டைட்டானிக் போன்ற பிரம்மாண்டத் திரைப்படங்களைத் தந்த ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் பதினோரு ஆண்டுகளுக்குப்பின்பு இந்த அவதார் படத்தை அளித்துள்ளார். பிரம்மாண்டமாய் 3டியில்  திரையில் மிரட்டும் இப்படம் 1200 கோடி ரூபாய் செலவில் நான்காண்டுகள் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இயற்கையையும் வனங்களையும் மரங்களையும் அழிக்கும் ஆயுதமேந்திய ஏகாதிபத்தியக் கொள்ளைக்காரர்களை நவீன விஞ்ஞானத் திரைத்தொழில்நுட்பத்துடன் இப்படம் அம்பலப்படுத்துகிறது. அந்த வேற்றுகிரக மனிதர்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியை நவீன ஆயுதங்களை எதிர்த்து அவர்கள் வெற்றி பெறுவதாகப் படம் சிறப்பாக முடிகிறது. இந்த மாபெரும் போராட்டத்தில் அங்குவாழும் வினோத மிருகங்களும் பறவைகளும் மனிதர்களுக்கு உதவுகின்றன. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாய் இப்போரில் ஈடுபடுவதாய்க் காட்டியிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

ஜேக் ஒரு பாரிச நோயால் பாதிக்கப்பட்ட  நடக்க முடியாத ராணுவ வீரர். தனது சகோதரனுக்குப் பதில் மாற்றாக "பண்டோரா" என்ற கிரகத்திற்குச் செல்ல வருகிறார். அவரை ஒரு ராணுவக்கும்பல் தங்கள் விஞ்ஞானிகளைப் பயன்படுத்தி பண்டோராவுக்கு தங்களுக்கு உளவாளியாக அனுப்பி வைக்கிறது. ஜேக் பண்டோராவுக்குப் போய் இறங்கியதும் புதிய அவதாரமாகிறார். அதுமுதல் படம் துள்ளிப்பாய்ந்தோடுகிறது.

பண்டோராவின் பயங்கர மிருகங்கள் ஜேக்கைக் கொல்லவருகின்றன. அங்குள்ள மக்களின் தலைவரின் மகள் இளவரசி வந்து ஜேக்கைக் காப்பாற்றுகிறாள். இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஜேக் பண்டோராவின் நிரந்தரக் குடிமகனாக விரும்புகிறார். இதற்காக அவர் தனது காதலியிடம் போர்ப்பயிற்சி உள்ளிட்ட பயிற்சி பெறுகிறார். ராணுவத் தளபதியிடம் ஜேக் பண்டோராவின் நிலைமைகளையும், மக்களையும் பற்றி விளக்குகிறார். அடர்ந்த காடு, பிரம்மாண்டமான மரம், பறவைகள், விலங்குகள், இயற்கை மீது  அம்மக ்களுக்குரிய பாசம், இறந்தவர்களை அவர்களது ஏவா என்ற கடவுளிடம் மன்றாடி உயிர்பிழைக்க வைப்பது போன்ற செய்திகளையும் கூறுகிறார். தளபதி அந்த கிரகத்தை தன்னிடம் ஒப்படைத்துவிட்டு அம்மக்கள் வெளியேற வேண்டுமென்றும், இல்லையேல் குண்டுவீசி அழிப்பேன் என்றும் கூறுகிறான். ஜேக் மறுக்கிறார்.

soNormal" style="text-align: justify;">பண்டோராவை அழிப்பதை பெண் விஞ்ஞானி கடுமையாய் எதிர்க்கிறார். ஒரு பெண் விமானியும் அவரது குழுவினரும் விஞ்ஞானியோடு சேர்ந்து ராணுவ தளபதிக்கெதிராக பண்டோராவைப் பாதுகாக்கும் புனிதப்போரில் தங்களை ஈடுபடுத்தி தியாகம் செய்கிறார்கள். ராணுவத்தளபதி பண்டோரா மீது குண்டுகளை வீசி நாசம் செய்கிறான் ஜேக்கும் அவனது காதலியும் மக்களைத் திரட்டிப் போராடுகிறார்கள். பறவைகளும் மிருகங்களும் அவர்களுக்கு உதவுகின்றன. மேட்ரிக்ஸ், ஸ்டார்வார்ஸ், ஜூராசிக் பார்க் போன்ற காட்சிகள் திகிலூட்டும் முறையில் படமாக்கப்பட்டுள்ளது.

இரண்டு மணிநேரத்திற்கு மேலாக நம்மை ஜேம்ஸ் கேமரூன் ஒரு மாயக் கனவுலகிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறார். மனிதர்கள், பறவைகள், மிருகங்களோடும், மரம் செடி கொடிகளோடும் தங்கள் கூந்தலை ஒட்டவைத்து அவைகளோடு உ றவாட முடியும் என்று காட்டுவது புதுமையாக உள்ளது. கல்மனதுக்காரர்களும்கூட இயற்கையை, மரங்களை, பறவைகளை, மிருகங்களை நேசிக்கத்தூண்டும் காட்சிகள் உள்ளன. இயற்கையை அழிக்கும் எத்தர்கள் இன்று கொடூர வில்லன்களாக, வக்கிரபுத்தி கொண்டவர்களாக, பேராசை வெறிபிடித்தவர்களாக மாறியிருக்கிறார்கள். அவர்கள் கொடூரமான ஆயுதங்களையும் கூலிப்படைகளையும் கையில் வைத்திருக்கிறார்கள். இவர்களிடம் இரக்கத்தை மருந்துக்குக்கூட எதிர்பார்க்க முடியாது என்பதை படம் பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள முடியும்.

படத்தில் நடிகர், நடிகை என்றில்லாமல் கதையின் பாத்திரங்களோடு உருமாற்றப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் நம் கண்முன்னே நேரில் பார்ப்பது போன்ற தோற்றத்தை 3டி தொழில்நுட்பம் ஏற்படுத்துகிறது. பின்னணி இசையும் நம்மை மெய்மறந்து படம் முழுக்க அழைத்துச் செல்கிறது. விஞ்ஞானமும், கற்பனையும், எதார்த்தமும் இணைந்த இந்தத்திரைப்புனைவு நம்மைக் கண்ணுக்கெட்டாத தூரத்திற்கு இழுத்துச்செல்கிறது.

ஜேம்சின் கற்பனையில் மனிதனை மிஞ்சிய ஒரு மேலான சக்தியும் உதித்துள்ளது. அந்த மாந்திரீகப்பெண் கதாநாயகனை இருமுறை பிரார்த்தனை செய்து பிழைக்க வைக்கிறாள். படத்துக்கு இதுவும் தேவை எனக் கருதுகிறார் போலும். இயற்கையில் தோன்றிய ஒவ்வொரு படைப்பும் ஒன்றோடொன்று இணக்கமாய் வாழ முடியும் என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார். மொத்தத்தில் இதுவரை பார்த்தறியாத படம் எனப் பாராட்டலாம்.

- எஸ்.ஏ.பி.