உத்தரகாண்ட்டில் சூழலைக் கெடுக்கும் மின் திட்டங்களை அனுமதித்ததாலேயே பேரழிவு

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை வழக்கத்துக்கு மாறாக உடைந்து உருகியிருக்கிறது. இதன் காரணமாக இரண்டு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு. ரேனி எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டு வந்த ரிஷிகங்கா நீர் மின் திட்ட, கட்டுமானங்கள் முழுமையாக ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதோடு, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர்.

மற்றொரு நீரியல் மின் திட்டமான ‘தபோவன்’ திட்டம் பாதியளவு நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. 31 பேர் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் 170 பேர் பலியாகிவிட்டனர். இவர்கள் உ.பி., பீகார் மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்கள்.

பனிப்பாறைகளைக் கொண்ட பகுதியில் ரிஷி கங்கா மின் திட்டத்தை அமைப்பது கடுமையான இயற்கை சீரழிவுகளை உருவாக்கி விடும் என்று உள்ளூர் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள்.

2019இல் இந்த கிராமத்தைச் சார்ந்த குந்தன் கிங் - உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் ஆபத்தான இந்தத் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பொது நலன் வழக்கு தொடர்ந்தார். இத் திட்டம் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அந்த நிறுவனம் திட்டத்துக்கு சுரங்கம் அமைக்க மலைகளை உடைக்க வெடி மருந்துகளைப் பயன்படுத்துவதால் நந்தாதேவி உயிர் வனவிலங்கு சரணாலயத்தையும் பனிப்பாறைகள் மிகுந்த சுற்றுச் சூழலையும் கடுமையாகப் பாதித்து ஆபத்துகளை உருவாக்கிவிடும் என்று மனுதாரர் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

திட்டத்தின் கழிவுகள் ரிஷிகங்கா நதியில் கொட்டப்படுவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் தனியார் நிறுவனம் பொருட்படுத்தவில்லை. பாறைகளை உடைப்பதற்கு அரசு விதித்துள்ள நெறிமுறைகளும் பின்பற்றப்பட வில்லை என்று மனுதாரர் சுட்டிக் காட்டியிருந்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற உயர்நீதிமன்றம், பாறைகளை உடைப்பதற்கு வெடி மருந்துகளைப் பயன்படுத்த தடை விதித்ததோடு, மாசு கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களைக் கொண்ட ஓர் ஆய்வுக் குழுவை உருவாக்கி, திட்டப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

கமிட்டி தனது அறிக்கையில் குறிப்பிட்ட கட்டுமான நிறுவனம், சட்ட விரோதமான முறைகளைப் பயன்படுத்தியிருக்கிறது. மலைகளை உடைத்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்று அறிக்கை சமர்ப்பித்து விட்டது. வழக்கு விசாரணை அப்படியே கிடப்பில் போடப்பட்ட நிலையில் இந்த கோர விபத்து நடந்து முடிந்துள்ளது.

கட்டுமானப் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்த நிலையில் முழுதும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட் டுள்ளது. 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு இமயமலை சுற்றுச் சூழலியல் ஆய்வு மய்யத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள், மின் திட்டங்கள் எதையும் இந்தப் பகுதியில் அமைக்க முயல்வது கடும் பாதிப்புகளை உருவாக்கும் என்று எச்சரித்திருந்தனர்.

ஆனால் அரசு இந்த எச்சரிக்கையை மீறி திட்டங்களுக்கு அனுமதித் தந்தது என்று மூத்த விஞ்ஞானி பிரதீப் சிறீவத்சவா ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

சமூக நீதிக்கு எதிராக தனியார் துறை ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகளை குறுக்கு வழியில் அரசு பதவியில் அமர்த்தும் ஆபத்து: ஸ்டாலின் கண்டனம்

“சமூகநீதியைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வங்கித் தேர்வுகள், யூபிஎஸ்சி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், தபால் தந்தி இலாகா உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளுக்கு நடைபெறும் பல்வேறு தேர்வுகள் ஆகியவற்றில், ஏற்கெனவே சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து, போதாக் குறைக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மின்னல் வேகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து, இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று இந்திய அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்திய வரலாற்றில், சமூகநீதிக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் முற்றிலும் எதிரான இப்படியொரு அரசு இப்போது பாஜக தலைமையில் அமைந்திருக்கிறது என்பது, நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் கேடு. இதன் அடுத்த கட்டமாகவே, தற்போது இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து ஆட்களை, அதுவும் பாஜக - ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களை மத்திய அரசின் துறைகளுக்கு அழைத்து வந்து, எஞ்சியிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பையும் தகர்க்க, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசு செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

தனியார் துறையிலிருந்து நியமனம் செய்யப்படும் போது இடஒதுக்கீட்டுக் கொள்கை தூக்கி எறியப்படும். அப்படி நியமிக்கப்படுவோர் அவர்களின் சித்தாந்தத்தில் உள்ளவர்களை அரசுத் துறைகளில் சேர்த்து விடுவார்கள்.

பத்து சதவீத இடஒதுக்கீடு போதாது என்று இப்படிக் குறுக்கு வழியிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் சீரழிக்க நடக்கும் இந்த முயற்சிகளைத் திமுக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது.

இது கார்ப்பரேட் ஆட்சி என்பதால், பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பு என்று தொடங்கி, அது பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், மத்திய அரசின் துறைகளையும் தனியார்மயமாக்கும் இந்த முடிவு அரசியல் சட்டத்திற்கே விரோதமானது.

அதுமட்டுமின்றி, மத்திய அரசு அலுவலகங்களில் தப்பித் தவறி பணியில் அமர்த்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின அலுவலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உயர் பதவிகளை எட்டாக் கனியாக்கி, அனைத்திலும் முன்னேறிய வகுப்பினரும் கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டியவர்களும் ஆக்கிரமித்துக் கொள்வதற்கே வழி வகுக்கும்!

- விடுதலை இராசேந்திரன்