முத்துராமலிங்கத் தேவரின் அரசியல் குரு சீனிவாச அய்யங்கார் என்னும் பார்ப்பான். மற்றொருவர் சத்தியமூர்த்தி அய்யர். கைரேகை சட்டம் மட்டுமல்லாது கடுமையான பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் செயல்படுத்தியபோது அவற்றை எதிர்க்காமல் ஆங்கிலேயே அரசுக்கு ஆதரவாக இருந்தது காங்கிரஸ் கட்சி. பார்வர்டு பிளாக் தொடங்கும் வரை அந்தக் காங்கிரஸ் கட்சியின் தொண்டராகத்தான் தேவர் இருந்தார்.

1937 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் முற்றாக ஒழிப்போம் என வாக்குறுதி அளித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது. குற்றப் பரம்பரைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வையும் அவர்களது வாழ்வில் புரட்சிகர மாற்றங்களையும் உண்டாக்கிய நீதிக்கட்சியின் வேட்பாளராக இராமநாதபுரம் ராஜாவான சண்முக இராஜேசுவர சேதுபதி களத்தில் நின்றார். அவரை எதிர்த்து குற்றப் பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக அதுவரை ஒரு துரும்பைக்கூட அசைக்காத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டார். கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நீதிக்கட்சி உழைத்த உழைப்பை நினைவுகூர்ந்து நீதிக்கட்சிக்கு ஆதரவாக தேவர் செயல்பட்டிருந்தால் குற்றப் பழங்குடி சட்டத்தை எதிர்த்த போராளி என முழுமையாக அவரைப் பாராட்டியிருக்கலாம். அந்தத் தேர்தலில் பெரியார் நீதிக்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது,

....... முஸ்லீம் லீக்கும் பார்ப்பனரல்லாதார் இயக்கமுமாகியவை ஏற்பட்டு சிறிது ஞான ஒளியும், சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்ட பிறகு, அரசியலில் கல்வி விஷயத்திலேயே முதன்முதல் மாறுதல் ஏற்படலாயிற்று. அதாவது 1920 ஆம் வருடத்துக்கு முன்பு கல்விக்காக சென்னை மாகாணத்தில் வருடம் ஒன்றுக்கு (1, 40, 00, 000) ஒரு கோடியே நாற்பது லட்சம் ரூபாய் மாத்திரம் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஜஸ்டிஸ் கட்சி என்னும் பார்ப்பனரல்லாதார் மந்திரி பதவி அடைய நேர்ந்து கல்வி இலாக்காவில் ஆதிக்கம் பெற்ற பிறகு இன்று கல்வி இலாக்காவுக்கு வருடம் 1-க்கு (225, 00, 000) இரண்டு கோடியே இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து அதற்கேற்றாற்போல் பள்ளிக்கூடங்களையும் கலாசாலைகளையும் சர்வகலா சாலைகளையும் ஒன்றுக்கு இரண்டாக மூன்றாக அதிகப்படுத்தி ‘சண்டாளர்’கள், ‘மிலேச்சர்’கள், ‘சூத்திரர்’கள் ஆகிய மக்கள் யாவரும் இலவசமாகவும் கட்டாயமாகவும் படிக்க வேண்டும் என்கின்ற திட்டம் ஏற்படுத்தி அமுலுக்கும் கொண்டு வந்துவிட்டுவிட்டார்கள்.

இதன் பயனாகவே ஒவ்வொரு வகுப்புக்கும் அதாவது ஈன ஜாதி, சண்டாள ஜாதி, பரம்பரை விவசார ஜாதி, பரம்பரை திருட்டு ஜாதி என்று சொல்லக்கூடிய மக்களுக்கெல்லாம் சுதந்திர உணர்ச்சியும், சுயமரியாதை லட்சியமும் ஏற்பட்டு, அநேக வகுப்பு சங்கங்களும் ஏற்பட்டு முற்போக்குக்கு உழைக்க முன் வரலாயின.

இந்தத் தேர்தலில் முத்துராமலிங்கத் தேவருக்கு எதிராக அவரது தந்தையார் உக்கிரபாண்டித் தேவரே நேரடியாக பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். ஆனால் தேர்தலில் காங்கிரசே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இராஜாஜி பார்ப்பனர் முதல்வரானார். அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் ஒழிப்பேன் என்று சூளுரைத்தவர்கள் அந்த அடக்குமுறைச் சட்டங்களை முன்பைவிட மிகக் கடுமையாக மக்களிடம் செயல்படுத்தத் தொடங்கினர். தேவர் வேடிக்கை பார்த்தார்.

சட்டசபையில் ஒருமுறை திருமங்கலம், செக்கானூரணி பகுதிகளில் இன்னும் குற்றப் பரம்பரைச் சட்டம் நடைமுறையில் உள்ளது என தேவர் பேசியபோது, இராஜாஜி, செக்கானூரணி பகுதியில் இருந்து யாரும் கோரிக்கை வைக்கவில்லை எனத் திமிராகப் பேசினார். பதிலுக்கு தேவர் எதுவும் பேசவில்லை. அந்தக் காலத்தில் பெரியார் குற்றப் பரம்பரை உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்துக் குரல் கொடுக்கிறார்.

...... தேர்தல் காலத்திலே அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை ஒரு முக்கிய பிரச்சினையாக மதித்துக் காங்கிரஸ்காரர் பதவியேற்றால் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதாகவும் வாக்குறுதியளித்து, பாமர மக்களின் வோட்டுக்களைப் பறித்தனர். காங்கிரஸ்காரர் செய்த விஷமப் பிரச்சாரத்தின் பயனாகவும், காங்கிரஸ்காரர் பதவிக்கு வந்தால் மண்ணுலகமே பொன்னுலகமாகி விடுமென பாமர மக்கள் முட்டாள்தனமாக நம்பியதின் பயனாகவும் இப்பொழுது 7 மாகாணங்களிலே காங்கிரஸ் மந்திரிசபைகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால், எல்லைப்புற மாகாணத்தைத் தவிர வேறு எந்த காங்கிரஸ் மாகாணத்திலும் அடக்குமுறைச் சட்டங்களை ஒழிக்க முயற்சி செய்யப்படவே இல்லை. மாறாக காங்கிரஸ்காரரால் வெறுக்கப்பட்ட சி.ஐ.டி.களும், 144 தடையுத்தரவுகளும் இன்றியமையாத தேவையென்றும் அவைகளின் உதவியின்றி எந்தச் சர்க்காரும் இயங்க முடியாதென்றும் காங்கிரஸ் மந்திரிகளே பகிரங்கமாகக் கூற முன்வந்து விட்டார்கள். காங்கிரஸ் மந்திரிகள் கட்டளைப்படி ராஜத்துரோக குற்றஞ்சாட்டி வழக்குகள் தொடரப்பட்டு, தண்டனைகளும் வழங்கப்படுகின்றன. சென்னை மாகாணத்திலே இந்தி எதிர்ப்பாளர் மீது அடக்குமுறைச் சட்டங்கள் பிரயோகம் செய்யப்பட்டு 3 முதல் 6 மாதங்கள் வரை கடுங்காவல் தண்டனைகளும் வழங்கப்படுகின்றன.

காங்கிரஸ்காரர் மெய்யாகவே நாணயமுடையவர்களானால் - யோக்கியப் பொறுப்புடையவர்களானால் - நேர்மையுடையவர்களானால் - அடக்கு முறைச் சட்டங்களை இதற்குள் ஒழித்திருக்க வேண்டாமா?

அடக்குமுறைச் சட்டங்களை ஒழிப்பதை தமது வேலைத் திட்டத்தில் ஒரு முக்கிய அம்சமாகக் கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர் நடத்தும் ஆட்சியிலே அந்தச் சட்டத்தை ஒழிக்கும் ஒரு மசோதாவை அக்கட்சியைச் சேராத ஒருவர் கொண்டுவரச் சந்தர்ப்பமளித்த காங்கிரஸ்காரர் யோக்கியதையை நாட்டு மக்கள் அறிய ஒரு தருணம் வாய்த்தது நமக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் கிருஷ்ணமாச்சாரியார் முயற்சி காங்கிரஸ் மந்திரிகளுக்கு ஒரு சவுக்கடியென்றே சொல்ல வேண்டும். இந்த மசோதா விஷயத்தில் காங்கிரஸ் சர்க்கார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.”

குடிஅரசு - 24.07.1938

இந்தக் காலத்தில் கிரிமினல் திருத்தச் சட்டம் என்று ஒரு புதிய ஒடுக்குமுறைச் சட்டத்தையும் இராஜாஜி அரசு பயன்படுத்தத் தொடங்கியது. நீதிக்கட்சி அரசுகளால் தோற்றுவிக்கப்பட்ட 2000 பள்ளிகளை 1938 இல் இராஜாஜி தனது ஆட்சியில் இழுத்து மூடினார். 125 பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். மூடப்பட்ட பள்ளிகளில் படித்த ஆயிரக்கணக்கான கள்ளர், தேவர் சாதியைச் சார்ந்த மாணவர்களும் தமது எதிர்காலத்தை இழந்தனர். இக்கொடுமையை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. அதனை அடக்க பிரிட்டிஷ் அரசின் கிரிமினல் திருத்தச் சட்டத்தை ஏவினார் இராஜாஜி. இதில் நூற்றுக்கணக்கான கள்ளர்கள் தேவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் சிறைப்படுத்தப்பட்டனர். அமைதியாக அனைத்தையும் வேடிக்கை பார்த்தார் தேவர். பெரியாரும் இக்கொடிய சட்டத்தில் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றார். அப்போது குடிஅரசில் பெரியார்தான் அடக்குமுறைச் சட்டங்களை எதிர்த்து எழுதினார்.

“இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒடுக்குவதற்காக வேண்டி, நமது சுயராஜ்ஜிய சர்க்கார் இதுவரை 120 பேர்களை அரஸ்ட் (கைது) செய்து சுமார் 40 பேர்கள் வரை கிரிமினல் அமெண்ட்மென்ட் ஆகட்7-1எ படி 4-மாதம், 6-மாதம் கடின காவல் சிட்சை கொடுத்துத் தண்டித்து கேப்பைக் கூழும், களியும் போட்டு மொட்டை அடித்து ஜெயில் உடை கொடுத்து குல்லாய் போட்டு வேலை வாங்கி வருகிறார்கள்.

மற்றும் தோழர்கள் சி.டி.நாயகம் (மாஜி டிப்டி ரிஜிஸ்ட்ரார்), ஈழத்து சிவானந்த அடிகள் பி.ஏ. (ஒரு சந்யாசி), கே.எம்.பாலசுப்பிரமணியம், பி.ஏ., பி.எல்., ஷண்முக நந்தசுவாமி (ஒரு சந்யாசி), சி.என். அண்ணாதுரை, எம்.ஏ., (ரிவோல்ட் பத்திராதிபர்), சுவாமி அருணகிரி நாதர் (ஒரு மடாதிபதி) முதலாகிய முக்கியஸ்தர்களை 3 வருஷம் வரை தண்டிக்கும்படியான இண்டியன் பினல் கோட் சட்டம் 117பிரிவுப்படி கைது செய்து சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். சிலர் ஜாமீனில் இருக்கிறார்கள் என்றாலும் இனியும் இந்த இரண்டு சட்டப்படியும் தினமும் 3 பேர், 4 பேர் வீதம் கைது செய்யப்பட்டுக் கொண்டும் தினமும் 10 பேர், 15 பேர் வீதம் தண்டிக்கப்பட்டுக் கொண்டும் வருகிறார்கள். இந்த சுயராஜ்ய சர்க்கார் இந்தக் காரியங்கள் மாத்திரம்தான் செய்து வருகிறார்கள். இதற்கு மேல் என்ன செய்து விடுவார்கள்? என்று மக்கள் கருதி மேலும் மேலும் கைதியாக ஆயிரக்கணக்கான பேர்கள் முன்வந்து விடுவார்கள் போலிருக்கிறதே என்று கருதி, நமது தோழர் சத்தியமூர்த்தியார் அவர்கள் தமது அருப்புக்கோட்டை அரசியல் மகாநாடு தலைமைப் பிரசங்கத்தில், இந்தியை எதிர்த்து கிளர்ச்சி செய்பவர்கள் பெரிய ராஜத் துரோகிகளாவார்கள் என்றும் அவர்கள் மீது ஆயுள் பரியந்தம் அல்லது தூக்குப் போடும்படியான குற்றப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மிக தயாள குணத்தோடு, இளகிய மனம் கொண்டு பேசியிருக்கிறார். இதை மெயில் பத்திரிகை மாத்திரமே கண்டித்து தலையங்கம் எழுதி இருக்கிறது.

.... மகாத்மா அறிக்கையில் ஒரு குழப்பமும் இருக்கிறது. ராஜாஜி கிரிமினல் திருத்தச் சட்டத்தை உபயோகிக்காமல் போயிருந்தால் அது பெரும் முட்டாள்தனமாயிருந்திருக்கும் என்று ஒரு விடத்தில் காந்திஜி கூறுகிறார்.

.... நாம் வெறுத்த - நாம் ரத்துச் செய்தே தீருவோமென்று கூறி வந்த கொடிய அடக்குமுறைச் சட்டத்தைத்தானா நாம் கையாள வேண்டுமென்பது தான் என் கேள்வி. அச்சட்டத்தை காங்கிரஸ் மந்திரிகள் கையிலெடுத்தது பாவமில்லையென்று மகாத்மாஜியே கூறினாலும் அது குற்றங்குற்றமேயென்று தான் நான் கூறுவேன். இதற்காக சிலர் எனக்கு ‘தேசத்துரோகி’ப் பட்டஞ் சூட்டினாலும் அதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்.”

- குடிஅரசு 02.10.1938

1937 ஆம் ஆண்டு தேர்தலில் முத்துராமலிங்கத் தேவர் எடுத்த தவறான நிலைப்பாட்டினால் குற்றப் பரம்பரைச் சட்டம் மேலும் 10 ஆண்டுகளுக்கு நீடித்தது. 1934 அபிராமம் மாநாட்டுக்குப் பிறகு - அந்த மாநாட்டுக் கோரிக்கையை அப்போதைய பெரியாரின் ஆதரவு பெற்ற நீதிக்கட்சி அரசு செயல்படுத்திய பிறகு கைரேகைச் சட்டம் நீக்கப்பட்ட 1947 ஜூன் 5 வரை தேவர் கைரேகைச் சட்டத்தை எதிர்த்து எந்தப் போராட்டமும் செய்யவில்லை என்பதோடு, கூடவே இன்னும் கடுமையான அடக்குமுறைச் சட்டங்கள் வந்தபோதும் அமைதியாகவே இருந்தார். 1937 தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி குற்றப்பரம்பரைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை ஏன் நீக்கவில்லை என காங்கிரசையோ இராஜாஜியையோ எதிர்த்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக 1939 வரை காங்கிரசிலிருந்து நேதாஜி வெளியேற்றப்படும் வரை காங்கிரசிலேயே இருந்து விட்டு தனது அரசியல் ஆசான் சீனிவாச அய்யங்கார் அறிவுரையின் பேரில்தான் நேதாஜியுடன் பார்வர்டு ப்ளாக்கில் இணைகிறார். 1938 இல் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கொடுங்கோல் ஆட்சியில் சிக்கித் தவித்த பின்னரும் தனது ஜாதி மக்கள் கல்வி வாய்ப்பை இழந்த பின்னும் 1939 இல் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உட்கட்சித் தேர்தல்களில் சீனிவாச அய்யங்காருடன் பணியாற்றிக் கொண்டு தான் இருந்தார்.

பெரியாரும் தேவர்களும்

1925 முதல் 1933 வரை பெரியாருக்கு உற்ற தோழராக இராமநாதபுரம் ஜில்லா பகுதிகளில் பெரியார் கருத்துக்களை மிகச் துணிச்சலுடன் பரப்பும் பிரச்சார பீரங்கியாக செயல்வீரராகத் திகழ்ந்தவர் சிவகங்கை இராமச்சந்திர சேர்வை ஆவார். திருநெல்வேலி சுயமரியாதை இயக்க மாநாட்டை அவரது தலைமையில்தான் பெரியார் நடத்தினார். சுயமரியாதைப் பிரச்சாரத்துக்கு தென்மாவட்டங்களில் எங்கு தடை என்றாலும் துப்பாக்கியுடன் களத்தில் நிற்கும் தோழனாகத் திகழ்ந்தார். 1933 இல் அவர் மறையும் வரை பெரியாருடன் அவரும் அவரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோரும் சுயமரியாதை இயக்கத்தில் அளப்பரிய சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். குற்றப் பரம்பரைச் சட்டத்தில் கொடுமைப்பட்ட மக்களை மீட்டது திராவிடர் இயக்கமும் பெரியாரும் தான் என்பது இராமச்சந்திர சேர்வைக்குத் தெரியும். அதனால் தன் குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் பெரியாருக்குத் துணையாக்கினார்.

1952 இல் இராஜாஜி மீண்டும் கொல்லைப்புறம் வழியாக ஆட்சியைப் பிடிக்கிறார். தகப்பன் தொழிலையே பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வருகிறார். சுமார் 6000 பள்ளிகளை மீண்டும் இழுத்து மூடினார். குற்றப் பரம்பரையினரின் வாரிசுகள் என்ன செய்ய முடியும்? திருடத்தானே முடியும்? அதை எதிர்த்துக் களம் கண்டவர் - இராஜாஜியை விரட்டி அடித்து குலக் கல்வித் திட்டத்தை ஒழித்தவர் பெரியார். அந்தக் காலத்தில் குலக் கல்வித் திட்டத்தை ஒழிக்க தனது கள்ளர், மறவர், அகமுடையர்களுக்காக தேவர் என்ன செய்தார்?

1956 இல் தஞ்சை மாவட்டம் கண்ணந்தங் குடியைச் சேர்ந்த கள்ளர் சமுதாயத்தில் பிறந்த ஆர்.எஸ். மலையப்பன் என்பவர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தார். ஒரு நிலச் சிக்கல் தொடர்பாக அவர் எடுத்த நிலைப்பாட்டைக் கண்டித்து அவரை வேலையை விட்டே நீக்கம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். பெரியார் கொதித்தெழுந்தார். 1956 நவம்பர் 4 ஆம் நாள் திருச்சியில் இதற்காக ஒரு சிறப்பு கண்டனக் கூட்டத்தை நடத்துகிறார். ‘பார்ப்பான் ஆளும் நாடு கடும்புலிகள் வாழும் காடு’ என அந்தக் கூட்டத்தில்தான் முழங்கினார். நீதி கெட்டது யாரால் என்ற தலைப்பில் அந்த உரை நூலாகவே வெளிவந்துள்ளது. அந்த உரைக்காக நீதிமன்ற அவமதிப்புக்காக 1957 ஆம் ஆண்டு பெரியாருக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. கள்ளர் சமுதாய கலெக்டருக்காக கடுங்காவல் தண்டனை பெற்றவர் பெரியார். 1960 செப்டம்பர் 17அன்று பெரியார் பிறந்த நாள் அன்று அதே ஆர்.எஸ். மலையப்பன் பெரியாருடன் ஒரே மேடையில் உரையாற்றினார். இன்று வரை அந்த மலையப்பனின் ஊரிலும் அவரது உறவினர்களின் வீடுகளிலும் பெரியார் சிலையும் பெரியார் படமும் சிறப்பாக வீற்றிருக்கிறது. இன்றும் திராவிடர் கழகக் கோட்டை என்று சொல்லப்படும் பகுதியாக அப்பகுதி உள்ளது. மலையப்பன் விவகாரத்தில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?

சட்டப்படி கள்ளர்களையும் மறவர், அகமுடையார்களையும் அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களையும் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்களென்றும் சூத்திரர்களென்றும் இழிவுபடுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை எரிக்குமாறு 1957 இல் பெரியார் ஆணையிட்டார். நூற்றுக்கணக்கான தேவர்கள் எரித்துச் சிறை சென்றார்கள். இந்த இன இழிவு ஒழிப்புப் போராட்டத்தில் தேவரின் பங்கு என்ன? மண்டல் குழு அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய 9 நீதிபதிகளில் ஒருவர் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி இரத்தினவேல் பாண்டியன். அவர் தனது தனிப்பட்ட தீர்ப்பில் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் வாழ்வுரிமைக்காக பெரியார் உழைத்த உழைப்பை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார்.

குற்றப் பரம்பரையில் பிறந்தவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கியது திராவிடர் இயக்கம். அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளே நினைவுகூறும் பெரியார் பணியை யாரோ சிலர் கேவலமாகப் பேசுவதை ஒரு முக்கியச் செய்தியாக ஒரு பெரியார் தொண்டர் என்பவரே சொல்வது வருத்தத்துக்கு உரியது. கடும் கண்டனத்துக்கு உரியது. குற்றப் பழங்குடி சட்டத்தைப் பற்றியும் அது நடைமுறைப் படுத்தப்பட்ட காலங்களில் அப்போதைய ஆட்சியாளரின் நடவடிக்கைகள், அப்போதைய சமுதாய இயக்கங்களின் செயல்பாடுகள் ஆகிய அனைத்தையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய்ந்தால் அச்சட்டம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் ஒழியும்.

தமிழ்நாடு பிரிவினையில் தேவரும் பெரியாரும்

1956 இல் நேரு தட்சிணப் பிரதேசம் என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி செய்தார். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை ஒன்றிணைந்த மண்டலமாக அது அமைய இருந்தது. தமிழ் தேசியர்கள் பார்வையில் அது திராவிட நாடு. அதை முத்துராமலிங்கத் தேவர் வரவேற்றார். ‘தென்மாநிலக் கூட்டமைப்பாக’ நான்கு மாநிலங்களும் இணைந்த பகுதியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் தேவர். பி.டி. இராஜன் தலைமையில் அறிஞர் அண்ணா, ம.பொ.சிவஞானம், நாம் தமிழர் ஆதித்தனார், கம்யூனிஸ்ட்டுகள் உட்பட தமிழ்நாட்டின் 20அரசியல் கட்சிகளும் எதிர்த்த தட்சிணப்பிரதேசத் திட்டத்தை முத்துராமலிங்கத் தேவர் ஆதரித்தார். மொழிவாரியாக மாகாணங்கள் பிரிவதை எதிர்த்தார். ஆனால் பெரியார் மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்றார். தட்சிணப் பிரதேச திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். பெரியாரது அறிக்கையில்,

“பொதுவாக ஆந்திரா பிரிந்தத்திலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய்விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூட நம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.

மூன்றாவது - இவர்கள் இரு நாட்டவர்களும் பெயரளவில் இரு நாட்டவர்கள். ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். அப்படி 14 இல் 7 இல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ் நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட்டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக்கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்” - என முழங்கினார்.

தட்சிணப் பிரதேச எதிர்ப்புப் போராட்டக் குழுவில் பெரியார் வைத்த கருத்துக்கள் மிக முக்கியமானவை. மொழிவாரி மாகாண பிரிப்பு மட்டும் போதாது.

1. மத்திய அரசுக்கு படை, போக்குவரத்து, வெளியுறவு ஆகிய துறைகளைத் தவிர மீதமுள்ள அனைத்துத் துறைகளும் பிரியப்போகும் மொழி வாரி மாகாணங்களுக்கே இருக்க வேண்டும்.

2. பிரியப் போகும் சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும்.

என இரண்டு முக்கியக் கோரிக்கைகளை முன் வைத்தார். இந்தக் கருத்துக்களுக்கு அப்போதைய நாம் தமிழர் இயக்கத் தலைவர் சி.பா. ஆதித்தனார், தமிழரசுக் கழகம் ம.பொ.சிவஞானம், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட குழுவினர் ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே பெரியார் இக்குழுவில் சேராமல் தனியே போராடினார்.

“திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.

இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனானாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கெண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும்? என்று எனக்குத் தோன்றவில்லை.”

என்பதுதான் அப்போது பெரியாருடைய நிலைப்பாடு. எல்லோரும் அப்போது வெறும் பிரிவினைக்காக மட்டும் போராடியபோது பிரிவினையோடு உரிமைக்காகவும் போராடியவர் பெரியார்.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பிற்படுத்தப்பட்டோர் நலனாகட்டும், தாழ்த்தப்பட்டோர் நலனாகட்டும், பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, பொதுவுடைமை, தேசிய இன விடுதலை, பகுத்தறிவு, மாற்று வாழ்வியல் என எந்த இலக்கை எடுத்துக் கொண்டாலும் அந்த இலக்குகளுக்காகப் போராடுபவர்களுக்கு அடிப்படைப் பாடம் பெரியாரியல், அனைத்துத் தளங்களிலும் போராடுபவர்களுக்கு ஒரு வழிகாட்டி, ஒரு முன்னோடி பெரியார். அவரது சிந்தனைகள் பெரியார் திராவிடர் கழகத்தால் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்டும் தோழர் வீரமணி அவர்களால் வெளியிடத் தடை செய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது. பெரியார் சிந்தனைகள் முழுமையாக வெளிவந்தால் தோழர் தா. பாண்டியன், தோழர் திருமாவளவன், தோழர் சீமான் போன்றோர் வினா எழுப்பும் சூழலே வந்திருக்காது.

- அதிஅசுரன்