“அய்யர் - என்றால், வெறும் அய்யரைமட்டும் குறிப்பிடுவது இல்லை. அய்யர், அய்யங்கார், மதவா, கேரள நம்பூதிரி, ராவ் மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பார்ப்பனர்களை, ஒட்டு மொத்தமாகக் குறிப்பிடும் ஒரு பொது வார்த்தை தான், ‘பிராமணர்கள்’ என்பது. இங்கே ‘வர்ணாசிரமம்’ எங்கே நுழைந்தது?

“வழக்கில் இல்லாத வர்ணாஸ்ரமம் என்ற வார்த்தையை வைத்து, இவர்கள் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது.”

- இப்படி ஒரு பார்ப்பனரின் கடிதத்தை ‘தினமலர்’ பார்ப்பன ஏடு (அக்.30) வெளியிட்டிருக்கிறது.

‘அய்யர்’, ‘அய்யங்கார்’ என்றால் அதுகூட சாதிகளைத்தான் குறிக்கிறது. ஆனால், ‘பிராமணாள்’ என்றால் வர்ணாஸ்ரமத்தைக் குறிக்கிறது. பெரும்பான்மை மக்களை ‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்துகிறது என்று ‘தந்தை பெரியார் திராவிடர் கழக’ப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன் அளித்தப் பேட்டிக்கு பதிலாக இந்த பார்ப்பனர் கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது.

தினமலர்’ பார்ப்பனருக்கு சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

அய்யர், அய்யங்கார் சாதிகளைக் குறிக்கும் ஒட்டு மொத்தமான ‘பிராமணாள்’ என்ற ‘பொது வார்த்தை’ எங்கிருந்து குதித்து வந்தது?  ‘தினமலர்’ சவுண்டிக் கூட்டம் எழுதுவதுபோல் அது அய்யர், அய்யங்கார் சாதிகளைக் குறிக்கக்கூடிய பொது வார்த்தை மட்டும் தானா? இல்லை; இல்லவே இல்லை. பிறகு ‘பிராமணாள்’ என்பதற்கு என்னதான் அர்த்தம்?

• பூமியில் எல்லா உயிர்களுக்கும் ‘பிராமண தர்மத்தை’க் காப்பாற்றுவதற்கு கடவுளால் முழு அதிகாரம் பெற்ற தேசிய பாதுகாப்பு தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டவனே ‘பிராமணன்’. அதற்காகவே அவன் பூமியில் பிறந்துள்ளான். இதைத்தான் ‘மனு தர்மம்’ (அத்.1 - சுலோகம் 99) இவ்வாறு கூறுகிறது.

“பிரஹ்மணோ ஜாயமானோ ஹி ப்ரதிவ்யா மபிஜாயதே

ஈஸ்வர: சர்வபூதானாம் தர்மகோசஸ்ய குப்தயே’

• பூமியில் உள்ள அனைத்து உடைமைகளுக்கும் (கிரானைட் சுரங்கம் - அலைக்கற்றை - கூடங் குளம் அணுமின் நிலையம் - வளைகுடா நாட்டு எண்ணெய்க் கிணறுகள் உட்பட) யாவும் ‘பிராமணனுக்கே’ சொந்தம், ஏன்? அவன்தான் எல்லோருக்கும் மேலான உயர்... உயர்... உயர்ந்த குடியில் பிறந்தவன். இதைத்தான் மனுதர்மம் இவ்வாறு கூறுகிறது.

“சர்வஸ்வம் பிராமண ஸ்யேதம்யத் கிஞ்சிஜ் ஜகதீ கதம்

ஸ்ரைஷ்ட் யேனாபி ஜனேனேதம் சர்வம் வை பிராமணோர் கதி” (மனு அத்.1 - சுலோகம் 100)

•              ‘பிராமணன்’ அறிவாளியா? முட்டாளா? என்பது முக்கியமல்ல; அவன் ‘தினமலர்’ பார்ப்பானாகக் கூட இருக்கலாம்; அல்லது காஞ்சிபுரத்து கோயில் கர்ப்பக்கிரகத்தை ‘படுக்கை அறையாக’ மாற்றிக் கொண்ட தேவனாதனாக இருந்தாலும் சரி, கொலைக் குற்றவாளி ஜெயேந்திரனாக இருந்தாலும் சரி; எவனாக இருந்தாலும் ‘பிரா மணன்’ எல்லோருக்கும் மேலான ‘தெய்வம்’. எப்படி என்றால், நெருப்பு (அக்னி) பிணத்தை எரிக்கப் பயன்படுத்தினாலும், அதே நெருப்பு யாகத்துக்கும் பயன்படுத்தப்படுவதைப் போல், ‘பிராமணன்’ எவ்வளவு இழிவான வேலையை செய்தாலும் சரி, அவனைத்தான் ஏனைய “சூத்திரர்கள்” கும்பிட்டு வணங்க வேண்டும். காரணம், ‘பிராமணன்’ சாதாரண ‘மனிதன்’ அல்ல; மனிதனுக்கும் மேலான தெய்வம். இதைச் சொல்வது - மனு சாஸ்திரம் (அத்.9 - சுலோகம் 9)

“ஸ்மசானேஷ்வபி தேஜஸ்வீ பாவகோ நைவ துஷ்யதி

ஹூயமானஸ்ச யஜ்னோஷு பூய ஏவாபிவர்த்த”- 318.

ஏவம் யத்யப்ய னிஷ்டேஷு வர்த்தந்தே ஸர்வகர்மஸு

ஸர்வதா ப்ராஹ்மணா: பூஜ்யா: பரமம்தைவதம் ஹிதத்.”           - 319

(மனு அத்தியாயம் 9)

• பிராமணன் என்பவன் தெய்வம். அவன்தான் கடவுளை நேரடியாக வணங்கும், ‘யாகங்களை’ நடத்தும் உரிமை கொண்டவன். சத்திரியன் யுத்தம் செய்ய வேண்டியவன்; வைசியன் - வணிகம் செய்ய வேண்டியவன்; சூத்திரன் - அடிமையாக, அடிமைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டியவன்.

“பிராமணா சத்திரியா வைஸ்யா மத்யே சூத்திராஸ்ய பூயச;

இஜ்பா யுத்த பணாசேவா ஸ்வர்த்தயந்தோஸ்வயஸ்திகா.”

(உமா சம்ஹிதா, அத்.8)

•              “இந்த உலகமே கடவுளுக்குக் கட்டுப்பட்டது தான். அவர் சர்வசக்தியுள்ளவர் என்பதும் உண்மைதான். ஆனால், அந்தக் கடவுளையே கட்டுப்படுத்தக் கூடிய ‘அணுசக்தி’ வேத மந்திரங்கள் தான்” என்கிறது மனுதர்மம்.  ‘சூத்திர’ சிற்பி கல்லால் செதுக்கும் சிலை, ‘கடவுளாக’ மாறுவது எப்போது? ‘பிராமணனின்’ மந்திரம் அந்த கல்லுக்குள் ஏற்றப்படும்போதுதான், அத்தகைய சக்தியைப் பயன்படுத்தும் ‘அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தை’ இயக்கும் ‘ரிமோட்’ யாரிடம் இருக்கிறது என்றால், அது ‘பிராமணர்’ களிடம்தான். ரிக்வேதம் - 62வது பிரிவு, 10வது சுலோகம் - அதைத்தான் கூறுகிறது.

“தெய்வாதினம் ஜகத் சர்வம்

மந்ரா தீனம் து தெய்வதம்

தன் மந்திரம் பிரம்மணாதீனம்

தஸ்மத் பிரம்மணம் பிரபுஜெயத்.”

- இப்படி ஏராளமாகப் பட்டியலிட முடியும்.

- ‘பிராமணன்’ என்பது பார்ப்பன சாதிகளைக் குறிக்கும் பொதுவான சொல் என்று பசப்பும் ‘தினமலர்’ அக்கிரகாரக் கூட்டத்தைக் கேட்கிறோம்; மேலே நாம் எடுத்துக் காட்டியுள்ள சான்றுகளை மறுக்கத் தயாரா?

அல்லது இந்த ‘ஸ்மிருதிகளை’ - ‘சாஸ்திரங்களை’ நாங்கள் ஏற்கவில்லை என்று நேர்மையிருந்தால் யோக்கியர்களாக இருந்தால் அறிவிக்கத் தயாரா? அல்லது இவைகளை அரசு தடை போட வேண்டும் என்று வலியுறுத்துவார்களா?

•              ‘பிராமணன் - சூத்திரன்’ இருவருமே பிரம்மா வின் உடலில் அடங்கியிருப்பவர்கள். பிரம்மா வின் தலை - பிராமணன்; கால் - சூத்திரன் - என்று ‘புருஷசுக்தம்’ என்ற ஸ்மிருதி கூறுகிறது. இதன் அர்த்தம் என்ன! ‘பிராமணன்’ என்ற தலையோடு, ‘சூத்திரன்’ என்ற காலை வெட்டி எறிந்து விட முடியாது. இரண்டுமே பிரித்துப் பார்க்கவே முடியாத ஒரே உடல் அமைப்பு. ஆக, ‘பிராமணன்’ என்று ஒரு பிரிவு அறிவித்துக் கொண்டாலே, ஏனைய பிரிவினரை தாமாகவே ‘சூத்திரர்’ ஆகி விடுகிறார்கள். அதனை ஒரே அங்கமாக்கி உறுதிப் படுத்திவிடுகிறார்கள். அந்த ‘சூத்திரன்’ யார் என்பதையும், ‘மனுஸ்மிருதி’ விளக்கிவிடுகிறது. யார் இந்த சூத்திரர்கள்?

1. யுத்தத்தில் புறங்காட்டி ஓடுபவன்;  2. கைதியாகப் பிடித்து வரப்பட்டவன்;  3. பிராமணனிடம் பக்தி காரணமாக அடிமை வேலை செய்யக்கூடியவன்;

4. விபச்சாரியின் மகன்;  5. விலைக்கு வாங்கப்பட்ட வன்;  6. ஒருவனால் மற்றவனுக்கு கொடுக்கப்பட்ட வன் (இலவச ஆடு, இலவச ரேஷன் அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளைப் போல);

7. தலைதலைமுறையாக அடிமை வேலை செய் கிறவன். (மனுசாஸ்திரம். அத்.8 - சுலோகம் 415)

ஆக, ‘பிராமணன்’ என்றால் கடவுளுக்கே அதிபதி; உலகத்துக்கே உரிமையாளன்; எல்லாவற்றி லும் உயர்ந்தவன்; ‘கிரிமினல்’ என்றாலும் வணங்க வேண்டியவன்; ‘சூத்திரர்’களை அடிமையாக நடத்தக்கூடிய உரிமைப் பெற்றவன்; சூத்திரர்கள் விபச்சாரி மக்கள் என்று அறிவிக்கும் அதிகாரம் பெற்றவன் - என்பதை மனுசாஸ்திரங்களும் வேதங் களும் ஸ்மிருதிகளும் கூறும்போது அது சும்மா, ஒரு பொதுவான வார்த்தைதான் என்று ‘தினமலர்’ கும்பல் ‘சப்பைக்கட்டு’ கட்டுவது காதில் பூ சுற்றுவது தானே?

வழக்கில் இல்லாத வர்ணாஸ்ரமத்துக்கு போராட்டமா என்று ஏகடியம் பேசும் பூணூல் கூட்டத்தைக் கேட்கிறோம் - வர்ணாஸ்ரமம் வழக்கற்றுப் போய் விட்டதா? - பதில் சொல்!

• பார்ப்பான் - காயத்திரி மந்திரம் ஓதி முதுகை சொரியும் ‘பூணூலை’ப் போட்டுக் கொள்வது ‘பிராமணன்’ என்ற வர்ணாஸ்ரம அடையாளத்தின் வெளிப்பாடு அல்லவா?

• கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ஆண்டவனிடம் மந்திரம் போட்டு, பக்தர்களின் கோரிக்கை மனுக்களை தீர்த்துவைக்கும் உரிமை தங்களுக்கே உண்டு என்று கூறி, உச்சநீதிமன்றம் வரை ஓடுவது ஏன்? கடவுள் ‘பிராமணன்’மந்திரத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவன் - என்ற வர்ணாஸ்ரம அடிப்படை யில் தானே? மறுக்க முடியுமா?

• பார்ப்பனப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண் களுமே அர்ச்சகர்களாகவோ, பூஜை உள்ளிட்ட எந்த சடங்குகளும் செய்யக் கூடாது என்ற - சமூக விதியைத் திணித்து வைத்திருப்பது எந்த அடிப் படையில்? பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடிமைப்பட்டு வாழ வேண்டி யவர்கள் என்ற வர்ணாஸ்ரம அடிப்படையில் தானே?

• வர்ணாஸ்ரமக் கலப்பு ஏற்பட்டு அது சாதிகளாக மாற்று உருவம் எடுத்தப் பிறகும் அந்த சாதிகளுக்கான சடங்குகளை வாழ்க்கை முறையை சாதிகள் ஒன்றுடன் ஒன்று கலந்து விடாமல், கண்காணித்து, சாதிக்கேற்ற, திருமண சடங்குகளை, மந்திரங்களைத் திணித்து வைத்திருப்பது எது? வர்ணாஸ்ரமம் தானே!

• இப்படி சாதிக் கலப்பு திருமணங்களை எதிர்த்து பல்வேறு ‘சூத்திர’ சாதிகளே தொடைத் தட்டிக் கிளம்பி, இன்றைக்கும் இயக்கம் நடத்துவதற்கு எது அடிப்படை? வர்ணாஸ்ரமம் தானே!

•              18 வயதுக்குள்ளேயே, குழந்தைப் பருவத்திலேயே பெண்களுக்குத் திருமணம் நடப்பதை, அதை காவல்துறையும், மாவட்ட ஆட்சித் தலைவர் களும் கண்டுபிடித்து தடுத்து வருகிறார்கள் என்று செய்திகள் வருகின்றனவே, இந்த குழந்தைத் திருமணங்களுக்கு அடிப்படை என்ன? ‘பால்ய’ வயதிலேயே பெண்களுக்கு ‘விவாகம்’ செய்துவிட வேண்டும் என்ற ‘வர்ணாஸ்ரமம்’ தானே! வர்ணாஸ்ரமம் வழக்கற்றுப் போய்விட்டதா?

• இப்போதும் கிராமங்கள்தோறும் ஊரையும் சேரியையும் பிரித்து வைத்திருப்பது எது? ‘சங்கர ஜாதி’ என்ற பஞ்சமர்களோடு சேர்ந்து வாழக் கூடாது என்ற வர்ணாஸ்ரமம் தானே!

•              ‘சூத்திர’ வர்ணப் பிரிவில் அடக்கப்பட்டுள்ள சாதியினர், தங்களுக்கு பொதுவான வார்த்தை ‘சூத்திரர்’ என்பதை ஏற்க மறுத்து, சாதிகள் அடையாளத்தை மட்டுமே ஏற்கும் நிலையில், ‘பிராமண’ப் பிரிவில் அடங்கியுள்ள அய்யர், அய்யங்கார் கும்பல், மட்டும் தங்களை ‘பிராமணன்’ என்ற பிரிவிலேயே அடையாளப் படுத்துவதும் சங்கம் அமைப்பதும் எந்த அடிப்படையில்? ‘பிராமணனே’ உயர்ந்தவன் என்ற ‘வர்ணாஸ்ரமம்’ வழங்கியுள்ள குலப் பெருமை அடிப்படையில் தானே? அதற்கு ஆதரவாக வழக்காடக் கிளம்பியிருக்கும் ‘தினமலர்’ புத்திக்குள் புகுந்து கிடப்பதும் வர்ணாஸ்ரமம் தானே!

• ஆளும் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடு ‘நமது எம்.ஜி.ஆர்.’. பார்ப்பனர் பூணூல் போடுவதை இப்போதும் நியாயப்படுத்துவதும், பார்ப்பன முதலமைச்சர் ஜெயலலிதா, வர்ணாஸ்ரம எதிர்ப்பாளரான பெரியார் சிலைக்கு, அவர் பிறந்த நாளில் மாலை போட வராமல், சாதி வர்ணாஸ்ரமக் காவலரான முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மட்டும் மாலை போட ஓடுவதும் வர்ணாஸ்ரமத்தின் வெளிப்பாடுதானே?

• புதுடில்லி ராமலீலா மைதானத்தில் ‘வர்ணா ஸ்ரமம்’ போற்றிய இராமனை எதிர்த்த திராவிட அசுரர்கள் இராவணன், கும்பகர்ணன் உருவத்தை தீயிட்டு எரித்து விழா கொண்டாடுவதும் -அதில் சோனியாவும் மன்மோகனும் பங்கேற்று மகிழ்ச்சிக் கூத்தாடுவதும் வர்ணாஸ்ரமம் தானே!

வர்ணாஸ்ரமம் எங்கே வழக்கற்றுப் போய் விட்டது? பதில் சொல்!

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிய பிறகும் தகவல் தொடர்புகளும் அறிவியல் வளர்ச்சியும் உலகத்தையே நெருக்கமாக இணைத்து வரும் ‘யுகத்தில்’ வேதகாலத்து கருத்துகளை சுமந்து கொண்டு பூணூலையும் உச்சிக் குடுமியையும் பஞ்ச கச்சத்தையும் அப்படியே இறுக்கிப் பிடித்துக் கொண்டு வர்ணாஸ்ரம வாழ்க்கையிலிருந்து மக்களை விடுவிக்கும் பெரியாரியல் - அம்பேத்கரிய - மார்க்சிய - சனநாயக - சமூகநீதி இயக்கங்களை யெல்லாம் காலில் போட்டு மிதித்துக் கொண்டு ஆரிய தர்பார் நடத்துவது, அசல் வர்ணாஸ்ரமப் புத்தி தானே அல்லாமல் வேறு என்ன? அக்கிரகாரங்களை ‘தினமலர்’களை ‘துக்ளக்’குகளை எச்சரிக்கிறோம்!

ஆரியத் திமிரை பார்ப்பன இறுமாப்பை அடக்கும் வரை இந்த சமூகப் புரட்சி ஓயாது; ஓயாது!

அது செத்து மடியும் வரை பெரியாரின் பேரனுக்குப் பேரன் களத்தில் நிற்பான்!

- இராசேந்திரன்