நவம்பர் மாத இறுதியிலிருந்து டிசம்பர் இறுதி வரை வெளிவந்துள்ள படங்களின் எண்ணிக்கை மலைப்பூட்டுகிறது. நந்தலாலா, மந்திரப் புன்னகை, சிக்கு புக்கு, மகிழ்ச்சி, அரிது அரிது, சித்து +2, அதிசய மணல் மாதா, கோட்டி, நெல்லு, ஈசன், மன்மதன் அம்பு, தென்மேற்குப் பருவக்காற்று, விருதகிரி, அய்யனார், நில் கவனி செல்லாதே, ரத்த சரித்திரம், காந்திபுரம், ஆட்டநாயகன், சுட்டி சாத்தான் 3-டி, சிந்தாமணி கொலை வழக்கு என்று பட்டியல் நீளுகிறது. பாபாசாகிப் அம்பேத்கர் தமிழ்ப்பதிப்பும் இம்மாதமே வெளிவந்தது. 20க்கு மேற்பட்ட படங்கள் டிசம்பரில் வெளியானதில் படத்தயாரிப் பாளர்களின் அச்சமிகுந்த உளவியல்தான் வெளிப்படுகிறது. தீபாவளிக்கு நாலே படங்கள்தாம் வந்தன. தீபாவளிப் படங்களோடு போட்டி போட முடியுமா என்கிற பயமும் பொங்கல் படங்கள் வந்து சேருவதற்கு முந்தி விடுவோமே என்கிற அவசரமும் சேர்ந்துதான் இந்தக் கொடுமை. ஏகபோகமாகிவரும் தமிழ்த் திரைப்படத் துறை சந்திக்கும் நெருக்கடிகளில் இதுவும் ஒன்று.

மாதம் 25 படம் வெளியானால் தமிழ் ரசிகன் என்ன ஆவான்? பத்திரிகைகளில் சினிமா விமர்சனம் எழுதுகிறவர்களும் எல்லாப் படங்களையும் பார்த்து ஒரு கணிப்புக்கு வருவதும் மனித முயற்சிக்கு அப்பாற்பட்டதாகும். எழுதும் தகுதியும் இந்த எல்லாப் படங்களுக்கும் இருப்பதுமில்லை. இந்த நீண்ட பட்டியலில் குறிப்பிட்டுப் பேசத்தக்க படமாக தென்மேற்குப் பருவக்காற்று, நெல்லு, நந்தலாலா போன்ற படங்கள் மட்டுமே நிற்கின்றன. வேறு சில காரணங்களுக்காக சில படங்கள் பற்றி மட்டும் இங்கே பேசலாம்.

மன்மதன் அம்பு 

உலகநாயகன் என்று போற்றப்படும் கமலஹாசன் கதை, திரைக்கதை வசனம் எழுதிக் கதாநாயகனாக நடித்துள்ள படம் மன்மதன் அம்பு. உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பு. ஆகவே கலைஞர் டிவி ஆதரவுள்ள படம். 50 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட (ஸ்மால் பட்ஜெட்!) படம் தான். கமல் எப்போதும் ஒரு சீரியஸ் படம் கொடுத்தால் அடுத்து ஒரு காமெடி படம் கொடுப்பார். அந்த விதி பிசகாமல் உன்னைப்போல் ஒருவனுக்குப் பிறகு வந்துள்ள படம் இது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம் என்பதால் கமலும் அவரும் இணைந்து கொடுத்த அவ்வை சண்முகி, பம்மல் கே.சம்பந்தம், பஞ்ச தந்திரம், தெனாலி போல வயிறு குலுங்கச் சிரிக்கும் ஒரு படத்தை எதிர்பார்த்து (நல்லா சிரிச்சு ரொம்ப நாளாச்சய்யா) கமல் ரசிகர்கள் காத்திருக்க, மன்மதன் அம்பு அதை நோக்கிப் பாயவில்லை. ஏமாற்றம்தான்.

மன்மதனின் அம்பு முதலில் தப்பிப் பாய்ந்து விடுகிறது.கடைசியில் சரியாகக் கதாநாயகனின் மீதே பாய்ந்து படம் முடிகிறது. கதை அவ்வளவு தான். த்ரிஷா நடிகையாக நடித்துள்ளார். அவரை வெறிகொண்டு காதலிக்கும் தொழிலதிபராக மாதவன். சந்தேகப் பிராணியான அவரிடம் சண்டை போட்டு மன நிம்மதி தேடி ஐரோப்பியச் சுற்றுப் பயணம் செல்லும் த்ரிஷாவைப் பின் தொடர்ந்து அவர் வேறு ஆண்களோடு பழகுகிறாரா என்பதைக் கண்காணித்து உடனுக்குடன் தகவல் அனுப்ப மாதவன் அனுப்பிய டிடெக்டிவ் (துப்பறிபவர்) ஆக மேஜர் மன்னார் வேடத்தில் கமல். கடைசியில் த்ரிஷா மாதவனைக் கைகழுவி விட்டு கமலைக் கைப்பிடிக்கிறார்.இந்தக் கதைக்காக கேமராவைத் தூக்கிக்கொண்டு ஐரோப்பா பூராவும் சுத்திச் சுத்திப் படம் எடுத்திருக்கிறார்கள். 2 கோடி ரூபாயில் மைனா, களவாணி மாதிரி படங்கள் வந்து தமிழ்நாட்டைக் கலக்கிக் கொண்டிருக்கும் உண்மையை இவர்கள் எப்போதும் கவனிப்பதே இல்லை.

படத்தில் கமல் ரொம்ப வயசாகி அலுத்துப் போனவர் மாதிரி வருகிறார். ரிடையர்டு மேஜர் என்றால் அப்படி இருப்பது சரிதான். ஆனால், த்ரிஷா மாதிரி சின்னப்பிள்ளைக்கு ஜோடி என்னும்போது பொருந்தவில்லை. நல்ல வேளையாக படத்தில் டூயட் பாட்டெல்லாம் போட்டு நம்மைக் கொல்லவில்லை. குத்துப்பாட்டு, சண்டை போன்ற கூத்துகளும் இல்லை. திரைக்கதை இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் வழக்கமாக கே.எஸ்.ரவிக்குமார் படங்களில் காணப்படும் வர்த்தக வேகம் இப்படத்தில் இல்லாமல் இழுவையாகப் போய்க்கொண்டே இருக்கிறது. இறுதிக்காட்சி சுத்த சொதப்பல். உலகநாயகன் படம் என்பதால் அவரே படம் முழுக்க தலையைக் காட்டிக்கொண்டிராமல் மாதவன் த்ரிஷாவுக்கு முக்கிய இடம் கொடுத்திருப்பதைப் பாராட்டலாம்தான். ஆனால் படம் இதோ வேகமெடுக்கப் போகிறது வேகமெடுக்கப்போகிறது என்று 152 நிமிடமும் ஆவலோடு காத்திருந்து அலுப்போடு எழுந்து வரவேண்டியதாயிற்று.

இப்படத்தில் அறிமுகமாகியுள்ள இரண்டு இளைஞர்கள் பற்றிக் குறிப்பிட வேண்டும். ஒளிப்பதிவாளராக அறிமுகமாகியுள்ள மனுஷ் நந்தன் (எழுத்தாளர் ஞாநி -பத்மா இவர்களின் புதல்வர் இவர் என்பது ஒரு தகவல்) சிறப்பான பங்களிப்பைச் செய்துள்ளார். படத்தொகுப்புச் செய்துள்ள ஷான் முகம்மது வரவேற்கப்பட வேண்டிய இளைஞர். கப்பல் காட்சிகளில் மனுஷ் நந்தனின் கேமரா நம்மை அங்கேயே கொண்டு நிறுத்துகிறது. நீல வானம் பாடல் காட்சி படமக்கப்பட்டுள்ள விதம் தமிழ் சினிமாவுக்குப் புதிது. கே.எஸ்.ரவிக்குமார் தன் வழக்கமான பாதையிலிருந்து விலகியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனாலும் இந்தக் கதைக்காக 50 கோடி செலவழிப்பது என்ன நியாயம் என்று நமக்குப் புரியவில்லை. ரொம்ப சுமாரான படம். 

விருதகிரி 

தேசிய முற்போக்கு திராவிடர் கழகத் தலைவர் புரட்சிக்கலைஞர் விஜய்காந்த் இயக்கியுள்ள முதல் படம். அவர் நடித்து வெளிவரும் 153ஆவது படம். 2011 சட்டமன்றத் தேர்தலை மனதிற்கொண்டு தன்னுடைய விருத்தாச்சலம் தொகுதியில் புகழ்பெற்ற சாமி பெயரான விருதகிரீஷ்வரர் பெயரைச் சுருக்கிப் படத்துக்கு விருதகிரி என்று பெயர் வைத்துள்ளார். விஜய்காந்த் என்றாலே திறமை மிக்க பொறுப்புள்ள ஒரு போலீஸ் அதிகாரி என்பது தமிழ்நாட்டில் பேசத்தெரியாத பச்சைப்பிள்ளைக்குக்கூடத் தெரியும். ஆனால் போலீசிலேயே உயர்ந்த போலீஸ்கள் வாழும் ஸ்காட்லாண்ட் யார்டுக்குத் தெரியுமா? அங்கே பயிற்சிக்குப் போன இடத்தில் ஸ்காட்லாண்ட் நகரில் ஊடுறுவும் தீவிரவாதிகளைப் பிடிக்க முடியாமல் ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் திணறிக்கொண்டிருக்க நம்ம பொறுப்புள்ள போலீஸ் அதிகாரி விஜய்காந்த் நுழைந்து தீவிரவாதிகளை துவம்சம் செய்து பிடித்துக் கொடுக்கிறார். ஸ்காட்லாண்ட் யார்டே வியந்து தன்னை மறந்து மெய்சிலிர்த்து நிற்கிறது. இப்படி ஒரு போலீஸ் அதிகாரியா? (எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிச்சுக் கதை எழுதியிருக்காங்க என்று நமக்குப் புல்லரிக்கிறது)

கட். அடுத்த காட்சி இந்தியா. பத்திரிகையாளர்கள் அவரை மொய்த்து விடுகிறார்கள். 25 மைக்குகளுக்கு முன்னால் கையைக் கையை ஆட்டி விஜய்காந்த் பேசும் அதே அரசியல் மேடை பாணியில் பிரஸ்மீட்டிலும் முழங்குகிறார். படம் முழுக்கவே இதே கையை ஆட்டிப் பேசும் வசனம் மட்டும்தான் அவருக்கு-அரசியல் படமாச்சே. ஒரு அரசாங்க அதிகாரியாக இருக்கும்போதே இவ்வளவு நல்லது செய்றீங்களே இந்த அரசாங்கமே உங்க கட்டுப்பாட்டுக்குள்ளே வந்துட்டா எப்படி இருக்கும் என்று திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப யாராவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். யாரும் சொல்லவில்லையென்றால் விஜய்காந்த்தே இந்த வசனத்தைச் சொல்லி விடுகிறார். படத்தின் ஒரே செய்தியும் அதுதான். படத்தில் கதை என்றும் ஒன்று சொல்கிறார்கள். தேசிய திராவிடக்கட்சி என்பதால் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றி விஜய்காந்த் மிகவும் கவலைப்பட்டுள்ளார். அது ஒரு தேசியப் பிரச்னை அல்லவா? அடுத்த விமானத்தில் ஏறி விஜய்காந்த் ஆஸ்திரேலியா செல்கிறார். அப்புறமென்ன? அங்குள்ள இந்திய எதிரிகளைத் துவம்சம் செய்து மாணவிகளைக் காப்பாற்றி நாடு திரும்புகிறார்.

நமக்கு வடிவேலு காமெடிக்காட்சி ஒன்றில் வரும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. “இன்னுமாடா நம்ம சனங்க நாம சொல்றதையெல்லாம் நம்புறாங்க..?” ஆனால் தேமுதிக கட்சியின் அரசியல் எவ்வளவு தெளிவாக இருக்கிறதோ அதே ‘தெளிவு’ இப்படத்திலும் இருக்கிறது. கலைஞர் குடும்ப அரசியல் மற்றும் திமுக ஆட்சி மீதான சில்லறை விமர்சனங்களை பன்ச் டயலாக்காகப் பேசுவதே அரசியல் என்று நம்பிப் படத்தை எடுத்திருக்கிறார் விஜய்காந்த். முந்தைய படங்களைவிட இதில் பெருத்த உடலுடன் வசனம் பேசினால் மூச்சிறைக்கும் உடல் மொழியுடன் சிரமப்பட்டுச் சிரமப்படுத்தியிருக்கிறார் விஜய்காந்த். பல பத்திரிகைகளில் விஜய்காந்த் ரசிகர்களைக் குஷிப்படுத்தும் படம் இது என்று எழுதியிருந்தார்கள். ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் விஜய்காந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களைத் தவிர வேற மனுச மக்க யாரும் உட்கார்ந்து பார்க்க முடியாத படம் இது. இதை வச்சிக்கிட்டு 2011இல் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்று சீரியஸ்ஸாக நம்புகிறார்கள் என்பதுதான் படத்தைவிடப் பெரிய நகைச்சுவை. படத்தின் ஒரே ஆறுதல் வழக்கம் போல் தனக்கு ஒரு ஜோடியைப்போட்டு மழையில் நனைய நனைய ஒரு டூயட் பாடலை சேர்க்காமல் விட்ட பெருந்தன்மைதான். 

ஈசன்

சுப்பிரமணியபுரம், நாடோடிகள் போன்ற வெற்றிப்படங்களைத் தந்த எம்.சசிகுமார், சமுத்திரக்கனி கூட்டணியில் வந்துள்ள ஈசன் முந்தைய படங்களைப்போல நம்மைக் கட்டிப் போட்டு வைக்க முடியாமல் தொய்ந்து தொங்குகிறது. வழக்கமான பழிவாங்கும் கதைதான். மாறுதலாக கொலையாளி ஒரு ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் என்று சொல்லியிருக்கிறார்கள். இதெல்லாம் படிக்கிற மாணவ மனங்களில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்கிற அச்சம் நமக்கு வருகிறது. மீண்டும் மீண்டும் சலிப்பூட்டும் அளவுக்குக் காட்டப்படும் பப் மற்றும் டிஸ்கொதே கிளப் ஆட்டங்களும் ஒளிக் கற்றைகளும்(கண்ணு வலிக்கு சாமிகளா) சென்னை நகரின் இரவு வாழ்க்கையைச் சொல்கிறார்கள் என்று புரிய வைக்கின்றன. ஆனாலும் வீடற்ற பிளாட்பார வாசிகளான மக்களின் இரவுகள்தான் உண்மை யான சென்னை இரவு வாழ்க்கை என்பதை யாராவது எப்போதாவது சொல்வார் களா என்கிற ஏக்கம் மீண்டும் நமக்கு வருகிறது. அங்காடித் தெருவில் சில காட்சிகள் வந்தது நினைவுக்கு வருகிறது.

ஒருவித சஸ்பென்ஸ் படம் முழுக்க நிரவி யிருப்பது பாராட்டத்தக்கது என்றாலும் நீளமான ப்ளாஷ்பேக் வந்து படத்தை பெரும் இழுவையாக மாற்றியிருகிறது.முற்பகுதியில் ஈவ் டீசிங்கில் பலியாகும் மாணவியைக் காட்டி வித்தியாசமாக ஏதோ சொல்லப்போகிறார் சசிகுமார் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உடனே ஏமாற்றி விடுகிறார்.

எம்.சசிகுமார் என்றாலே த்ரில்-வெட்டு, குத்து, தூக்கிருவம்டா என்று அடையாளப்படும் அளவுக்கு கொலைகாரப் படமாகவே தந்துகொண்டிருக் கிறார். பொதுவாக கிராம வாழ்க்கையை முன்வைத்து வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்கள் அப்படியே சினிமாத்துறை தனக்குப் பட்டிக் காட்டு முத்திரை குத்திவிடக்கூடாதே என்கிற பதட்டத்தில் அடுத்த படத்தில் பயங்கர மாநகர வாழ்க்கையை முன்வைத்துப் படம் பண்ணி விடுவது தமிழ்ச்சினிமா உலகில் பாரதிராஜா காலம் தொட்டு நான் மகான் அல்ல சுசீந்திரன் வரை நடந்து வருகிற ஒன்றுதான். அதே பாட்டையில் எம்.சசிகுமாரும் ஒரு படம் பண்ணி விட்டார் அவ்வளவுதான். வாழ்க்கையின் மீது ஒரு பயமும் அவநம்பிக்கையும் உண்டாக்கும் படம் ஈசன். 

நந்தலாலா 

ஆழமான வாழ்வனுபவத்தைத் திரையில் கொண்டுவந்து நம்மைத் திக்குமுக்காடச் செய்திருக்கும் படம் நந்தலாலா. ஜப்பானியப் படமான கிக்குஜிரோவிலிருந்து உந்துதல் பெற்று (சில காட்சிகள்கூட அதே பணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது) எடுக்கப்பட்ட படம் என்கிற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும் அதெல்லாம் இந்தப்படம் கொடுக்கும் அனுபவத்தின் முன்னால் கால்தூசு பெறாத விமர்சனமாகிப் போகிறது. மிஷ்கின், அஷ்வத்ராம், இளையராஜாவின் இசை ஆகிய மூவர் கூட்டணியில் மகேஷ் முத்துச்சாமியின் கேமிராவின் உதவியோடு இப்படம் நம்மை ஏதேதோ உயரங்களுக்கு அழைத்துச்செல்கிறது. மனநிலைப் பிறழ்வுக்காளாகி மனநலச் சிறைக் கூடத்திலிருந்து தப்பிய ஒருவரும் எட்டு வயதுப் பள்ளி மாணவன் ஒருவனும் தத்தமது தாயைத் தேடிச் செல்வதுதான் கதை. தாயைத்தேடிய பயணம் என்கிற தத்துவ விசாரம் அழகான காட்சிகளோடு நம் கண்முன்னே விரிகிறது. இது யதார்த்த சினிமாவா வர்த்தக சினிமாவா என்கிற கேள்விகளெல்லாம் தவிடு பொடியாகிட இது உலக சினிமாவாக உயர்ந்து நிற்கிறது.

அன்பும் கருணையும் வாஞ்சையும் சக மனிதர்கள்பால் அக்கறையும் அற்றுப்போன ஒரு உலகத்தில் பொய்யும் புனைசுருட்டும் துரோகமும் கழுத்தறுப்பும் லஞ்சமும் ஊழமும் பிராடு பித்தலாட்டமும் அன்றாடமாகிப்போன ஒரு உலகத்தில் வாழும் நாம் திரையரங்கில் பார்வையாளர்களாக உட்கார்ந்திருக்க இது பற்றியெல்லாம் ஏதுமறியாத கள்ளம் கபடில்லாத இரண்டு பச்சை உள்ளங்கள் காட்சிரூபமாக நம் முன்னே திரையில் நடந்துகொண்டே இருக்கிறார்கள். பரந்து விரிந்த இயற்கையின் ஊடே ஆளரவம் அதிகமில்லாத நெடுஞ்சாலையில் அவர்கள் நடந்துகொண்டே இருக்க நாம் நமக்குள்ளே ஒரு பயணத்தைத் துவங்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். ஒரு கலைப்படைப்பு இதைத்தானே செய்ய வேண்டும்.

நிறுவனமாகிவிட்ட குடும்ப மற்று சமூக அமைப்புசார் மனிதர்களெல்லாம் இப்படத்தில் மோசமானவர்களாகவும் விளிம்புநிலை மக்கள், மாற்றுத்திறனாளிகள், பாலியல் தொழிலாளி, குறவரின மக்கள் என நம் சமூகம் கீழ்நிலையில் வைத்திருக்கும் மனிதர்கள் எல்லாம் உன்னதமானவர்களாவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படம் முன்வைக்கும் முக்கியமான அரசியல் இது. மைனா படத்திலும் இதை நாம் பார்த்தோம். இத்தகைய முன்வைப்புகள் தமிழ் சினிமாவில் எப்போதேனும் நிகழும் அபூர்வமான ஒன்றாகும்.

மனப்பிறழ்வுக்காளான ஒருவரை தமிழ் சினிமா இத்தனை அற்புதமாக இதற்குமுன் காட்டியதில்லை. மிஷ்கின் நம் மனங்களை அலைக்கழித்துவிட்டார். இக்கதாபாத்திரத்தில் நடித்தால் இமேஜ் போய்விடும் என்றஞ்சி கேட்ட நடிகர்களெல்லாம் நடிக்க மறுத்துவிட்டதால் மிஷ்கின் தானே நடிக்க நேர்ந்ததாகக் கூறுகிறார். தமிழ் சினிமா நடிகர்கள் தங்கள் வாழ்க்கையில் செய்த உருப்படியான காரியம் இப்படத்தில் நடிக்க மறுத்ததுதான்.

அம்மாவைச் சந்திக்கும் கடைசிக்காட்சி எல்லாவிதத்திலும் உச்சம். இளையராஜாவின் பாடல்தான் அந்த இடத்தில் சற்றுத் தொந்தரவாக அமைகிறது. ரெண்டு வரி மட்டும் பாடி முடித் திருந்தால் இன்னும் கனமாக இருந்திருக்கும். கடைசி முடிப்பின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

காட்சிகளின் மூலம் பல கேள்விகளை எழுப்பி ஒரு தத்துவ தளத்தில் நுட்பமாக இயங்கியிருக்கும் நந்தலாலா மீண்டும் மீண்டும் பார்த்து(ஒரு புத்தக வாசிப்பைப்போல) கூடி விவாதிக்கத்தக்க அபூர்வமான படம். பார்த்து அனுபவிக்க வேண்டிய படம்.

இப்படம் எடுக்கத் தயாரிப்பாளர் கிடைக்காது மிஷ்கின் பட்ட கஷ்டங்களும் எடுத்து முடித்து இரண்டாண்டுகளாக விநியோகஸ்தர் கிடைக்காமல் படம் முடங்கிக் கிடந்ததும் நடிக்க ஆள் கிடைக்காததும் போன்ற உண்மைகளை தமிழ்ச் சினிமா உலகின் அழுகிய வியாதியின் கூறுகளாக நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே தயாரிப்பாளர் ஐங்கரன் இண்டர்நேஷனல் அருண்பாண்டியனுக்கு சிறப்பான பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

(செம்மலர் ஜனவரி 2011 இதழில் வெளியானது)