பார்ப்பனர் என்றால் ஆய்வாளராம்; அந்தணர் என்றால் உயர்ந்தோராம்; பெரியார் தமிழனை அடிமையாக்கி இனப் பெருமையை சிதைத்தவராம்

நாம் தமிழர் கட்சியின் “கொள்கை” அறிவிப்பு


‘நாம் தமிழர் கட்சி’யின் கொள்கை ஆவணம், கோவையில் கடந்த 18 ஆம் தேதி வெளியிடப்பட் டுள்ளது. மக்களிடம் கட்சிக் கொள்கையாக முன் வைக்கப்பட்டுள்ள அந்த ஆவணம், பெரியாரை தமிழினத்தின் பகைவராக சித்தரிக்கிறது.

திராவிட எதிர்ப்பு என்ற போர்வையில், பெரியார் எதிர்ப்பை முன் வைத்து, பார்ப்பனர்களுடன் நேச சக்திகளாக அடையாளம் காட்டிக் கொள்ள முன் வந்திருக்கும் சில குழுக்களோடு, நாம் தமிழர் கட்சியும், தன்னை இணைத்துக் கொள்ள முன் வந்திருக்கிறது. பெரியார் முன் வைத்த கருத்துகள் தமிழர்களையும் ஏமாற்றும் நோக்கம் கொண்டவை. அவைகளில் தமிழர்களை அடிமைப்படுத்தும் உள்நோக்கம் இருந்தது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது. அந்த ஆவணத்தில் பெரியாருக்கு எதிராக முன் வைக்கப்பட்டுள்ள சில கருத்துகளை மட்டும் அப்படியே இங்கு பதிவு செய்துள்ளோம்.

1938 ஆம் ஆண்டில் பார்ப்பன இராஜகோபாலாச்சாரி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் தமிழ்நாடு தமிழருக்கே என்று முழக்கமிட்டு, போராட்டத்துக்குத் தலைமை ஏற்றதே நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் மட்டும் தான் என்றும், அவர்களை ஆதரிப்பதுபோல் ஆதரித்து பெரியார் நாடகமாடி பிறகு தமிழர்களை அடிமைப்படுத்தத் தொடங்கி விட்டதாகவும் பெரியார் பெயர் குறிப்பிடாமல், அந்த ஆவணம் கூறுகிறது.

“தமிழ்நாட்டில் சாதிக் கொடுமைகளையும், சமற்கிருத மேலாளுமையையும் புகுத்தி, நிலை நிறுத்திய கிருட்டிண தேவராயர் காலத்திலிருந்தே, தமிழர் நிலங்களைப் பறித்துத் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்த திராவிடர்கள் மட்டும், இராசாசி இந்தியைத் திணித்தபோது, அதை எதிர்த்துத் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்று நாவலர் சோமசுந்தர பாரதியார், மறைமலையடிகள் ஆகியோர் தலைமையில் திரண்ட போது, அவர்களை ஆதரிக்கிறாற்போல ஆதரித்துப் பின், தங்களுடைய தமிழரைத் தொடர்ந்து அடிமைப்படுத்தும் திட்டத்தின் கீழ், அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர். திராவிட நாட்டு முழக்கத்தை முன்னெடுத்தனர்.

தமிழர் அறிவையும் தன்மானத்தையும் மீட்டெடுப்பதாக முழங்கிக் கொண்டு, “தமிழ் அறிவியல் அற்ற மொழி; அதை வாழ்வியலிலிருந்து தலை முழுகி விடுவதே அறிவுடைமை” என்று பகுத்தறிவுப் பரப்புரையும் தன்மானப் பரப்புரையும் செய்தனர். தமிழை வாழ்வியலில் இருந்துத் தவிர்க்கச் சொல்லிவிட்டு, தமிழ் வழிப்பட்ட தமிழ்த் தேசிய முழக்கமான “தமிழ் நாடு தமிழர்க்கே” என்ற செயல் திட்டமற்ற வெற்று முழக்கத்தை அடையாளமாக முன் வைத்துக் கொண்டே, “அறிவியல் மொழியான ஆங்கிலமே, தமிழர்க்கு மதிப்புமிக்க நல்வாழ்வு தரும்” என்று பேரளவில் பரப்பினர். தமிழர்களை ஆங்கில மோக வலைக்குள் வீழ்த்தினர். மேலும், மூடநம்பிக்கை ஒழிப்பின் பெயரால், சில வரலாற்றுச் சான்றுகளையும், பல வாழ்வியல் விழுமியங்களையும் தாங்கி நிற்கிற தமிழ் இலக்கியங்களிலிருந்து, தமிழர்களை அயன்மைப்படுத்தினர். தமிழர் என்ற அடையாளம் இழிவுபடுத்தப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டது.”


- என்கிறது ஆவணம்.

• ஈழத் தந்தை செல்வா, தந்தை பெரியாரிடம் தமிழ் ஈழ விடுதலைக்கு ஆதரவு கேட்டபோது, “நாங்களே அடிமையாக இருக்கிறோம்; இன் னொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும்?” என்று கூறியதை சிங்களத்திடம் பணிந்து போகுமாறு பெரியார் அறிவுரை கூறியதாக இந்த ஆவணம் கூறுகிறது. சிங்களமே, திராவிடம் தான் என்றுகூறும் இந்த “ஆராய்ச்சி” ஆவணம், அதனால் சிங்களர்களிடம் தமிழர் களை அடிமைப்படுத்தவே பெரியார் கருதியதாகவும் பதிவு செய்துள்ளது.

ஆவணத்திலிருந்து:

“ஈழத்தைச் சேர்ந்த திராவிடமாம் சிங்களம், தமிழர் மீது அரச பயங்கரவாதத்தை ஏவி, அழித்து வந்தது. அதை எதிர்த்துப் போராடிய தந்தை செல்வாவிற்குத் திராவிடம், சிங்களத்திடம் பணிந்து போகுமாறு அறிவுரை கூறியது. தமிழ்நாட்டிற்குள், “தமிழ்நாடு தமிழர்க்கே” என்று தான் முழங்குவதாக உரிமை கொண்டாடிய திராவிடம், “நானே அடிமை; இன்னொரு அடிமைக்கு உதவுவது எப்படி?” என்று வினவி, கைவிரித்தது.

•                 தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் கல்வி, வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீட்டினால் தங்கள் ஆதிக்கம் பறிப் போய்விட்டதே என்று குமுறிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களின் கண்ணீரைத் துடைக்க, ‘நாம் தமிழர்’ கட்சி முன் வந்திருக்கிறது.  சாதிவாரி இட ஒதுக்கீட்டினால் தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடு முற்றி வருகிறதாம்.

ஆவணத்திலிருந்து:

“பற்றாக்குறைகளுக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முழுமையற்றதும், பொருளற்றதும், மாநில உரிமையையும், மகளிர் உரிமையையும் பற்றிக் கவலைப்படாததும் ஆன சாதிவாரி ஒதுக்கீட்டினால், தமிழ்ச் சாதிகளுக்கிடையே முன் எப்போதும் இல்லாத அளவுக்கு முரண்பாடுகள் முற்றி வருகின்றன.”

•                 பார்ப்பனர் என்ற சொல்லைத் தவிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ள இந்த ஆவணம், ‘மனுவியல்’ என்ற சொல்லை அதற்கு மாற்றாகப் பயன்படுத்துகிறது. இறுதிப் பகுதியில் ‘கலைச் சொல் விளக்கம்’ தரப்பட்டுள்ளது. அதில் தரப்பட்டுள்ள விளக்கங்கள்:

“அந்தணன் - ஈவு இரக்கங் கொண்ட அறநெறியாளன்

பார்ப்பான் - ஆய்வாளன், இளைஞன்

ஆரியன் - சீரியன், உயர்ந்தவன், சீரிய தவசமான கேழ்வரகு. (தர்மபுரி, சேலம் மாவட்ட வழக்கு)

பிராமணன் - பேரமணன்”

திராவிடம் பல காலக்கட்டங்களில் தமிழிலிருந்து பிரிந்து சென்று, மனுவியம் சார்ந்துப் பல்வேறு மொழிகளாய்த் திரிந்து போன கோட்பாடு.

- மேற்குறிப்பிட்ட உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களே பார்ப்பனர்கள் என்பதே நாம் தமிழர் கட்சியின் பார்வை என்று ஆவணம் தெளிவுபடுத்தியுள்ளது.

மனு நெறியார் என்பதற்கு -

“ஒரு குலத்துக்கு ஒரு ஞாயம் என்று சட்டம் எழுதிய மனு என்பானின் பின்பற்றாளர்கள்” - என்று இந்த ஆவணம் விளக்கம் தருகிறது.

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவைதான் - மனு பிறப்பின் அடிப்படையில் பிரித்த ‘குலங்கள்’ என்று எந்த ஒரு இடத்திலும் இந்த ஆவணம் குறிப்பிடவில்லை.

•                 தமிழர் அரசியல் விடுதலையை வென்று எடுக்காமல், பெரியார் முன்னிறுத்திய பார்ப்பன எதிர்ப்பு, சாதி எதிர்ப்பு, இடஒதுக்கீடு, பெண்ணுரிமை எல்லாம் தமிழர்களை இரண்டக நிலைக்குத் தள்ளிய சீர்திருத்தமே என்று கூறுகிறது இந்த ஆவணம்.

ஆவணத்திலிருந்து:

“2000 ஆண்டுகளுக்கு மேலாக, வள்ளுவர் தொடங்கி வள்ளலார் ஊடாக மனுவிய எதிர்ப்பு மரபினைப் போற்றி வந்த அறிவு நெறிப் பொதுமைத் தமிழர் ஏற்றுக் கொள்ளும் வகையில், தமிழர்க்குத் தலைமையாய் உட்கார்ந்துகொண்டே திராவிடத்தின் குமுகாயத் தளம், மனு நெறியர் ஆளுமை எதிர்ப்பு, மனுவிய மடமை எதிர்ப்பு, சாதிய இடஒதுக்கீடு, சமனியம், பெண்ணுரிமை ஆகிய தளங்களில் எண்ணற்ற தமிழர் ஒற்றுமையுடன் பாடாற்றித் தமிழர்க்கு அறிவும் மானமும் ஊட்டி, அரசியல் விடுதலையும், பொருளியல் விடுதலையும் வாங்கித்  தருவதாய் ஓங்கி உரைத்தது.

திராவிடத்தின் அரசியல் தளமும், தமிழர்க்கு அரசியல், பொருளியல் சார்ந்த முழு உரிமையைப் பெற்றுத்தந்துத் தமிழுக்கும் தமிழர்க்கும் பொற்கால நல்வாழ்வு படைப்பதாகச் சொல்லி தலைமுறை கோடிகண்ட தலைமொழியாம் தமிழின் புகழ் பாடி, தமிழர்க்குத் தமிழின்ப உணர்வு ஊட்டியது. நூற்றாண்டுப் பெருமை கொண்டாடும் திராவிடத்தின் இரு தளங்களும் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வினைத் தீர்மானிக்கும் மேற்கட்டுமானக் கூறுகளோடு தங்கள் சீர்த்த பணிகளை நிறுத்திக் கொண்டு, அடிக்கட்டுமானக் கூறுகளான தமிழர் அரசியல் விடுதலை, பொருளியல் விடுதலை என்பவற்றில் உளதுபோலக் காட்டி, இலதாக நாட்டும் இரண்டக நிலை கொண்டனர்.”

- என்கிறது இந்த ஆவணம்.

(குறிப்பு: இதில் பயன்படுத்தப்பட்டுள்ள மேற்கட்டுமானம், அடிக்கட்டுமானம் என்ற சொற்றொடர்கள் மார்க்சியம் தொடர்பானவை; இதற்கான கலைச்சொல் விளக்கம், என்ன காரணத்தினாலே தரப்படவில்லை.)

•                 பெரியார், திராவிடம் பேசிய தமிழன் அரசியல் விடுதலையை வென்றெடுக்காமல், ‘இரண்டகம்’ செய்து விட்டார் என்பதால், அந்த புரட்சியை வென்றெடுக்க, படை திரட்டிக் கிளம்பியிருக்கும், நாம் தமிழர் கட்சி, தமது அமைப்பில் சேருவோர் “புரட்சிகர” உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது.

அந்த உறுதிமொழிப் பிரகடனம் இது தான்:

“நாட்டின் அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகிய கொள்கைகளின்பால் உண்மையான நம்பிக்கைக் கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி, வலிமைப்படுத்தக் கட்சி உறுதி அளிக்கிறது.”

•                 திராவிடம் இழைத்த துரோகங்களை நேர் செய்யக் கிளம்பியிருக்கும் நாம் தமிழர் கட்சி, இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்ற மேற்கண்ட ‘மாபெரும் அறைகூவலை’ விடுத்திருப்பதோடு அதன் பொதுக் கூட்ட மேடைகளில் பெரியார் படத்துக்கும் தடை விதித்துவிட்டது.

“கட்சி நிகழ்ச்சிகளுக்கு உரிய பதாகைகளில் நம் வாழ்வியல் வழிகாட்டி திருவள்ளுவர், நம் உரிமை மீட்சியியல் வழிகாட்டி தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் (பெரும்பாகரன்) ஆகிய இருவரின் உருவங்கள் தவிர வேறெந்த உருவமும் பயன்படுத்தக் கூடாது.” - என்றது அந்த ஆவணம்.