பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே!

நான் இந்த ஊருக்கு (மதுக்கூர்) வந்து பல ஆண்டுகள் ஆகின்றன் இந்த ஊரில் கழகம் சரிவர இயங்கவில்லை என்று விசுவநாதன் (பட்டுக் கோட்டை) கூறினார். இருந்து இருக்கலாம். இங்கு திராவிடர் கழகம் முயற்சி எடுத்துக் கொண்டாலும், மக்கள் ஆதரவு அவ்வளவாக ஏற்படுவது இல்லை. காரணம் கழகக் கொள்கைகள் அவ்வளவு கசப்பானவை. "எங்களுடைய செய்திகளை இந்த நாட்டுப் பத்திரிகைகள் சரிவர வெளி இடுவதுமில்லை என்றார்" சி.என். விசுவநாதன். இவர் பட்டுக்கோட்டையில் இருந்தார். தி.க. மாநில அமைப்பாளர் அது உண்மைதான்.

periyar meetingஇந்த நாட்டுப் பத்திரிக்கைகளை நான் என்றைக்குமே மதித்தது இல்லை. எவனாக இருந்தாலும் அயோக்கியன் என்றே எண்ணிக் கொண்டும், சொல்லிக் கொண்டும் வருபவன். பத்திரிகைக்காரர்களின் தயவு இன்றி அவர்களை எதிர்த்துக் கொண்டு இயக்கம் நடத்துவதும் அதில் மிஞ்சியதும் நாங்கள் தான். மற்றக் கட்சிக்காரன்கள் எல்லாரும் பத்திரிக்கைக்காரன் தயவைச் சம்பாதிப்பதில் பெரிதும் ஈடுபடுவார்கள். காந்தியே பத்திரிக்கைக்காரனிடம் கெஞ்சியது எனக்குத் தெரியும்.

அன்று காங்கிரசிலே இரு பிரிவு. காந்தி ஒரு பக்கம் - திலகர் ஒரு பக்கம். சென்னையில் உள்ள பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் காந்தியை எதிர்க்க ஆரம்பித்தன. திலகர் செத்த பிறகு கூட காந்தியை எதிர்த்துக் கொண்டே வந்தார்கள். இந்த இரு கட்சிகளில் சென்னையில் ஒரு கட்சிக்கு இராஜாஜி தலைவர்; மற்றொரு கட்சிக்கு கஸ்தூரி ரெங்க அய்யங்கார் தலைவர்!

கஸ்தூரி ரெங்க அய்யங்கார் முதலிய பார்ப்பனர்களுக்கு இராஜாஜியைப் பிடிக்காது. அந்தக் கோபத்தில் காந்தியையே தாக்க ஆரம்பித்து விட்டனர். 'இந்து' பத்திரிகை போன்றது காந்திக்கு விரோதமாக இருந்தது கண்டு காந்தியே பயந்து கஸ்தூரி ரெங்க அய்யரையே அணுகிக் கேட்க வேண்டியதாகி விட்டது. நான் காந்தி சீடனாக இருந்த காரணத்தினால் இவை எல்லாம் நன்கு தெரியும். நான் மட்டும் காங்கிரசில் இருந்த காலம் கொண்டு பத்திரிகைகளைக் கண்டித்து வருகின்றேன்.

காந்தியார் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சரணாகதி அடைந்து அவர்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கையே விட்டார். "எனக்குச் சனாதன தர்மத்தில் நம்பிக்கை உண்டு. நான் ஒரு இந்து. வருணா சிரமத்தில் நம்பிக்கை உடையவன். மோட்ச நரகத்திலும் முன்பின் ஜென்மத்திலும் (பிறப்பிலும்) நம்பிக்கை உடையவன் என்று அறிக்கை வெளியிட்டுவிட்டு கஸ்தூரி ரெங்க அய்யங்காரிடமும் தூது அனுப்பிச் சிநேகம் பண்ணிக் கொண்டார். பிறகு தான் பத்திரிக்கைகள் ஆதரிக்கத் தொடங்கின. எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் பத்திரிகைக்காரர்கள் இப்படி எல்லாம் ஆட்டிப்படைத்தார்கள்.

நான் மட்டும் எனது பொது வாழ்வில் இத்தனையாண்டுகளாக இவர்களைச் சட்டைப் பண்ணுவது கிடையாது. இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்கள் எல்லாரும் கட்டுப்பாட்டாக எங்களைப் பற்றி எல்லாம் இருட்டடிப்பு செய்வதோடு மட்டும் அல்லாமல், எங்களைப் பற்றிக் கட்டுப்பாட்டாகவும், தவறாகவும், புளுகிக் கொண்டும் வருகின்றனர். ஒருத்தன் புளுகினால் எல்லோரும் ஒரே மாதிரியாகவே புளுகுவான்.

தோழர்களே! நான் தான் இவர்களை வன்மையாகக் கண்டித்து வருபவன் என்றேன். வன்மையாக என்றால் மிகவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்திக் கண்டித்து வருகின்றேன். இந்தப் பத்திரிக்கைக்கார அயோக்கியர்களுக்கு மானமா? ஈனமா? எனவே சிரித்து கொண்டே போய் விடுவார்கள்.

பொப்பிலிராஜா ஜஸ்டிஸ் கட்சித் தலைவராக இருந்தாலும் கூடப் பார்ப்பனப் பத்திரிகைகளுக்குச் சலாம் போட்டுக் கொண்டு இருந்தார். கஸ்தூரி ரெங்க அய்யங்காருக்கு உடம்புக்கு அசவுக்கியம் என்றால் போய்ப் பார்த்து வருவார். இது அன்பால் அல்ல- தங்களுக்கு விரோதமாக இருக்கக் கூடாது என்ற பயத்தால் ஆகும்.

நான் மற்றக் கட்சிக்காரன் மாதிரிப் பேசிப் போட்டு தங்கள் பேச்சு பத்திரிக்கையில் வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்பவன் அல்ல. நான் தான் தினம் தினம் 10.000- க்கணக்கான மக்களை நேரில் சந்தித்து என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லி வருபவன் ஆயிற்றே! நான் மக்களிடம் பேசும் போது கூட, "நான் சொல்லுகின்றேன். கேட்டால் கேளுங்கள் கேட்காவிட்டால் நாசமாய் போங்கள்" என்று போகின்றவன் ஆயிற்றே! எங்களுக்குப் பத்திரிகைக்காரர்கள் தயவில் ஆகக்கூடியதும் ஒன்றும் இல்லை.

இந்த நாட்டில் மற்றக் கட்சிக்காரன்கள் எல்லோரும் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருப்பவர்கள். ஆகவே அவர்கள் இந்தப் பத்திரிகைக்காரர்களின் விளம்பரத்துக்கும், தயவுக்கும் பல்லைக் கெஞ்சுவார்கள். நாங்கள் சுயநலத்துக்காகக் கட்சி வைத்து இருக்கவில்லை. எங்கள் ஆள்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சொந்த முயற்சியால் வாழ்பவர்களே ஒழிய, பொது வாழ்வு பேரால் வாழ்பவர்கள் அல்லர்.

இப்படிப்பட்ட நாங்கள் தான் இந்த நாட்டில் எந்தக் கருத்தையும் துணிந்து எடுத்துக்கூற முடிகின்றது. இப்படிப்பட்ட நாங்களா இந்த அன்னக்காவடிப் பத்திரிக்கைகளுக்கு அஞ்சப் போகிறோம்?

இந்தப் பத்திரிக்கைத் துறை அனைத்தும் பார்ப்பான் ஆதிக்கத்தில் தான் இருந்து வந்தன. தமிழன் தலை எடுக்கவே முடியவில்லை. பார்ப்பனர் அல்லாதவர்கள் (திராவிடர்) நடத்த முன் வந்தவர்கள் எல்லாரும் ஒழிந்தே போனார்கள். ஜஸ்டிஸ் கட்சி பத்திரிகை நடத்தியது- மாதம் ரூ.5000- நஷ்டத்தில் நடத்தியது. நஷ்டத்தைச் சரிக்கட்டத் தலைவர்கள் எல்லாரும் பகிர்ந்து கொள்ளுவார்கள். கடைசியில் நஷ்டத்தை ஈடுபண்ண முடியாமல் பத்திரிக்கை ஆஃபீஸ் ஏலத்தில் போனது. நான் தான் அந்த மெஷினை (இயந்திரம்) ஏலத்தில் எடுத்தேன். அதுதான் இன்று 'விடுதலை'யில் (நாளிதழ்) ஒடுகிறது.

பத்திரிக்கைத் துறையில் பார்ப்பானுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

முதலில் "சுதேசமித்திரன்" ஒன்று தான் இருந்தது. பிறகு "தினமணி" இந்தப் பத்திரிக்கைகள் தான் நல்ல மனிதனையும் பொதுவாழ்வில் அயோக்கியனாக ஆக்க உதவி வந்தன.

காங்கிரசிலேயே - 'சுதேசமித்திரன்' போன்ற பார்ப்பனப் பத்திரிக்கையில் நம்பிக்கை இல்லாது 'தேசபக்தன்' என்ற பத்திரிக்கையை ஆரம்பித்தது. நானும் ரூ.1000- கொடுத்து மேலும் 1000- வசூல் பண்ணிக் கொடுத்தேன். திரு.வி. கல்யாண சுந்தர முதலியாரை ஆசிரியராகக் கொண்டு அது நடந்து வந்தது. அவருக்குச் சம்பளம் 80- ரூபாய் தான். பார்ப்பனர்கள் அதனை வளர விடவில்லை. ஒழிக்க முயன்றார்கள். கல்யாண சுந்தர முதலியாரை ஒழித்து விட்டு வ.வெ.சு. அய்யர் என்ற பார்ப்பானைக் கொண்டு வர பாடுபட்டார்கள். கடைசியில் அந்தப் பத்திரிக்கை ஒழிந்தே போயிற்று. பிறகு நானும் பத்திரிக்கை ஆரம்பித்தேன் - என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

பிறகு நமது பிரச்சாரத்தின் காரணமாக ஒரு சிலர் தலை எடுக்கும் நிலை ஏற்பட்டது. நண்பர் ஆதித்தனார் "தினத்தந்தி" பத்திரிகையை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரும் மிகவும் கஷ்ட நஷ்டப்பட்டார். இன்று என்ன ஆயிற்று தெரியுமா? இன்று இந்த நாட்டிலேயே அதிகம் விற்பனை ஆவது அவரது பத்திரிக்கை தான்! அது தலை எடுக்க ஆரம்பித்த பிற்பாடு - பார்ப்பனப் பத்திரிகைகளின் பல்லைப் பிடுங்கிப் போட்டது. இன்று அவருக்கு 6,7- பத்திரிக்கை (என்று) ஆகிவிட்டன. சென்னையில் ஒரு தினத்தந்தி, திருச்சியில் ஒரு தினத்தந்தி, மதுரையில் ஒரு தினத்தந்தி நடக்கின்றன. இவை அல்லாமல் 'மாலைமுரசு' என்ற பேரில் திரு நெல்வேலியில் ஒன்று கோவையில் ஒன்று நடைப்பெறுகின்றன.

இந்தப் பத்திரிக்கையில் வரும் செய்திகளை எல்லாம் நான் ஆதரிக்கிறேன் என்பது அல்ல. தினத்தந்தி மிகவும் கீழ்த்தரமான பத்திரிக்கைத் தான் என்றாலும், அது பார்ப்பானுடைய பத்திரிக்கைகளின் செல்வாக்கை அடக்கிப் போட்டதே என்று தான் ஆதரிக்கிறேன்.

எவனை எடுத்தாலும் காலையில் எழுந்திருந்த உடனே தினத்தந்தியின் முகத்தில் தான் விழிக்கின்றான். எனவே இன்று ஆதித்னாருக்கு 7- பத்திரிக்கைகள். கோவையில் இராம கிருஷ்ணன் என்ற நாயுடுவுக்கு "நவ இந்தியா" என்று, கோவையில் ஒன்றும் நடக்கின்றன. கருமுத்து தியாகராய செட்டியாருக்கு 'தழிழ் நாடு' என்ற பத்திரிக்கை மதுரையில் ஒன்றும், சென்னையில் ஒன்றும் நடைப்பெறுகின்றன. ஏ.வி.பி. ஆசைத்தம்பியின் 'தனிஅரசு' பத்திரிகையானது மதுரையில் ஒன்றும், சென்னையில் ஒன்றும் நடைப்பெறுகின்றன. அடுத்து கோசல்ராமுக்கு 'தினச்செய்தி' என்ற ஒரு பத்திரிக்கை, கண்ணீர்த் துளிகளில் கருணாநிதிக்கு ஒரு பத்திரிக்கை! அடுத்து 'நம்நாடு' என்ற ஒரு பத்திரிக்கை, சம்பத்துக் கட்சிக்கு 'விடிவெள்ளி' என்ற பத்திரிக்கை. இப்படி 20- பத்திரிக்கைகளுக்கு மேல் இன்று பார்ப்பனர் அல்லாத பத்திரிக்கைகள் ( நாளிதழ்கள்) நடக்கின்றன. இவை போடுகின்ற போட்டியில் பார்ப்பான் பத்திரிக்கைகள் இன்று ஓங்க முடியவில்லை.

இப்படிப் பார்ப்பனர் அல்லாதவர் பத்திரிகைகள் நடந்து வருகின்றன என்றாலும், இவைகளும் நம்மைப் பற்றிப் பார்ப்பானுக்குப் பயந்து நம் செய்திகளை இருட்டடிப்பு செய்வதும், கட்டுப்பாடாகத் தவறான செய்தியைப் போடுவதிலும் தான் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் இவை பற்றிக் கவலைப்படுவது இல்லை.

நாங்கள் மற்றக் கட்சிக்காரன்கள் மாதிரி மக்களிடத்தில் ஓட்டுக்கோ, வேறு தயவுக்கோ, எதிர் நோக்கி இருக்காத காரணத்திலும் எங்கள் சொந்த வாழ்வில் எவனும் குற்றம் (குறை) சொல்ல முடியாத அளவு (நாங்கள்) நடந்து வருவதனாலும் எங்கள் மீது எவனும் குற்றம் சொல்ல முடியவில்லை.

மாறாக நாங்கள் தமிழ் காங்கிரசை ஆதரிக்கிறோம். காமராசரை ஆதரிக்கின்றோமே - இதனைப் பற்றி உங்களிடத்தில் தப்பான முறையில் செய்தி வெளியிட்டுக் காட்டுவான். 'நான், கழக ஆதரவாளர்கள், அனுதாபிகள் என்பவர்களை அவர்கள் வேண்டுமானால் அவர்கள் இஷ்டப்பட்டால் - காங்கிரசில் சேர்ந்து கொள்ளலாம்' என்று கூறியதை தான் திராவிடர் கழகத் தோழர்களிடையே காங்கிரசில் சேரச் சொன்னதாகப் பெரிய எழுத்தில் கட்டுப்பாடாக வெளியிட்டு உள்ளன. நம் தமிழர்கள் நடத்தும் பத்திரிகைகள் என்பவைகள் கூட உண்மைக்கு மாறாக வெளியிட்டு உள்ளன. நாங்கள் இவ்வளவு பெரிய கூட்டத்தில் எவ்வளவோ விஷயங்கள் பற்றிப் பேசுகின்றோம். இவற்றைப்பற்றி நான்கு வரி போடமாட்டான். வடநாட்டில் - பார்லிமெண்டில் ஓர் ஆள் நாங்கள் இராமனையும், சீதையையும் குறை கூறிப் பேசுவதைக் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்டித்துப் பேசியதைக் கொட்டை எழுத்துகளில் போட்டு இந்தியா எங்கும் உள்ள மக்கள் அறியும்படிச் செய்கின்றன.

ஆனால் இராமன் அயோக்கியன், சீதை விபச்சாரி என்பதற்கு நாங்கள் எடுத்துக்காட்டும் அநேக ஆதாரங்கள் பற்றி ஒரு பத்திரிக்கையில் கூடப் போடமாட்டார்கள்.

தோழர்களே! உலகத்தில் மற்ற நாட்டில் எல்லாம் அந்த நாட்டுப் பத்திரிகைகள் அந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்தில் - அந்த நாட்டு மக்களை அறிவாளிகள் ஆக்கவும், நல்வழிப்பத்தவும் பயன்படுகின்றன. இந்த இந்திய நாட்டுப் பத்திரிக்கைகள் தான் மனிதனை மடையனாகக் காட்டுமிராண்டிகளாக ஆக்கப் பயன்படுகின்றன. இந்த நாட்டில் பொது வாழ்வின் பேராலும் மக்கள் மத்தியிலும் பொது ஒழுக்கக் கேட்டுக்குப் பெரிதும் இந்த நாட்டுப் பத்திரிக்கைகளே பயன்படுகின்றன. இந்த நாட்டுப் பத்திரிக்கை ஸ்தாபனங்கள் எல்லாம் தேசத்துரோக ஸ்தாபனங்கள் என்று கருத வேண்டியவைகள் ஆகும்.

நான் கூறுவது உண்டு. இந்த நாட்டினைப் பிடித்துள்ள 3- பேய் அய்ந்து நோயில், இந்தப் பத்திரிக்கையும் ஒரு நோய் என்றே கூறி வந்திருக்கின்றேன்.

பார்ப்பனர்கள் பம்பாய், டெல்லி (என்று) எங்கு எடுத்துக் கொண்டாலும் பத்திரிகைத் துறையையைத் தங்கள் கையிலேயே வைத்து இருப்பதைக் காணலாம்.

பார்ப்பனர்கள் பத்திரிகை என்ற ஆயுதத்தைக் கொண்டே இந்த நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்துக் கொண்டே வந்து இருக்கின்றனர். எவனை எடுத்துக் கொண்டாலும் பொதுவாழ்வின் பேரால் ஈடுபடுபவர்கள் இவர்களுக்கு (பத்திரிக்கைகளுக்கு) அடக்கியே- அஞ்சியே வந்து இருக்கின்றனர்.

தோழர்களே! நாங்கள் காமராசரை ஆதரிப்பது பற்றி இந்தப் பத்திரிகைகள் ஆத்திரப்படுகின்றன. 'மெயில்' பத்திரிகை, "காமராசர் ஆட்சிக்கும், காங்கிரசிற்கும் நாட்டில் நல்ல செல்வாக்கு உள்ளது. ஆனால் இந்தக் காமராசரைத் திராவிடர் கழகத்துக்காரர்கள் போன்ற வகுப்புவாதிகள் ஆதரிக்கிறார்கள். இதன் காரணமாகக் காங்கிரசுக்குச் செல்வாக்கு குறையப் போகின்றது. காங்கிரசுச் செல்வாக்கு குறையப் போகின்றது. காங்கிரசு தோற்கும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்? ஏன் இந்தக் காமராசர் திராவிடர் கழகத்துக்காரர்களைப் பார்த்து உங்கள் பிரச்சாரம் எங்களுக்குத் தேவை இல்லை. ஆதரிக்க வேண்டாம் என்று கூறக்கூடாது" என்று எழுதியது.

இப்படி 'மெயில்' (ஆங்கில நாளிதழ்) பத்திரிக்கை எழுதிய உடனே இந்தப் பத்திரிகையினைக் கண்டித்து ஊர்வலம் நடத்திப் பீச்சில் (சென்னை – கடற்கரையில்) பெரிய கூட்டம் போட்டோம். இந்தச் சேதி தெரிந்து எனது வீடு தேடி அதன் ஆசிரியர் வந்து, "தவறாக எழுதி விட்டோம் - இனிமேல் அப்படி எல்லாம் ஏற்படாது" என்று கேட்டுக் கொண்டார். இந்த நாட்டுப் பத்திரிகைகள் நான் காங்கிரசை ஆதரிப்பது பற்றி இப்படி ஆத்திரப்படுகின்றனவே! நான் காங்கிரசை ஆதரிப்பது பற்றி இப்படி ஆத்திரப்படுகின்றனவே! நான் காங்கிரசை ஏன் ஆதரிக்கின்றேன். காமராசர் ஆட்சியில் இன்ன இன்ன நன்மைகள் ஏற்பட்டு இருக்கின்றன என்று புள்ளி விவரங்களுடன் எடுத்துப் போட்டுப் புத்தகம் போட்டு இருக்கின்றோம். இவற்றைப் பற்றி எல்லாம் எழுதமாட்டார்கள்.

அதுபோலவே ஆச்சாரியார் ஆட்சியில் அவர் பண்ணிய கேடுகள் பற்றி எல்லாம் புள்ளி விவரங்களுடன் எடுத்துக்காட்டி எதிர்க்கின்றோம். இவற்றைப் பற்றியும் ஒருவரிகூடப் போடமாட்டார்கள்.

இந்தக் காங்கிரஸ்காரர்களுக்கும் தாங்கள் செய்த நன்மைகளை எடுத்துச் சொல்ல யோக்கியதை இல்லை. நாங்கள் இன்ன காரியம் செய்து உள்ளோம் - கல்வியில், உத்தியோகத்தில் இன்ன இன்னபடித் தமிழர்களுக்குச் செய்து இருக்கின்றோம் என்று சொல்ல முடியாது. சொன்னால் அது பார்ப்பானுக்கு விரோதமாக ஆகிவிடும். எனவே அவர்களால் எடுத்துச் சொல்ல முடியாது.

நாங்கள் தான் எடுத்துச் சொல்கின்றோம். காமராசருக்கு, 'நாம் இவ்வளவு நன்மைகளா செய்து இருக்கிறோம்? என்று அதிசயமாக இருக்கும்.

ஆச்சாரியாரின் கொடுமைகள் பற்றியும் எடுத்து நாங்கள் தான் பேசுகின்றோம். ராஜாஜிக்கும் நாங்கள் எடுத்துக் காட்டுவதில் இருந்து "நாம் இவ்வளவு கொடுமைகளா செய்து இருக்கின்றோம்" என்று வருத்தப்படுவார்.

                     --------------------------

06.09.1961- அன்று மதுக்கூரில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 01.10.1961

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா