periyar 178டாக்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப் போவதாகத் தெரிகின்றது. அதாவது,

1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டந்தஸ்துக்கு குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப்படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.

2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.

3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது.

என்பவையாகும்.

ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.

இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்கலாடவோ தேவையில்லையென்றும் சொல்லுவோம்.

ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக்கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் “தேசியப் பத்திரிகைகள்” என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கக்ஷிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய் விட்டபடியாலும் “சென்ற தேர்தலின்” போது ‘தேசியக் கட்சியை’ விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட “தேசியக்கட்சி” மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப்புடையவைகளாகி விட்டபடியாலும் அவைகள் “கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி” போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.

ஆகையால் ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 09.11.1930)