குழந்தை பிறந்து மூன்று தினங்களுக்குள் சிறப்பு ரத்தப் பரிசோதனை ஒன்றைச் செய்ய வேண்டியது மிக அவசியம். இதன் மூலம் குழந்தைகளுக்கு பின்னால் ஏற்படக்கூடிய பல தொந்தரவுகளை சரிசெய்து விடலாம்.

குறை தைராய்டு (Congenital Hypothyroidism) : பிறவி தைராய்டு குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய மூளை வளர்ச்சியின்மை, மனவளர்ச்சி குன்றிய தன்மை போன்றவற்றை இதன் மூலம் தவிர்க்க முடியும். குறைபாடு இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்.

அட்ரீனல் கோளாறு (Congenital Adrenal Hyperplasia) : பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும்.

என்சைம் குறைபாடு (Galactosemia) : என்சைம் குறைபாடு காரணமாக குழந்தைகளுக்கு கண்புரை, மனவளர்ச்சி குறைபாடு போன்றவை ஏற்படலாம். குழந்தைக்கு உரிய ஊட்டச்சத்து உணவு கொடுத்து காப்பாற்ற முடியும்.

இந்தப் பரிசோதனைகளை குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குள் அதன் குதிகாலில் இருந்து சிறு துளி ரத்தத்தை எடுத்து செய்ய வேண்டும்.