எரிபொருளுக்காக பெட்ரோலியத்தை நம்பியிருக்கும் காலம் முடிவுக்கு வர இருக்கிறது. இத்துறையில் முதல் தடத்தை பதிக்கப்போகும் நாடு அமெரிக்க ஐக்கியநாடுகள் என்பதை சமீப கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீர்வாழ் உயிரினமான ஆல்காக்களில் இருந்து சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காமலும், அதே சமயம் பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக் கூடியதுமான விலையிலும் புத்தம்புதிய பயோ டீசலைத் தயாரித்துள்ளார்கள் வேதியியலாளர்கள்.

Bio dieselஅண்மையில் அமெரிக்க வேதியியல் சொசைட்டியின் 237வது தேசீயக் கூட்டத்தில் இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. ஆல்காக்களில் இருந்து பயோ டீசல் தயாரிக்கும்போது இதுவரை உற்பத்தி செலவு மட்டுமே தலையாய பிரச்சினையாக இருந்துவந்தது. ஆனால் தற்போதைய கண்டுபிடிப்பின்படி உற்பத்திசெலவு 40 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள கடல்கள், ஏரிகள், ஆறுகள் இவற்றிலெல்லாம் ஆல்காக்கள் அபரிமிதமாக கிடைப்பதால் மூலப்பொருள் தட்டுப்பாடு எனும் பேச்சே இருக்காது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள உற்பத்தி முறையின்படி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கழிவுநீர் வெளியாவதில்லை. இந்த புதிய முறைக்கு “solid catalyst continuously flowing fixed-bed” method என்று பெயரிட்டுள்ளார்கள். மேலும் உற்பத்திக்கு குறைந்த இடப்பரப்பே போதுமென்பதால் தொழிற்சாலையின் அளவும் சிறியதாக இருக்கும்.

பயோ டீசல் தயாரிப்பில் தற்போது திரவ வினைஊக்கி பயன்படுத்தப்படுகின்றது. புதிய கண்டுபிடிப்பின்படி திடநிலையிலான வினை ஊக்கி பயன்படுத்தப்படுகிறது. திடநிலையிலான வினை ஊக்கிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடியும் என்பதும், பயோடீசல் தயாரிப்பினை தொடர்ச்சியாக செய்யமுடியும் என்பதும் கூடுதல் சிறப்பு. பழைய முறையில் பயோ டீசல் உற்பத்தி செய்யும்போது திரவ வினைஊக்கிகளை அமிலத்துடன் நடுநிலையாக்கல் வினைசெய்து பிரித்தெடுக்கவேண்டி இருந்தது. இதனால் உற்பத்தியை இடையிடையே நிறுத்த வேண்டி இருந்தது.

புதிய முறை தொடர்ச்சியான உற்பத்தி முறை. ஓர் ஏக்கரில் விளைந்த சோயா பீன்களில் இருந்து தயாரிக்கப்படும் பயோ டீசலைக்காட்டிலும் 300 முதல் 400 மடங்கு அதிகமான உற்பத்தியை புதிய முறையில் ஈட்ட முடியும் என்கிறார் இதுபற்றிய அறிக்கையை அளித்த முதன்மை ஆய்வாளர் டாக்டர் பென் வென்.

- தகவல்: மு.குருமூர்த்தி