பல்லடத்தில் நடந்த நாத்திகர் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை:

இன்று காலையிலிருந்து நடந்த நிகழ்ச்சி நாத்திகர் விழா என்ற பெயரால் ஒரு மாநாட்டை கூட்டி நாத்திக கருத்துகளை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு அல்லது ஏற்கனவே இருக்கிற கருத்துகளை மேலும் தூண்டி விடுவதற்கும் அதை துளிர்த்து விடுவதற்குமாக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திக்கொண்டிருக்கிறோம் என்றாலும் இதெல்லாம் ஏற்கனவே மக்களுக்கு தெளிவாக தெரிந்த செய்திகள் தான். மாணவப் பருவத்தில் பள்ளியில் படிக்கின்ற பிள்ளைகளுக்கு அறிவியல் என்று ஊட்டப்படுகிறது. அறிவியல் பாடம் சொல்லி தந்த செய்திகள் அதிலே நிபுலா தியரி என்று சொல்லுகிறார்கள். பிக்பேங்க் தியரி என்று சொல்லுகிறார்கள். உலகம் எப்படி உண்டானது என்பதற்கு உலகம் கடவுளால் படைக்கப்பட்டது பொய் என்று அறிவியல் பாடம் சொல்லிவிட்டது மாணவப் பருவத்தில்.

 டார்வின் தியரியை படிக்கிறார்கள் எப்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றது என்று. ஓர் அணு அமீபாவாக இருந்து மனிதனாக உரு மலர்ச்சிப் பெற்ற முழு வரலாற்றை டார்வின்  தத்துவம் சொல்லி வருகிறது. ஆக மனிதன் படைக்கப்படவில்லை. மனிதன் உரு மலர்ந்தான் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல் பாடம் சொல்லி விடுகிறது. எல்லாம் கடவுள் படைக்கவில்லை என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை அறிவியல்பாடம் சொல்கிறது. ஆனால் அறிவியல் என்பது அறிவியல் அறிவாக உள்ளது. அறிவியல் மனப்பான்மையாக மாற வேண்டும் என்பதே நம் நோக்கம்.

 அறிவியல் அறிவு - Scientific Knowledge மட்டும் போதாது அறிவியல் மனப்பான்மை -  Scientific Mentality வேண்டும். அப்படி அறிவியல் மனப்பான்மை இருந்தால் தான் எதையும் அறிவியல் பார்வையில் அணுக முடியும் - Scientific approach அறிவியல் அணுகுமுறை இருந்தால் தானாகவே அறிவியல் கண்டுபிடிப்புகள் – Scientific Inventions உருவாகும்.

 அறிவியல் மனப்பான்மை இல்லாததால்தான் சரஸ்வதிக்கு வருடம் தவறாமல் பூஜை நடத்தியும் காகிதத்தை மிதித்தாலும் கண்ணில் ஒற்றிக் கும்பிடும் நமது நாடு தாழ்ந்து கிடக்க காகிதத்தில் மலம் துடைக்கும் ஐரோப்பியர்கள் மேலை நாட்டார்கள் வளர்ந்து நிற்கிறார்கள்.

 அறிவியலை வயிற்றுக்காக படிப்பதற்கு மாறாக அறி வியலை மூளைக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதை செயல்படுத்த வேண்டும் என்று கேட்பதும், அப்படி செயல்படுத்த வேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் வைத்து அதற்கு துணையான நிகழ்ச்சிகளை நிகழ்த்தி காட்டினார்கள். அருமைத் தோழர்கள் அலகு குத்தி தொங்கிய வண்ணம் காட்டினார்கள். இராட்டின காவடி என்று அலகு குத்தி தோழர் சட்ட கல்லூரி மாணவர் பன்னீர்செல்வம், கோவை மாநகர செயலாளர்கோபால், பல்லடத்தைச் சேர்ந்த குமார் கூட அலகு குத்தி வந்ததை நீங்கள் பார்த்தீர்கள். உள்ளூர் தோழர்களைப் பார்த்தீர்கள்.

 பல பேர் வந்தார்கள். காரணம் இதன் மூலம் செயல் விளக்கமாக செய்ய வேண்டும் என்பதும் கூடுதல் முயற்சி. இப்படிப்பட்ட செயல்களில் கடவுள் மறுப்பைப் பற்றி ஏன் கடவுள் இல்லை, எப்படி இல்லை என்று விளக்குகிறார்கள். முழக்கமிட்டபோது கூட சிலருக்கு வருத்தமாக இருந் திருக்கும். கடவுளை கற்பித்தவன் முட்டாள் என்கிறார்கள். பரப்பியவனை அயோக்கியன் என்கிறார்கள். வணங்கு கிறவனை காட்டுமிராண்டி என்று சொல்கிறார்கள். வீதியில் போகிறவனை பார்த்து திட்டுவதுபோல அல்ல.

இதனால் வருத்தமுற்ற பக்தர்கள் பெரியாரிடமே எதிர்ப்பைக் காட்டினார்கள். சீர்காழியில் பெரியார் பேசவிருந்த மேடைக்கு முன்னால் பெரிய பலகையை வைத்தார்கள். கடவுளை கற்பித்தவன் புத்திசாலி. ஏன்னா நாம் முட்டாளுனு சொல்றோம்; கடவுளை பரப்பியவன் பண்பாளன். வணங்குகிறவன் வாழ்வான் என்று எழுதி வைத்தார்கள். பெரியார் வந்து பார்க்க வேண்டுமாம், எழுதி வைத்தார்கள்; பெரியார் பார்த்தார்.

 கடவுளை கற்பித்தவன் புத்திசாலி என்று எழுதி வைத்திருக்கிறார்கள். நான் கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்று சொல்லுகிறேன். இரண்டு பேருக்கும் சின்ன வேறுபாடுதான் இருக்கிறது. இரண்டு பேரும் கடவுள் உண்டாக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள் கிறோம். அவன் முட்டாளா புத்திசாலியா என்பதே இப்ப சண்டை வேறு ஒன்றுமில்லை, என்றார் பெரியார்.

 கடவுள் உண்மையாக இல்லை. இயற்கையாக இல்லை. பெரியார் மூன்று கேள்வி கேட்பார். கடவுள் Nature -ஆ, Invention-ஆ, Creation -ஆ இதில் எது என்று கேட்டார். அதாவது கடவுள் இயல்பாக இருக்கிறதா, கண்டு பிடிக்கப்பட்டதா, உண்டாக்கப்பட்டதா, சொல்லு நீ.... நான் கடவுள் உண்டாக்கப்பட்டது, உண்டாக்கியவன் முட்டாள் தனமாக சரியான செய்திகளை சொல்லாமல் உண்டாக்கி வைத்து போய்விட்டான் என்று சொல்கிறேன். நீ உண்டாக்கியவன் புத்திசாலி என்று சொல்கிறாய். ஆனா இரண்டு பேரும் ஒன்றை ஒத்துக் கொள்கிறோம். கடவுள் இயற்கை அல்ல, உண்டாக்கப்பட்டது என்று பெரியார் சொன்னார். அதைப்போல உண்டாக்கப்பட்ட கடவுள் நம்முடைய அறியாமையை, ஏன்னா கடவுளுக்கு எது அடிப்படை என்றால் அறியாமையும் மலைப்பும்தான். அறியாமையே நமக்கு தெரியாத பொருளுக்கெல்லாம் கடவுள் என்று விளக்கம் சொல்கிறது.

5 ஆம் வகுப்பு மாணவனிடம் போய் 2-ம் 2-ம் எவ்வளவு என்றால் சொல்வான். 5-ம் 5-ம் எவ்வளவு என்றால் சொல்ல முடியும். இல்ல 5-ம் 5-ம் பெருக்கினால் எவ்வளவு என்றும் சொல்வான். அவனிடம் போய் 3284-ம் 8738-ம் எவ்வளவு என்றால்சொல்ல தெரியாது. அல்லது கொஞ்சம் நேரம் வேண்டும். அவன் தெரியவில்லை என்றால், ஆசிரியர் சரி அடுத்த முறை முயற்சி செய்து பார் என்று சொல்வார். கடவுள் என்று சொன்னால் ஆசிரியர் அனுமதிக்க மாட்டார். ஆனால், சமுதாயம் அப்படிப்பட்ட போக்கை அனுமதித்துக் கொண்டிருக்கிறது. எதெல்லாம் தெரியவில்லையோ அதையெல்லாம் கடவுள் என்கிறான். அணுவை பிளந்தால் புரோட்டான், நியூட்டான் அதுக்கப்புறம் தெரியலைனு நாம சொல்வோம். அவன் கடவுள் என்று சொல்வான். பக்தனுக்கும் நாத்திகனுக்கும் உள்ள வேறுபாடு அங்கே தான் இருக்கிறது.

அந்த கட்டடத்துக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது என்று சொல்கிறோம் போய் பார்த்தா தெரியப் போகுது. மலைக்கு அந்தப் பக்கம் என்னவென்று தெரியாது போய் பார்த்தால் தெரியும். நிலவில் என்ன இருக்கிறது அப்ப தெரியாது போய் பார்த்தோம் தெரிந்து விட்டது. அதற்கு மேல் போக போகத் தெரியும், தெரியாததை தெரியாது என்று சொல்பவன் நாத்திகன். தெரியாததை கடவுள் என்று சொல்பவன் ஆத்திகன் அவ்வளவுதான் வேறுபாடு. நாங்கள் தெரியாததை தெரியாது என்று சொல்லுங்கள் நாணயமாவது மிஞ்சும். நம்மை வேண்டுமானால் முட்டாள் தெரியாதவன் என்று அவன் சொல்லிவிட்டுப் போகட்டும். நாணயமானவன் என்று சமுதாயம் ஒத்துக் கொள்ளும்.

நீங்கள் சொல்லுகிற பதில், கடவுள் என்கிற பதில் இரண்டையும் ஏற்றுக்கொள்ளாது. அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம். இப்படி பல பேரால் மறுக்கப்பட்டிருக்கிற கடவுளை, யார் யார் மறுத்தார்கள் என்றெல்லாம் காலையில் சொன்னார்கள். கடவுள் என்பது ஒன்று அறிவுக்கு புறம்பாக இருக்கிறது. வேண்டாம் என்று சொல்கிறோம். இன் னொன்று தன்னம்பிக்கைக்கு எதிராக உள்ளது. கடவுள் நம்பிக்கையை விட்டு விடுங்கள் என்று சொல்கிறோம். ஆனால் நாம் கடவுள் செய்யும் என நம்பிக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறோம். கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நாம் விட்டுவிடுகிறோம்,தோல்வியில் முடிகிறது.

அங்கிருந்து இசுலாமியர்கள் படையெடுத்து வந்தபோது இங்கு நம்ம அரசருக்கு ராஜகுரு அறிவுரை சொன்னார். அரசன் வைணவத்தை சேர்ந்தவன். நீ ஒன்றும் செய்யாதே எல்லையில் கொண்டு போய் துளசியை விரித்து விட்டால் போதும் என்றார்கள். துளசி தழையை பூஜை செய்து போட்டால் முஸ்லீமின் குதிரை இந்தப் பக்கம் வராது என்று சொன்னான். துளசி இலைகளைக் கொண்டு போய் தூவி விட்டான் குதிரைகள் அவற்றை தின்னுட்டு இந்தப் பக்கம் வந்துவிட்டது. சண்டை போடாம ஆட்சியை புடிச்சிட்டு போயிட்டான்.

நம்ம தமிழ்நாட்டில் பல ஆட்சிகள் அப்படித்தான் போய்விட்டது. ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும். இங்கிலாந்தில் ஆங்கிலேய தளபதி ஒருவன் இருந்தான். நெல்சன் என்று பெரிய கப்பல் படை தளபதி. புகழ் பெற்ற தளபதி அவன். தன் படை வீரர்களுக்கு சொன்னான் போருக்கு போகும் முன் சொன்னான், படை வீரர்களே கடவுளை நம்புங்கள், ஆனால் வெடிமருந்து நனையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பூசாரியே சம்பளம் அதிகம் வேண்டுமென்றால் அரசு கிட்டதான் கோரிக்கை வைக்கிறான். எங்களுக்கு பாதுகாப்பு நிதி கொடுங்கள் என்று அரசைக் கேட்கிறான். ஓய்வூதியம் வேண்டும் என்று அரசைக் கேட்கிறான். கடவுள்கிட்ட ஒரு நாளும் கேட்டதில்லை. எல்லா பூசாரியும் சங்கம் வைத்து அரசுக்கிட்ட கோரிக்கை வைக்கிறான்.

கோயிலுக்கு அதிகமாக கூட்டம் போகிறது என்று சொன்னார்கள். பெரியார் எளிமையாக சொன்னார். அவர் எதையும் மிக எளிமையாக சொல்வார். கோயிலுக்கு கூட்டம் அதிகமாக  போகிறதா? நான் ஒரே ஒரு நிபந்தனை வைக்கிறேன். ஒரு நாளைக்கு ஆண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். ஒரு நாளைக்கு பெண்கள் மட்டும் கோயிலுக்கு வரவேண்டும். அப்புறம் பார் கூட்டத்தை என்று சொன்னார். இதுதான் கடவுள் நம்பிக்கை என்பது. இந்த கடவுள் நம்பிக்கை வைத்துக் கொண்டிருப்பது வெளிநாடுகளில் அறிவுக்கு மட்டும் எதிரானது. அறிவுக்கு மட்டும் எதிரானது என்பதால் அறையிலிருந்து அறிஞர்கள் எல்லாம் உட்கார்ந்து அறிவியல் சிக்கலாக பார்த்தார்கள்.

பெரியாரே சொல்வார் கடவுள் உண்டா இல்லையா என்பது, அறையில் உட்கார்ந்து அறிஞர்கள் சொல்ல வேண்டிய செய்தி. அரங்கில் வந்து மக்களிடம் பேச வேண்டிய செய்தி இல்லை. ஆனால் ஏன் கடவுள் இல்லை என்று சொல்வதற்கு பெரியார் சில விளக்கங்களை சொல்வார். நிறைய பேர் கடவுள் இல்லை என்று சொல்லி யிருக்கிறார்கள். காலையில் எல்லாம் பேசினார்கள்.  நடிகர் கமலகாசன் கடவுள் இல்லை என்று சொல்லுவார். ஆனால், இடஒதுக்கீடு தப்பு என்கிறார். அவருக்கு கடவுள் இல்லை தான். இந்து ராம் கடவுள் இல்லை என்று சொல்லுகிற மார்க்சிஸ்ட் என்று தன்னை சொல்லிக் கொள்கிறார். ஆனால் குற்றவாளியாக இருக்கிற இளைய சங்கராச் சாரியாரை அவர் தான் காரில் அழைத்துப் போய் காஞ்சிபுரத்தில் விடுகிறார்.

இவர்களையெல்லாம் விட்டுவிடுங்கள். இந்த நாட்டிற்கு தீங்காய் வந்த இந்துத்துவா என்ற தத்துவத்தை தந்த சாவர்க்கர், காந்தி கொலையில் குற்றவாளி. இந்துத்துவா என்ற பாசிச கருத்தை முதலில் விதைத்தவர். இந்த நோய்க்கெல்லாம் காரணமாக இருந்த சாவர்க்கர் ஒரு நாத்திகர். அவர் கடவுளை நம்பியவர் அல்ல. ஆனால் பார்ப்பனன் உயர்ந்தவன். ஆரியன் உயர்ந்தவன் என்ற ஆணவ கருத்தும் ஆரியர் ஆட்சியில்தான் இந்தியா இருக்க வேண்டுமென்றும் அவர் விதைத்த நச்சு விதைகள் ஏற்படுத்தியிருக்கிற நாசங்களை நாம் அறிவோம். கடவுள் உண்டு இல்லை என்பதால் ஒன்றும் பெரிதாய் வந்து விடாது. இந்த கடவுள் நம்பிக்கையை ஏன் மறுக்கிறோம் என்பதில்தான் அடங்கியிருக்கிறது பெரியாரின் தத்துவங்கள் அனைத்தும் என்பதால்தான். பெரியார் கடவுள் மறுப்பை எப்படி சொன்னார் என்றால், கடவுளை எப்படி மறுக்கிறார் என அவரே சித்திரபுத்திரன் என்ற புனைப் பெயரில் குடி அரசில் ஒரு உரையாடலை எழுதி இருக்கிறார்.

நாத்திகனை கூப்பிட்டு ஒரு ஆத்திகன் கதை சொல் கிறான். கடவுள் எப்படியெல்லாம் உலகத்தை படைத்தார் என்று சொல்லுவான். அவர்தான் வெளிச்சத்தைக் கொடுத்தான் என்று சொல்லுவான். நாத்திகன் கேள்வி கேட்பான். “அதற்கு முன் இருட்டாய் இருந்துச்சா. அப்படீன்னா இருட்டை எவன் உண்டாக்கினான்.” இப்படி பல கேள்விகளை கேட்டார்.

இன்னொன்றும் சொன்னார் பக்தன் இரண்டை நம்புகிறான். கடவுளை நம்புகிறான், விதியை நம்புகிறான். பெரியார் கேட்டார், கொஞ்சம் பொறுமையாய் யோசி. கடவுள் என்பதை நம்பினால் விதியை மறந்துவிடு. விதி உண்மையாக இருந்தால் கடவுள் இல்லை. ஏனென்றால் என்னுடைய விதிப்படி நான் பிறந்தேன், வளர்ந்தேன், சாவேன் என்றால் இன்னைக்கு கீழே இறங்கி வண்டியில் போகையில் அந்த மூலையில் போய் விபத்து நேரிட்டு சாவதுதான் விதியாக இருந்தால், அப்புறம் எதற்கு கடவுளை கும்பிடனும். கும்பிட்டாலும் சாவேன். ஏன்னா விதி. அதுதான் என்ன பண்ணினாலும் சாவேன் என்றால், கடவுள் எதற்கு? அல்லது கடவுளை நம்பினால், கடவுளை வணங்கினால், பிரார்த்தனை செய்தால், அதற்கு உண்டியலில் போட்டால், பூஜை செய்தால் அந்தவிதியை கடவுள் மாற்றிவிடும் என்றால் விதியை உண்மை என்று சொல்லாதே. இரண்டில் ஏதாவது ஒன்றை சொல் என்றார் பெரியார்.

(தொடரும்)