periyar 465ஈரோடு ஆலயப் பிரவேச விஷயமாய் தமிழ்நாடு என்னும் பத்திரிகையில் சில விஷயமும் காணப்படுகின்றது.

அது விஷமத்தனமானதாகும். ஈரோடு தேவஸ்தானக் கமிட்டியில் ஆலயப் பிரவேச தீர்மானம் செய்யப்பட்டது முதல் “தமிழ்நாடு” பத்திரிகை செய்து வந்த விஷமத்தனமும் பொய்ப் பிரசாரமும் நாம் அவ்வப்போது அவைகளைப் பலமாய் கண்டித்ததும் நேயர்களுக்கு நினைவிருக்கும்.

அத்தீர்மானம் நிறைவேறிய பின் நாம் ஊரிலில்லாத காலத்தில் நமக்குச் சிறிதும் தகவல் அன்னியில் சிலர் திடீரென்று ஆலயப் பிரவேசம் செய்து வீண் கலாட்டா செய்து விட்டார்கள் என்றாலும், நாம் ஊரிலிருந்து வந்து விஷயம் தெரிந்து இம்மாதிரி நம் பேரால் நம்மைக் கேட்காமல் திடீரென்று கலாட்டா செய்ததைப் பற்றி கண்டித்தபோது சிலர் ஆலயப் பிரவேசத்திற்கு “நீதான் அதிகாரியா? உன்னைக் கேட்டுத்தான் செய்ய வேண்டுமா? எங்கள் இஷ்டப்படியே நடக்க எங்களுக்கு உரிமை உண்டு. ஆதலால் அதைப் பற்றி நீ கேழ்க்க வேண்டியதில்லை” என்று சொன்னார்கள்.

இதை அனுசரித்து திரு. ஈஸ்வரனும் பத்திரிகைகளுக்கு அப்போதே ஒரு குறிப்பு அனுப்பி விட்டார். இருந்த போதிலும் ஆலயப் பிரவேசம் செய்தவர்களைக் கவனிக்காவிட்டாலும் அக்கொள்கையைக் காப்பாற்ற வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீதே நாம் கேசு விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் செய்தோம்.

இந்த கேசுக்கு சுமார் நானூறு ரூபாய்கள் இதுவரை செலவாகி இருக் கின்றது. (இது திரு. ஈஸ்வரன் சொன்ன கணக்குப் படி) இவற்றுள் சுமார் நூறு ரூபாய்கள் வரை நாம் கொடுத்திருக்கிறோம். மலாய் நாட்டுக்கு போன நமது ஏஜன்டு திரு. காளியப்பன் அவர்களால் நூறு ரூபாய்களுக்கு மேலாகவே வசூல் செய்தனுப்பப்பட்டது.

நமது மைத்துனர் திரு. மாப்பிள்ளை ராமசாமி ஈஸ்வரனிடத்தில் 45 ரூபாயிக்கு மேலாகவே கொடுக்கப்பட்டதாக அவர் சொன்னார். இது தவிர இக்கேசு சம்மந்தமாய் வெளியூர்களிலிருந்து வருகின்றவர்கள் எல்லோருக்கும் ஜாகை சௌகரியம் சாப்பாடு ஆகியவைகள் நமது வீட்டிலேயே நடந்து வந்திருக்கின்றது.

திரு. ஈஸ்வரனுக்கும் அவரது சினேகி தர்களுக்கும் கேசு ஆரம்பித்த காலம் முதல் கேசு முடிந்த நாள் வரையில் - கேசு முடிந்து பணம் கட்டி விடுதலையாகி வெளி வந்த மறுநாள் வரை சாப்பாடு நமது வீட்டில் தான் நடந்து கொண்டு வந்தது; வருகிறது. “அதற்கு முன்னும் வருஷக்கணக்காய் பல வருஷங்கள் நமது வீட்டில்தான் சாப்பிட்டு வருகிறார்”. தவிர கேசுக்கு ஆஜரான இரண்டு மூன்று வக்கீல்களும் யாருக்காக வந்தார்கள் என்பதையும் அவ்வக்கீல்களையே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இன்னும் இது விஷயமாக செய்த காரியங்கள் சுருக்கமாகச் சொல்வதானால் வக்கீல் கடைசியாக ஆர்க்குமெண்டுக்கு வந்து விட்டுப் போனதற்குக் கூட நாம் தான் மலாய் நாட்டிலிருந்து வந்ததும் முதல் வேலையாக ரயில் சார்ஜ் கொடுத்தோம். மலாய் நாட்டுக்கு புரப்படும்போதும் ரயிலேறிய பின் கட்சி வேலையாக வக்கீலுக்கு ரயில் சார்ஜ் கொடுத்து விட்டுத்தான் பயணம் சொல்லிக் கொண்டோம், இந்த கேசுக்கு என்று வந்திருந்த திரு. கிரித்திவாசுக்கும் சில சமயம் ரயில் சார்ஜ் கொடுத்தோம். இவர்கள் கோயில் பிரவேசம் செய்யப்போகும் போதும் நமது வீட்டில் தான் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.

கோவிலுக்குள் இருந்த போது கூட நாம் ஊரில் இல்லா விட்டாலும் நமது மனைவியார் சாப்பாடு அனுப்பி இருக்கிறார்கள். இவ்வளவு காரியங்களையும் பெற்றுக் கொண்டும் நாம் வழக்கிற்கு விரோதமாய் நடந்து கொண்டதாகவும் யாரையும் உதவி செய்ய விடாமலும் தடுத்ததாகவும் சொல்வதற்கு எவ்வளவு தூரம் துணிந்திருக்கிறார்கள் என்பதையும் புதைபட்ட திரு. பி. வரதராஜுலு இக்கூட்டத்தைப் பிடித்து மறுபடியும் கரையேர நினைப்பதும் எவ்வளவு யோக்கியமான காரியம் என்பதையும் வாசகர்களே தெரிந்து கொள்ளட்டும். செய்து விட்டுச் சொல்லிக் காட்டுவதற்கு இதை எழுதவில்லை.

நமது மீது சுமத்தப்படும் பழிப்புக்கு பதில் சொல்ல வேண்டியிருப்பதால் எழுதுகிறோம். ஆனால் நாம் ஒன்று ஒப்புக் கொள்ளு கின்றோம். அதாவது இக்கேசுக்கு பணம் கொடுக்கும்படி பொது ஜனங்களுக்கு எனது மனைவியின் பேரால் ஒரு அப்பீல் வெளியிட ஆரம்பித்தார்கள். அதை நான் பத்திரிகையில் போட மறுத்ததுண்டு.

காரணம் கேசுக்கு அதிக பணச் சிலவில்லை. ஏனெனில் சாப்பாடு நம்முடையது வக்கீல்களுக்கு பீசு கிடையாது. சார்ஜ் சத்தமும் ஸ்டாம்பும் தான் வேண்டியது. இதற்கு அதிகமான பணம் தண்ட வேண்டியதில்லை. நம்மைக் கேட்ட போதெல்லாம் மேல்கண்டபடி ஒரு தடவை கூட இல்லை என்று சொல்லாமல் பணம் கொடுத்திருக்கின்றோம்.

அடிக்கடி பொது ஜனங்களை பணம் கேட்பதால் கொள்கையில் அபிமானம் குறைந்து விடும் என்று சொல்லியே நமது பேரை உபயோகிக்க வேண்டாம் என்று சொன்னோம். மற்ற காரணங்களையும் மற்றும் இப்படி ஒரு கூட்டம் பொருப்பில்லாமல் நடந்து கொள் வதால் நமக்கு அடிக்கடி ஏற்பட்டு வந்த இடையூருகளையும் நஷ்டங்களையும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வந்த நமது சகிப்புத் தன்மையையும் பின்னால் விவரமாய் எழுதுகிறோம்.

ஆனால் ஒன்று, இன்றைய தினம் வெகு வீரமாய் ஈரோடு ஆலயப் பிரவேசத்தைப் பற்றி எழுதும் தமிழ்நாடு திரு. பி. வரதராஜுலு, திரு. ஈஸ்வரனைப் பாராட்டி ஒரு தந்தி கொடுத்து ஏமாத்தினதல்லாமல் ஒரு காதொடிந்த ஊசி அளவு உதவி செய்தாரா என்றாவது இது மாத்திரமல்லாமல் வேறு எந்த சத்தியாக்கிரகத்திலாவது கையெழுத்தும் வாக்குத்தத்தமும் செய்து நாணையமாய் நின்று அதை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டு நடு சந்தர்ப்பத்தில் விட்டு விட்டு ஓடின நடவடிக்கைகள் ஒன்றுக்கு மேல்பட்ட தடவை இல்லையா என்றாவது நினைத்துப் பார்த்தால் இவ்வளவு விஷமத்தனம் செய்ய வெட்கப்படு வாரென்றே சொல்லுவோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 02.02.1930)