பாஸிசத் தன்மைவாய்ந்த தனிநபர்வாத , லும்பன் கலாச்சாரப் போக்குகளுக்கெதிரான போரட்டத்தை சமூகத்தை ஜனநாயக மயப்படுத்தும் கலாச்சாரப் போராட்டங்களோடு இணைக்க வேண்டும் 

இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகள் என்று கருதப்படக் கூடிய கட்சிகள் அனைத்துமே பெரும்பாலும் ஒன்றாயிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்தவையே. நுணுகிப் பார்த்தால் அவை இத்தனை பிரிவுகளாக பிரிந்து கிடப்பதற்கு சரியான காரணம் எதுவுமே இல்லை. ஏனெனில் இக்கட்சிகள் அனைத்திலும் இந்திய அரசு அதிகாரம் எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்களின் கையில் உள்ளது என்ற வரையறையில் அடிப்படையான வேறுபாடு என்பது எதுவும் கிடையாது.

குழு முரண்பாடே பிளவுக்குக் காரணம் 

இந்த அனைத்துக் கட்சிகளுமே பெரிய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் கைகளிலேயே ஆட்சி அதிகாரம் உள்ளது என்று நம்பக்கூடியவை. மேலும் இக்கட்சிகள் அனைத்தின் திட்டத்திலுமே நிலச் சீர்திருத்தம் ஒரு மிகமுக்கிய கோரிக்கையாகவும் அது நாட்டின் பிரச்னைகளுக்கு ஒரு அடிப்படையான தீர்வாகவும் முன்வைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையான ஒற்றுமையை மனதிற்கொண்டு பார்த்தால் இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்படுவதே சரியானதாகவும் பொருத்தமுடையதாகவும் இருக்கும். ஆனாலும் அவை இத்தனை பிரிவுகளாகப் பிரிந்துள்ளது ஒரே ஒரு காரணத்தால் தான். அதாவது அவற்றின் பிளவு அடிப்படை அரசியல் வழியிலோ அதுபோன்ற கோட்பாடு ரீதியான விசயங்களிலோ நடைபெறவில்லை. குழு முரண்பாட்டின் காரணத்தால்தான் இந்தப் பிளவு நிகழ்ந்துள்ளது.

இக்கட்சிகள் அனைத்தின் வழிமுறையிலும் தேசிய முதலாளிகள் ஏதாவது ஒரு வகையில் நேச சக்திகளாக முன் வைக்கப்படுகின்றனர். ஆனால் இவர்கள் நடைமுறையில் நடத்தும் போராட்டங்கள் எதிலும் அந்த தேசிய முதலாளிகளாகிய நேசசக்தி ஒருபோதும் கலந்து கொண்டதில்லை. 

தேசிய முதலாளிகளுக்கு இவர்கள் நேச சக்தி , இவர்களுக்கு தேசிய முதலாளிகள் நேச சக்தி அல்ல 

ஆனாலும் தேசிய முதலாளிகள் இக்கட்சிகளை ஒருவகையில் அவர்களுக்கு நேச சக்திகளாகத்தான் கருதிக் கொண்டுள்ளனர். அதாவது தேசிய முதலாளிகள் நேச சக்திகள் என்ற கண்ணோட்டம் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டக் கூர்முனையை மழுங்கடிப்பதாக நடைமுறையில் இருப்பதால் அவர்கள் இக்கட்சிகளின் இந்தத் தவறான கண்ணோட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக பெரிதும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இக்கட்சிகளிலேயே பெரிய கட்சியாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகளைப் பொறுத்தவரையில் தேசிய முதலாளிகள் நேச சக்திகள் என்ற கண்ணோட்டம் ஒளிவு மறைவற்ற வர்க்க சமரசப் பாதையைப் பின்பற்றுவதற்கும் வர்க்க அரசியலைக் கைவிட்டு விட்டு நாடாளுமன்றவாத அரசியலில் பிற முதலாளித்துவக் கட்சிகளின் பாணியில் கூச்சநாச்சமின்றிச் செயல்படுவதற்கும் மிகவும் ஏதுவாக உள்ளது. 

வேறு சிறிய அதிதீவிரக் கம்யூனிஸ்ட் குழுக்கள் என்று கருதப்படும் கட்சிகளைப் பொறுத்தவரையில் அக்கட்சிகளுக்கு அத்தகைய வாய்ப்பெதுவும் இல்லை. அந்நிலையில் நெருக்கிப்பிடித்து உங்களது நேச சக்தியான தேசிய முதலாளிகள் யார் அவர்கள் நமது சமூகத்தில் ஆற்றிக் கொண்டிருக்கும் முற்போக்கான பங்கென்ன என்று கேட்டால் தமிழ்நாடு வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையனின் பெயரைக் கூறி அவர் அவ்வப்போது நடத்தும் போராட்டத்தை தேசிய முதலாளிகளின் எழுச்சி என்று வர்ணிக்கும் அளவிற்கு செல்லுகிறார்கள்.

யதார்த்தத்திற்குப் பொருந்தி வராத ஒரு அடிப்படை அரசியல் வழியை அவர்கள் முன்வைப்பதால் அதில் உள்ள ஓட்டைகளை அடைக்க தலித்தியம் , பெரியாரியம் இவற்றோடு தமிழ் தேசியம் ஆகிய கருத்துக்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதனால் சமூகத்தின் மிக அடிப்படையானதும் மையமானதுமான முரண்பாட்டை புரிந்துகொண்டு அத்துடன் இணைந்துபோகும் வகையிலான போராட்டங்களை மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்னைகளை சார்ந்து இவர்களால் எடுக்க முடியவில்லை. 

அடிப்படைப் பிரச்னைகளோடு தொடர்பேதுமில்லாத போராட்டங்களில் ஈடுபடும் போக்கு 

எனவேதான் ஜனநாயகத்தை நிலைநாட்ட சிதம்பரத்தில் தமிழில் வழிபாடு நடத்த வேண்டும் என்பதில் தொடங்கி கோவில்களில் ஆடு , கோழி பலியிடுதல்கள் அவை சிறுதெய்வ வழிபாடு அவற்றை போக்க முயல்வது பார்ப்பனியம் என்பவை போன்ற நாட்டின் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கக் கூடிய அடிப்படைப் பிரச்னைகளோடு தொடர்பேதுமில்லாத போராட்டங்களில் இவர்கள் ஈடுபட நேர்கிறது. 

வசைமாரிப் போக்கு 

இதுநாள் வரை இலங்கையில் நடைபெற்ற இனக்கலவரம் இவர்களின் தமிழ் தேசியவாத முழக்கத்திற்கு ஏதோ அடிப்படை உள்ளதுபோல் காட்டுவதாக இருந்தது. இப்போது அங்கு அந்த பிரச்னையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவிற்குப் பின் அதனாலும் இவர்களின் செயல்பாட்டுத் தளம் மிகவும் குறைந்துவிட்டது. இவர்களது வரையறைகளுடன் ஒத்துப் போகாததாக யதார்த்த நிலை இருப்பதால் அது இந்த அதிதீவிரவாத கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளில் ஒரு பொறுமையின்மையை உருவாக்கி , அது அவர்களின் எழுத்துக்களில் ஒரு வகையான வசைமாரித்தனம் இழையோடுவதில் பிரதிபலிக்கிறது. அதாவது ஒரு அமைப்பின் அடிப்படை அரசியல் வழி விஞ்ஞான ரீதியான முரண்தர்க்க வாதத்தின் அடிப்படையில் நிறுவ முடிந்ததாக இருந்தால் அப்போது தர்க்க ரீதியாக மக்களிடம் உள்ள கேள்விகளை அதாவது வெளிப்படையாகக் கேட்கப்படும் மற்றும் கேட்கப்படுவதற்கு வாய்ப்பிருக்கும் கேள்விகளை மனதில் நிறுத்தி அக்கேள்விகளுக்கு என்ன விடை என்பதை தெளிவாக மக்களிடம் நிதானமாகவும் , கெளரவமிக்க வாதங்கள் மூலம் முன்வைக்க முடியும். 

அவ்வாறு இல்லாவிடில் நிச்சயமாக விஞ்ஞானபூர்வ முரண்தர்க்கவாத அடிப்படைகளில் நிறுவப்பட முடியாத கருத்துக்களை பக்கம் பக்கமாக எழுத வேண்டிவரும் போது அதையும் ஒரு போர்க்குணத்தோடு சொல்லியாக வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை தோன்றும் போது அந்த எழுத்துக்கள் வசைமாரித்தன்மை வாய்ந்தவையாக தவிர்க்க முடியாமல் ஆகிவிடுகின்றன. இது ஒருபுறமிருக்க இவ்வாறு எழுதுவதுதான் தொழிலாளி வர்க்க ரகத்தைச் சேர்ந்த எழுத்து என்று கருதுபவர்களும் கூறுபவர்களும் கூட இக்கட்சிகளில் இருக்கிறார்கள். 

மார்க்சிய பூர்வ ஆய்வு 

மார்க்சிய ரீதியிலான ஆய்வு நமக்கு உணர்த்துவது இந்தியாவில் அரசு அதிகாரம் விடுதலைக்குப் பின்பு இந்திய தேசிய முதலாளிகளின் கரங்களுக்கு வந்துவிட்டது;அந்த அரசு எந்திரம் அக்காலகட்டத்தில் முதலாளித்துவம் எத்தனைதூரம் வளர்ச்சியடைய முடியுமோ அத்தனை தூரம் விரைவாகவும் துரிதகதியிலும் வளர்வதற்கான திட்டங்களை வகுத்தெடுத்து , அது வளர்ந்து ஏகபோகங்களுக்கு உருக்கொடுத்து இன்று தன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் சரக்குகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு தனது நிதி மூலதனத்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஏகாதிபத்தியக் கூறுகளோடும் வளர்ந்து விட்டது என்பதாகும். அதாவது இந்நிலைபாடே அரசு அதிகாரம் யார் கையில் என்பது குறித்த அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான பதிலளிக்கக் கூடிய தர்க்கபூர்வ நிலைபாடாகும். 

அதை அடிப்படையாக வைத்தே முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி வழியே நாம் பின்பற்ற வேண்டிய அடிப்படை அரசியல் வழி என்பதையும் நாம் வலியுறுத்துகிறோம்.

நாட்டில் நிலவும் விநோத சூழ்நிலை 

அதே சமயத்தில் கலாச்சாரத் துறையைப் பொறுத்தவரையில் நிலவுடமைக் கலாச்சாரத்தின் மிச்சசொச்சங்கள் நமது நாட்டின் கலாச்சார வாழ்க்கையில் இருப்பதையும் நாம் பார்க்கிறோம். பொருளாதார அடித்தளம் ஒரு தேசிய சந்தை (இப்போது மிகவேகமாக அது உலகச் சந்தையாக மாறி வருகிறது) தோன்றி அதற்காகவே நாட்டின் பொருள் உற்பத்தி நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதாவது அப்பட்டமான முதலாளித்துவ அடிப்படை அம்சத்தோடு பொருளாதார அடித்தளம் இருக்கும் வேளையில் கலாச்சார மேல் கட்டுமானத்தில் ஜாதிகளும் இன , மொழி , பிராந்திய வேறுபாடுகளும் நிலவிக் கொண்டுள்ளன.

அதாவது நிலப்பிரபுத்துவக் கலாச்சாரக் கூறுகள் இருப்பதைப் பார்க்கிறோம். அதாவது இன்று நமது நாட்டில் ஒரு விநோதமான சூழ்நிலை நிலவுகிறது. பொதுவாக முதலாளித்துவம் அதன் வளர்ச்சிப் போக்கில் பொருளாதார அரங்கில் தோற்றுவிக்கும் தேசியச் சந்தையும் அதன் தேவைக்காக பொருள் உற்பத்தியும் வணிகமும் நடக்கும் சூழலும் சிறுசிறு பிளவு வாதங்களுக்கும் குழு மனநிலைக்கும் எதிரான ஒரு சூழலைத் தோற்றுவித்து கலாச்சார அரங்கில் ஒரு முதலாளித்துவ ஜனநாயகக் கருத்தோட்டத்தை உருவாக்கி அதன் விளைவாக ஜாதிய வாதங்களும் பிராந்திய வாதங்களும் அழித்தொழிக்கப் பட்டிருக்கவேண்டும். ஆனால் அது செவ்வனே நடைபெறுவதற்கு முதலாளித்துவத் தொழில்மயம் முழுவீச்சில் நடைபெற்றிருக்க வேண்டும்.

முதல் இரண்டு முதலாளித்துவப் பொது நெருக்கடிகளுக்குப்பின் தோன்றிய சூழ்நிலையில் உலக முதலாளித்துவச் சந்தையே கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்த வேளையில் இந்திய முதலாளித்துவம் வளர்ந்ததால் அதனால் அதன் ஜனநாயகக் கடமைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே ஜாதிய , பிராந்திய வாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயக மனநிலையை மக்களிடம் வளர்த்தெடுக்கும் முதலாளித்துவ மனிதாபிமானக் கலாச்சாரம் முழுவீச்சுடன் மக்களிடையே ஏற்படச் செய்வதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்த முடியாததாக அது ஆகிவிட்டது. 

நாளடைவில் நெருக்கடி சூழ்ந்த நிலைக்கு வந்துவிட்ட முதலாளித்துவத்தின் வர்க்க நலனைக் காக்கும் வேலையைச் செய்ய வேண்டிய நிலையிருந்த முதலாளித்துவ அரசியலோ ஒன்றிணைந்த தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெற வாய்ப்புள்ள புரட்சிக்குப் பயந்து , தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை எத்தனை தூரம் பிளவுபடுத்த முடியுமோ அத்தனை தூரம் பிளவுபடுத்த விரும்பியது; அதற்காக ஜாதி , மத , இன , மொழி வாதப் பிரிவினைகளைத் தூபம்போட்டு அது வளர்த்துவிடவும் தொடங்கியது. 

முதலாளித்துவப் பொருளாதாரச் செயல்பாட்டை தடுக்கும் அரசியல் 

அதனால் இன்று முதலாளித்துவ அரசியல் முதலாளித்துவப் புரட்சியின் ஆரம்ப காலத்தில் அது ஆற்றிய ஆக்கப்பூர்வ பணியான மக்களை அவர்களைச் சூழ்ந்துள்ள வேறுபாடுகளை தூக்கியயறிந்துவிட்டு ஒன்று சேர்க்கும் பணியினைச் செய்வதை விடுத்து அவர்களது ஒற்றுமையைக் குலைக்கும் பிரிவினைவாதப் போக்குகளை தூண்டிவிடுவதிலும் , வளர்த்துவிடுவதிலும் அதிகக் கவனம் செலுத்துகின்றன. இவ்வாறு கலாச்சார மேல் கட்டுமான விசயத்தில் முதலாளித்துவ அரசியல் முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீது மேலாதிக்கம் செலுத்தி அதனை செயல்பட விடாமல் தடுத்து முதலாளித்துவ ஆட்சிக்குப் பங்கம் வராமல் காக்கும் வேலையைச் செய்கிறது. 

கலாச்சார மேல் கட்டுமானம் அதாகவே மாறாது 

நிலவும் இந்தச் சூழ்நிலையைத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்ட பின்னர் பட்டாளி வர்க்க அரசியல் சக்திகள் இதனை அம்பலப்படுத்தி முறியடிக்க வல்ல கலாச்சார எதிர் நீரோட்டத்தை முழுவீச்சுடன் ஏற்படுத்த வேண்டும். ஆனால் இச்சூழ்நிலையில் இப்பிரச்னைகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பொருளாதார அடித்தளம் மாறிவிட்டால் அதன் மேல் கட்டுமானமான கலாச்சாரமும் மாறிவிடும் என்ற மேலோட்டமான கண்ணோட்டம் முதலாளித்துவ எதிர்ப்பு சோசலிசப் புரட்சி பேசுபவர்களிடமும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய அளவிற்கு மலிந்துள்ளது.

இந்தத் தவறு களையப் படாவிட்டால் , அது அதிதீவிர கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கருதப்படும் கட்சிகளின் தவறான அடிப்படை அரசியல் வழியைச் சரியானதாகக் காட்டவும் பயன்பட்டு விடும். அதாவது மேல் கட்டுமானத்தில் நிலப் பிரபுத்துவ அம்சங்கள் இருந்தால் அந்த அளவிற்குப் பொருளாதார அடித்தளத்திலும் நிலப்பிரபுத்துவம் இருப்பதாகத் தானே அர்த்தம் என்று அவர்கள் எந்திரகதியில் வாதிடுவதற்கு இது வழி கொடுத்துவிடும்.

இயக்கவியல் பார்க்கும் பொருள் முதல்வாதம் அதன் செறிவு படுத்தப்பட்ட வகையில் போதிப்பது என்னவென்றால் முதலாளித்துவ அடித்தளம் மாறும் போது கலாச்சார மேல் கட்டுமானம் மாறுவதற்கான சூழல் ஏற்படுகிறது என்பது தான். ஆனால் முதலாளித்துவ வளர்ச்சியின் தேவை மிக அதிகமாக இருக்கும் போது முதலாளித்துவ நலன்களுக்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லும் கட்சிகள் கலாச்சார அரங்கில் மக்களின் பகுத்தறிவுக்குப் பொருந்தாத துவேசங்களை களைந்தெரியும் தன்மை வாய்ந்த போராட்டங்களுக்கு உருக்கொடுத்து மக்கள் ஒற்றுமையைக் கட்ட முயல்கின்றன. சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் என்ற முழக்கங்களை எழுப்புகின்றன.

ஆனால் அதே முதலாளித்துவ வளர்ச்சியின் தேவை சந்தை நெருக்கடியினால் குறைந்து முதலாளித்துவப் பொருளாதாரம் ஒரு நெருக்கடிக்கு ஆளாகும் வேளையில் முதலாளித்துவ நலன் பேணும் அரசியல் கட்சிகள் முதலாளித்துவ நெருக்கடி தோற்றுவித்தள்ள கொந்தளிப்பான சூழ்நிலையைப் பயன்படுத்தி தொழிலாளி வர்க்கப் புரட்சி ஏற்பட்டு அது முதலாளித்துவத்தை ஆட்சியதிகாரத்திலிருந்து தூக்கியயறிந்துவிடுமளவு வளர்வதைத் தடுப்பதற்காக மக்களிடையே பிளவினையும் துவேசத்தையும் முழுக்க முழுக்கப் பகுத்தறிவுக்குப் பொருந்தி வராத கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைப்பதிலேயே மும்முரமாக ஈடுபடுகின்றன. 

பாசிஸம் முதலாளித்துவத்தின் பற்றுக் கோடு 

முதல் உலகப்பொது நெருக்கடிக்குப் பின்பு இரண்டாவது உலகப்பொது நெருக்கடி காலத்தில் பாஸிசக் கண்ணோட்டமும் , பாஸிசக் கட்சிகளும் முதலாளித்துவத்தின் பற்றுக் கோடாகவும் பிடிமானமாகவும் உருவானதன் பின்னணி இதுதான். ஆரியர்கள் உடலில் ஓடுவது நீல இரத்தம் அவர்கள் ஆளப்பிறந்த இனம் என்பது போன்ற பகுத்தறிவுக்கு அசலும் நகலும் ஒத்துவராதக் கருத்துக்களை முதலாளித்துவம் அப்போது முன்வைக்கத் தொடங்கியது. தர்க்க ரீதியான வாதங்களின் மூலம் இந்தக் கருத்துக்களை நிறுவ முடியாது என்று கண்டுகொண்ட பாஸிச சக்திகள் இவற்றை மக்களிடையே பரப்புவதற்காக ஓரே பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறினால் அது உண்மை ஆகிவிடும் என்ற கோயபெல்சின் யுக்தியை அறிமுகம் செய்தன.

ஜெர்மனியில் தோன்றிய அந்த பாஸிசம் தான் ராணுவ ரீதியாக முறியடிக்கப் பட்டுவிட்டதே என்ற வாதம் இங்கு முன்வைக்கப் படலாம். ஆனால் பாஸிசம் அதன் கொடுமையான வடிவில் ஜெர்மனியில் தலைதூக்கியது. ஆனால் நெருக்கடி சூழ்ந்த இன்றைய சூழ்நிலையில் முதலாளித்துவம் முன்பு வழங்கிய அனைத்து உரிமைகளையும் ஆக்கபூர்வமாக வழங்கவே முடியாது. அவ்வாறு வழங்கினால் அது தன் வர்க்க ஆட்சியை நீடித்து நடத்த முடியாது. எனவே அவை தாங்கள் முற்போக்காக இருந்த காலத்தில் வழங்கிய உரிமைகளை ஒன்றன்பின் ஒன்றாகப் பறிக்கவே முயல்கின்றன. உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முதலாளித்துவ நாடுகளும் இதன் மூலம் ஏதாவதொரு வகையில் பாஸிசக் கொள்கைகளையும் , யுக்திகளையும் கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

இந்நிலையில் ஒரு கொடுமையான வகையைச் சேர்ந்த பாசிஸத்தின் இராணுவ ரீதியான தோல்வி உலகம் முழுவதிலும் இருந்த பாசிஸப் போக்குகளின் ஒட்டுமொத்தத் தோல்வியாக ஆகிவிடாது. மேலும் இன்று மீளமுடியாத நெருக்கடியில் மென்மேலும் முதலாளித்துவம் மூழ்கிக் கொண்டுள்ள வேளையில் அது பற்றுக் கோடாகக் கொள்வதற்கு பாசிஸ யுக்திகள் தவிர ஜனநாயக நடப்புகள் எதுவும் மிஞ்சியிருக்கவில்லை. 

சீனக் கலாச்சாரப் புரட்சியின் பின்னணி 

மேலே நாம் கூறிய வற்றிலிருந்து ஒரு சமூகத்தின் பொருளாதார அடித்தளம் மாறியவுடன் கலாச்சார மேல் கட்டுமானத்தின் பொருளாதார அடித்தளத்திற்கு உகந்த வகையிலான மாற்றம் அதாகவே ஏற்பட்டு விடுவதில்லை என்பதே தெளிவாகத் தெரியவருகிறது. அதைப் போல்தான் சோசலிசப் பொருளாதார அடித்தளமும் அதற்கு உகந்த வகையிலான கலாச்சார மேல் கட்டுமானத்தை அதாகவே உருவாக்கிவிடுவதில்லை. சீனாவில் சோசலிச பரவலாக்கத்திற்கு பழைய கலாச்சாரமும் அதில் ஊறிய அதிகார வர்க்க மனநிலையும் ஊறு விளைவித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மகத்தான கலாச்சாரப் புரட்சியினை தோழர்.மாவோ நடத்தினார்.

 சோவியத் சோசலிசத்தின் வீழ்ச்சியில் முதலாளித்துவக் கலாச்சாரத்தின் பங்கு 

அத்தகைய கலாச்சாரப் புரட்சி சோவியத் யூனியனில் நடத்தப்படாதது முதலாளித்துவம் அங்கு மீண்டும் வந்ததற்கு ஒரு காரணமாக இருந்தது. இவ்வாறு நாம் கூறும்போது கலாச்சார மாற்றத்தின் தேவையை தோழர். லெனினும் குறிப்பாக ஸ்டாலினும் உணராமல் இருந்தார்கள் என்பது பொருளல்ல. சோ­லிசக் கட்டுமானத்தை நடைமுறை ரீதியில் பிரதானமாக முன்நின்று நடத்திய தோழர். ஸ்டாலின் குறிப்பாக மிகப் பெருமளவு அதன் தேவையை உணர்ந்தே இருந்தார். ஆனால் அவர் அதனை மக்களைத் திரட்டி ஒரு இயக்கமாக நடத்தவில்லை. மாறாக பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசின் கீழ் வழங்கப் பட்டுவந்த உழைக்கும் வர்க்கத்திற்கு உகந்த கல்விமுறை அந்தக் கலாச்சாரத் தேவையைப் பூர்த்தி செய்துவிடும் என்று நம்பினார். 

மேலும் அவரது தலைமையின் கீழ் சோவியத் அரசு இருந்தபோது உழைக்கும் வர்க்கத்திடம் பராமரிக்கப்பட்ட சோ­லிச உணர்வு மட்டம் , முதலாளித்துவ எதிர்மறை சிந்தனைப் போக்குகள் பெரிதாக தலைகாட்ட வாய்ப்பு எதையும் அதற்குத் தரவில்லை. 

கூட்டுவாதக் கலாச்சாரம் 

இது ஒருபுறம் இருக்க முதலாளித்துவ சமூகம் போன்ற வர்க்கங்களால் பிளவுபட்ட சமூகங்களிலும் கூட சுரண்டும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கிடையில் நடைபெறும் வர்க்கப் போராட்டத்தை மையமாக வைத்து நிலவும் சுரண்டல் அமைப்பின் கலாச்சாரத்திற்கு எதிரான பட்டாளிவர்க்கக் கலாச்சாரப் போக்குகள் இருக்கவே செய்யும். அந்த விதத்தில் கலாச்சாரப் புரட்சி அரசியல் ரீதியான புரட்சிக்கு முன்பே தோன்றிவிடுகிறது என்றும் ஒரு வகையில் கூறலாம்.

அவ்வாறு உருவாகும் முதலாளித்துவம் முன்வைக்கும் தனிமனிதவாதக் கலாச்சாரப் போக்கிற்கு எதிராதான கூட்டுவாதக் கலாச்சாரப் போக்கு முதலாளித்துவ சமூக அமைப்பில் பரவலாக நிலை பெற்றிருக்கும் தனிமனிதவாத கலாச்சாரத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து நடத்தும்.

மூலதனத்தின் அசுரத்தனமான வலுவினை தொழிலாளர் தனித்தனியாக எதிர்த்துப் போராடி முறியடிக்க முடியாது; தனது கூட்டு வலிமையின் மூலம் முறியடிக்க முடியும் என்ற கருத்தோட்டத்தின் அடிப்படையில் உருவாவதே இந்தக் கூட்டுவாதக் கலாச்சாரமாகும். தொழிலாளி வர்க்கம் குறித்த அது கோடிக்கால் பூதம் என்ற வர்ணனை இதனைத் தெளிவு படுத்தும் ஒரு சரியான உருவகமாகும்.

இந்தக் கலாச்சாரப் போராட்டம் வர்க்கப் போராட்டங்கள் அதிக வீச்சுடன் பரவலாக நடைபெறும் போது மேலோங்கி நிற்கும். வர்க்கப் போராட்டங்கள் தொய்வடைந்து நிற்கும் வேளைகளில் பட்டாளி வர்க்கக் கலாச்சாரம் வளருவதற்கு ஏதுவான சூழல் குறைவாக இருக்கும்.

ஆனால் இன்று சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் வீழ்ச்சி கண்ட பின்பு இருக்கும் தங்களை சோசலிசப் பாதையில் இருப்பவர்கள் என்று காட்டிக் கொள்ளும் நாடுகளிலும் ஒருபுறம் சீனாவைப் போல் பெயரளவில் மட்டும் சோசலிசப் பாவனை காட்டிக் கொண்டு நடைமுறையில் முதலாளித்துவப் பாதையில் நடைபோடும் சூழ்நிலை நிலவுகிறது. மற்றொருபுறம் அத்தனை தூரம் சீரழிவுக்கு ஆட்படாத வடகொரியா , கியூபா போன்ற நாடுகளில் தாங்கள் ஏற்படுத்தியிருந்த சோசலிசத் திசைவழியிலான சமூக அமைப்பை எப்பாடுபட்டும் காக்க வேண்டும் என்ற தற்காப்பு மனநிலை பிரதானமாக உள்ளது. எனவே நடைமுறையில் இன்று பாட்டாளி வர்க்கத்தின் சமூக மாற்றத் திசைவழியிலான புரட்சிக்கரப் போராட்டங்களுக்குப் பின்பலமாக இருக்கக் கூடிய சோசலிச முகாம் என்பது இல்லை. இந்நிலையில் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிக்கு இதுவரை இருந்து வந்த சர்வதேச ஆதரவு இல்லாமல் போனதால் உலக அளவில் பட்டாளி வர்க்கக் கலாச்சாரப் போக்கு மிகவும் பின்தங்கியுள்ளது.

கலாச்சார இயக்கங்களில் கவனம் செலுத்தும் நாம் , உலகம் முழுவதுமே இரண்டு வகைச் சூழ்நிலைகள் நிலவுவதையும் பார்க்கத் தவறக் கூடாது. அவற்றில் ஒன்று மேலை நாட்டுத் தொழிலாளி வர்க்கம் , உலகமயம் என்ற பெயரில் உலக அளவில் எங்கெல்லாம் குறைந்த கூலிக்கு உற்பத்தித் திறன் கிடைக்கிறதோ அங்கெல்லாம் மூலதனத்தைக் கொண்டு சென்று அதிக லாபம் ஈட்டும் போக்கு அதாவது மேலைநாட்டுத் தொழிலாநி வர்க்கத்திடம் தற்போதைய சூழ்நிலை உருவாவதற்கு முன்பு அது பெற்றுவந்த வாழ்க்கைச் சம்பளம் கொடுத்திருந்த மேலான வாழ்க்கையில் மதிமயங்கி சமுதாய மாற்றக் கண்ணோட்டத்தைக் கொண்டிராதவையாக அவர்கள் இணைந்திருந்த தொழிற்சங்கங்கள் இருந்த போதிலும் அத்தகைய வர்க்க சமரசப் போக்கோடு மனதொத்திருந்த நிலையிலிருந்து தற்போதைய மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியினால் கண் திறக்கப்பட்டு , சமுதாய மாற்றம் குறித்து ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கியிருப்பது. அதாவது முதலாளித்துவக் கலாச்சாரத்தோடு அப்பட்டமாக ஒன்றியிருந்த நிலைமாறி மாற்றி யோசிக்க வேண்டியது மேலைநாட்டுத் தொழிலாளி வர்க்கத்திற்கு அவசியமாகியிருப்பது; ஆனால் அந்நிலையில் அதற்கு வழிகாட்ட வல்ல புரட்சிகரக் கம்யூனிஸ அமைப்புகள் அங்கு இல்லாதிருப்பது அவர்களது இத்தகைய மனமாற்றம் புரட்சிகரச் சிந்தனையாக மாறுவதற்கு முட்டுக்கட்டையாக விளங்குகிறது. 

அதிகரிக்கும் வாய்ப்புகள் குறையும் வர்க்கப் போராட்டம் 

அதே சமயத்தில் இந்தியா போன்ற நாடுகளில் உலகமயம் சமூகத்தின் 15 , 20 சதவீத மக்களின் பிள்ளைகளுக்கு உருவாக்கித் தந்துள்ள வேற்றிட வேலை வாய்ப்பு , வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்ற வகையில் ஏற்படுத்தியுள்ள பொய்த்தோற்றம் வர்க்கப் போராட்டப் பாதையின் முன்னிறுத்தியுள்ள முட்டுக் கட்டை. அதன் விளைவாக கலாச்சாரம், வாழ்க்கை முறை உட்பட அனைத்திலும் இவ்வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ள மேலைநாட்டு முதலாளித்துவப் போக்குகளை கைக் கொள்ள விளையும் சூழ்நிலை இத்தகைய இரண்டு எதிரெதிரான போக்குகள் உலகத் தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்பட்டுள்ளன. 

கூட்டுவாத மனநிலையைக் கட்டுக்குள் வைக்க தொழிற்சங்க இயக்கத்தை முடக்கும் போக்கு 

இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு உலக முதலாளித்துவம் முதலாளித்துவக் கலாச்சாரம் ஒன்றே உலகில் நிலவக்கூடிய ஓரே கலாச்சாரம் என்ற போக்கை நிலைநாட்ட முயன்று அதில் பெருமளவு வெற்றியும் கண்டுவருகிறது.

வர்க்கப் போராட்டமோ அது சார்ந்த கூட்டுவாத மனநிலையோ இந்தியா போன்ற நாடுகளின் உழைக்கும் மக்களிடையே ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தற்போது தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில்களில் ஈடுபடும் முதலாளிகள் மிகவும் குறிப்பாக உள்ளனர்.

அதனால் தான் இன்றுவரை அத்தொழில்களிலும், புதிதாக அன்னிய, உள்நாட்டு முதலீடுகளால் உருவாக்கி வளர்க்கப்படும் தொழில்களிலும் தொழிற்சங்க இயக்கத்தின் சுவடே இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

அதே சமயத்தில் தற்போது இந்தியா போன்ற நாடுகளில் வேற்றிட வேலைவாய்ப்பு மூலம் தோன்றி வளர்ந்துவரும் உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் இதுவரை இருந்தது போல் மேல்தட்டு மத்தியதர வர்க்க மக்கள் மட்டுமே வேலை செய்யும் நிலை இல்லை. அதைத்தாண்டி கீழ்த்தட்டு மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த தொழில் நுட்பம் கற்ற ஒரு குறிப்பிடத்தக்க பகுதியினரும் அவற்றில் பணியமர்கின்றனர். ஓரளவு சமூகக் கடமையுணர்வு இருக்க வாய்ப்புள்ள இப்பகுதியினரிடையே முதலாளித்துவக் கலாச்சாரத்திற்கு மாற்றான கூட்டுவாதக் கலாச்சாரம் ஏற்பட்டு விடாமல் இருக்கவே தொழிற்சங்க இயக்கம் இத்துறையில் உருவாகி விடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். 

தகவல் தொழில் நுட்பத் துறையில் ஜனநாயகத் திருமணங்கள் 

ஆனால் இச்சூழ்நிலை தவிர்க்க முடியாமல் சில ஜனநாயக அம்சங்களையும் தோற்றுவித்துள்ளது. அதாவது பரஸ்பர மன விருப்பத்தின் அடிப்படையில் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கையை ஓரளவு இது அதிகரித்துள்ளது. இத்தகைய பல நிறுவனங்கள் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஆண்கள் மற்றும் பெண்களிடையே இத்தகைய திருமணங்களை ஊக்குவிப்பதற்தாக கார் போன்ற வெகுமதிகள் கூட வழங்குகின்றன.

ஆனால் அதை வைத்து தற்போது முதலாளித்துவம் பரப்பிக் கொண்டுள்ள கலாச்சாரம் முதலாளித்துவம் தோன்றிய காலத்தில் அது கொண்டுவந்த பல முற்போக்கு அம்சங்களைக் கொண்டிருந்த முதலாளித்துவ மனிதாபிமானக் கலாச்சாரம் என்ற முடிவிற்கு வந்துவிடக் கூடாது.

ஏனெனில் திருமணம் போன்ற வி­யங்களில் ஜனநாயகப் போக்கினை ஊக்குவிக்கும் போக்குகள் உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களில் தலை தூக்கியுள்ள வேளையில் பஞ்சாலைகள் போன்றவற்றில் இளம் பெண் பிள்ளைகளை வேலைக்கமர்த்தும் முதலாளிகள் அவர்களைச் சிறைகள் போன்ற விடுதிகளில் அடைத்து வைத்துச் சுரண்டுகின்றனர். 

சுமங்கலித் திட்டம் அமலில் உள்ள பஞ்சாலைகளில் ஆண் பெண் உறவில் பராமரிக்கப்படும் நிலவுடைமைக் கலாச்சார மனநிலை

 அங்கு வேலை செய்யும் ஆண் தொழிலாளரோடு பேசுவது கூட அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் விடுதிகளில் தங்கி வேலைக்கு வராமல் வெளியிலிருந்து வேலைக்கு வரும் ஆண் தொழிலாளர்கள் உரிமை , சம்பளம் , தொழிற்சங்கம் போன்ற வி­யங்களைப் பெண் தொழிலாளரிடம் கொண்டுவந்து விடுவர் என்ற பயமே. அதாவது நிலவுடைமைச் சாதியக் கலாச்சார மனநிலையில் ஊறிப்போயுள்ள பெண் தொழிலாளரின் கிராமப் புறப் பெற்றோரிடம் அவர்களது பிள்ளைகளுக்கு அவர்களைச் சுரண்டிக் கொழுக்கும் தாங்கள் எதிரிகளல்ல. ஆண் தொழிலாளரே எதிரிகள் என்ற மனநிலையை உருவாக்குவதே பஞ்சாலை முதலாளிகள் இவ்வாறு செயல்படுவதன் நோக்கமாகும்.

பெண் பிள்ளைகளை வேலைக்கனுப்பிச் சம்பாதிக்கிறான் என்ற பெயர் வந்துவிடக் கூடாது என்ற நிலவுடைமைக் கலாச்சார மனநிலையின் அடிமைகளாக உள்ள அந்த பெற்றோர்களால் தங்கள் பிள்ளைகள் ஆண்களோடு பேசக்கூட விடப்படாமல் பாதுகாக்கப் படுகிறார்கள் என்பது பெருமையுடன் பார்க்கப் படுகிறது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திச் சுரண்டுகிறார்கள். இவ்வாறு இங்கு தகவல் தொழில் நுட்பத் துறையிலுள்ள முதலாளி ஆண் , பெண் உறவில் ஜனநாயகக் கலாச்சாரத்தைக் கொண்டு வருவது போலவும் , பஞ்சாலைகளில் நிலவுடைமைக் கலாச்சாரப் போக்கினைப் பராமரிக்கும் விதத்திலும் நடந்து கொள்வது இன்றைய முதலாளித்துவத்தின் தந்திரமான , மோசடித்தன்மை வாய்ந்த சுயலாபத்தைக் கருத்திற்கொண்ட போக்குகளை வெளிப்படுத்துகிறது.

முதலாளித்துவ மனிதாபிமான கலாச்சாரத்தைக் கொண்டு வருவதற்கு முதலாளித்துவம் நிலவுடைமைப் பொருளாதார அமைப்பின் பல்வேறு மூடப்பழக்கங்கள் மதவாதப் போக்குகள் போன்றவற்றை எதிர்த்து விஞ்ஞானத்தையும் அது சார்ந்த பகுத்தறிவுப்பூர்வ உண்மைகளையும் முன் வைத்துப் போராடியது. ஆனால் இன்று மிகப்பெரிய நெருக்கடி சூழ்ந்த நிலையில் இருக்கக் கூடிய உலக முதலாளித்துவம் ஆரம்பகால முதலாளித்துவத்தைப் போல் உண்மைக்கு மதிப்பளித்தால் அது உரத்துச் சொல்ல வேண்டிய உண்மையாக ஒன்றே ஒன்றுதான் இருக்கும். அது நான் காலாவதியாகிவிட்டேன் இனிமேல் நான் நீடித்திருப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதாகவே இருக்கும். 

பொய் , வஞ்சகம் , பிரித்தாளும் சூழ்ச்சி 

இந்நிலையில் இன்றைய முதலாளித்துவ அமைப்பு பொய்யையும் வஞ்சகத்தையும் உழைக்கும் வர்க்கத்தைப் பிரித்தாளும் சூழ்ச்சியையும் கடைப்பிடிப்பதையே தனது அடிப்படை வழிமுறையாகக் கொண்டுள்ளது. ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிட்ட நிலையில் ஹிட்லர் முன்வைத்த பாஸிசக் கண்ணோட்டம் முதலாளித்துவத்தின் போக்கின் உச்சகட்டமாக இருந்ததென்றால் அதையயாத்த பாஸிசப் போக்குகளை நாட்டுக்கு நாடு அளவுரீதியில் வேறுபட்டு இன்று முதலாளித்துவத்தால் சமூகத்தில் பரப்பப்படுகிறது. 

மோசமான கலாச்சாரக் கலவை 

முதலாளித்துவம் முழுமையாக வளர்ச்சியடைந்து முதலாளித்துவ ஜனநாயகம் நிலைபெற்றிருந்த நாடுகளின் மக்கள் ஓரளவு முற்போக்கான முதலாளித்துவ ஜனநாயகக் கருத்துக்களை அனுபவித்திருந்ததனால் இன்று அங்கு நிகழும் மோசமான போக்குகளை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால் முதலாளித்துவம் முழுமையான வளர்ச்சியடையாது அது தோன்றி வளர ஏதுவான சூழ்நிலை ஏற்பட்ட வேளையில் எவ்வளவு வளர முடியுமோ அவ்வளவு தூரம் மட்டுமே நறுங்கிப்போன ஒரு வளர்ச்சியை ஏற்படுத்திய நமது நாட்டைப் போன்ற நாடுகளின் மக்கள் மிகப் பெரும்பாலும் முதலாளித்துவக் கலாச்சாரத்தின் முற்போக்கான வி­யங்களையே பார்த்தறியாதவர்கள். எனவேதான் இங்கு பண வெறிவாதமும் , நிலவுடைமைக் கலாச்சாரத்தின் குறுகிய மூடநம்பிக்கை கலந்த குழுவாதப் போக்குகளும் ஒருங்கிணைந்த ஒரு மோசமான கலாச்சாரத்தின் கலவையே இங்கு கலாச்சாரமாகப் பெருமளவு விளங்குகிறது.

இந்திய மண்ணில் கலாச்சார ரீதியான மாற்றங்களைக் கொண்டுவர விரும்பும் நாம் இத்தகைய நிலையைத் தெளிவாகக் கணக்கில் கொள்ள வேண்டும். அதாவது முதலாளித்துவக் கலாச்சாரமும் வாழ்க்கை முறையும்தான் இனிமேல் நிலவுவதற்கு சாத்தியமான ஓரே வாழ்க்கைமுறை என்பது சோசலிச முகாம் இல்லாமல் போய்விட்ட நிலையில் உருவாகியுள்ளது. உலகின் அனைத்து நாடுகளின் உற்பத்திப் பொருள்களும் உலகச் சந்தையின் உற்பத்திப் பொருளாக இன்றைய உலகமயச் சூழலில் மாறிவிட்டன. இந்தச் சூழலில் இந்தியா போன்ற நாடுகளில் இங்கு நிலவும் குறைந்த கூலிக்கு ஆள் கிடைக்கும் போக்கை மையமாக வைத்து அதனைப் பயன்படுத்திச் சுரண்ட அந்நிய மூலதனம் உள்நாட்டு முதலாளிகளின் ஒத்துழைப்போடு இங்கு வந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவாகவே இன்றைய ஆட்சியாளர்கள் கூறும் 6,7 சதவிகித வளர்ச்சி விகிதங்கள் பராமரிக்கப்படுகின்றன. 

தகவல் தொழில் நுட்பத் துறையில் தலைவிரித்தாடும் தனிநபர் வாதம் 

எனவே இப்போது ஏற்படும் தகவல் தொழில் நுட்பப் புரட்சி என்று இவர்களால் வர்ணிக்கப்படும் இந்த நவீனமயமும் அதன் விளைவாக ஏற்படும் ஓரளவிலான தொழில் மயமும் முதலாளித்துவ எந்திரத் தொழில் உற்பத்தி முறையின் பரவலாக்கலைக் கொண்டுவந்தாலும் அது கலாச்சார மேல் கட்டுமானத்தில் முற்போக்கான முதலாளித்துவ மனிதாபிமானக் கலாச்சாரத்தைக் கொண்டு வரவில்லை. மாறாக இன்றைய நிலையில் அது மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் நிலவும் அப்பட்டமான தனிமனிதவாத கலாச்சாரப் போக்குகளையே கொண்டு வருகிறது. மனிதனை சமூகம் குறித்த அக்கறையற்றவனாக்கும் இத்தகைய தனிமனிதவாதக் கலாச்சாரப் போக்குகள் பாஸிசக் கலாச்சாரத்தின் பிரதானக் கூறுகளை பெருமளவு உள்ளடக்கியவையே என்று கூறத் தேவையில்லை.

இந்த நிலையில் தான் அதாவது உலகம் முழுவதுமே முதலாளித்துவம் எந்த அளவு அதிகபட்சம் வளர முடியுமோ அந்த அளவிற்கு உலகமயத்தின் விளைவாக வளர்ந்து முடிந்துவிட்ட நிலையில்தான் அதாவது உலகின் ஒவ்வொரு நாட்டின் உற்பத்திப் பொருள்களுக்கும் உலகச் சந்தையில் எவ்வளவு தூரம் விற்கப்பட வாய்ப்பிருக்கிறதோ அவ்வளவு தூரம் அந்த நாட்டில் அப்பொருட்களின் உற்பத்தி அதிகபட்சம் வளர சந்தை சக்திகளால் வாய்ப்பளிக்கப்பட்டு இன்று ஏறக்குறைய முதலாளித்துவ வளர்ச்சியின் உச்சகட்டத்தில் நிற்கும் இந்த சூழ்நிலையில் தான் உலகம் முழுவதுமே முதலாளித்துவம் எத்தகைய உச்சகட்ட வளர்ச்சியைச் சாதிக்க முடியுமோ அத்தகைய வளர்ச்சியை சாதித்துள்ள இந்நிலையில் தான் அதாவது இனிமேல் உலகில் எங்குமே முதலாளித்துவச் சந்தைப் பொருளாதாரம் எத்தகைய குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் கொண்டுவர வாய்ப்பே இல்லை என்ற நிலையில் தான் சி.பி.ஐயும் , சி.பி.ஐ(எம்)மும் அவற்றிலிருந்து பிரிந்த இடதுசாரிக் குழுக்களும் இங்கு நடக்கவிருக்கும் புரட்சி ஜனநாயகப் புரட்சி என்ற அடிப்படையில் இங்கு தேசிய முதலாளித்துவம் வளர நாம் உதவ வேண்டும் என்ற கருத்தினை முன்வைக்கின்றன. அதாவது 19வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றிய அந்த முற்போக்கு முதலாளித்துவத்தின் கூறுகளைக் கொண்ட முதலாளிகள் வளர்ந்து சமூகத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட உதவுவர் என்று நம்பி அத்தகைய முதலாளிகள் எங்காவது தென்படுகிறார்களா என்று பூதக்கண்ணாடி போட்டுத் தேடி , இலவு காத்த கிளிபோல் காத்திருக்கின்றனர்.

இன்று இங்கு நிலவும் கலாச்சாரம் முதலாளித்துவ அரசியல்வாதிகளால் முதலாளித்துவத்தின் நலன் கருதி உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தி அதன் போராட்டக் கூர்முனையை மழுங்கடிக்கும் விதத்தில் செயற்கையாக வளர்த்துவிடப்பட்டு அதனால் நின்று நிலவும் நிலப்பிரபுத்துவக் கலாச்சாரத்தின் மிச்ச சொச்சங்களே; அதனை தேசிய முதலாளித்துவ சக்திகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த முதலாளித்துவத்திற்கு மரண அடிகொடுத்துத் தூக்கியயறியாமல் ஒழிக்க முடியாது என்பதை உணராமல் புதிய கலாச்சாரம் , புதிய ஜனநாயகம் என்ற பெயர்களில் வளர்ச்சிப் போக்குகளை அதன் இயக்கத்தில் கணிக்காமல் அது என்றோ இருந்த நிலையில் நிலைநிறுத்திப் பார்த்து இந்த நிலவுடைமைக் கலாச்சார மிச்சசொச்சங்களைப் போக்க தேசிய முதலாளித்துவ சக்திகளையும் உள்ளடக்கிய புதிய ஜனநாயக , புதிய கலாச்சாரப் போக்குகள் கொண்டுவரப்பட வேண்டும் என்று கிளிப்பிள்ளைவாதம் பேசிக் கொண்டுள்ளனர். தலைகீழாக நின்றாலும் அழுகி நாற்றமடிக்கும் நிலைக்கு வந்துவிட்ட இன்றைய முதலாளித்துவம் சமூகத்தில் ஜனநாயகப் போக்குகளை ஒருபோதும் கொண்டுவர முடியாது. சித்தாந்த ரீதியில் நறுங்கிப்போன , வளர்ச்சியற்ற மனநிலையில் உள்ளவர்களே அத்தகைய எதிர் பார்ப்பினை இன்றைய சீரழிந்த முதலாளித்துவம் குறித்துக் கொண்டிருக்க முடியும். 

இலவசத் திட்டங்கள் மூலம் பரப்பப்படும் லும்பன் கலாச்சாரம் 

ஒருபுறம் உழைப்பில் ஈடுபடும் மத்தியதர வர்க்கத்திடம் முதலாளித்துவ பாஸிசக் கலாச்சாரத்தின் சுவடான சமூக நலனைப் புறக்கணிக்கும் அப்பட்டமான தனிநபர்வாதக் கலாச்சாரத்தைப் புகுத்தியுள்ள ஆளும் வர்க்கம் மறுபுறம் அமைப்பு ரீதியான தொழில்களில் ஒருங்கு திரட்டபடாத கோடிக்கணக்கான சிறு முதலாளித்துவச் சுரண்டலில் ஆட்ப்பட்டுக் கிடக்கும் உழைக்கும் வர்க்கத்தின் நேர்மை , நாணயம் , கெளரவம் ஆகியவற்றை அழித்தொழிக்கும் விதத்தில் அவர்களை இலவசத் திட்டங்களுக்கும் வாக்களிப்பதற்குப் பணம்பெறும் ஊழல் நடவடிக்கைகளில் ஊறித் திளைப்பதற்கும் இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது உதிரித் தொழிலாளி வர்க்கத்தை லும்பன் மனநிலைக்கு தள்ளும் முயற்சியில் வெகுவேகமாக ஈடுபட்டுக் கொண்டுள்ளது. இவ்வாறு கருத்தால் உழைக்கும் வர்க்கம் சமூக மனநிலையற்ற தனிமனித வாதத்திலும் கரத்தால் உழைக்கும் வர்க்கம் லும்பன்மயமாவதிலும் அதிக அளவில் ஈடுபடத் தொடங்கினால் சமூகப் புரட்சிக்கு இது எத்தனை பெரிய எதிர்மறை மனநிலையினைத் தோற்றுவிக்கும் என்பதை விவரித்துக் கூறவும் வேண்டுமா? அத்தகைய ஒரு மிகக் கொடுமையான நிலையில்தான் இன்று நமது சமூக அமைப்பு உள்ளது.

எனவே தவறான அடிப்படை அரசியல் வழியைப் பின்பற்றி மருந்திற்கும் முற்போக்குத் தன்மைகள் எதுவுமில்லாத இன்றைய காலகட்ட முதலாளித்துவத்தை தங்கள் வசதிக்குத் தகுந்த வகையில் கூறுபோட்டு அதில் ஒரு பகுதியினருக்கு முற்போக்கு முலாம் பூசி கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் உலாவருபவர்கள் சமூகப் புரட்சிக்கு ஊறுவிளைவிக்கின்றனர். அதற்கு கம்யூனிஸ்ட்கள் என்ற பெயரில் அவர்கள் பல காலம் செயல்பட்ட பாரம்பரியமும் அது மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ள தாக்கமும் உதவுகிறது.

ஒருபுறம் சரியான கருத்துக்கள் மக்களிடம் சென்று சேராமல் முதலாளித்துவம் தனது ஊடக வலிமையினால் தடுத்து நிறுத்திக் கொண்டுள்ளது. அதே வேளையில் மறுபுறம் இந்த இடதுசாரி என்ற போர்வையில் உள்ள கட்சிகள் யதார்த்தத்தோடு ஒரு பொருத்தமும் இல்லாத தங்களது அடிப்படை அரசியல் வழியை நியாயப்படுத்தும் வகையில் பொருந்தாத புள்ளி விபரங்களையும் வசைமாரி வார்த்தை ஜாலங்களையும் கொண்டு குழப்பம் ஏற்படுத்தி சீரழிந்துவிட்ட முதலாளித்துவத்திற்கு எதிராக மக்கள் நிலை எடுப்பதைத் தடுத்து அதைக் காப்பாற்றிக் கொண்டுள்ளது.

அதனை மிகச்சரியாக விமர்சிக்கும் நாமும் பொருளாதார அடித்தளம் அதாகவே கலாச்சார மேற்கட்டுமானத்தைக் கொண்டுவந்துவிடும் எனவே முதலாளித்துவத்தை எதிர்த்த போராட்டங்களை அதன் அடித்தளம் சார்ந்த விதத்திலேயே நடத்தினால் போதும் என்று எண்ணி வாளாவிருந்தோமானால் அது மிகப்பெரிய ஏமாற்றத்தை நமக்கும் அளிக்கும். கலாச்சார அரங்கில் இன்று முதலாளித்துவ வளர்ச்சியினாலும் அதன் நாசகரத்தன்மை வாய்ந்த சதிச் செயல்களினாலும் விசப் புகையயனப் பரவி புரட்சிகரக் கருத்துக்கள் சென்றடைவதற்கு பெரும் தடைக்கற்களாக விளங்கக் கூடிய சமூக சிரத்தையற்ற தனிமனிதவாதப் போக்கையும் சமூகத்தின் அரிதிப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் வர்க்கத்திடம் பரப்பப்படும் லும்பன் கலாச்சார மனநிலையையும் எதிர்த்து மிகப்பெரும் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும் இல்லையயனில் சரியான அடிப்படை அரசியல் வழியை நாம் கண்டு கொண்டிருந்தாலும் அதனை இயக்க வழிமுறையாக கடைப்பிடித்துக் கொண்டிருந்தாலும் சமூகப் புரட்சியை வெற்றிகரமாக நடத்த முடியாதவர்களாக நாம் ஆகிவிடுவோம்.        

நாம் ஏற்கனவே பார்த்தது போல் கருத்தால் உழைக்கும் மக்களிடம் இன்று வந்து கொண்டுள்ள தனிநபர் வாதம் அவர்கள் அமைப்பு மயப் படுத்தப்படாததன் அடிப்படையில் உருவாகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் ஒப்பு நோக்களவிலான கூடுதல் ஊதியம் அவர்களை சமூகத்தின் பிற மக்களோடு ஒன்ற விடாதவர்களாக ஆக்குகிறது. 

முதலாளித்துவ வியாபார நலனுக்குப் பயன்படும் தனிநபர் வாதம் 

இவ்வாறு அவர்களிடம் வளர்த்து விடப்படும் தனிநபர் வாதத்தை முதலாளித்துவம் தனது வியாபார நலனுக்கும் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்களுக்கு வீடு , கார் போன்றவை வாங்க கடன்களை வாரி வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் செலுத்த வேண்டிய கடன் தவணைகளைத் தவிர வேறெதையும் எண்ண முடியாதவர்களாக அவர்களை ஆக்கிவிடுகிறது. அதனால் அவர்கள் மீது நிர்வாக ரீதியாக வரும் எந்த நடவடிக்கையையும் உரிய முறையில் சந்திக்கத் திராணியற்றவர்களாக்கப் படுகின்றனர். அவ்வாறு எதிர் கொண்டாலும் அமைப்பு ரீதியாக எதிர் கொள்ளாமல் தனிமனித ரீதியாகவே எதிர் கொள்பவர்களாக ஆகி சட்ட நடவடிக்கைகளில் நம்பிக்கை வைத்து பல சமயங்களில் மோசம் போகின்றனர்.

ஒருநாள் பெரு வலிமை கொண்ட மனிதனாக அவர்களைப்பற்றி அவர்கள் மனதில் நிரம்பித் ததும்பும் எண்ணம் வேலையிழப்பு போன்றவை ஏற்படும் வேளையில் ஒன்றுமில்லாத கையாலாகாதவர்கள் என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்துகிறது.

இவற்றையயல்லாம் மனதிற்பதித்து இந்தத் தனிமனித வாதத்தை எதிர்த்த கலாச்சார ரீதியான இயக்கங்கள் கலை , இலக்கிய வடிவங்கள் மூலமாகவும் , அமைப்பினை ஏற்படுத்தி செயல் படுவதன் மூலமாகவும் செய்யப்பட வேண்டும். இல்லாவிடில் மதங்கள் குறிப்பாக இந்து மதம் முன்வைக்கும் விதி வாதத்திற்குள் இவர்கள் தஞ்சம் புகுந்து விடுவர்.

மேலும் எந்த அத்துமீறலையும் சகித்துக் கொள்ளும் வகையில் மனதைப் பக்குவப் படுத்துகிறோம் என்ற பெயரில் சுரணையற்ற தாக்குவதற்குப் பல புதுப்புது மதம் என்ற பெயரில் நேரடியாகச் செயல்படாமல் செயல்படும் அமைப்புகள் உருவாக்கி வளர்க்கப் படுகின்றன.

முழுக்க தொழில் நுட்ப ரீதியிலான அறிவே ஒரே அறிவு என்ற நிலையில் உள்ள அவர்களுக்கு அந்த அமைப்புகள் கூறும் மிகச் சாதாரண வி­யங்கள் கூட அரிய கண்டுபிடிப்புகள் போல் காட்சியளிக்கின்றன. இந்தப் போக்குகள் அனைத்தையும் உரியமுறையில் அலசி ஆராய்ந்து அவற்றிலுள்ள பகுத்தறிவுக்குப் புறம்பான போக்குகளை நாம் அம்பலப்படுத்த வேண்டும்.

இலவசத் திட்டங்கள் உருவாக்கும் இரங்கல் மனநிலை

இதுதவிர கீழ்த்தட்டு மக்களிடையே வளர்க்கப்படும் லும்பன் கலாச்சாரத்தை வளர்க்கும் இலவசத் திட்டங்களையும் , அவர்களது நேர்மையுணர்வைப் பாழாக்கும் வாக்கிற்குப் பணம் கொடுக்கும் போக்கினையும் எதிர்த்து அம்பலப்படுத்த வேண்டும். உண்மையில் இத்தகைய இலவசத் திட்டங்கள் நீடித்து செயல்படுத்த முடியாதவை. இருந்தாலும் அது செயல் படுத்தப்படும் கால கட்டத்திலேயே அது இலவசத் திட்டங்களுக்காக ஏங்கும் ஒரு இரங்கல் மனநிலையை அது தோற்றுவித்து விடுகிறது. அதன் விளைவாகக் கடுமையான சுரண்டலில் ஆட்பட்டிருக்கும் அவர்களிடம் இருக்க வேண்டிய போர்க்குணம் மங்கிவிடும் அவலநிலை ஏற்படுகிறது. மற்றொரு வகையில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போன்ற திட்டங்கள் மறைமுகமாக முதலாளிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் போல் ஆகி விலைவாசி விசம் போல் ஏறிவிடும் சூழ்நிலையிலும் குறைந்த கூலி கொடுத்து உழைக்கும் மக்களைச் சுரண்ட அது முதலாளிகளுக்கு வாய்ப்பளிக்கிறது.

வாக்கிற்குப் பணம் வழங்க முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல் வாதிகளுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது? ஒருபுறம் உலக வங்கி போன்ற நிதி நிறுவனங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கென கடன் வாங்கி அதில் ஒரு சிறு பகுதியை மட்டும் செலவு செய்துவிட்டு மிகப்பெரும் பகுதியை ஒப்பந்தக்காரர், அரசு அதிகார வர்க்கத் துணையோடு கூட்டுக் கொள்ளை அடிப்பதன் மூலமும், மறுபுறம் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் ஒட்டுமொத்த லாபத்தில் சில விழுக்காடுகளைக் கட்டாயமாகப் பெறுவதன் மூலமுமே வருகிறது.

இவ்வாறு அரசியல் வாதிகளுக்குக் கொடுக்கும் கட்டாய வசூல் தொகையை வர்த்தக நிறுவனங்கள் மக்களிடம் விற்கும் பொருட்களின் விலைகளை உயர்த்துவதன் மூலம் ஈடுகட்டி விடுகின்றன. இதனால் ஓரளவு வாங்கும் சக்தியுள்ளதாக இருக்கும் மத்திய தர வர்க்கத்தின் வருமானம் சூறையாடப்படுகிறது.

தேர்தல் அரசியலே பிரதானம் என்றாகிவிட்டதால் இங்கு இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் என்ற பெயர்களில் செயல்படும் கட்சிகளும் கூட இலவசத் திட்டங்களாலும் , வாக்கிற்குப் பணம் கொடுப்பது போன்ற நடவடிக்கைகளாலும் வளர்க்கப்படும் லும்பன் மனநிலையை அம்பலப்படுத்தவும் , உழைக்கும் வர்க்கத்தின் உணர்வு பெற்ற பகுதியினரை அதற்கு எதிராக அணிதிரட்டவும் முன் வராதவர் ஆகிவிட்டனர். இவை அனைத்தையும் பிரச்சார இயக்கங்களின் மூலமாக அம்பலப்படுத்தி பெருசிவரும் லும்பன் கலாச்சாரப் போக்கிற்கெதிராக முடிந்த வகையிலெல்லாம் இயக்கம் கட்ட முன்வர வேண்டும். 

பாசிஸக் கலாச்சாரத்தை எதிர்க்கும் இயக்கத்துடன் ஜனநாயக மயப்படுத்தும் இயக்கங்களை இணைக்க வேண்டியதன் தேவை

 இத்தகைய பாசிஸக் கலாச்சாரத்தின் பரவலை எதிர்த்த இயக்கங்களையும் சமூகத்தை உண்மையிலேயே ஜனநாயக மயப்படுத்த நடத்தப்படும் இயக்கங்களோடு இணைக்க வேண்டும். ஆண்டாண்டு காலமாகச் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட பகுதியனரிடமிருந்து வந்து இட ஒதுக்கீடு போன்றவற்றின் மூலமாக கல்விகற்று , பணியமர்ந்து , பதவி உயர்வு பெற்றவர்களில் பலர் இன்று திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் சமஸ்கிருதவாதப் போக்குகளைப் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றனர்.

அதைப்போல் சுமங்கலித் திட்டம் போன்ற திட்டங்களில் உழைக்கும் ஆண், பெண் தொழிலாளரிடையே தோன்ற வாய்ப்பிருக்கும் சுரண்டலை எதிர்த்த ஒற்றுமையைத் தடுக்கும் நோக்குடன் உழைக்கும் வர்க்கப் பெண்களின் பெற்றோரின் மனதில் நிலவுடைமைக் கலாச்சாரத்தின் மிச்சசொச்சமாக இருக்கும் ஜாதியப் போக்குகளை நிலை நிறுத்த பஞ்சாலை முதலாளிகளினால் கடைப்பிடிக்கப்படும் நியதி, அந்தச் சூழ்ச்சியையும் அதற்கு பெற்றோர் இரையாகும் போக்கினையும் எதிர்த்த ஆண் , பெண் உறவில் ஜனநாயகக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் இயக்கங்களோடு இணைக்க வேண்டும்.

இது போன்ற கலாச்சார இயக்கங்களை முன்னின்று சரிவர நடத்த வேண்டுமானால் அதனை அவ்வாறு முன்னின்று நடத்தும் தோழர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் ஜனநாயகக் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பவர்களாகவும் , அனைத்துவகை வேசதாரித் தனங்களுக்கு எதிராக இருப்பவர்களாகவும் திகழ வேண்டும். தங்களால் செல்வாக்கு செலுத்த முடிந்த அனைத்து இடங்களிலும் வரதட்சணைக் கொடுமைக்கு எதிராகவும் , நிலவுடைமை சமூகத்தில் நிலப்பிரபுக்கள் திருமணங்களை நடத்தும் பாணியில் வீண் செலவு செய்து மூடச் சடங்குகளோடு திருமணங்கள் நடத்துவதைத் தவிர்த்து ஜனநாயகப் பூர்வமானவையாகத் திருமண விழாக்களை மாற்ற முயற்சிக்க வேண்டும்.

ஏழை மக்கள் உட்பட அனைத்து மக்கட் பகுதியினரிடமும் தற்போது பராமரிக்கப் பட்டுவரும் திருஷ்டி சுற்றுதல் , இல்லங்களின் முன்பு அகோர உருவங்களைக் கண்படாமல் இருப்பதற்காக வைக்கிறோம் என்ற பெயரில் வைக்கும் போக்கு , வெள்ளிக் கிழமைகளில் பெட்டிக் கடைகளில் தொடங்கி பெருங்கடைகள் வரை ஒலைக் கொட்டான்களில் உப்பை வைத்து நெருப்பைக் கொழுத்தி ரோடுகளில் திருஷ்டி பரிகாரம் என்ற பெயரில் போக்குவரத்திற்கு ஏற்படுத்தும் இடைஞ்சல் , தங்களது சொந்த விழாக்களை சமூக விழாக்கள் போல் நடத்தவது , ஒலி பெருக்கிகள் ஏற்பாடு செய்து செவிப் பறையைக் கிழிப்பது , பொதுச் சுவர்களில் தனிப்பட்ட விழாக்கள் குறித்து சுவரெழுத்துக்கள் செய்வது , இது போன்றவற்றையும் எதிர்த்து இளைஞர் மற்றும் மாணவரைத் திரட்டி கலாச்சார இயக்கங்களும் , பிரச்சாரங்களும் நடத்த வேண்டும். 

கலாச்சாரப் புரட்சி அரசியல் புரட்சியின் முன்னோடி 

இது போன்ற கலாச்சார விசயங்களுக்கு முன்னுரிமை அளிக்காது பொருளாதார அடித்தளமே அதற்குரிய மேல் கட்டுமானத்தை மக்கள் இயக்கம் ஏதுமின்றிக் கொண்டு வந்துவிடும் என்ற மேலோட்டமான கருத்துடன் செயல்படுவது உண்மையான புரட்சிகர இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உழைக்கும் வர்க்க இயக்கம் பின்னடைவில் உள்ள இன்னாளில் பயன்படவே பயன்படாது.

இத்தகைய கலாச்சார இயக்கங்களைக் கையிலெடுப்பதன் நோக்கம் முதலாளித்துவம் இந்தியா போன்ற நாடுகளில் செயல் படுத்தாமல் விட்டுவிட்ட ஜனநாயகக் கடமைகளை உழைக்கும் வர்க்கம் நிறைவு செய்வது என்பது மட்டுமல்ல. இன்று சீரழிந்த முதலாளித்துவம் கொண்டு வந்து கொண்டிருக்கும் பாசிஸக் கலாச்சாரப் போக்குகளுக்கு எதிரான நீரோட்டத்தை ஏற்படுத்துவதும் , அதனை உருவாக்கும் போக்கில் உழைக்கும் மக்களிடையே சோசலிசக் கூட்டுவாதக் கலாச்சாரப் போக்கினை உருவாக்குவதும் ஆகும். அந்த வகையில் கலாச்சாரப் புரட்சி அரசியல் புரட்சிக்கு முன்னோடியாக ஆக்கப்படுவது மிகமிக அவசியமாகும்.

Pin It