நமது நாட்டில் ராஜீய முன்னேற்றங்களுக்கும், சமுதாய முன்னேற் றங்களுக்கும், பொருளாதார முன்னேற்றங்களுக்கும், மகாத்மாவின் ஒத்துழையாமை சம்பந்தப்படாததற்கு முன் உள்ள காங்கிரஸ் காலங்களில், இவற்றிற்குத் தனித்தனியாக ஸ்தாபனங்களும், மகாநாடுகளும் நடந்து வந்தன. ஆனால் மகாத்மா அவர்கள் காங்கிரஸில் பிரவேசித்து காங்கிரஸின் மூலமாக ஒத்துழையாமையை வலியுறுத்தியபின், ராஜீய, சமுதாய, பொருளாதார விஷயங்களோடு மாத்திரமல்லாமல், இன்னும் அநேக நன்மைக்கான காரியங்களும் சேர்த்ததுதான் சுயராஜ்யமென்றும், அவ்வித சுயராஜ்யத்தை காங்கிரஸ் மூலமாகவே அடையக்கூடிய நிலைமையில் கொள்கைகளும் திட்டங்களும் அமைத்து அவற்றிற்கனுகூலமான பல காரியங்கள் தேசத்தில் நடைபெற்று வந்தன.

ஆனால், மகாத்மா அரசாங்கத்தாரால் சிறையிலடைப்பட்ட பின்பு, மகாத்மாவின் கொள்கைக்கும், திட்டங்களுக்கும் விரோதமாயிருந்து, அதை ஒழிக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டு சமயத்தை எதிர்பார்த்து, மகாத்மா கூடவே இருந்துவந்த சில பேர் மகாத்மா திட்டத்தை ஒழிக்க வெளிக்கிளம்பி பொதுச் சட்ட மறுப்புக்கு ஜனங்கள் தயாராய் இருக்கின்றார்களா? இல்லையாவென்பதைக் கண்டறிவதென்னும் சாக்கைக் கொண்டு ‘சிவில் டிசொபிடியன்ஸ்’ கமிட்டி என்ற சட்டமறுப்புக் கமிட்டியெனப் பெயர் வைத்துக்கொண்டு மகாத்மா செய்துவந்த காரியங்களையெல்லாம் அதற்கு நேர் விரோதமாய் இருந்து அடியோடு கவிழ்ப்பதற்கான முயற்சிக்கு அதை உபயோகப்படுத்திக்கொண்டு, ஒத்துழையாமைக்கு விரோதமான தத்துவங்களில் புகுந்து, மகாத்மாவின் உழைப்பால் இரண்டு, மூன்று வருடங்களில் ஏற்பட்ட நன்மைகளையெல்லாம் இடித்துத் தள்ள ஆரம்பித்தார்கள்.

கயா காங்கிரஸில் ஒத்துழையாமை கட்டிடம் உருக்குலையத் தொடங்கி, டில்லியில் அஸ்திவாரமே தளர்ந்து, காக்கினாடாவில் தரைமட்டமாக்கி விடப்பட்டது. ஜெயிலிலிருந்து வந்த மகாத்மா காந்தி அவர்கள், தான் சிறைக்குச் சென்றபிறகு, தனது கட்டிடத்தை இடிக்கவிடாமல் காக்க வேண்டுமென்று நினைத்துப் பல வழிகளிலும் அவஸ்தைப்பட்டு தங்களால் கூடுமான வரையில், அதன் சின்னமாவது தேசத்தில் இருக்கட்டும் என்று நினைத்து கஷ்டப்பட்டு வந்தவர்களை அலட்சியம் செய்து, இடித்தவர்கள் தானும் கூடவே சேர்ந்து கொண்டு, கொஞ்ச நஞ்ச மீதியுள்ள ஒத்துழையாமையின் அஸ்திவாரங்களையும் இடித்தெறிய ‘கல்கத்தா பேக்ட்’ மூலமாக முகூர்த்தம் வைத்து, பெல்காம் காங்கிரசில் அடியோடே அஸ்திவாரத்தையும் தொலைத்து, அதை உழுது, ஒத்துழைப்பு விதையையும் விதைத்து, தானே கூட இருந்து தண்ணீரும் பாய்ச்சி, பாட்னாவில் பூவும் பிஞ்சும் விடக்கூடிய நிலைமையில் கொண்டு வந்து விட்டுவிட்டார்.

மகாத்மா அவர்களை, இம்மாதிரி மூன்று வருடத்து வேலையை இப்படி இடித்துவிடலாமாவென்று கேட்டால் என்னுடைய இயக்கத்துக்கு, விரோதமாயிருந்தவர்களின் செய்கை ஒரு புறமிருந்த போதிலும், என்னுடைய இயக்கத்துக்கு அனுகூலமாயிருந்து எனக்கு உண்மையாக உதவி செய்து கொண்டு வந்த என்னுடைய பிரதம சிஷ்யர்கள் என்போரே ரிப்பேர் செய்யக் கூடாத நிலைமையில் கெடுத்துவிட்டதால், ரிப்பேர் செய்ய முடியாத இடிபட்ட ஸ்தாபனத்தை நான் அதை அடியோடு ஒழிப்பதைத்தவிர வேறு வேலை செய்வதற்கில்லை. ஏனெனில்,

1. நான் சிறைக்குப் போன உடனே நான் செய்து கொண்டு வந்த காரியத்தை விட்டு விட்டு நான் யாரை முக்கியமாய் நம்பியிருந்தேனோ அவர்களே சட்டமறுப்புக் கமிட்டிக்கு இணங்கிவிட்டதொன்று.

2. கயாவில் சட்டமறுப்பு ஆரம்பிப்பதென ஓர் தீர்மானம் செய்துகொண்டு, பொது ஜனங்களை ஏமாற்றிப் பணம் வசூல் செய்து சொன்னபடி நடக்காமல், வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து பொது ஜன நாணயத்தை இழந்ததொன்று.

3. பிறகு, கொஞ்ச காலம் வரையிலும் பிரசாரத்தை நிறுத்தி வைத்திருப்பதென்று ஒப்புக்கொண்டு பொது ஜனங்களுடைய கவனத்தை வேறுவழியில் செல்ல இடங்கொடுத்ததொன்று.

4. டில்லியில் தனிக்காங்கிரசொன்றை ஏற்படுத்தி, அந்தக் கொள்கைக்கு விரோதமான காரியங்களை அநுமதித்ததொன்று.

5. பிறகு, காக்கினாடாவில், நான் சீக்கிரத்தில் விடுதலையாகி வந்துவிடுவேனென்ற விஷயம் தெரிந்திருந்தும் எனது சகாக்கள் பொது ஜனங்களை ஏமாற்றி, எனது தத்துவத்துக்கு விரோதமான காரியங்களை ஒப்புக்கொள்ளும்படிக் கட்டாயப்படுத்தினதொன்று,

இந்த நிலைமையில் நான் ஜெயிலிலிருந்து வந்த பிறகு, வேறொன்றும் செய்வதற்கில்லாமல், ஒத்துழையாமையை ஒழித்துவிடுவதைத் தவிர வேறு மார்க்கமில்லையெனக் கண்டுகொண்டேன். எனது இயக்கத்தின் எதிரிகளின் மனப்பான்மை ஒரு விதமாயிருந்த போதிலும் எனது சகாக்களிலேயே மாகாணங்களுக்கு இரண்டொருவர் தவிர மற்றவர்களுக்கெல்லாம் ஒத்துழைப்பு மனப்பான்மையே வளர்ந்துக் கொண்டு வருவது நன்றாய்த் தெரிகிறதென்றும், ஆதலால் ஒத்துழைப்புக்கே வழியைத் திறந்து விட்டுவிட வேண்டுமென்னும் முடிவுக்கு வந்துவிட்டேன். சரியாகவோ, தப்பாகவோ நான் கட்டின கட்டிடத்தை இடிக்க எனக்கு பாத்தியமுண்டு. இதை ஒப்புக் கொள்ளாதவர்கள் வேண்டுமானால் தாங்களே வேறு கட்டிடம் கட்டிக்கொள்ளட்டும் என்றும் சொல்லி முடிந்துவிட்டதோடு தேசத்தின் நன்மையைக் கோரி, முன் சொன்ன ராஜீய - சமூக - பொருளாதார விஷயங்களுக்கு காங்கிரஸை எதிர்பார்ப்பது உபயோகமற்ற காரியமென்றும் கருதி, தனது முக்கியத் திட்டங்களாகிய இந்து - முஸ்ஸீம் ஒற்றுமை, மதுவிலக்கு, தீண்டாமை முதலிய காரியங்களையும் காங்கிரஸ் திட்டத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டு, இந்நான்கில் ஏதாவதொரு காரியத்தை மாத்திரம்தான் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி, நூல் நூற்கிற விஷயத்தை மாத்திரம் தன் சொந்தத்தில் வைத்துக்கொண்டு மற்றவைகளை விட்டு மெல்ல விலகிக் கொண்டார்.

இந்த நிலைமையில் காங்கிரசானது பழைய கால காங்கிரஸை விட சாதாரண நிலைமைக்கு வந்து விட்டது. காங்கிரசின் கொள்கை இந்திய மகா ஜனங்கள் சுயராஜ்யமடைய வேண்டுமென்றும், அதற்கு “நீதியும் அமைதியும்” பொருந்திய எல்லா முறைகளையும் அனுசரிக்க வேண்டுமென்பதுதான்.

இதற்குத் திட்டமாக தற்காலம் காங்கிரசிலிருப்பது, “ சட்ட சபைகளைக் கைப்பற்றி, அவற்றை சுயராஜ்யத்திற்கு ” உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

நமது நாட்டில் ராஜீய விசயமாக மற்றும் பல ஸ்தாபனங்களுமிருக் கின்றன. அவைகளில் முக்கியமானது மிதவாதக் கட்சி, ஜஸ்டிஸ் கட்சி, ஐக்கிய தேசீயக் கட்சி, பிராமணரல்லாதார் தேசீயக் கட்சி, சுயேச்சைக் கட்சி, பெஸண் டம்மையார் கட்சி முதலியன.

இவற்றில் ஒவ்வொரு கட்சியும் மேற்கண்ட காங்கிரஸ் கொள்கைக்கும் மாறுபட்டவை அல்லவே அல்ல. உதாரணமாக, ஜஸ்டிஸ் கட்சியும், பிராமணரல்லாத தேசீயக் கட்சியும் தனது ராஜீயக் கொள்கையை காங்கிரசின் கொள்கையைப் போலவே ஏற்படுத்திக் கொண்டிருப்பதோடு ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டும், சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டும் எவ்வளவு சீக்கிரத்தில் பெற முடியுமோ அவ்வளவு விரைவில் சுயராஜ்யம் பெறுவதென்ற கொள்கையை உடையதாயிருக்கிறது.

ராஜீய விஷயத்தில் மற்ற கட்சிகளுக்கும், காங்கிரசுக்கும் வித்தியாசமிருந்ததெல்லாம் ஒத்துழையாமை திட்டம் ஒன்றுதான். இது பெல்காமில் எடுபட்டாகிவிட்டது. சட்டத்திற்குக் கட்டுப்பட்டு சுயராஜ்யம் பெறுவதையும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டதற்கறிகுறியாக சட்டசபைப் பிரவேசத்தையும் அனுமதித்துவிட்டது. பிரிட்டிஷ் சம்பந்தமில்லாமலே சுயஆக்ஷி இருக்க வேண்டும் என்பதே காங்கிரஸ் அபிப்பிராயமல்லவென்பதற்கு அறிகுறியாக ஜனாப் மௌலானா, ஹஸரத் மோகினி முதலானவர்கள் கொண்டு வந்த சுயேச்சைத் தீர்மானத்தையும் காங்கிரஸ் தோற்கடித்து விட்டது.

ஆதலால், தற்காலமுள்ள காங்கிரஸ் கொள்கைகளும், அதன் திட்டமும், ஜஸ்டிஸ் ராஜீயக் கொள்கைகளையே அனுசரித்து இருப்பதுடன் அல்லாமல், காங்கிரஸ் கொள்கையைவிட ஜஸ்டிஸ் கொள்கையானது ஒரு அடி முற்போக்குடையதாயிருக்கின்றதென்று கூட சொல்லலாம். எப்படியெனில் “ காலதாமதமில்லாமல் சீக்கிரம் சுயராஜ்யம் பெற வேண்டும்” என்கிற ஓர் அவசர காலாவதியும் ஜஸ்டிஸ் திட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது. மற்றபடி, சர்க்காரோடு ஒத்துழைப்பதிலும் சுயராஜ்யக் கட்சியினுடைய அனுபவமானது ஜஸ்டிஸ் கட்சி முதலியவைகளை ஒத்ததாகவே இருக்கிறது. சுயராஜ்யக் கட்சியார், சர்க்கார் கமிட்டிகளிலும் அங்கம் பெற்றிருக்கிறார்கள். சர்க்கார் சம்பளம் பெறத்தக்க உத்தியோகப் பதவிகளிலும் அமர்ந்திருக்கிறார்கள்; சர்க்காரால் அளிக்கப்பட்டுள்ள பட்டங்கள் பெற்றவர்களும், சுயராஜ்யக் கட்சியிலிருக்கின்றார்கள்.

முனிசிபாலிட்டி, ஜில்லா போர்டு, தாலூகா போர்டு முதலியவைகளில் சர்க்கார் நியமன ஸ்தானத்தை ஏற்றுக் கொண்டவர்களும் சுயராஜ்யக் கட்சியில் இருக்கின்றார்கள். கதரில் நம்பிக்கை இல்லாதவர்களும், சுயராஜ்யக் கட்சியிலிருக்கின்றார்கள். மதுபானம் உற்பத்தி செய்கிறவர்களும், அதனை விற்கிறவர்களும், அதை விளம்பரப்படுத்துகிறவர்களும், அயல்நாட்டுத் துணி வியாபாரிகளும், பிறவியில் உயர்வு தாழ்வு உண்டு என்று சொல்லுகிறவர்களும் சுயராஜ்யக்கட்சியில் இருக்கின்றார்கள். இத்தகைய சுயராஜ்யக் கட்சியாரை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு பிரதான ஸ்தானமும் அளிக்கப்பட்டாய்விட்டது.

இந்த நிலைமையில், இந்தியாவிலுள்ள ராஜீய ஸ்தாபனங்கள் சகலமும் - காங்கிரஸ் உட்பட ஒரே கொள்கையைத்தான் கொண்டதாயிருக்கிறது. ஆகையால் தேச முன்னேற்றத்திற்குக் காங்கிரஸ் மகாசபையொன்றுதான் உள்ளது என்று சொல்வது இனி பொருளற்ற வார்த்தையாகும். எனவே பொது மக்கள், காங்கிரஸில் சேராவிட்டால் நாம் தேசபக்தர்களாக மாட்டோமோவென்று பயப்பட வேண்டியதும்,ஜஸ்டிஸ் கட்சியிலிருந்தால் காங்கிரசில் இருப்பவர்களைவிடத் தாழ்ந்தவர்களாகிவிடுவோமோமென்றும் பயப்படுவதும் அறியாமையேயாகும்.

இந்தியர் ஒவ்வொருவரும் சுயமரியாதை அடைவதும், விடுதலை பெறுவதும், தனது முக்கிய நோக்கமாகக் கொள்ள வேண்டும். இந்நோக்கம் கொண்ட ஸ்தாபனம் எதுவோ அதெல்லாம், தேசீய காங்கிரஸ்தான் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 20.12.1925)