periyar 450சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும் தன் மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஒரு இயக்கமாகும்.

இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கையெல்லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம்.

இதன் உண்மை விளங்க வேண்டுமானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத்தையும் நினைத்துப் பார்ப்பானேயானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும்.

சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி மூன்று நான்கு வருடங்களுக்குள்ளாக மக்களுக்கு அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த்தாலும் கூட, இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும்.

நிற்க, தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பிழைக்க முடியாமல் அன்னியர்களின் முட்டாள் தனத்திலேயே பிழைத்துக் கொண்டிருந்தவர்களான அரசியல் தேசீயக் கூட்டத்தார்கள் என்பவர்களும் சமய இயல்பில் வைதீகப் பண்டிதக் கூட்டத்தார்கள் என்பவர்களும், இவ்வியக்கத்தால் தங்களுடைய வாழ்விற்கும் பெருமைக்கும் ஆபத்து வந்துவிட்டதாய்க் கருதி இவ்வியக்கத்தைப் பாமர மக்களுக்குத் திரித்துக் கூறி, அதாவது சுயமரியாதை இயக்கம் தேசத்துரோக இயக்கம் என்றும், சமயத் துரோக இயக்கம் என்றும், நாத்திக இயக்கமென்றும், சொல்லிக் கொண்டு, எவ்வளவோ முயற்சியும் கட்டுப்பாடுமான சூழ்ச்சிகள் செய்துங்கூட, இவ்வளவுக் கும் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறிதும் பின்னடையாமல் அடிக்க அடிக்க பந்து எழும்புவதுபோல், விஷமப் பிரசாரம் செய்யச் செய்ய இப்போது இந்தியா தேச முழுவதும் பஞ்சில் நெருப்பு பிடிப்பது போல் மக்களிடம் பரவிக் கொண்டே போகின்றது.

இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதற்கு எதிரிடையாக நமது நாட்டில் வேலை செய்த பத்திரிகைகள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். அதாவது அந்தக் காலத்தில் நாட்டில் செல்வாக்காயிருந்த ‘சுதேச மித்திரன்’, ‘இந்து’, ‘சுயராஜ்யா’, ‘தமிழ்நாடு’, ‘நவசக்தி’, ‘லோகோபகாரி’, ‘ஊழியன்’ முதலிய தேசீயப் பத்திரிகைகள் என்பவைகளும், மற்றும் பல குட்டிப் பத்திரிகைகளும், கூலிப் பத்திரிகைகளும் மனதார நடந்தவைகளைத் திரித்துக் கூறுவதும், கருத்துக்களை மாற்றிக் கூறுவதும், பொதுமக்களுக்குத் துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி எழுதுவதுமான காரியங்களில் வெகு மும்முரமாக ஈடுபட்டிருந்தன.

மற்றும் பிரசாரம் செய்வதிலும், தேசீயத் தலைவர்கள், பிரசாரகர்கள் என்பவர்கள் எல்லோரும் ஒரே முகமாய் திருவாளர்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ராஜகோபாலாச்சாரியார், கலியாணசுந்தர முதலியார், வரதராஜுலு, குழந்தை, ஷாபி முகம்மது, அண்ணாமலை, குப்புசாமி, பாவலர் என்பவர்களும் மற்றும் தேசீயம் என்பதன் பேரால் நாட்டில் பாமர மக்களிடம் செல்வாக்குள்ள அனைவரும் அடியோடு பார்ப்பனக் கூட்டமும், காப்பிக்கடை தாசி வீடு வரையில், சட்ட சபை முதல் சந்து பொந்துகள் எல்லாம் சென்று சுயமரியாதை இயக்கம் தேசத் துரோக இயக்கமென்றும், நாத்திக இயக்கமென்றும் இதைக் கொல்வதற்கு “ஆண்டவன் அருள் கொண்டு” துணிந்து விட்டோம் என்றும், “கடவுள் துணை கொண்டு இறங்கிவிட்டோம்” என்றும், “கிருஷ்ண பகவானே துணை” என்றும் கர்சித்துக்கொண்டு தொண்டை கிழியப் பேசியும், பார்த்தார்கள்.

அவர்களுக்குள் வர்ணாசிரம மகாநாடு, சைவ மகாநாடு முதலிய மகா நாடுகள் கூட்டி தீர்மானித்தும் பார்த்தார்கள். மற்றும் புராணப் பண்டிதர்கள், புத்தகக் கடைக்காரர்கள், பூசாரிகள், குருக்கள், மடாதிபதிகள் முதலிய கூட்டத்தார்களும் தேசீய மேடையிலும், சமய மேடையிலும் “சுயமரியாதை இயக்கம் சமயத்தைப் பாழ்பண்ணி வருகின்றது, இதை ஒழிக்க வேண்டும்” என்று கூட்டங்கள் போட்டுக் கூவிப்பார்த்தார்கள்.

இவ்வளவும் போதாமல் வெளிநாடுகளிலிருந்து திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக் கொண்டுவந்து இதற்கு எதிரிடையாகப் பிரசாரம் செய்தும் பார்த்தார்கள். இனியும் இரகசியமாகச் செய்த இழிதகைப் பிரசாரத்திற்கு அளவே இல்லை.

என்னவெனில், நம்முடைய தனிப்பட்ட நாணயத்தைப் பற்றியும், நடவடிக்கைகளைப் பற்றியும், ஒழுக்கங்களைப் பற்றியும், எவ்வளவோ கேவலமாகப் பேசியும் கூலி கொடுத்து காலிகளை ஏவிவிட்டு பேசச் செய்தும், செய்யப்பட்ட இழி பிரசாரத்திற்கும் அளவே இல்லை.

இவ்வளவும் போதாமல் நம்மைக் கொன்று விடுவதாகவும், குத்தி விடுவதாகவும், சுட்டு விடுவதாகவும், மற்றும் பலவிதமாய் அவமானப் படுத்துவதாகவும், கண்டு எழுதிய அநாமதேயக் கடிதங்களுக்கும், பொய்க் கையெழுத்திட்ட கடிதங்களுக்கும் கணக்கே இல்லை.

மற்றும் நமக்குள் இருந்த தொண்டர்களைக் கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும் அளவே இல்லை. இவ்வளவு தொல்லைகளையும் சங்கடங்களையும் தாண்டி இவ்வியக்கம் இன்றைய தினம் ஒருவாறு தமிழ் நாட்டில் உள்ள பொது மேடைகளை எல்லாம் கைப்பற்றி, தேசீயத் தலைவர்கள் என்பவர்களை எல்லாம் முக்காடிட்டு மூலையில் உட்கார வைத்தும் பெரிய பெரிய பண்டிதர்கள், சாஸ்திரிகள், சமயவாதிகள், சமயத் தலைவர்கள், சண்டப் பிரசண்டவாதிகள் என்பவர்களை எல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்கில்லாமல் செய்தும் விட்டதுடன், ஜாதி இறுமாப்பையும், சமய இறுமாப்பையும், பண்டித இறுமாப்பையும் கசகசவென்று நசுக்கிக் கொண்டு வருகின்றது.

இன்றைய தினம் தமிழ்நாட்டில் நமது இயக்கத்திற்கு விரோதமாக ஏதா வது ஒரு அரசியல் கட்சி என்பதற்குச் செல்வாக்கு கடுகளவாவது இருக்கின்றதா என்று யாராவது பரீட்சை பார்க்க விரும்பினால் இப்போது நாட்டில் நடந்து வரும் தேர்தல்களையும், அவற்றின் முடிவுகளையும் கவனித்துப் பார்த்தாலே போதுமானதாக இருக்கும்.

உதாரணமாக, சமீபத்தில் சென்னையில் நடந்த தேர்தல்கள் பெரிதும் “தேசீயத்திற்கும்” “ஆஸ்திகத்திற்கும்” நல்ல தோல்வியைக் கொடுத்து, “தேசத்துரோகத்திற்கும்” “நாஸ்திகத்திற்கும்” நல்ல வெற்றியைக் கொடுத்திருப்பதானது யாவரும் அறிந்ததாகும்.

அது மாத்திரமல்லாமல், தேசீயத்தின் பேராலும் ஆஸ்திகத்தின் பேராலும் தேர்தல்களுக்கு நிற்க ஆள்களே கிடைக்காமற் போனது. “நாஸ்திகத்தின்” செல்வாக்குக்கும் வெற்றிக்கும் ஒரு பரீட்சையாகும். “காங்கிரசே பெரிது” என்ற காங்கிரஸ் தலைவர் திரு. அய்யங்கார் தேர்தலைப் பற்றித்தான் ஒன்றுமே கவனிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டார். “தேசமே பெரிது” என்ற கட்சித் தலைவர், வேலை போன திரு.வெங்கிட்டராம சாஸ்திரியார், வேலை போன மந்திரிகள் ஆகியவர்கள் இருக்குமிடமே தெரியவில்லை.

உத்தியோகமே பெரிது என்று பின்பற்றுவோர் இல்லாத குட்டி தேசீயக் கட்சி ஸ்தாபகரும் தானே தலைவரு மான திரு.வரதராஜுலு, காங்கிரஸ் தோல்வியுற்ற சந்தோஷத்திலும் அய்யங்கார் மூலையில் அடங்கிய சந்தோஷத்திலும் மூழ்கிக் கிடக்கின்றாரே அல்லாமல், தன்னைப் பற்றி நினைக்கவோ, உலகம் என்ன பேசிக் கொள்ளுகின்றது என்பதைக் கேட்கவோ, நாட்டில் தனது நிலைமை என்ன என்பதை பார்க்கவோ, தனது கட்சியின் யோக்கியதை என்ன என்பதைப் பற்றி கவனிக்கவோ, சிறிதும் நேரமில்லாமல் இருக்கின்றார்.

மற்றும் “சைவ சமயமே பிரதானம், சமய ஆச்சாரிகளே தனது உயிர் என்ற திரு.கல்யாண சுந்தர முதலியார் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களிடம் சென்று சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்தால் உங்களுக்கு ஓட்டு கிடைக்காது என்று மிரட்டுவதும் ஜஸ்டிஸ் கட்சிக்கு விரோதமாய் ஓட்டர்கள் வீட்டுக்கு இரகசியமாய் நடந்து “நாஸ்திகக் கட்சிக்கு ஓட்டுச் செய்யாதீர்கள்” என்று சொல்லி பார்ப்பனர்களுக்கு சில ஓட்டுகளை வாங்கிக் கொடுத்துவிட்டதுடன் அவர் வேலை முடிந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்.

மற்றபடி ஆஸ்திகக் கூலிகளோ வாங்கின பணம் சரிவர ஜீரணமாயிற்றா இல்லையா என்பதைக் கூட கவனிக்காமல் இனியும், பணம் பணம் என்று கூவிக்கொண்டு கொடுக்கின்றாயா அல்லது எதிர்க்கட்சியில் சேர்ந்து கொள்ளட்டுமா என்று திரு.ஐயங்காரை மிரட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.

எனவே இந்த நிலையில் இன்றைய தினம் நமது நாட்டில் சுயமரியாதை இயக்கமும் அதன் எதிர்ப்புகளும் இந்நிலையில் இருந்து வருவது ஒரு புறமிருந்தாலும், அவ்வியக்கத்தின் உண்மையான கொள்கைகள்தான் என்ன என்பதைப் பற்றிச் சற்று கவனிப்போம்.

சுய மரியாதை இயக்கம் அரசியலில் பிற்போக்காய் இருக்கின்றது, மற்றபடி சமூக சீர்திருத்தத் துறையில் எல்லாம் சரி என்று பார்ப்பனரல்லாத தேசீயவாதிகள் என்பவர்கள பலர் நமக்கு எழுதியிருக்கின்றார்கள்.

அதாவது, அரசியலில் சைமன் கமிஷனை பகிஷ்கரிக்காததும், சட்டசபையில் ஒத்துழைப்பதும் அரசியலுக்கு விரோதம் என்பது அவர்கள் கருத்து. ஆனால் இப்போது சைமன் கமிஷனை பகிஷ்கரித்தது பைத்தியக்காரத்தனம் என்று அவர்களுக்கே தோன்றிவிட்டதைப் பார்த்தால் சுயமரியாதை இயக்கம் எவ்வளவு தீர்க்க தரிசனமுள்ளது என்பது விளங்கும்.

அதாவது காங்கிரசைச் சார்ந்த திரு.ஆர்.கே.ஷண்முகம் எம்.எல்.ஏ., அவர்களும், சுயாட்சி சங்கத்தைச் சார்ந்த டாக்டர் பெசண்ட் அம்மை அவர்களும், நமது குறைகளை பார்லிமெண்டு முன்பாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்றும் பார்லிமெண்டை நம்ப வேண்டுமென்றும், அதைப் பகிஷ்கரிக்கக் கூடாதென்றும் சொல்லி விட்டார்கள்.

இதை எந்த காங்கிரஸ்வாதியும், சுயாட்சிவாதியும், தேசீயவாதியும் நாளிதுவரை ஆட்சேபிக்கவில்லை. தவிர, காங்கிரஸ்காரர்களும் இவ்வரு ஷத்திய காங்கிரஸ் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் சீமைக்குப் போய் பார்லிமெண்டாரிடம் நமது குறைகளை எடுத்துச் சொல்லிவாதம் செய்து அவர்களிடம் சுயராஜ்ஜியம் பெறத் தகுதியுடையவர்களையே தேர்ந்தெடுக்க வேண்டுமென்றும் பேசி இருக்கின்றார்கள்.

இதையும் எந்த பகிஷ்கார வாதியும் இதுவரை ஆட்சேபிக்கவே இல்லை. எனவே, பார்லிமெண்டிடம் நமது கட்சியையோ குறைகளையோ சொல்லிக் கொள்ள நமக்கு இஷ்டம் இருக்கும்போது, சீமைக்குச் சென்று பார்லிமெண்டிடம் போகச் சௌகரியமும் சக்தியும் இல்லாத ஜனங்கள் பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்டு இவ்விடத்திற்கு அனுப்பி இருக்கும் பார்லிமெண்டு பிரதிநிதிகளிடம் நமது கட்சியையோ, குறைகளையோ எடுத்துச் சொன்னதில் தேசீயத்திற்கோ, தேசீய சுயமரியாதைக்கோ என்ன கெடுதி நேர்ந்துவிட்டது என்று கேட்கின்றோம்.

அடுத்தாற்போல் சர்க்காரோடு ஒத்துழைப்பதாகச் சொல்லுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா என்று பார்ப்போம். முதலாவது, இப்போது ஒத்துழையாமை என்பது எவ்வித தேசீயத் திட்டத்திலும் இல்லவே இல்லை.

சட்ட சபையில் ஏதாவது செய்வதற்கு இடமிருப்பதாகச் சொன்னாலும் அதுவும் ஓட்டர்களை ஏமாற்றுவதற்கு மாத்திரம் தான் சொல்லி கொள்ள முடியுமே ஒழிய மற்றபடி சட்டசபைக்குள் புகுந்துவிட்டால் எந்த விதத்திலும் ஒத்துழையாமையோ, முட்டுக் கட்டையோ சிறிதும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம்.

ஏனெனில் சட்டசபைக்குப் போனவர்களுக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்நிபந்தனைப் படி அவர்கள் கண்டிப்பாய் இருக்க வேண்டியவர்களாயிருக்கும்போது அங்கு எவ்விதத்தில் ஒத்துழையாமை செய்ய முடியும்? நமக்கு வேண்டிய எவ்வித அரசியல் சட்டங்களும், சமூக சீர்திருத்தச் சட்டங்களும், சமத்துவ சட்டங்களும் சட்டசபைகளின் மூலம் தான் செய்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டியிருக்கின்றது.

அப்போது சர்க்காரிடம் போகாவிட்டால், சர்க்கார் சம்மதமில்லாவிட்டால் எப்படி சட்டங்கள் செய்து அவைகளை அமுலுக்குக் கொண்டு வரமுடியும்? அன்றியும், சர்க்காரால் செய்யப்பட்டிருக்கும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் தயவை எதிர்ப்பார்ப்பதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளாமல் இருக்கச் சட்டசபையில் எப்பேர்ப்பட்ட தேசீய அமிதவாதிக்கும் சிறிதும் இடமே இல்லை.

இப்போதும் திரு.நேரு உட்பட ஒவ்வொரு தேசீயவாதியும் அப்படித்தான் நடந்து கொள்ளுகின்றார்கள். உதாரணமாக, இப்போது சர்க்கார் செய்யும் மதுவிலக்குப் பிரசாரத்தில் காங்கிரஸ் சட்டசபைக் கட்சித் தலைவர் திருவாளர்கள் சாமி. வெங்கடாசலம் செட்டியார், வெங்கிடபதிராஜு, நாகேஸ்வரராவ் பந்துலு ஆகியவர்களெல்லாம் சர்க்கார் நியமனம் பெற்றுச் சர்க்காருடன் ஒத்துழைத்துக் கொண்டுதான் வருகின்றார்கள்.

சென்னை மாகாண ஒத்துழையாமை தலைவர் என்பவர், அதாவது காந்தியார் கண்ணுக்கு இந்தியா முழுவதற்கும் ஒத்துழையாமை தத்துவத்தை உள்ளபடி உணர்ந்த ஒரே ஒரு உண்மை ஒத்துழையாதாராகத் தோன்றும் திரு.சி.ராஜ கோபாலாச்சாரியாரும், மதுவிலக்குப் பிரசாரம் சம்பந்தமாய் சர்க்கார் நியமனத்தைப் பெற்று சர்க்காருடன் ஒத்துழைக்க சம்மதித்திருக்கின்றார்.

எனவே, இனி யார் எவ்விதத்தில் சர்க்காரை பகிஷ்கரித்திருக்கின்றார்கள் என்பது விளங்கவில்லை. வேண்டுமானால், திரு.சத்தியமூர்த்தி போன்றவர்கள், குடிகாரர், வெறிகாரர்போல் காலித்தனமாய் சட்டசபை பார்ப்பனரல்லாத அங்கத்தினர்களையும், மந்திரிகளையும், நிர்வாகசபை அங்கத்தினர்களையும் வைதுவிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாம்.

ஆகவே, இவ்வித நிலைமையில் பகிஷ்காரத்திற்கும் ஒத்துழையாமைக்கும் என்ன அர்த்தம் என்பது விளங்காதவர்களோ, அல்லது வேண்டும் என்றே பாமர மக்களை ஏமாற்ற வேண்டுமென்பவர்களோதான் சுயமரியாதை இயக்கம் அரசியலில் பிற்போக்கானதென்றோ, தேசீயத்திற்கு விரோதமான தென்றோ சர்க்காருடன் ஒத்துழைக்கின்றதென்றோ சொல்லிக் கொள்ள முடியுமே தவிர, மற்றபடி அறிஞர்களும் யோக்கியர்களும் ஒருக்காலும் சொல்ல முடியாது என்று உறுதி யாய்ச் சொல்லுவோம்.

அடுத்தாப்போல் சுயமரியாதை இயக்கம் தேசீயத் திட்டம் என்னும் நேரு திட்டத்தை ஏற்றுக் கொள்ளாதது ஒரு பெரிய காங்கிரஸ் துரோகம் என்று யாராவது சொல்ல வரலாம்.

ஆனால் நேரு திட்ட மானது இதுபோது இந்தியாவில் அழுவாரற்ற பிணமாய் அழுகி நாறிக் கிடப்பதை யாரே மறுக்கவல்லார். அதன் நாற்றம் இந்தியா மாத்திரமல்லாமல் இங்கிலாந்திலும் நாறுவதும், வெள்ளையர்கள் இந்த நாற்றம் பொறுக்க மாட்டாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு இந்தியாவைப் பற்றி நினைப்பதும் இரகசியமா என்று கேட்கின்றோம்.

நேரு திட்டத்திற்கு அதை ஆட்சேபிக்கும் விரோதிகள் யார் யார் என்று எண்ணுவதை விட, அதை ஆதரிக்கும் அனுகூலமானவர்கள் யார் என்று எண்ணுவதே சுருக்கமான வேலை என்போம்.

ஏனெனில் அதை அப்படியே ஒப்புக் கொள்ளுகின்ற கட்சியோ, மதமோ, வகுப்போ எது என்று பார்த்தால் ஒரு சுண்டுவிரலை மடக்குவதற்குக் கூட ஒன்றையும் காணவே முடியவில்லை.

இந்து மகாசபை, முஸ்லீம் சபை, கிறிஸ்தவ சபை ஆகிய மத சபைகள் தீண்டப்படாதார் முதலியவர்கள் என்கின்ற சமூக சபைகள் ஆகிய எல்லாம் ஆதி முதலிலிருந்தே ஆட்சேபித்துக் கொண்டிருக்கின்றன.

இந்துக்கள் என்பவர்களுக்குள் பார்ப்பன சமூகசபை, பார்ப்பனரல்லாத சமூக சபை ஆகியவைகளும் எதிர்க்கின்றன.

எனவே, நேரு திட்ட விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்தின் மீது பழி சுமத்த ஏதாவது இடமிருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.

அதுபோலவே சமய சமூக விஷயங்களிலும் சுயமரியாதை இயக்கம் எந்த விதத்தில் நாத்திகமும் சமூகக் கட்டுப்பாட்டிற்கு விரோதமானதென்பது அடுத்தாப் போல் யோசிக்க வேண்டிய விஷயமாகும்.

சுயமரியாதை இயக்கத்தின் சமய சமூக விஷயமான கொள்கைகள் என்ன என்பதற்கு செங்கற்பட்டில் கூடிய முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டில் செய்த தீர்மானங்களே போதிய அத்தாட்சியாகும். அதைக் கொண்டேதான் தேசீயவாதிகள், மத வாதிகள் என்பவர்களும் கூட்டம் போட்டு பேசிவருகின்றார்கள். ஆகவே அதைப் பற்றி சிறிது யோசிப்போம்.

1. செங்கற்பட்டு தீர்மானங்கள் என்னவென்று பார்ப்போமானால் அவைகளில் மக்கள் பிறவியில் சாதிபேதம் கிடையாது என்பது.

2. சாதி பேதம் கற்பிக்கும் மதம், வேதம், சாத்திரம், புராணம் முதலியவைகளைப் பின்பற்றக் கூடாது என்பது.

3. வருணாச்சிரமப் பிரிவுப்படி பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர், பஞ்சமர் என்கின்ற பிரிவுகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பது.

4. மக்களுக்குள் தீண்டாமை என்பதை ஒழித்து பொதுக்குளம், கிணறு, பாடசாலை, சத்திரம், தெருவு, கோயில் முதலியவைகளில் பொது ஜனங்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டும் என்பது.

5. இவை பிரசாரத்தால் நிறைவேற்றிவைக்க முடியாதபடி சில சுயநலக் கூட்டத்தார் தடை செய்வதால் சர்க்கார் மூலம் சட்டம் செய்து, அச்சட்டத்தின் மூலம் அமுலில் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும் என்பது,

6.ஜாதிமத வித்தியாசங்களால் மக்களின் ஒற்றுமையும் பொது நன்மை உணர்ச்சியும் பாதிக்கப்படுவதால் அதை உத்தேசித்து சாதிமத வித்தியாசத்தைக் காட்டும் பட்டம், குறி முதலியவைகளை உபயோகிக் காமலிருக்க மக்களைக் கேட்டுக் கொள்ளுகின்றது என்பது,

7. பெண்கள் விஷயத்தில் பெண்கள் கலியாண வயது 16-க்கு மேல் இருக்க வேண்டும், மனைவிக்கும் புருடனுக்கும் ஒற்றுமையின் றேல் பிரிந்து கொள்ள உரிமை வேண்டும். விதவைகள் மறுவிவாகம் செய்து கொள்ள வேண்டும். கலப்பு மணம் செய்து கொள்ளலாம். ஆண் பெண் தாங்களே ஒருவரை ஒருவர் தெரிந்தெடுத்துக் கொள்ள லாம் என்பது.

8. சடங்குகள் விஷயத்தில் கலியாணம் முதலிய சடங்குகள் சுருக்கமாகவும், அதிக செலவில்லாமலும், ஒரே நாள் சாவகாசத்திற்கு மேற்படாமலும், ஒரு விருந்துக்கு மேற்படாமலும் செய்ய வேண்டும் என்பது.

9. கோயில் பூசை விஷயத்தில் கோவில்களின் சாமிக்கென்றும் பூசைக்கென்றும் வீணாகக் காசைச் செலவழிக்கக் கூடாது. சாமிக்கும் மனிதனுக்கும் மத்தியில் தரகனாவது மொழி பெயர்ப்பாளனாவது கூடாது.

புதிதாகக் கோவில் கட்டுவதில் பணத்தைச் செலவழிக்கக் கூடாது. கோவிலுக்கும் சத்திரத்திற்கும் வேதம் படிப்பதற்கு என்று விட்டிருக்கும் ஏராளமான சொத்துக்களை கல்வி ஆராய்ச்சி கைத் தொழில் கற்றுக் கொடுத்தல் முதலாகிய காரியங்களுக்கு செலவழிக்க முயற்சி செய்யும்படி கேட்டுக் கொள்ளுவது.

உற்சவங்களில் செலவழிக்கப்படும் பணத்தையும், நேரத்தை யும் அறிவு வளர்ச்சி, சுகாதார உணர்ச்சி, பொருளாதார உணர்ச்சி ஆகியவைகளுக்கு உபயோகமாகும்படியான கட்சி, பொருட்காட்சி ஆகியவைகளில் செலவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுவது என்பது.

10. மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பது; அதற்கு விரோத மான புத்தகம், உபாத்தியாயர் ஆகியவர்களை பஹிஷ்கரிப்பது என்பது.

11. பெண் உரிமை விஷயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பது; உத்தியோக உரிமை அளிப்பது; உபாத்தியாயர் வேலை முழுதும் அவர்களுக்கே கிடைக்கும்படி பார்ப்பது என்பது.

12.“தீண்டப்படாதார்” விஷயத்தில், “தீண்டப்படாதவர்” களுக்கு உண்டி, உடை, புத்தகம் ஆகியவைகளைக் கொடுத்து கல்வி கற்பிப்பது; தர்க்காஸ்து நிலங்களை அவர்களுக்கே கொடுப்பது என்பது.

13. பார்ப்பனரல்லாத இளைஞர்களுக்கு கல்வி விஷயத்தில் இருக்கும் கஷ்டங்களையும், தடைகளையும் நீக்க ஏற்பாடு செய்வது என்பது.

14. கல்வி விஷயத்தில் தாய் பாஷை, அரசாங்க பாஷை ஆகிய இரண்டைத் தவிர மற்ற கல்விக்குப் பொதுப் பணத்தை செலவிடக் கூடாது. அதுவும், ஆரம்பக் கல்விக்கு மாத்திரம் பொது நிதியை செலவழித்து கட்டாயமாய் கற்பிக்க வேண்டும். உயர்தரக் கல்விக்கு பொது நிதி சிறிதும் செலவழிக்கக் கூடாது. சர்க்கார் காரியத்திற்கு தேவை இருந்தால் வகுப்புப் பிரிவுப்படி மாணாக்கர்களை தெரிந் தெடுத்து படிப்பிக்க வேண்டுமென்பது.

15. சிற்றுண்டி ஓட்டல் முதலிய இடங்களில் வித்தியாசம் கூடாது என்பவைகளாகும்.

மேலும் இவைகளும் அநேகமாக சிபார்சு செய்வது, கேட்டுக் கொள்ளுவது, முயற்சிக்க வேண்டியது என்கின்ற அளவில் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றதே அல்லாமல் திடீரென்று நிர்ப்பந்தமாய் தீர்மானிக்கப் படவில்லை. எனவே, இவற்றுள் எவை எவை நாத்திகம் என்றும், எவை எவை அந்நிய சர்க்காரை ஆதரிப்பது என்றும் எவை எவை தேசீயத்திற்கும், காங்கிர சிற்கும் விரோதமானவை என்றும் எந்த யோக்கியமான தேசீயவாதியோ, அல்லது ஆத்திகவாதியோ, வீரத்துடன் வெளிவரட்டும் என்றுதான் அறை கூவி அழைக்கின்றோம்.

உண்மை விஷயங்களைச் சொல்லாமல் பொதுப்பட சுயநலப்பார்ப்பனர்கள் சொல்லிக் கொடுத்தபடி கிளிப்பிள்ளையைப் போலும் பிறவி அடிமையைப் போலும், கூப்பாடு போடுவதனாலேயே சுயமரியாதை இயக்கத்தின் எதிர்ப்பு கோழைத் தன்மை உடையது என்றும், சுயநலமும் கூலித் தன்மையும் கொண்ட இழிதகைமையது என்றும் அறிவினர்க்கு தெற்றென விளங்கவில்லையா என்று கேட்கின்றோம்.

எது எப்படி இருந்த போதிலும் விதவை மணம், கலப்பு மணம், கல்யாண ரத்து, தக்கவயது மணம், பட்டம் குறிவிடுதல், பெண் கல்வி, தீண்டாமை விலக்கல், சுருக்கக் கல்யாணம், வகுப்பு உரிமை, மூடப்பழக்கங்கள் ஒழிதல், கோவில் கட்டுவதையும் உற்சவங்கள் செய்வதையும் நிறுத்தி அந்தப் பணத்தை கல்விக்கும் ஒழுக்கத்திற்கும் செலவிடுதல் முதலாகிய காரியங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பலனாய் சமீப காலத்திற்குள் எவ்வளவு தூரம் காரியத்தில் பரவி வந்திருக்கின்றது, வருகின்றது என்பதும், இவ்விஷயங்களில் பொதுமக்களுக்கு எவ்வளவு தூரம் மனம் மாறுதல் சமீப காலத்தில் ஏற்பட்டிருக்கின்றது என்ப தும்; இவைகளுக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள் எவ்வளவு தூரம் தானாகவே அழிந்துபட்டு வருகின்றது என்பதும் பொது வாழ்க்கையைக் கவனித்து வருபவர்களுக்கு நாம் எடுத்துச் சொல்லாமலே விளங்கிவருகின்றது.

அன்றியும் இவ்வியக்கத்திற்கும் கொள்கைகளுக்கும் நாட்டில் இருக்கும் ஆதரவை பரீட்சிப்பதற்கும் இவ்வியக்க சம்பந்தமான பத்திரிகைகள் வளர்ச்சியையும், ஜில்லாக்கள் தோறும் தாலூக்காக்கள் தோறும் நடைபெறும் மகாநாடுகளும், அங்கு கூடும் கூட்டங்களும், அக்கூட்டங்களுக்கு வரும் மக்களின் யோக்கியதைகளும், அவற்றில் ஏகமனதாய் நிறைவேறும் தீர்மானங்களும் ஆகியவற்றையும் இவைகளுக்கு எதிரிடையாய் இருக்கும் கட்சிகளுடைய, கூட்டங்களுடைய, தீர்மானங்களுடைய, அதிலிருக்கும் மக்கள்களுடைய யோக்கியதைகளையும், நிலைமைகளையும் கவனித்து நடுநிலையிலிருந்து சீர்தூக்கிப் பார்த்தால் எது மதிக்கப்படுகின்ற தென்பதைச் சிறு குழந்தையும் அறிய முடியும்.

நிற்க, தற்போது உலகத்தில் முன்னேறிவரும் எந்த தேசத்திலாவது மேலே குறிப்பிட்ட கொள்கைகள் இல்லாமல் இருக்கின்றதா? யாராவது சொல்ல முடியுமா? அன்றியும் மேற்கண்ட கொள்கைகள் நமது நாட்டில் இதற்கு முன் பல பெரியார்களாலும் சீர்திருத்தக்காரர்களாலும் சொல்லப்பட்டும், உபதேசம் செய்யப்பட்டும் வந்தது தானா, அல்லது நம்மால் மாத்திரம் இப்போது புதிதாய் சொல்லப்படுவதா என்றும் கேட்கின்றோம்.

பொதுவாக இப்போது புதிதாக உள்ள வித்தியாசமெல்லாம் முன்னுள்ளவர்கள் வாயினால் சொன்னார்கள்; புத்தகங்களில் எழுதினார்கள். ஆனால், நாம் இப்போது அவைகளைக் காரியத்தில் கொண்டு வர முயற்சிக்கின்றோம். நம்முடைய ஆயுளிலேயே இவைகள் முழுவதும் அமுலில் நடைபெற வேண்டுமென்று உழைக்கின்றோம்.

அவற்றுள் சிறிது பாகமாவது நடைமுறையில் காணப்படுகின்றது. இவைகளைத் தவிர வேறு எவ்வித வித்தியாசங்கள் சொல்லக் கூடும் என்று கேட்கின்றோம். ஆகவே, பொது ஜனங்கள் தயவு செய்து இவைகளை எல்லாம் நன்றாய் கவனித்து, தங்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்த்து, இதன் குணதோஷங்களை உணர்ந்து, ஒரு முடிவுக்கு வரவேண்டுமாயும், வந்த முடிவை காலந்தாழ்த்தாமல் அமுலுக்குக் கொண்டு வர வேண்டுமாயும் ஆசைப்படுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 25.08.1929)