இரண்டு மூன்று மாத காலமாய் தென்னிந்தியா முழுவதும் ஒரே பேச்சாயிருந்த முதலாவது சுயமரியாதை மாகாண மகாநாடு செங்கற்பட்டில் இம்மாதம் 17,18ஆம் தேதிகளில் வெகுவிமரிசையாகவும் மிக்க ஆடம்பர மாகவும் கூடி பல தீர்மானங்களை நிறைவேற்றிவிட்டு கலைந்துவிட்டது. வெகு சொற்ப நாட்களுக்குள்ளாகவே செங்கல்பட்டில் இந்த மாகாண மகாநாடு நடத்த தீர்மானித்ததால் போதுமான சாவகாசமில்லாதிருந்தும்கூட செங்கற்பட்டு ஜில்லா போர்டு தலைவர் ராவ்பகதூர் கே.கிருஷ்ணசாமி யவர்கள் முயற்சியாலும் செங்கற்பட்டு சேர்மன் திரு.வேதாசலனாரவர்கள் ஊக்கத்தாலும் செங்கற்பட்டு பிரபுவும் ஜமீன்தாரருமான அப்பாசாமி வள்ளலாரின் வள்ளல் தன்மையாலும் ‘திராவிடன்’ பத்திராதிபர் திரு. கண்ணப்பரின் இடையறா உழைப்பாலும் மற்றும் அநேக கனதனவான்களின் உதவியாலும் தென்னிந்தியாவில் இதுவரை எங்கும் நடந்திராத மகாநாடு போல் இம்மகாநாடு நடந்தேறிவிட்டதும் மகாநாட்டின் பிரதிநிதிகளிலும் இதுவரை எந்த மகாநாட்டிலும் கூடாதமாதிரி எல்லா தரத்தவர்களும் ஏராளமாக வந்து கூடியிருந்ததும் குறிப்பிடத்தக்கதேயாகும்.

PERIYAR 350முதலாவதாக வைதீகர்கள் கூட்டமும் இரண்டாவதாக பண்டிதர்கள் கூட்டமும் மூன்றாவதாக ராஜாக்கள், மந்திரிகள், ஜமீன்தார்கள், உத்தியோ கஸ்தர்கள், ஆங்கிலம் படித்தவர்கள், செல்வந்தர்கள், மிராசுதாரர்கள், வியாபாரிகள் முதலியவர்களின் கூட்டமும் எதிர்பாராத அளவில் விஜயம் செய்திருந்தது மிகவும் குறிப்பிடத்தகுந்ததாகும். மற்றபடி பெண்மணிகள், தொழிலாளர்கள், ஏழைமக்கள், தாழ்த்தப்பட்டவர்கள், கொடுமை செய்யப்பட்டவர்கள் ஆகியவர்கள் மற்ற எல்லாரையும் விட அதிகமாகக் கூடியிருந்ததாலும் அவர்களே மகாநாட்டுக்குச் சொந்தக்காரர்களானதினால் அவர்கள் வந்திருந்ததில் நாம் ஒன்றும் அதிசயப்படுவதற்கில்லை. எனவே இம்மாதிரி குறிப்பிடத்தகுந்த அளவு மகாநாட்டின் பெருமைகள் ஒரு புறமிருக்க மகாநாட்டின் தீர்மானங்களைப் பற்றிச் சிறிது கவனிப்போம்.

இம்மகாநாட்டில் சுமார் இருபது தீர்மானங்கள் வரை நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. அவைகளில் சைமன் கமிஷன் பகிஷ்காரம் கூடாது என்றும் நேரு கமிட்டி ரிப்போர்ட்டை பகிஷ்கரிக்க வேண்டும் என்றும் செய்யப்பட்ட தீர்மானங்களைப் பற்றி அரசியல் துறையில் இருப்பவர்கள் என்பவர்களில் ஒரு சிறு சாரருக்கு அபிப்ராய பேதமிருக்கலாம். அதற்கு நம்முடைய சமாதானம் என்ன வென்றால், முதலாவதாக நமது சுயமரியாதை இயக்கத்தில் அரசியல் நிர்வாக சம்மந்தமான சீர்திருத்த விஷயங்களைப் பற்றிய பேச்சுக்களுக்கு இடமில்லை என்பது யாவரும் அறிந்ததேயாகும். ஆனால் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் திட்டங்களும் நிறை வேற்றப்படும்போது ஜனங்களின் உதவியை எப்படி எதிர்பார்க்க வேண்டி யிருக்கின்றதோ அதுபோலவே அரசாங்க உதவியையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. ஆதலால் அந்த அளவுக்கு அரசியல் தீர்மானம் இருந்துதான் தீர வேண்டியிருக்கின்றது. இன்றைக்கும் சுயமரியா தைக் கொள்கைகளில் அநேக விஷயங்களை நிறைவேற்ற வொட்டாமல் செய்ய நமது எதிரிகள் அரசாங்கத்தின் துணையை எதிர்பார்க்கின்றதை நாம் பார்க்கின்றோம். அநேக விஷயங்கள் அரசாங்க சட்டத்தின் மூலம் செய்யப் படவேண்டியிருக்கின்றதையும் உணர்ந்து அவைகளுக்கு சட்டசபைகளின் மூலம் சட்டம் செய்ய முயன்று கொண்டுமிருக்கின்றோம்.

உதாரணமாக, ஆண்களுக்கொரு சட்டம், பெண்களுக்கொரு சட்டம் என்பதாகவும், பார்ப்பனருக்கொரு சட்டம், பார்ப்பனரல்லாதாருக்கொரு சட்டம் என்பதாகவும் உயர்ந்த சாதி என்பவர்களுக்கொரு சட்டம், தாழ்ந்த சாதி (தீண்டப்படாதவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள்) என்பவர் களுக்கொரு சட்டம் என்பதாகவும் இருந்து வருவதையும் அவற்றை நாம் தினமும் அனுபவித்து வருவதையும் மாற்றி எல்லோருக்கும் சமமான நீதி ஏற்படுத்த வேண்டுமானால், நமக்குள்ளாகவே நாம் செய்து கொள்ளும் படியாக எந்தக்காரியம் செய்தாலும் சரி, எந்தத் தீர்மானம் செய்தாலும் சரி, அவைகளினால் நமது லட்சியத்தை நிறைவேற்ற முடிவதில்லை என்பதும், அவைகளுக்குக் கண்டிப்பாய் அரசாங்கத்தின் மூலம் பழய சட்டங்களை மாற்றி புதிய சட்டங்கள் செய்தே தீரவேண்டும் என்பதும் யாராலும் மறுக்கப் படமுடியாத உண்மைகளாகும். அல்லாமலும், அவைகளில் அநேகவற்றிற்கு சட்டம் செய்யக் கூட நம்மவர்கள் ஏகமனதாய் ஒப்புக் கொள்வதாயிருந் தாலும்கூட முதலில் அரசாங்க அனுமதியையும் பெற வேண்டியதான நிபந்தனைகளும் இருக்கின்றன.

இஃதொருபுறமிருக்க, அரசாங்கம் எல்லா மக்களுக்கும் பொதுச் சொத்து என்பதையும் அரசாங்க உத்தியோகங்களும் பதவிகளும் எல்லோ ருக்கும் பொதுச் சொத்து என்பதையும் அதுபோலவே அரசாங்க வரிப் பணமும் எல்லா மக்களுக்கும் பொதுச் சொத்து என்பதையும் யாராவது மறுக்க முடியுமா? அது போலவே அப்பணத்திலிருந்து செலவு செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் எல்லாருக்கும் பொது என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். எனவே அப்பொதுக் காரியங்கள் உரிமைகள் எல்லாருக்கும் சமமாய் அனுபவிக்க சம சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டு மல்லவா. ஆதலால் இதற்கு நாம் அரசாங்க உதவி எதிர்பார்க்காமலிருக்க முடியுமா? என்பதை யோசித்துப் பார்க்க விரும்புகின்றோம்.

உயர்ந்த பதவியில் இருப்பவர்களுக்கும் பொது உரிமைகளில் அதிகமான பங்கை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும் மற்றவர் களை முன்னேறவிடாமல் தடுத்து சூழ்ச்சி செய்து முன்னணியில் இருந்து கொண்டிருப்பவர்களுக்கு மாத்திரம் இக்காரியங்களுக்காக அரசாங்கத்தை எதிர்பார்ப்பது என்பது ஒரு சமயம் தங்களது சுயமரியாதைக்குப் பங்கமா யிருப்பதாகக் காணப்படலாமே ஒழிய வெகுகுறைந்த உரிமைகளை அனுபவிப்பவர்களுக்கும் வெகு தாழ்ந்த பதவியில் தாழ்த்தப்பட்டிருப் பவர்களுக்கும் தங்கள் பதவிகளைக் கேட்பதும் விடுதலை பெறமுயற்சிப் பதும் ஒருக்காலும் அவர்களது சுயமரியாதைத் தத்துவத்திற்கு விரோதமானது என்று எவரும் சொல்ல முடியாதென்றே கூறுவோம்.

ஆதலால் இந்தமுறையில் சைமன் கமிஷனிடம் கொடுமைப்படுத்தப் பட்டவர்களும் பிறரால் ஏமாற்றப்பட்டுப் பின்னணியில் தள்ளப்பட்டவர் களும் தங்கள் கஷ்டங்களையும் தேவைகளையும் அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவது என்கின்ற முறையில் கமீஷனிடம் எடுத்துச் சொல்வதிலும் சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் ஏற்படுவதற்கு மார்க்க மில்லாத நேரு திட்டம் என்னும் அரசியல் திட்டத்தை சம சுதந்திரமும் சம சந்தர்ப்பமும் இதுவரை அனுபவியாத மக்கள் ஒப்புக் கொள்வதில்லை என்பதிலும் குற்றமொன்றுமில்லையென்றே சொல்லுவோம். ஆகவே இவை அரசியல் நிர்வாக விஷயத்தைச் சேர்ந்த தல்லவென்றும் ஒருசமயம் இவை அரசியல் நிர்வாக விஷயத்தைச் சேர்ந்தவைதான் என்று சொல்லப் படுவதா னாலும், அவை உண்மையான சுயமரியாதைத் தத்துவத்திற்கு தள்ளப்பட முடியாத விஷயமேயாகும் என்றும் சொல்லுவோம்.

நிற்க, மக்கள் பிறவியில் ஜாதி வித்தியாச உயர்வு தாழ்வு கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டுமென்பது. இது இந்நாட்டு மக்களில் பல துறைகளில் உள்ள எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படுவதானாலும் அதற்கு விரோத மாயுள்ள ஆதார விஷயங்களில் உள்ள பிடிப்பை விட்டுவிட அநேகர் சம்மதியாமல் இருப்பதையும், மற்றொரு புறம் அக்கொடுமைகள் நிலைத் திருக்க மதத்தின் பேரால் மகாநாடுகளும் பிரசாரங்களும் அரசாங்கத்தினிடம் தூதுகளும் நடைபெறுவதையும் பார்க்கும்போது நம் நாடு சுலபத்தில் அக்கொடுமைகளை ஒழிக்கத் தயாரில்லை என்பதும் உயர்வு தாழ்வுக் கொடுமையின் அஸ்திவாரம் இன்னதென்று பலருக்குப் புலப்படவில்லை என்பதுமே விளங்குகின்றது. அதுபோலவே வர்ணாசிரமப் பிரிவுப் பாகு பாடுகள் விஷயத்திலும் தேசாபிமானி, மகாத்மா, சீர்திருத்தக்காரர் என்பவர்கள் முதல் கொண்டு அவற்றை ஆதரிப்பதும் அதற்காதாரமான மதம், வேதம் முதலியவற்றைப் பற்றிப் பிரசாரம் செய்வதும், அவற்றிற்கு வேறு வியாக்கியானங்கள் செய்வதுமான நிலையிலேயே இன்னும் இருப்பதை சற்று கூர்ந்து பார்த்தால் இது சம்மந்தமாக மகாநாட்டில் செய்யப்பட்ட தீர்மானங் களின் அவசியம் யாவருக்கும் நன்றாய் விளங்கும். நிற்க, அடுத்த படியாக,

வகுப்புப் பட்டங்களும் குறிகளும் விடப்படவேண்டும் என்னும் தீர்மானத்தின் அவசியமும் அதுபோலவேதான். எப்படியெனில் மக்களு டைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர்களது குணம், அறிவு, தன்மை முதலியவைகள் ஒன்றும் தெரியாமலே அவர்களை பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிந்தாலொழிய நமது நாட்டில் மக்கள் ஒன்று பட்டு ஒரே லக்ஷியத்திற்குழைத்து வாழ முடியாதாகையால் அவ்வித்தியாசங் களைக் காட்டும் பெயர்களும் குறிகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் விரும்பும் யாவராலும் ஒப்புக் கொள்ளப் படத்தக்கதேயாகும். மற்ற தீர்மானங்களைப் பற்றிய கருத்துகள் தொடரும்.

(குடி அரசு - தலையங்கம் - 24.02.1929)

ஓர் விஞ்ஞாபனம்

செங்கற்பட்டில் நடைபெற்ற முதலாவது மாகாண சுயமரியாதை மகாநாட்டின் தீர்மானப்படி, பெயர்களுக்குப் பின்னால் சேர்க்கப்படும் நாயக்கர், நாயுடு, செட்டியார், முதலியார் போன்ற ஜாதிப் பட்டப் பெயர்களையும், ராமம், விபூதி, பூணூல் முதலிய மதச் சின்னங்களையும் நீக்கி விட்டவர்களின் ஜாபிதாவையும் இனி “குடி அரசு”ப் பத்திரிகையில் வெளியிட உத்தேசித்திருப்பதால் ஜாதிப் பட்டங்களை நீக்கி விட்டவர்களும், மதக்குறியை விட்டவர்களும், தம் தம் விலாசத்தை அவ்வப்போது தெரியப்படுத்தினால் பிரசுரிப்பதற்கு மிகவும் உபகாரமாயிருக்கும் என்று தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

நிற்க, இனி எமக்கு எழுதும் கடிதங்களிலும் எமது பெயரைக் குறிப்பிடும் சமயங்களிலும் எமது பெயருக்குப் பின்னால் நாயக்கர் என்று குறிப்பிடாமல் இருக்க வேண்டுகின்றோம்.

 ( ப - ர் .)

(குடி அரசு - அறிவிப்பு - 24.02.1929)