இராமாயணம் அவரவர் சாதிகளையும், பிரிவுகளையும் தானே நிலைநாட்டுகிறது?

ஒரு இடத்தில் அனுமார் இராமன் காலில் விழுகிறான். இராமன் அனுமாரைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். ‘நீயோ ஒரு பிராமணன். நான் க்ஷத்திரியன். என் காலில் வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன்?” என்று கூறுகிறான்.

இராமன் அயோத்தியில் இருந்து காட்டுக்குப் புறப்படும் சமயம், “என் பணத்தையும், சொத்துக்களையும், என்னிடத்தில் இப்போது இருக்கும் மாடுகளையும் கொண்டு வாருங்கள். முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன்!” என்பதாகச் சொல்லுகிறான்.

சீதை, “என் நகைகள் முழுவதையும் கொண்டு வாருங்கள். பிராமணனுக்குக் கொடுத்து விட்டுப் போனால் புண்ணியம்” என்பதாகச் சொல்கிறாள்.

சூர்ப்பனகை, ‘என்னைத் திருமணம் செய்துகொள்’ என்று கேட்கும்போது, ‘நீ ஒரு சாதி, நான் ஒரு சாதி, எப்படித் திருமணம் செய்து கொள்வது?’ என்கிறான்.

ஒரு இடத்தில் தாடகை மகனை இலட்சுமணன் கொன்றுவிட்டு, ‘இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன்?’ என்று வருத்தப்பட்டுக் கொள்கிறான். அதற்கு இராமன், ‘சூத்திரனைத் தானே கொன்றாய், அதனால் பாவமில்லை கவலையை விடு’ என்று கூறுகிறான்.

சம்பூகன் ஒரு சூத்திரன். அவன் தவம் செய்ய உரிமையில்லை என்று கூறி அவனைக் கண்டங் கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணாசிரம தர்மம் தாண்டவ மாடுகிறது. இப்படி இருக்கும் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்பதில் என்ன தப்பு?”

(பெரியார், ‘விடுதலை’ 13.9.56)