தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று, 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற `உப்புக் காய்ச்சும்’ அறப்போராட்டத்தில் இவரும் ஈடுபட்டார்! ஒரு கையில் தமது கைக்குழந்தையுடனும், மறுகையில் காங்கிரஸ் கட்சிக் கொடியுடனும் போராட்டத்தில் கலந்து கொண்டார். வெள்ளை ஏகாதிபத்தியக் காவலர்களின் குண்டாந்தடித் தாக்குதலையும் அச்சம் இன்றி எதிர் கொண்டவர் கடலூர் அஞ்சலையம்மாள்!

cuddalore anjalaiammal ஆங்கிலேய `நீலன்’ சிலையை அகற்றக் கோரி 1927 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் குடும்பத்தோடு கலந்து கொடு, செல்ல மகள் சின்னஞ்சிறுமி அம்மாக்கண்ணுவுடன் சிறை சென்றார்! சிறுமி அம்மாக்கண்ணு சிறைத்தண்டனை பெற்று சென்னை இளம் பெண்கள் சிறையிடடைகப்பட்டார். மகாத்மா காந்தி அப்பொழுது சென்னை வந்தார். சிறையில் அடைக்கப்பட்டவர்களை இராஜாஜியுடன் நேரில் சென்று சந்தித்தார். சிறையில் இருந்த, கடலூர் அஞ்சலையம்மாவையும், மகள் அம்மாக்கண்ணுவையும் காந்தியடிகளிடம் இராஜாஜி அறிமுகம் செய்தார். அப்போது, மிகுந்த மகிழ்ச்சி கொண்ட மகாத்மா, சிறுமி அம்மாக்கண்ணுவை வார்தாவில் உள்ள தமது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றார். அம்மாக்கண்ணுவின் பெயரை, `லீலாவதி’ என்று பெயர் மாற்றம் செய்து, தமது ஆசிரமத்தில் தங்கவைத்துப் பெருமைப்படுத்தினார்.

காந்தியத் தொண்டர்

 கடலூர் அஞ்சலையம்மாள், 1890 ஆம் ஆண்டு கடலூரில் பிறந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில்1921 ஆம் ஆண்டு தென்னாட்டிலிருந்து ஈடுபட்ட முதல் பெண்மணி என்ற பெருமை அவருக்கு உண்டு.

 இவரது கணவர் முருகப்பாவும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்!

 கடலூர் அஞ்சலையம்மாள் 1940 ஆம் ஆண்டு நடைபெற்ற தனிநபர் அறப்போராட்டத்திலும் பங்கு பெற்றுச் சிறையேகினவர்!

 `வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை காங்கிரஸ் கட்சி அறிவித்தவுடன் வீரமுடன் அதில் இறங்கியதால் கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி முதலிய இடங்களில் பல ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு `வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பெண்களை ஈடுபடச் செய்தார். கருவுற்றிருக்கும் போதே சிறையில் அடைக்கப்பட்டார். மகப்பேறு காலத்தில் சில வாரங்கள் சிறையிலிருந்து வெளியில் வந்து குழந்தை பிறந்தவுடன் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறை சென்றார்.

 சென்னை மாநகரில் தடை செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிப் பெண்கள் படையுடன் கைது செய்யப்பட்டார். கடலூர் அஞ்சலையம்மாள் `சிறைப்பறவை`யாக வாழ்ந்தார் என்பதே சிறப்புக்குரிய வரலாறு!

 இவர், மிகச் சிறந்த பேச்சாளர். அக்காலத்தில் இவரது பேச்சைச் கேட்பதற்கு கிராமப்புற மக்கள் திரண்டு வந்தனர். இவரது உரை மக்களை வீறுகொண்டு எழச்செய்தது! விடுதலை உணர்வு பெற்றுப் போராட்டத்தில் ஈடுபடச் செய்தது.

 கடலூர் அஞ்சலையம்மாள் இல்லத்தில் தந்தை பெரியாரும், மகாத்மா காந்தியும் சந்தித்து உரையாடியுள்ளனர். அந்தளவு, அவரது குடும்பம் விடுதலைப் போராட்டத்தின் பாசறையாக விளங்கியது. தமது குடும்பச் சொத்துக்களை விற்று, விடுதலைப் போராட்டத்திற்குச் செலவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 கடலூர் சட்டமன்றத் தொகுதியில் 1929 ஆம் ஆண்டு போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் கடலூர் சட்டமன்றத்தொகுதிக்கு 1929 முதல் 1952 வரை நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டவர் ; போட்டியிட்டபோதெல்லாம் வெற்றி பெற்றவர் கடலூர் அஞ்சலையம்மாள்!

 வட ஆற்காடு மாவட்டத்தில் புகழ் பெற்ற விடுதலைப் போராட்ட வீரரான ஜமதக்னி கடலூர் அஞ்சலையம்மாளின் மருமகன் ஆவார்! பொதுவுடைமைக் கட்சியின் நிறுவன உறுப்பினராகவும், வட ஆற்காடு மாவட்டத்தின் செயலாளராகவும், மார்க்சிய சிந்தனையாளராகவும் விளங்கியவர் ஜமத்க்னி! சிறையிலிருந்த தியாகியான தமது தந்தை முருகப்பாவைச் சந்திக்கச் சென்றபோதெல்லாம் அவரது மகள் லீலாவதி, ஜமத்க்னியையும் சந்தித்தார். அவர்களது சந்திப்பு காதலாக மலர்ந்தது. நாடு விடுதலை பெற்ற பின் ஜமதக்னியை லீலாவதி மணம் புரிந்து கொண்டார்! ஆம்! தாலிக்குப் பதிலாக அரிவாள் சுத்தியலைக் கொண்ட தங்கத் தகட்டினை அணிந்த திருமணம் புரிந்துகொண்டனர் இப்புரட்சித்தம்பதியினர்! இந்தியதேச விடுதலைப் போராட்டத்தில், கடலூர் அஞ்சலையம்மாள், அவரது கணவர் முருகப்பா அவரது மகள் லீலாவதி, அவரது மருமகன் ஜமத்க்னி ஆகிய நான்கு பேர் ஒரே குடும்பத்திலிருந்து சிறை சென்ற பெருமைக்குரியவர்கள்! இந்திய விடுதலை வேள்விக்கு ஆகுதியாய் ஆன அரும்பெரும்தியாகிகள்!

 இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 1961 ஆம் ஆண்டு மறைந்தார். அவரது பெயர் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்!