கோபம், ஆத்திரம் இல்லாதவரும், எவரிடமும் இனிமையாகப் பழகுபவரும், மற்றவர்களுக்கு உதவும் மனம் படைத்தவரும், எல்லாவற்றுக்கும் மேலாக தனக்கான சொந்த நலன்களை முற்றாகப் புறக்கணித்து, பத்திரிகை யாளர்களையும், தோழர்களையுமே குடும்பமாகக் கொண்டு வாழ்ந்தவருமான தோழர் சின்னக் குத்தூசி எனும் தியாகராசன் (80) 22.5.2011 காலை முடிவெய்தினார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரது ‘குடும்பமாக’ இருந்து பாதுகாத்து வந்த ‘நக்கீரன்’ குழும அலுவலகத்தில் அவரது உடல் பொது மக்கள் மரியாதைக்கு வைக்கப்பட்டு, எந்த மூடச் சடங்குமின்றி மயிலாப்பூர் மின் இடுகாட்டில் மாலை எரியூட்டப்பட்டது. தமிழக அரசியல் வரலாறுகளை துல்லியமாக தமது நினைவுத் திரையில் பதிவு செய்து வைத்திருந்தது, அவரது தனிச் சிறப்பு. அவரது நினைவாற்றல் அபாரமானது. திராவிடர் இயக்கத்தோடு தன்னை முழுமையாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.
ஆனாலும், ‘ஜெயலலிதா எதிர்ப்பு - கருணாநிதி தீவிர ஆதரவு’ என்ற கட்சி அரசியல் எல்லைக்குள்ளேயே தனது ‘திராவிட’ இயக்க ஆதரவு நிலையை அவர் குறுக்கிக் கொண்டு விட்டார். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் இறுதி நிகழ்வில் பங்கேற்றார்.

முன்னாள் மாவட்ட தலைவர் திருச்சி செ.த. இராசேந்திரன் முடிவெய்தினார்

திருச்சி மாவட்டக் கழகத்தின் முன்னாள் தலைவர் செ.த. இராசேந்திரன் (62), கடந்த 18.5.2011 அன்று விடியற்காலை முடி வெய்தினார். அவரது இறுதி விருப்பப்படி கண்கள் திருச்சி ஜோசப் கண் மருத்துவமனைக்கும், உடல், கி.ஆ.பெ. விசுவ நாதம் அரசு மருத்துவமனைக்கும் கொடையாக அளிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்திலேயே இறுதி வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தோழமை அமைப்பினர், பத்திரிகை யாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.