ராமனாதபுரம் ஜில்லா போர்டு பிரசிடெண்டாயிருந்த ராமனாதபுரம் ராஜா அவர்கள் காலமானதின் மூலம் இப்போது அந்த பிரசிடெண்ட் ஸ்தானம் காலியாக இருந்து வருகின்றது. சர்க்காரார் அந்த ஸ்தானத்தை பூர்த்தி செய்வதற்கு இதுவரை யாதொரு முடிவும் செய்திருப்பதாகத் தெரியவில்ல. ஆனாலும் அந்த ஸ்தானத்தை தேர்தலுக்கு (எலக்ஷனுக்கு) விட்டு விடலாமா அல்லது தாங்களே ஒருவரை பிரசிடெண்டாக நியமனம் ( நாமிநேஷன்) செய்து விடலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

periyar and sivajiதற்கால நிலைமையில் அதுவும் ராமனாதபுரம் ஜில்லாவைப் பொருத்தவரை அந்த ஸ்தானத்தை எலக்ஷனில் விடுவதைவிட நாமிநேஷனில் தக்க ஒருவரை நியமனம் செய்வதே யோக்கியமும் அறிவுடைமையுமான காரியம் என்று சர்க்காருக்கு யோசனை கூறுவோம். மதுரையில் சில பாகம், திருநெல்வேலி, இராமனாதபுரம் ஆகிய ஜில்லாக்களிலும் ஜாதிக் கர்வமும், ஜாதிக் கொடுமையும் தலைசிறந்து விளங்குவது யாவரும் அறிந்த ஒன்றாகும். உதாரணமாகப் பார்ப்பனர்களின் கொடுமையோ சொல்லித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. அதற்கடுத்ததான தெற்கத்திய சைவ வேளாள சமூகத்தாரின் கொடுமையோ பார்ப்பனரல்லாதார் சமூகமே வெட்கப்படத் தக்கதாகும். இவ்விரு சமூகக் கொடுமைகளுக்கும் மத்தியில் அங்குள்ள மற்ற வகுப்பார்கள் படும் கஷ்டம் நினைக்க முடியாததென்றே சொல்லுவோம்.

சாதாரணமாக சென்னை மாகாணத்தில் வேறு எங்குமே இல்லாத கொடுமைகள் பல மேல்கண்ட ஜில்லாக்களில் தாண்டவமாடிக் கொண்டு வருகின்றன.

திருச்செந்தூரில் இருக்கின்ற ஒரு சைவக் கோவிலில் வைசியர்கள் என்கின்ற வாணியச் செட்டியார் சகோதரர்களுக்கு உள்ளே செல்ல உரிமை இல்லை. அதுபோலவே மதுரை, ராமேஸ்வரம் முதலிய அனேக கோவில்களில் க்ஷத்திரியர்கள் என்கின்ற நாடார் சகோதரர்கள் பிரவேசிக்க உரிமை இல்லை. ஆனால் பக்கத்து ஊர்களாகிய பழனி முதலிய இடங்களில் கோவிலுக்குள் செல்ல அவர்களுக்கு உரிமை உண்டு.

இதுமாத்திரமல்ல. இச்சில்லாக்களில் உள்ள அனேக தெருக்களில் நடக்கக்கூட சில ஜனங்களுக்கு உரிமை தடுக்கப் பட்டிருக்கின்றது. ஏதோ இரண்டொரு பார்ப்பனரோ, சைவ வேளாளரோ சில நாடார் சகோதரர்களிடமும் வாணியச் சகோதரர்களிடமும் மற்றும் சிலருடனும் அளவளாவுதாலோ, குடித்தல், உண்ணல் வைத்துக் கொண்டிருப்பதாலோ இக்கொடுமைகள் மறைந்து போனதாகச் சொல்லிவிட முடியாதென்றே சொல்லுவோம். வாணியச் சகோதரர்களுக்கும், நாடார் சகோதரர்களுக்கும் இக்கோவில் பிரவேசமும் தெருப் பிரவேசமும் கிடைத்து விட்டதினால் அவர்களுக்கு ஏதாவது பெரிய ஆதாயம் கிடைக்கும் என்பதாகக் கருதியோ அல்லது அவர்கள் இதை லக்ஷியம் செய்கின்றார்கள் என்றோ நாம் இதை இங்கு குறிப்பிடவில்லை.

மற்றபடி ஒரு பொது ஸ்தலமானது அந்நாட்டு மக்களுக்கே அதுவும் அறிவு, ஆற்றல், ஒழுக்கம், செல்வம், செல்வாக்கு, பரோபகாரம் முதலிய உயர் குணங்கள் ஒருங்கே அமையப் பெற்ற சகோதரர்களை மனித உரிமைக்கு அருகதை அற்றவர்கள் என்று சொல்வது எவ்வளவு கொடுமையானதாகவும், சகிக்க முடியாத இழிவை உண்டாக்குவதாகவும் இருக்கின்றது என்பதைக் காட்டவே இதைக் குறிப்பிடுகின்றோம்.

அன்றியும், இக்கொடுமைகள் கடவுளின் பேரால், மதத்தின் பேரால், தர்ம சாஸ்திரத்தின் பேரால் செய்யப்பட்டு வருவதுடன் அரசாங்க ஆட்சியின் பேராலும் சட்டங்களின் பேராலும் கோர்ட்டு தீர்ப்புகளின் பேராலும் நிலை நிறுத்தப்படுவதுமானால் இனி வேறு எந்த வழியில் இதிலிருந்து விலக முடியும் என்பதுதான் நமது கேள்வி.

இச்சமூக மக்களில் ஏதோ சில பேர் அறியமையாலோ, அயோக்கியத் தனத்தாலோ அல்லது தங்களுக்குள் உள்ள உள்மாச்சரியத்தாலோ சுயமரியாதையில் கவலையற்று உதைத்த காலுக்கு முத்தமிடுவதுபோல் இக் கொடுமைக்கும் இழிவுக்கும் அடிப்படையான கடவுளையும் மதத்தையும் சாஸ்திரத்தையும் கட்டிக் கொண்டு அழுவதுடன் அதைக் கற்பித்த பார்ப்பனர்களின் வாலைப் பிடித்து திரிவதுடன் இதைத் திருத்த முயலாத அரசியல் இயக்கத்துடனும் அரசாங்க முறையுடனும் ஒத்துழைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆயினும் இனியாவது இவற்றை ஒழிக்க முற்பட வேண்டியது அவசியமாகும்.

கொடுமைப் படுத்தப்பட்ட இச்சமூகத்தாருக்கு இதில் போதிய கவலை இன்னும் ஏற்படவில்லையே என்று யாராவது சொல்வதானாலும் அதை ஒரு சாக்காக வைத்துக் கொள்ளாமல் பொதுநலத்தை உத்தேசித்து நாட்டின் பொது சுயமரியாதையில் கவலையுள்ள மற்றவர்களாவது நாட்டின் ஷேமத்தையும் மனித சமூகத்தின் பிறப்புரிமையையும் உத்தேசித்து வேண்டுவன செய்யவேண்டியதே முதற்கடமை என்போம். இதை உத்தேசித்தேதான் இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் பதவியைத் தேர்தலில் விடாமல் நியமன மூலமாய் பூர்த்தி செய்ய வேண்டும் என்கின்றோம். ஏனெனில் தேர்தல் மூலமாய் பூர்த்தி செய்வதானால் இக்கொடுமைகளை ஒழிக்கும் மனப்பான்மையும் சந்தர்ப்பமும் உள்ளவர்களுக்கு அந்த ஸ்தானம் கிடைக்க முடியாது. நியமனம் செய்வதானால் மாத்திரம்தான் இது சமயம் சர்க்கார் தேடிப் பார்த்து அதற்க ஏற்ற ஒருவரை நியமிக்கக்கூடும்.

கொடுமைப் படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் விடுதலை பெற்று சமத்துவமடைய வேண்டுமானால் அச்சமூகத்தாருக்கு அதிகாரமும் பதவியும் வழங்கப்பட்டாலொழிய வேறு வழியில் சரிப்படுத்துவது என்பது சுலபமான காரியமல்ல, வெள்ளைக்காரர்களை “நீச்சர்கள்” என்றும், மகமதியர்களை ‘மிலேச்சர்கள்’ என்றும், கிறிஸ்தவர்களை ‘இழிந்தவர்கள்’ என்றும் இன்றைக்கும் மத ஆதாரம் வைத்துக் கொண்டிருக்கும் இந்துக்கள் என்போர்களும், இந்துக்களில் உயர்ந்த ஜாதியார் என்போர்களும் அந்த எண்ணத்தை அடியோடு மறந்துவிட்டு இன்றைய தினம் அவர்களும் சமத்துவம் பொருந்தியவர்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் தயவையும் எதிர்பார்த்துக் கொண்டு திரிவதற்குக் காரணம் அச்சகோதரர்களுக்கு அதிகாரமும் பதவியும் கிடைத்ததின் பயனா அல்லவா என்று கேட்கின்றோம். அதிகாரத்தையும் பதவியையும் உத்தியோகத்தையும் கண்டால் சாமியும் மதமும் சாஸ்திரமும் இடம் கொடுத்து விட்டு ஒதுங்கி நிற்பதை நாம் தினமும் அனுபவத்தில் பார்க்கின்றோம்.

பொதுவாக இந்நாட்டில் பார்ப்பனரல்லாதார் ஒரு 20 வருஷத்திற்கு முன் இருந்ததை விட இப்போது சற்று உணர்வும் சுயமரியாதை உணர்ச்சியும் பெற்றிருப்பதற்குக் காரணம் சிறிதாவது அதிகாரமும் பதவியும் கிடைத்ததன் பயனா அல்லவா என்று கேட்கின்றோம். அதுபோலவே இப்போதும் எந்தெந்த சமூகம் பிறரால் கொடுமைப்படுத்தப்படுகின்றது என்று கருதுகின்றோமோ அந்தச் சமூகங்களுக்கு அதிகாரமும் பதவியும் உத்தியோகமும் தாராளமாய்க் கிடைக்கும்படி செய்து விட்டால் அச்சமூகங்கள் தாமாகவே விடுதலை அடைந்து சமத்துவமடைந்து விடும் என்பது நமது துணிபு.

இதற்கு உதாரணமாக, இந்நாட்டில் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்ட ஆதிக்கங்கள் கடவுள் பேராலும் மதத்தின் பேராலும் உள்ள ஆதாரத்தின் பேரால் என்று சொல்லுவதானாலும் இந்த விழிப்புக் காலத்திலும் அதை அசைக்க முடியாமல் செய்து வந்தது அப்பார்ப்பனர் கைப்பற்றிக் கொண்ட அதிகாரங்களாலும் பதவிகளாலும் உத்தியோகங்களாலுமே தவிர வேறல்ல. ஆதலால் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்களிலெல்லாம் அச்சமூகங்களுக்கு அதிகாரமும் பதவியும் உத்தியோகமும் தாராளமாய் வழங்கிட வேண்டியது நேர்மையான சர்க்காரின் முக்கிய கடமையாகும். அப்படிக்கில்லாமல் “இந்தியாவுக்கு நாங்கள் தான் தர்மகர்த்தாக்கள், இந்தியாவை காக்க எங்களைக் கடவுள் அனுப்பினார். இங்கு உயர்வு தாழ்வு கொடுமைகள் அதிகம், அதை நாங்கள் தான் கவனித்து சமன் செய்து ஆள முடியும்” என்று வாயில் மாத்திரம் சொல்லிக் கொண்டு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டபோது கவனிக்காமல் அச்சமூகங்களை அன்று பார்த்த காட்சிக்கு அழிவில்லாமல் வைத்திருப்பதானால் அதை பார்ப்பன சூழ்ச்சிபோல் மற்றொரு வெள்ளைக்கார சூழ்ச்சியோ அல்லது அரசாங்க சூழ்ச்சியோ என்றுதான் சந்தேகப்பட வேண்டுமே ஒழிய மற்றபடி வார்த்தைகளில் நாணயமுடையவர்கள் என்று சொல்லிவிட முடியாது.

எனவே, அரசாங்கத்தார் இத்தத்துவங்களை நன்றாய் கவனித்து தெற்கு ஜில்லாக்களில் உள்ள ஜாதிக் கொடுமையையும் ஜாதி அகம்பாவத்தையும் ஒழிக்க தைரியமாய் முன்வந்து வெகு காலமாய் கொடுமைப் படுத்தப்பட்ட சமூகத்தினர்களுக்கு தக்க அதிகாரமும் பதவியும் உத்தியோகமும் கொடுத்து ஆதரித்து அவர்களுக்கு நியாயமான செல்வாக்குண்டாக்கி அவர்களை கொடுமைப் படுத்தப்படுவதிலிருந்து மீளச் செய்வார்களாக.

நிற்க, சென்ற வாரம் சென்னையில் கவர்னர் துரையவர்களையும் ஸ்தல ஸ்தாபன இலாக்கா மந்திரியவர்களையும் இது சம்மந்தமாகவே நாடார் சமூக பிரமுகர்கள் அதாவது திருவாளர்கள் நாடார் மகாஜன சபைத் தலைவர் வி. கனகசபை நாடார், உபதலைவர் செந்தில்குமார நாடார், காரியதரிசி பெரிய தம்பி நாடார், கவுன்சிலர் புன்னையப்ப நாடார், இராமசாமி நாடார், சிதம்பர நாடார் வக்கீல் நடராஜன் முதலிய பல தக்க கனவான்கள் பேட்டி கண்டு பேசியதாகவும் தெரிய வருகின்றது. ஆகையால் இது விஷயத்தை சர்க்கார் அலக்ஷியமாகக் கருதி விடாமல் வினயத்துடன் கவனித்து அச்சமூகப் பிரமுகர்களில் ஒருவரையே அந்த ஸ்தானத்திற்கு நியமிக்க வேண்டுமென்று யோசனை சொல்லுகின்றோம்.

தக்க கனவான் கிடைக்கவில்லை என்று சர்க்கார் சாக்கு சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாதென்பதையும் எச்சரிக்கை செய்கின்றோம். ஏனெனில் சட்டசபை அங்கத்தினர் பதவிக்கும் ஜில்லா போர்டு மெம்பர் பதவிக்கும், சேர்மன் பதவிக்கும் மற்றும் உத்தியோக பதவிக்கும், அதிகார உத்தியோக பதவிக்கும் அச்சமூகத்தில் தக்க கனவான்கள் இருக்கும்போதும் வருஷம் ஐம்பதினாயிரம் ரூபா லக்ஷம் ரூபா வரும்படியுள்ள பெரிய எஸ்டேட்டுகளையும் வியாபாரங்களையும் சொந்தமாய் நிர்வகித்து நடத்தக் கூடியவர்களும் இருக்கும் போதும் இந்த வேலைக்கு மாத்திரம் ஆள் கிடைக்கவில்லை என்றால் அரசாங்கத்தின் நாணயத்தில் யாருக்கும் நம்பிக்கை இருக்காதென்றே சொல்லுவோம்.

ஆகையால் கவர்னர் துரையவர்களும் ஸ்தல ஸ்தாபன மந்திரியவர்களும் தங்களின் யோக்கியதையை காட்டிக் கொள்ள நேர்ந்த தக்க சமயத்தை இழந்துவிட மாட்டார்கள் என்றே நம்புகின்றோம்.

('ராமனாதபுரம் ஜில்லாபோர்டு' என்ற தலைப்பில் பெரியார் எழுதிய 'குடி அரசு' தலையங்கம் - 16.09.1928)