lungs“தூங்கையிலே வாங்குகிற மூச்சு; அது சுழிமாறிப்போனாலும் போச்சு” என்று சுவாசத்தின் பெருமையைக் கூறுவார்கள். உணவும் தண்ணீரும் இல்லாமல் நாட்கணக்கில் இருக்கலாம். ஆனால் சுவாசம் இல்லாமல் சில நிமிடங்களுக்குமேல் இருக்கமுடியாது.

ஒரு நிமிடத்திற்கு 16 அல்லது 18 முறைகள் நாம் சுவாசிக்கிறோம். ஒரு முறை சுவாசிப்பதற்குள் நம்முடைய இதயம் நான்குமுறை துடிக்கிறது. சுவாசிக்கும் செயல் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. சுவாசமும், இதயத்துடிப்பும் அனிச்சை செயல்கள் எனப்படும். மூச்சின் இயக்கமும், இதயத்துடிப்பும் ஒரு உயிரில் முதன்முதலாக எவ்வாறு ஆரம்பித்தன என்பது புரியாத புதிர். சுவாசிப்பதில் உள்ள ஒழுங்கையும், இதயத்தின் இயக்கத்தோடு அதற்குள்ள இசைவையும் ஆராயப்புகுந்தால் மனித மனம் தெளிவடையும்.

காற்றை உள்ளே இழுக்கும்போது நுரையீரல்கள் நன்றாக விரிவடையவேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்து அல்லது நிமிர்ந்து நின்று சுவாசிப்பதால் உடலுக்குத்தேவையான ஆக்சிஜன் முழுஅளவில் நுரையீரலுக்குள் செல்லும். சுவாசத்தில் ஆக்சிஜனின் அளவு குறைந்தால் நீர்க்கோவை, காசநோய் போன்ற வியாதிகள் உடலைத்தாக்கும். நுரையீரலுக்குள் செல்லும் ஆக்சிஜன் இரத்தஓட்டத்தில் கலந்துவிடுகிறது. இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு நுரையீரல் வழியாக வெளித்தள்ளப்படுகிறது. இந்த கார்பன் டை ஆக்சைடு வாசனை அற்றது. ஆனால் மனிதர்கள் வெளிவிடும் மூச்சுக்காற்றில் பெரும்பாலும் ஒரு கெட்ட வாசனை இருக்கும். இதற்குக்காரணம், மனித உடலில் உள்ள அசுத்தம், சிதைந்த பற்கள், நோயுற்ற தொண்டைச்சதைகள் மற்றும் நோயுற்ற காற்றறைகள் ஆகியவை.

புகையிலைப்புகை மூச்சு உறுப்புகளைப் பாதிக்கிறது. நுரையீரலின் உள் உறையைக்கெடுக்கிறது. மது அருந்தியவுடன் சிறிது நேரத்திற்கெல்லாம் மூச்சுக்காற்றில் மதுவின் வாடை அடிக்கும். இரத்தத்தோடு கலந்த மது நுரையீரல்களுக்கு வந்ததும் நுரையீரல் மதுவில் இருக்கும் நஞ்சை வேகமாக அப்புறப்படுத்தும் முயற்சிதான் அந்த கெட்ட வாடை.

சுவாசத்தை நாம் சுவாசிப்போம். சுவாசம் நம்மை சுவாசிக்க நாம் வழிசெய்து கொடுப்போம்.


ஆதாரம் : கலைக்கதிர்
அனுப்பி உதவியவர்: மு.குருமூர்த்தி