நீட் தேர்வு - தகுதிக்கான தேர்வு என்றது மோடி ஆட்சி.

நீட் தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழக சட்டமன்றம் ஒருமித்து நிறைவேற்றிய தீர்மானத்தையும் கிடப்பில் போட்டார்கள்.

அனிதா உள்ளிட்ட மருத்துவராகும் கனவோடு படித்து நல்ல மதிப்பெண் பெற்ற மூன்று சகோதரிகளின் உயிரை ‘நீட்’ பறித்தது.

நீட் தேர்வு வினாத்தாளில் குளறுபடிகள் நடந்தன. தவறான விடைகளைத் தந்து பிறகு சலுகை மதிப்பெண் வழங்கினார்கள்.

வடநாட்டில் நீட் தேர்வுக்கான பயிற்சி மய்யங்கள் தில்லுமுல்லுகளை செய்து குறுக்கு வழிகளில் தேர்ச்சி பெறும் மோசடி வித்தைகளை அரங் கேற்றுவதற்கு ‘நீட்’ பயன் பட்டது; பயன்படுகிறது.

தமிழ்நாட்டிலருந்து நீட் தேர்வு எழுதுவதற்கு வெளி மாநிலங்களில் தேர்வு மய்யங்களை ஒதுக்கினார்கள். உடன் சென்ற தமிழ்நாடு பெற்றோர் சிலரும் வெளி மாநிலங்களிலே மாரடைப்பால் பிணமானார்கள்.

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவச் செல்வங்களை உள்ளாடை வரை ‘சோதனை’ செய்து அவமதித்தார்கள்.

இப்போது பெரும் தொகையை இலஞ்சம் பெற்றுக் கொண்டு மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் தேர்வு எழுத வைத்து தேர்ச்சி பெற வைக்கும் மோசடிகள் அம்பலமாகி வருகின்றன.

தமிழ் நாட்டில் இதுபோல சில இடைத் தரகர்கள் வழியாக 7 பேர் ஆள் மாறாட்டம் செய்து தேர்வுகளை எழுத வைத்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சில மாணவர்களும் பெற்றோர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். வட மாநிலங்களின் கதை இனிமேல்தான் தெரிய வரும்.

தகுதிக்காக நுழைந்த ‘நீட்’ தேர்வு ஆள் மாறாட்ட மோசடி நிலைக்கு வந்து நிற்கிறது.