நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டு பார்ப்பனர்களின் அடிமைகளாகி அவர்களின் வாலைப் பிடித்துக் கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும், அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள்.

சீட்டு மேஜை

அதாவது ஒருவர் ஒரு வீட்டை சூதாட்டத்திற்கு வாடகைக்கு கொடுத்திருந்தால் அவ்வீட்டில் சூதாடிகளை ஒன்று சேர்த்து அவ்வாட்டத்திற்கு அநுகுணமான சாமான்களையும் ஆட வசதியையும் செய்து கொடுத்து சீட்டு மேஜைக் காசு என்னும் கூலி வாங்குகிறவன் ஒருவனுண்டு. சூது ஆட வருகிறவர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் இவ்வளவு என்று கொடுத்து வருவதுண்டு. சாதாரணமாக காலை முதல் மறுநாள் காலை வரையில் ஆளுக்கு இவ்வளவு என்பதாக கையில் பணம் வைத்துக் கொண்டு சூதாட ஆரம்பித்தால் கடைசியாய் எழுந்து போகும் போது நாலுபேர் தோல்வி அடைந்து கடன்காரராய் எழுந்து போவதும் இருவர் சம்பாதிப்பவர்களாகவும் இருவர் அசலோடு போவதாகவும் காணப்படும். சம்பாதித்தவர் என்பவர்களுக்கு அவரவர்கள் அசலும் மேல்கொண்டு கால் ரூபாயோ அரை ரூபாயோ லாபமிருப்பதாகத் தெரியும். அதுவும் தோற்றவர்கள்மேல் கடன் விட்டிருக்கும் தொகையாயிருக்கும். ஆனால் தோற்ற பணமும் கடன்காரராக்கிய பணமும் எங்கு போய் விட்டதென்று பார்ப்போமேயானால் வீட்டு வாடகைக்காரனுக்கும் சீட்டாட வசதி செய்து கொடுத்த சீட்டு மேஜைக் காரனுக்கும் அந்த இடம் தெரிந்து அங்கு வந்து மிரட்டிய போலீசுக்காரனுக்கும்தான் போயிருக்குமே ஒழிய ஆடினவர்களுக்கு லாபமிருக்காது. இப்படியே தினப்படி வந்து சூதாடுவதும் தினப்படி பலர் தோல்வியடைவதுமாயிருக்குமே ஒழிய ஜயித்தவர்களுக்கு தோற்றவர்கள் பணம் அவ்வளவும் வந்திருக்காது.

mgr periyarஅதுபோலவே கோர்ட்டு நீதி என்பது இடம் கொடுத்தவர்களுக்கு சமானமாகிய அரசாங்கத்திற்கும், ஆட வசதி செய்து கொடுத்து சீட்டு மேஜை வாங்கியவர்களுக்குச் சமானமாகிய வக்கீலுக்கும், மிரட்டி காசு வாங்கும் போலீசுகாரனுக்கு சமானமாகிய கோர்ட்டு சிப்பந்திகளுக்கும் தூணுகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுகிறதே தவிர உண்மையான விவகாரக்காரனுக்கு ஒன்றும் மீதியாவதில்லை.

தோற்றாலும் கெடுதி ஜயித்தாலும் கெடுதி

விவகாரத்திற்கு வரும் வாதி தோற்றால் அனேகமாய் பாப்பராய் விடுகிறான். ஜயித்தால் செலவு செய்த தொகையை அடைந்தவனாகிறான். அது போலவே பிரதிவாதியும் ஜயித்தாலும் தோற்றாலும் அனியாயமாய் கெட்டுப் போகிறான். இதன் காரணம் என்னவென்று பார்ப்போமேயானால் பிரிட்டிஷ் கோர்ட்டுகள் என்று சொல்வது பலருக்கு உத்தியோகம் கிடைக்கவும் வக்கீல்கள் பிழைக்கவும் வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டனவே அன்றி குடிமக்கள் நீதி அடைய அல்லவே அல்ல என்பதுதான்.

நியாயம் கிடைக்கும் தன்மை

வக்கீல்களின் புரட்டுகளாலும் தந்திரங்களாலும் விவகாரக்காரனுக்கு கையில் பணமிருக்கிறவரை “நியாயம்” கிடைக்கும் மாதிரி வசதி செய்யப் பட்டிருக்கிறது. சிற்சில சமயங்களில் சில விவகாரக்காரனுக்கு கைப்பணம் தீர்ந்துபோன பிறகு கூட கடன் கிடைப்பதாயிருந்தால் மறுபடியும் கூட “நியாயம்” கிடைக்க வழியிருக்கிறது. பெரிய விவகாரங்களில் நியாயம் என்பது சட்டத்தைப் பொருத்ததாகவே இல்லை. மாதிரி கேசுகளில் இதற்கு முன் உள்ள ஜட்ஜுகள் என்ன அபிப்பிராயம் கொடுத்திருக்கிறார், இன்ன ஊர் ஜட்ஜு எப்படி தீர்ப்பு சொல்லி இருக்கிறார் என்று பழைய ஜட்ஜுகளின் அபிப்பிராயமே சட்டமாயிருக்கிறது. சில கேசுகளில் அந்தந்த ஜட்ஜு கொள்ளும் அபிப்பிராயமே சட்டமாகும்.

நீதி ஸ்தலங்கள் என்பது வரிசைக் கிரமமாய் முன்சீப் கோர்ட், ஜில்லா ஜட்ஜு அல்லது சப் ஜட்ஜு அபீல், ஹைக்கோர்ட் அபீல், புல் பெஞ்சு அபீல், லட்டர்ஸ் பேட்டெண்ட் அபீல், ரிவிஷன் பிரிவு கவுன்சில் என படிப்படியாய் பல ஸ்தானங்கள் விவகாரக்காரன் அறிவீனத்திற்கும் ஆணவத்திற்கும் பணத்திமிருக்கும் தக்கபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவுக்கும் தூண்டுகோலென வக்கீல் கூட்டங்களும் இவர்களை நத்திப் பிழைக்கும் இவர்களது புரோக்கர்களும் மலிந்து வருகின்றன. இவ்வித நியாய ஸ்தல முறையும் நியாயவாதி முறையும் நியாயங் கிடைக்குமுறையும் நீங்காமல் மக்கள் சுயராஜ்யமடைந்து விடலாம் என்பது சமுத்திர நீரை எல்லாம் குடித்து விடலாம் என்பது போலவே ஆகும். கோர்ட்டு ஏற்படுத்தினதின் கருத்து பொதுவாய் நோக்குமிடத்து இம்முறைகள் நாட்டின் விடுதலைக்கு விரோதமாகவும் பார்ப்பன ஆதிக்கத்திற்கு அநுகூலமாகவும் சர்க்காரும், பார்ப்பனரும் கூடிச் செய்த சூழ்ச்சியே அல்லாமல் வேறல்ல.

தற்கால “தேசாபிமானி” என்பவருக்கும் “பொது நல சேவை செய்பவர்” என்பாருக்கும் இம்மாதிரி கோர்ட்டுகளையும், நியாயம் கிடைக்கும் முறைகளையும் இன்னும் அதிகமாக உற்பத்தி பண்ணுவதே யோக்கியதாம்சமாயிருக்கிறது. சமீபத்தில் சட்டசபைக்கு நின்ற கனவான்களில் ஒருவர் தன்னுடைய யோக்கியதாம்சத்தை வெளிப்படுத்திய ஒரு அறிக்கையில் நான் இன்ன ஊருக்கு கோர்ட்டுகள் வைக்கும்படி செய்தேன், இன்ன ஊரில் எடுபட்டு விட இருந்த கோர்ட்டை நிலை நிறுத்தினேன். ஆதலால் எனக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று வெளியிட்டிருந்தார். இதுபோலவே ஒரு ஓட்டர் ஒரு சட்டசபை அபேக்ஷகருடைய யோக்கியதையைப் பரிசீலிக்கையில் அவ்வபேக்ஷகரைப் பார்த்து “நீர் இந்த ஊரில் ஏற்பட இருந்த சப்கோர்ட்டை வேண்டாமென்று சொன்னீராம், ஆதலால் உமக்கு தேசபக்தி இல்லை நீர் பொது நல சேவைக்காரராகமாட்டீர், உமக்கு ஓட்டு செய்ய முடியாது” என்று சொன்னாராம். அதற்கு அந்த அபேக்ஷகர் நீர் தப்பாய் நினைத்துக் கொண்டீர்; நான் இந்த ஊருக்கு ஒரு ஜில்லா கோர்ட்டே வரவேண்டுமென்கிற ஆசையினால் சப்கோர்ட் வேண்டாமென்று சொன்னேன். இந்த ஊர் நிலைமைக்கு இங்கொரு ஜில்லா கோர்ட்டு வேண்டாமா? அனேக ஜில்லாக்களில் இரண்டு ஜில்லா கோர்ட்டு இருப்பது போல் இந்த ஜில்லாவுக்கும் இரண்டு ஜில்லா கோர்ட்டு வேண்டும், அதற்கு இந்த ஊர்தான் தகுதி என்று சொன்னாராம். இதிலிருந்து இம்மாதிரி ஓட்டர்களுக்கும் அபேக்ஷகர்களுக்கும் எவ்வளவு தேச பக்தியும் பொது நல சேவையும் இருக்கிறது என்று யோசித்து பார்த்தால் தெரியும்.

சட்டமெம்பரின் தேசபக்தி

அரசாங்கத்தாரின் மற்றபடி சட்ட சம்மந்தமான இலாகா சட்டமெம்பரின் வேலைதான் என்ன? இவ்வருஷம் சட்ட கலா சாலையில் (லா காலேஜில்) படித்துத் தேறிய பிள்ளைகள் தொகை எவ்வளவு? இறந்துபோன வக்கீல்கள் தொகை எவ்வளவு? அதுகளுக்கு பதில் செய்து சரிகட்டின பிள்ளைகள் போக மீதி தொகை எவ்வளவு? இவர்கள் பிழைப்புக்கு புதிதாய் உற்பத்தி பண்ணின உத்தியோகமெவ்வளவு? போக பாக்கியுள்ள பிள்ளைகளின் வயிற்றுப் பிழைப்புக்கு எந்தெந்த ஊரில் நிரந்தர முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் நிரந்தர சப்கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் நிரந்தர ஜில்லா கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் தற்கால சாந்தியாக முன்சீப் கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஊரில் தற்கால சப் ஜட்ஜி கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம், எந்தெந்த ஜில்லாவுக்கு உதவி சப் ஜட்ஜிகளையோ குறிப்பிட்ட காரியங்களுக்கு என்கிற ஜட்ஜிகளையோ நியமிக்கலாம் என்கிற கவலையே தவிர வேறென்ன இருக்கிறது?

சட்ட மெம்பரும் வக்கீல் பேட்டியும்

சட்ட மெம்பரை வக்கீல்கள் கூட்டம் கூடி பேட்டி காணுவதிலும் என்ன வேண்டுகோள் இருக்கிறது. “அய்யா எங்களுக்கு பிழைப்பு குறைந்து போய்விட்டது. ஒரு கோர்ட்டிலேயே எல்லா வக்கீல்களும் வந்து முட்டிக் கொள்ளுகிறார்கள். இதனால் வக்கீல் பிழைப்புக்கும் மரியாதை குறைகிறது. ஆதலால் இக்கூட்டத்தைக் கொஞ்சம் குறையுங்கள் அல்லது இன்னம் ஒரு கோர்ட்டாவது ஏற்படுத்துங்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாகி விடுகிறார். ஆதலால் வக்கீல் பரீiக்ஷயை இன்னம் கொஞ்சம் அதிக செலவும் கஷ்டமும் ஆக்குங்கள். நம்மைபோல் பிச்சை எடுத்து அவர்கள் படிக்க முடியாது. வேறு வேலைக்குப் போய்விடுவார்கள். பார்ப்பனரல்லாத வக்கீல்கள் அதிகமாய் வரக்கூடாது என்கிற எண்ணத்தின் பேரில் 2-வது கிரேடு வக்கீல் பரீiக்ஷகளையும் 1-வது கிரேடு வக்கீல் பரீiக்ஷகளையும் எடுத்தும் கூட பி.ஏ. பி.எல்., வகுப்பிலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் படித்து வருகிறார்களே இதை எப்படியாவது ஒழித்து இன்னம் கொஞ்சம் செலவும், அதிகமான கஷ்டமும் வைத்து அவர்களை இந்த இலாகாவில் தலையிடாமல் செய்ய முடியாதா” என்பதாகிற இதுகள்தான் வேண்டுகோளாயிருக்கிறதே தவிர வேறென்ன என்பது யோக்கியர்களுக்கு விளங்காமல் போகாது.

கோர்ட்டுகள் அதிகமாவதினாலே வழக்குகள் அதிகமாகிறது

எத்தனைக்கெத்தனை கோர்ட்டுகள் அதிகமாய் வைக்கிறார்களோ அத்தனைக்கத்தனை வழக்குகள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. இதனால் வழக்குகளும் விவகாரங்களும் உற்பத்தியாவதற்கு கோர்ட்டுகளே காரணமல்லாமல் வேறென்ன? உதாரணம் வேண்டுமென்றால் கள்ளுக்கடைகளையும் தாசி வீடுகளையும் மோட்டார் வசதிகளையும் பார்த்தால் நன்றாய் விளங்கும். நாம் ஏன் கள்ளுக்கடைகளை குறைக்கும்படி சர்க்காரை வேண்டுகிறோம்? கடை குறைந்தால் குடிகாரரின் எண்ணிக்கையும் குடிக்கும் அளவும் குறையும் என்றுதானே தவிர வேறென்ன? நாலு தாசிகள் இருக்கும் ஊரில் நடக்கும் விபசாரித்தனத்துக்கும் 40 தாசிகளிருக்கும் ஊரில் விபசாரித்தனத்துக்கும் கணக்குப் பார்த்தால் அதிக தாசிகள் உள்ள ஊர்களில் விபசாரித்தனம் செய்கிற ஆள்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்குமா அல்லவா? அது போலவே ஒரு ஊருக்கு ஒரு தரம் போய்வரும் போக்குவரத்து வசதிகளுக்குப் பதிலாக நான்கு தரம் போய் வரும்படி போக்குவரத்து வசதி ஏற்படுத்தினால் அதற்கேற்ற பிரயாணிகள் அதிகமாக ஏற்படுவார்களா இல்லையா? அது போலவே கோர்ட்டுகள் அதிகமாகவும், ஊர் ஊராகவும் ஏற்பாடு செய்தால் விவகாரம் வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

பழைய நிலைமையும் புதிய நிலைமையும்

ஆதியில் கோயமுத்தூர் ஜில்லாவுக்கு இரண்டு முன்சீப் கோர்ட்டுகளும் ஒரு ஜட்ஜி கோர்ட்டும்தான் இருந்தன. இப்போது கொள்ளேகாலம் உள்பட 8 முன்சீப் கோர்ட்டுகளும் 3 சப் ஜட்ஜி கோர்ட்டுகளும் இருக்கின்றன. இரண்டு ஜில்லா கோர்ட்டும் இருக்கின்றன. இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப் ஜட்ஜி வேண்டுமென்று பலரும் இனியும் ஒரு ஜில்லா கோர்ட்டு வேண்டுமென்று பலரும் விரும்புகிறார்கள் (யாவர்? வக்கீல் கூட்டத்தார்.)

கோர்ட்டுக்கு அவசியமுண்டா?

இதிலிருந்து நாம் அறிய வேண்டியதென்ன? இவ்வளவு நீதி ஸ்தலங்கள் ஏற்படும்படியான அளவுக்கு இந்த ஜில்லாவில் சென்ற 40, 50 வருஷத்தில் ஜனத்தொகை பெருகிவிட்டதா? அல்லது இவ்வளவு கோர்ட்டுகள் ஏற்படும்படி ஜனங்கள் அவ்வளவு அயோக்கியர்களாகி விட்டார்களா? என்று பார்த்தால் ஜனத்தொகை ஏறக்குறைய முன் இருந்த அளவுக்கு 4-ல் ஒரு பாகம்தான் அதிகமாகி இருக்கிறது. இந்த அளவுக்கு சுமார் 1/4 (கால் ) முன்சீப் கோர்ட்டு அதிகமாயிருந்தால் போதும். அதிகமானால் ஒரு முன்சீப் கோர்ட்டு அதிகமாகலாம் என்றே வைத்துக் கொண்டாலும் 5 அல்லது 6 முன்சீப் கோர்ட்டுகளும் ஜில்லா ஜட்ஜி அதிகாரமுள்ள ஒரு மேல்கண்ட ஜட்ஜியும் 2 சப் ஜட்ஜியும் அதிகமாகக் காரணமென்ன? இதைப் பார்க்கும் போது இவ்வளவு கோர்ட்டுகளுக்கும் வக்கீல்களுக்கும் வேலை உண்டாக்கத்தக்க மாதிரிக்கு ஜனங்களை அயோக்கியர்களாகவும், சர்க்காரும் பார்ப்பனர்களும் பழக்கி வைத்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது. அல்லாமலும் முன் காலங்களில் முன்சீப்புகள் 5 மணி வரை வேலை செய்வார்கள்; சம்பளமும் அவர்களுக்கு 200, 300 தான். இப்போது 11 - 30 மணிக்கு கச்சேரிக்கு வந்தால் 2 அல்லது 3 மணிக்கு வீட்டுக்குப் போய் விடுகிறார்கள்; சம்பளம் 500, 600 வாங்குகிறார்கள்.

இனியும் ஒரு கோர்ட்டு வேண்டுமாம்

இவ்வளவும் போதாமல் இனியும் ஒரு சப் ஜட்ஜி கோர்ட்டு வேண்டுமென்றால் இவ்வயோக்கியத்தனத்திற்கு எதைச் சமமாகச் சொல்லுவது ; இதையும் நமது ஜில்லாவில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் ஊருக்கு வரும்படி எதிர்பார்க்கிறார்களாம்.

கோர்ட்டு வந்தால் வந்த ஊருக்கு ஏற்படும் கெடுதி

எந்த ஊரில் வைத்தாலும் வேலை ஏற்படும் என்கிற விஷயத்தில் நமக்கு சந்தேகமில்லை. அப்பீல் செய்ய இஷ்டமில்லாதவனுக்கெல்லாம் அப்பீல் செய்து பார்க்கலாம் என்கிற ஆசை வந்து விடும். விவகாரத்தில் ஆசை இல்லாமலும் அசலூருக்குப் போய் விவகாரம் செய்வதில் சௌகரியமில்லாமல் தங்களுக்குள்ளாகவே பைசல் செய்து கொள்ளலாம் என்கிறவர்களுக்கெல்லாம் உள்ளூரில் கோர்ட்டு வந்துவிட்டால் பிராது செய்துவிடலாம் என்கிற எண்ணம் ஏற்பட்டுவிடும். அலக்ஷியமாகவும் அனாவசியமாகவும் மறதியில் இருந்த வழக்குகளுக்கெல்லாம் வக்கீல்கள் முதன்மை ஸ்தானம் கற்பித்துக் கொடுத்து வழக்கிலிழுத்து விட்டுவிடுவார்கள். இன்னமும் எவ்வளவோ கஷ்டங்கள் அவ்வூரிலுள்ள ஏழைக் குடிமக்களுக்கு ஏற்பட்டு விடும். முதலாவது வீட்டு வாடகை உயர்ந்துவிடும். காய், கறி, மோர், தயிர், பால், நெய், விறகு விலைகள் உயர்ந்துவிடும். கூலி ஆட்களின் கூலி அதிகமாய் விடும். ஜனங்களுக்குள் கட்டுப்பாடும் பெரியவர், சிறியவர் என்கிற மரியாதையும் மாறிவிடும். இவ்வளவு அக்கிரமங்களோடு நாணயமும் குறைந்துவிடும். இவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுவதாயிருந்தாலும் ஒரு வகுப்பாரின் வயிற்று பிழைப்புக்கு கோர்ட்டுகளை அதிகப்படுத்துவதே தேச சேவையாயும், இதற்கனுகூலமாயிருக்கும் அதிகாரிகளே பூரண கும்பம் எடுக்கத்தக்க யோக்கியதை உள்ளவர்களாகவும் போய் விட்டது. இந்தக் கூட்டத்தார் தான் நமக்கு சுயராஜ்யம் வாங்கிக் கொடுக்கத்தக்க யோக்கியர்களாம்.

விவகாரக்காரருக்கு ஏதாவது வசதி உண்டா?

இவ்வளவு அக்கிரமங்களுக்கிடையில் ஏற்படுத்தப்படும் கோர்ட்டுகளில் விவகாரக்காரர்களுக்கு ஏதாவது கடுகளவு சௌகரியமோ, யோக்கியதையோ அல்லது அவர்களையும் ஒரு மனிதர்களாய் கருதத்தக்க நிலைமையோ இருக்கிறதா என்று பார்த்தால் அது கொஞ்சமாவது நினைக்கத்தக்க காரியமே அல்ல. நியாயாதிபதியாயிருக்கிறவர் பொது ஜனங்களின் பணத்திலிருந்து மாதம் 500, 1000, 2000, 3000 சம்பளம் வாங்கிக்கொண்டு மோட்டாரில் வந்து இறங்குவதும்; தனி அறையில் இளைப்பாறுவதும், பங்கா வீசுவதும், பக்கத்தில் சேவகர்கள் கை கட்டிக்கொண்டு நிற்பதும், தனி கக்கூசு, தனி சிற்றுண்டி அறை ஆகிய போக போக்கியமும் விவகாரக்காரரை ஏமாற்றி 50, 100, 1000, 2000 என்பதாக பீசு வாங்கும் வக்கீல்கள் குதிரை வண்டிகளிலும், மோட்டார் கார்களிலும் வந்து இறங்குவதும், பங்காவின் கீழ் உட்காருவதும், தங்களுக்கென இளைப்பாறும் அறைகளுமான போக போக்கியங்களும் அடைவதுமாயிருக்கிறார்களே ஒழிய விவகாரக்காரரைப் பற்றியோ, விவகாரத்தின் பொருட்டு, சாட்சிக்கு வருகிறவர்களைப் பற்றியோ, கொஞ்சமாவது கவலையே இல்லை. கோர்ட்டுகளில் விவகாரக்காரருடைய பரிதாபம் அவர்கள் உட்கார சௌகரியமில்லை, தங்க இடமில்லை, ஒதுங்க மார்க்கமில்லை! வாய்ப்பேச மார்க்கமில்லை.

கோர்ட்டு எல்லைக்குள் இருக்கும் வரை ஜெயிலில் கைதி இருப்பது போல் பயந்து ஒடுங்கி நிற்கவும், ஏதாவது ஒருவருக்கொருவர் வாயைத் திறந்தால் அங்குள்ள சேவகர்கள், “உஸ்”, “அஸ்” என்று இடையன் ஆடு மாடுகளை ஓட்டுவது போலவும், “பேசாதே” என்று மரியாதை இல்லாமல் கட்டளையிடுவதுமான ஹீனத்தன்மைக்கு ஆளாக வேண்டியதேயல்லாமல் அங்கு வாதியாகவோ பிரதிவாதியாகவோ சாட்சியாகவோ வருகிறவர்கள் மனிதர்கள் என்று எண்ணிய மாதிரியாய் ஏதாவது காணப்படுகிறதா? அல்லாமலும் கோர்ட்டுகள் மெத்தை மீது சிலதும் சந்துக்களில் சிலதும் இருப்பதால் கூப்பிட்டாலும் காது கேட்கத் தக்க அவ்வளவு தூரத்திலாவது நிற்கக்கூட இடமில்லாமல் இருப்பதோடு வக்கீலிடம் பேசவோ, ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லவோ இடமில்லை.

வாய்தாக்கள்

இத்தனையும் போதாமல் ஒரு விவகாரத்தை 3 வருஸ 4 வருஸ நீட்டி 25 - வாய்தா, 30 - வாய்தா போடும் உபத்திரவங்கள் அல்லாமல் காலை 11 மணிக்கு கோர்ட்டுக்குள் நுழைந்தால் மாலை 5 மணி வரையில் நின்று கொண்டே காத்திருக்க வேண்டும். சிலசமயங்களில் இன்று கேஸ் நடக்காது என்று தெரிந்தாலும் 5 மணி வரை வாய்தா எப்பொழுது என்று தெரிவதற்குக் காத்திருக்க வேண்டும். எப்பொழுது நடக்கும்? இந்த வாய்தாவில் நடக்காதா? என்கிற விவரங்கள் கட்சிக்காரரோ சாட்சிக்காரரோ அறிய வசதியில்லை. இதனால் இவர்களுக்கு கட்டும் சாட்சியபடி போக வர செலவு, மெனக்கேடு எவ்வளவென்பதைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. ஜட்ஜி பெண்சாதிக் காலில் எறும்பு கடித்துவிட்டால் அன்றைய கேசுகள் முழுவதும் வாய்தா போட்டாய்விடும். வக்கீல் வீட்டில் அமாவாசை சமையலாக நேரமாய் விட்டால் குமாஸ்தா வாய்தா வாங்கிவிடுவான். வக்கீலுக்கு வேறு கோர்ட்டுக்குப் போக வேலையிருந்தால் கேசை மாலையில் எடுத்துக்கொள்ளும்படி ஜட்ஜைக் கேட்டு வாய்தா வாங்கி விடுவான். இப்படி எவ்வளவு கஷ்டங்கள் ஏற்படுகின்றன.

நிற்க, சாட்சிக்கு உடம்பு சௌகரியமில்லாவிட்டால் டாக்டர்களுக்கு 20, 30 கொடுத்து சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும். வேறு அவசர வேலையிருந்தால் 20, 30 கொடுத்து வயிற்றுக் கடுப்பு என்று பொய் சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும். இப்படியாக எவ்வளவு கொடுமைகள் விவகாரக்காரருக்கு இருந்து வருகிறதென்பதும் வாய்தாக்கள் ஏற்படுவது கட்சிக்காரர்களாலா அல்லது வக்கீல்களாலா, ஜட்ஜிகளாலா என்பதைப் பார்த்தால் 100-க்கு 90 விவகாரங்களுக்கு ஜட்ஜிகளும் வக்கீல்களுமேயல்லாமல் வாதி பிரதிவாதி காரணமேயில்லை என்பதும் விளங்கும்.

மேல் அதிகாரிகளோ?

இவற்றைப் பற்றி மேல் அதிகாரிகளுக்கு எழுதினால் “அசல் அநியாயம் அபீலில் அதுவே காயம்” என்பதுபோல் “இதெல்லாம் சகஜம் தான்” என்று சொல்லுவார்கள். காரணம் என்னவென்றால் முனிசீப்பு ஸ்தானம் முதல் ஹைக்கோர்ட்டு ஜட்ஜி, சட்ட மெம்பர் ஆகிய ஸ்தானம் வரையில் இந்த வக்கீல் கூட்டத்திலிருந்தும் இதனாலே வயிறு வளர்க்கக் கூடிய கூட்டத்திலிருந்துமே தான் ஆள்பிடிக்கிறார்களே தவிர வேறில்லை. வக்கீல் கூட்டத்திலிருந்து நியாயாதிபதிகளை நியமிப்பது என்கிற அக்கிரமம் ஒரு நாட்டில் இருக்கும் வரை பார்ப்பன ஆதிக்கமும் விவகாரமும் வலுக்கவும், குடியானவர்கள் நாசமாய்ப் போகவும், நாடு குட்டிச்சுவராகவும்தான் ஏற்படுமேயல்லாமல் ஒரு நாளும் நாம் உருப்படியாகி சுயராஜ்யம் பெறப் போவதில்லை என்பது உறுதி.

(குடி அரசு - கட்டுரை - 06.03.1927)