமன்ற உரையிலே சொல்லி விட்டராம். கலைஞர் கருணாநிதி மயிர்க்காம்பெல்லாம் சிலிர்த்துப் போய் பூரித்து எழுதுகிறார். இதோ என் கோரிக்கை நிறைவேற்றி விட்டார்கள். அக்டோபர் 14 ஆம் தேதி கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா, ஏன் இந்த மாய்மாலம்? விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே போட அவர்களிடம் என்ன ஏ.கே. 47 ரக துப்பாக்கி மட்டும்தான் இருக்கிறதா? விமானங்கள் இருக்கின்றன. அதை எங்கே போடுவது? கப்பல் படை இருக்கிறது. அதை எங்கே போடுவது? (கைதட்டல்)

விடுதலைப் புலிகள் என்பவர்கள் ஒரு தேச அரசை நடத்திக் கொண்டிருப்பவர்கள். (கைதட்டல்) துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு மறைந்து மறைந்து சுடடுக் கொண்டிருக்கும் கொரிலாக்கள் மட்டுமா? விமானப் படை இருக்கிறது; விமான ஓடுபாதை எல்லாம் பிடித்தீர்கள்; விமானங்கள் இல்லை; விமானங்களை பிரபாகரன் கையிலே வைத்திருக்கிறார்.

டெல்லி எப்படி நம்முடைய முதலமைச்சரை வளைத்து விட்டதோ அப்படி பி.எல்.ஓ. ஆளை வளைத்து விட்டது. இன்றைக்கு களத்திலே நிற்பவர்கள் அமாஸ் போராளிகள் தான். எனவே மதவாதமோ, தீவிரவாதமோ என்னவோ நாங்கள் அமாசைதான் ஆதரிக்கிறோம். பாலஸ்தீன விடுதலையை கோருகிறோம். இந்திய அரசு பாலஸ்தீனத்தின் காஜா மீது இஸ்ரேல் போர் தொடுக்கக் கூடாது. போர் நிறுத்த வேண்டுமென்று இங்கேயும் அறிக்கை வெளியிட்டது. அய்.நா.விலும் ஓட்டு போட்டது. எப்போதாவது அமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று கேட்டதுண்டா? கேட்கவில்லை. ஆக அமாசுக்கு ஒரு நீதி, விடுதலைப் புலிகளுக்கு ஒரு நீதி என்றால் என்ன நியாயம்? ஆயுதங்களை கீழே போடாமல் பாலஸ் தீனத்திலே போர் நிறுத்தம் வரவேண்டும். ஈழத்திலே மட்டும் புலிகள் ஆயுதங்களை கீழே போட்டால்தான் போர் நிறுத்தம் வரும் என்றால் இது பாரபட்சம் இல்லையா? நயவஞ்சகம் இல்லையா? சிங்களவனுக்காக நீங்கள் பேசுகின்ற யுக்தி இல்லையா இது? இதையெல்லாம் கேட்டால் ஆபத்து என்றால் யாருக்கு ஆபத்து? நயவஞ்சகர்களுடைய வேடத்துக்கு ஆபத்து. இதைத் தானே நீங்கள் செய்கிறீர்கள்?

அங்கே என்ன கொடுமை நடக்கிறது. இணைய தளங்களிலே செய்திகள் வருகின்றன. தோழர்களே இரண்டு மாதங்களாக உணவில்லை. அரிசி இல்லை. நான் எண்ணிப் பார்க்கிறேன். நம்முடைய உழவர்கள் உழைத்த உழைப்பினால் விளைந்த அரிசியை கிலோ 1 ரூபாய்க்கு ஓட்டுக்காக தமிழகத்தில் விற்கின்றீர்கள். அதையும் நம் மக்கள் வாங்காமல் அது கேரளாவுக்கு, ஆந்திராவுக்கு, கர்நாடகத்திற்கு கடத்தப்படுகிறது. 16 கிலோ மீட்டர் தொலைவிலே நம் இனத்தை சேர்ந்த தமிழர்கள் ஒரு கவளம் சோறு இல்லாமல் பட்டினியால் சாகின்றார்கள். ஏன் கொடுக்கக் கூடாது அரிசியை அங்கே? நம்முடைய தமிழ் நாட்டிலே தமிழ் இனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த அரிசியை அங்கே ஏன் கொடுக்கக்கூடாது? ஒரு இனம் அழிகிறதே! சோமாலியாவிலே பட்டினியாலே அழிவார்கள் என்று படத்தினிலே பார்ப்போமே; பட்டினிச் சாவு உள் நாட்டு கலகத்தின் மூலம் எலும்பும் தோலுமாய் காட்சி அளிக்கிறார்களே; சோமாலியக் குழந்தைகள் அதைப் பார்க்கும்போது நமது நெஞ்சு பதைக்கிறது. யாராய் இருந்தால் என்ன? மனித நேயம் அடிப்படை தேவை. எங்கோ சோமாலியாவில் நடப்பதல்ல இதோ 16 கிலோ மீட்டர் தொலைவிலே நம்முடைய குழந்தைகள் அங்கே கஞ்சி இல்லாமல் சாகிறார்கள். பெரியவர்கள் சோறு இல்லாமல் சாகிறார்கள். காட்டு இலை தழைகளை பிடுங்கி அவித்துச் சாப்பிட்டு வயிற்று பேதி ஏற்பட்டு அதனாலே சாகிறார்கள். 21 ஆம் நூற்றாண்டிலும் இந்த இனத்துக்கு இந்த கதி ஏற்பட வேண்டுமா? இதையெல்லாம் பார்த்து சகித்துக் கொள்ளக்கூடிய ரசித்துக் கொள்ளக்கூடிய மனப்பாங்கு சோனியா காந்திக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் இருக்கலாம். சாமான்ய தமிழனுக்கு அந்த எண்ணம் இல்லை. எங்களால் அப்படி இருக்க முடியாது.

ராஜபக்சே சொன்னாரல்லவா, பாதுகாப்பு பகுதி அங்கே அய்.நா. மன்றத்தின் உணவுத் திட்டம் அதன் மூலம் அய்.நா. அதிகாரிகள் வந்து உணவு பொட்டலம் வழங்குகிறார்கள்? எப்படி அந்த பாதுகாக்கப்பட்ட பகுதி இராணுவம் தாக்காத பகுதி, அந்த இடத்தில் இராணுவம் தவறுதலாக தாக்கி விடுமோ என்று கருதி, அய்.நா. மன்றத்தின் கொடியை ஏற்றி வைத்துக் கொண்டு வெள்ளைக் கொடியை வீசிக் கொண்டு உணவுப் பொட்டலம் வழங்குகிறார்கள். வானத்திலிருந்து குண்டு மழை பொழிகிறது. அய்.நா. மன்ற அதிகாரிகள் பக்கத்திலே பள்ளம் படுகுழிகளில் போய் ஒளிந்து கொள்கிறார்கள். 57 அப்பாவி தமிழர்கள் அங்கேயே சுருண்டு மடிகிறார்கள். இதை இந்த உலக உணவு திட்ட அதிகாரிகள் சொல்கிறார்கள். என்ன நியாயம்? கேட்க நாதியில்லையா? மருத்துவமனையிலே கொல்கிறார்கள்; மட்டகளப்பு பகுதியிலே களுவாஞ்சி குடியிப்பு என்ற கிராமத்திலே இராணுவத்தினர் போய் ஆண்கள் எல்லாம் அங்கே கோயிலிலே கூடுங்கள் என்று சொல்கிறார்கள். எல்லா ஆண்களும் போகிறார்கள். சுற்றி வளைத்து இராணுவம் இருக்கிறது. பெண்கள் எல்லாம் வீட்டிலேயே இருங்கள் என்கிறார்கள். கொஞ்சம் நேரம் கழித்து ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்கள் கதறுகிற சத்தம் கேட்கிறது. அந்தப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறது. சிங்கள இராணுவம், காதிலே கேட்டும் எதுவும் செய்ய முடியாமல் தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் ஆண்கள். புனிதவதி என்ற 14 வயது சிறுமியும் தாயும் இருக்கிறார்கள். தாயை கட்டி வைத்து விட்டு அவள் கண் முன்னாலேயே அந்தசிறுமியை அதுவும் பூப்படைந்து 25 நாட்கள்தான் ஆகியிருக்கின்றன. அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்கள்.

5 இராணுவத்தினர் உடம்பெல்லாம் காயம். அந்த தாயை பிறகு சுட்டுக் கொல்கிறார்கள். அந்த சிறுமி களுவாஞ்சிகுடி மருத்துவமனையிலே 17வது வார்டிலே சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கிறாள். முகவரி உட்பட கொடுத்திருக்கின்றார்கள்.

கோத்தபய ராசபக்சே சொல்லுகிறார். சிப்பாய்களே ஆண்கள் கிடைத்தால் கடலுக்கு, பெண்கள் கிடைத்தால் உங்களுக்கு என அவன் அனுமதி கொடுக்கிறான். இதற்கெல்லாம் காரணம் இந்திய அரசு. இந்திய அரசு கொடுக்கும் ஆயுதம், கொடுக்கும் அரசியல் உதவி, இந்திய அரசின் பின்னணி. இந்த இந்திய அரசை நாங்கள் நேசிக்க வேண்டுமா? இந்திய அரசு தமிழர்களை பகைவர்களாக கருதுகிறது. இந்தியாவிலே இருந்தாலும் தமிழன் பகைவன் தான். ஈழத்திலே இருந்தாலும் தமிழன் பகைவன்தான். காவேரி சிக்கலில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றி தந்தார்களா. குடிநீருக்காக முதல்வர் கலைஞர் ஒக்கேனக்கல்லுக்குப் போய் அடிக்கல் நாட்டுகிறார். தடுத்துவிட்டார்கள் அதை. நம்முடைய எல்லையிலே ஓடுகிற காவேரியில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு குடிநீருக்கு எடுக்க முடியவில்லை. இதற்கெல்லாம் சட்டத்திலே இடமில்லையா? உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. முல்லை பெரியாறு 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று நிறைவேற்றவில்லை. காங்கிரசு முதலமைச்சராக இருந்தாலும், கம்யூனிஸ்ட் முதலமைச்சராக இருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மலையாள இனவெறியோடு நடந்து கொள்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க இறையாண்மை இல்லையா? அரசியல் சட்டத்திலே இடமில்லையா? பாதிக்கப்படுபவன் தமிழன் என்றால் பாதிப்பை உண்டாக்குபவன் பக்கம் இந்திய அரசு இருக்கிறது.