சென்னை, அடையாறில் இயங்கிவரும் ஸ்ரீசங்கரா மேனிலை (Sri Sankara Senior Secondary School) பள்ளி, அதில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் என்ன இருந்தது என்று தெரிந்து கொள்வதற்கு முன்னதாக அரசின் சட்டமான ”அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை” (Right to Education - RTE ) பற்றி சொல்ல வேண்டும். இந்த சட்டத்தின்படி தனியார் பள்ளிகள் அதன் அருகாமையில் மூன்று கிலோமீட்டர் தொலைவிற்குள் வாழும் ஏழைக் குழந்தைகளைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அது அப்பள்ளியின் மொத்த சேர்க்கை எண்ணிக்கையில் இருபத்தைந்து விழுக்காடாக இருக்க வேண்டும். மீதமுள்ள எழுபத்தைந்து விழுக்காட்டினரை அந்த பள்ளியே தேர்ந்தேடுத்துக்  கொள்ளலாம்.

அரசு இந்த சட்டத்தை வரும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்த முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில், அடையாறில் உள்ள அந்தப் பள்ளி அனுப்பிய சுற்றறிக்கையில், ‘நமது மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் வரவிருக்கும் இந்தச் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும்‘ என்று தூண்டிவிட்டிருக்கிறது.

இப்படியொரு போராட்டம் நடத்துவதற்கு அந்தப் பள்ளியின் முதல்வர் சுபலா அனந்த நாராயணன் சொல்லும் காரணங்கள்: ஏழை மாணவர்களை தமது பள்ளியில் சேர்த்தால் ஒழுக்கக் கேடும், கல்வித்தர குறைபாடும் ஏற்படும்; ஏழைகளைப் பயிற்றுவிக்க ஆசிரியர் அதிகநேரம் செலவிட வேண்டும்; இதனால் பள்ளியின் கட்டணத்தை மேலும் உயர்த்த வேண்டி வரும் என்பன.

அந்தப் பள்ளியை அடுத்து மற்றொரு பள்ளியான 'லேடி ஆண்டாள் வேங்கட சுப்பாராவ் மேல்நிலை பள்ளியும்' இதுபோன்ற சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாம்.

கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டப் படிப்பில் சேர்ந்த மாணவி ஜோதி, (பத்தாம் வகுப்பில் 500க்கு 475 மதிப்பெண்களும், பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1105 மதிப் பெண்களும் எடுத்தவர்) தற்கொலை செய்து கொண்டார். கிராமப்புற மாணவியான அவருக்கு ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியவில்லை என்று சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பல்கலையில் சேர்ந்த சில நாட்களிலேயே வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

சில மாதங்களுக்கு முன் சென்னை-குடிசைப்பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி திவ்யா, வகுப்பில் பணம் திருடியதாக சொல்லி குற்றம் சாட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டார். இவ்விரு நிகழ்வுகள் நடந்த போது 'கொலைவாளி'ல் இதுபற்றி எழுதியிருக்கிறேன்.

பெரும்பாலும், உயர்சாதி நிர்வாகத்தால் நடைபெறும் இத்தகைய தனியார் பள்ளி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஏழைகளுக்கு எதிரான நிலைபாட்டிலேயே இருக்கின்றன என்பதற்கு மேற்கூறிய இரு நிகழ்வுகளும் சாட்சி. சாதியத் தீண்டாமையில் சிக்கித் தவிக்கும் சமுதாயத்தில் இதுபோன்று கல்வியிலும் இவ்வாறான நவீனத் தீண்டாமையை அனுமதித்தால் சமூகம் மேலும் சீரழியும் அபாயமுள்ளது.

அந்த நிகழ்வுகளை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் ஸ்ரீ சங்கரா மேல்நிலைப் பள்ளி அனுப்பிய சுற்றறிக்கை இருக்கிறது. மேல்தட்டு குடும்ப குழந்தைகளை படிக்க வைத்து அவர்களை அறிவாளிகளாக ஆக்குவதை மட்டுமே கல்விச் சேவையாக (!) இது போன்ற தனியார் பள்ளிகள் கருது கின்றன. அரசின் அனைத்து வரிச்சலுகைகளையும் பெற்று செயல்படும் தன்நிதிக் கல்வி நிறுவனங்கள் அரசின் சட்டங் களை எதிர்ப்பதோடு அச்சட் டங்களுக்கு எதிராகப் பொது மக்களை திரட்டும் பணியையும் திட்டமிட்டு செய்வது அந்த சுற்றறிக்கை மூலம் அம்பலமாகி விட்டது.

ஏழைக் குழந்தைகள் 25 விழுக்காடு பேரை தனியார் பள்ளிகள் சேர்க்க வேண்டும் என்கிற சட்டத்தை அமல் படுத்துவதற்கு முன்பே இப்படி என்றால்,  நாளைக்கே அச் சட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அந்தப் பள்ளியில் படிக்கப் போகும் குழந்தைகளை இதுபோன்ற பள்ளிகள் என் னென்ன பாடுபடுத்தப் போ கின்றனவோ? அன்றாடம் ஜோதிகளும், திவ்யாக்களும் தற்கொலை செய்து கொள்ளும் அபாயகரமான சூழ்நிலை உருவாகுமோ என்று அச்சமாக இருக்கிறது.

தனியார் பள்ளிகளிலும் ஏழைகளைச் சேர்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் அளவுக்கு நிலைமை மோச மானதற்கு என்ன காரணம்? அருகமைப் பள்ளி அமைப்பை உருவாக்க இந்த அரசு தயங்குவது ஏன்? பொதுப் பள்ளி முறை அமையத் தடையாக இருப்பது எது? அமைச்சர்களும், பணக்கார பெருமுதலாளிகளும் கல்வித் தந்தைகளாக இங்கே மாறத் தொடங்கியதிலிருந்தே கல்வித் துறையின் வாசல்கதவுகள் தனியாருக்கு திறந்து விடப் பட்டது. கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாறவும் அருகமைப் பள்ளி அமைப்பைக் கொண்ட தாய்மொழிவழிப் பொதுப் பள்ளி முறை அமையவும் வலுவான மக்கள் இயக்கம் வர வேண்டாமா?

கல்வியும் மருத்துவமும் அரசால் இலவசமாக தரப்பட வேண்டும். இவ்விரு துறைகளில் தனியாரை அனுமதிப்பது நாட்டைப் பெருமுதலாளி களுக்கு எழுதித் தருவதற்கு சமம். அதைத்தான் இன்றைக்கு மத்திய மாநில அரசுகள் செய்து கொண்டிருக்கின்றன. மது பானக் கடையை நடத்தும் அரசு பொதுப்பள்ளிகளை நடத்த முடியாது என்று சொல்வது முரண்பாடுகளின் மொத்த வடிவம் தான்.

தனியார் பள்ளி வாசலில் நள்ளிரவில் வரிசையில் நின்று எல்கேஜி வகுப்பில் பிள்ளையைச் சேர்க்க விண்ணப்பம் வாங்கும் மனநிலை ஒழிந்து, பொதுப் பள்ளிகளில் நம் பிள்ளைகளை சேர்க்கும் அவசியத்தை நம்மில் எல்லோரும் உணரவேண்டும். அமைச்சர் வீட்டுப் பிள்ளைகள் அரசுப் பள்ளியில் சேர்ந்து படிப்பது இருக்கட்டும். மாற்று அரசியல் பேசும் நாமும் பொதுப் பள்ளிகளை நாடினால்தான் அங்கே தரமான கல்விக்கு உறுதி உருவாகும்.

கலப்பு மணம் சாதிய வேறு பாட்டை களைய வாய்ப் பளிப்பது போல், பொதுப் பள்ளிகளை நாடிச் செல்வதன் மூலமே நவீனத் தீண்டாமையை தீயிட்டுக் கொளுத்த முடியும்
Pin It