தம் மொழி இழந்து, நம் மொழி பேசும் நிலைக்கு ஆளாகியும்கூட, பார்ப்பனர் தம் பழக்க வழக்கங்களை விடாது கைக் கொள்கின்றனர். தொல்காப்பியம் கூறிய சின்னங்களுக்குப் பதிலாக சிகரெட்டும், விஸ்கி தம்ளரும் தம் கையில் ஏந்தி இன்று இருந்தாலும் மார்பில் முப்புரி நூலை விடாது அணிந்து தம் உயர்வைக் காட்டியே வருகின்றனர் என்பதை மறக்க முடியுமா?

தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா போன்ற இன்றைய நிலப் பகுதிகள் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் அது கோண்ட்வானா என அழைக்கப்படலாம் எனவும் அதன் வடபகுதியில் ‘லெமூரியா’ இருந்தது என்றும் அதுவே தமிழ் இலக்கியம் கூறும் ‘நாவலந்தண்பொழில்’ என்றும் கூறுவர். 340 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல்கோள் ஒன்றினால் இந்நிலப்பரப்பில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு லெமூரியா அழிந்ததாகவும் கூறுவர்.அங்கிருந்து வடக்கே குடியேறிய திராவிட மரபின மக்களில் சீரிய இலக்கிய வளம் பெற்றவர்கள் தமிழரே என்பதும் ஆய்வாளர் கூற்று. இத்தகைய இலக்கியங்கள் தாம் மக்கள் சமுதாயத்தின் நிலை பற்றிப் பேசுவதையும் உணர முடிகிறது. அந்த வகையில் தனி மனிதன் சார்ந்த பழக்கம், சமுதாயம் சார்ந்த வழக்கம், அவற்றின் அடிப்படையில் சமுதாயத் தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளான மரபுகள் போன்றவற்றை இலக்கியங்கள் மூலமாகவே அறிந்து கொள்ள முடிகிறது.

நிமித்தம்

அப்படிப்பட்ட மரபுகளில் ஒன்றாக நிமித்தம் பார்ப்பது என்பது அமைந்துள்ளது. இன்றைய தமிழில் சொன்னால், சகுனம் பார்ப்பது, தாங்கள் செய்யத் தொடங்கும் செயல்களின் நன்மை, தீமைகளை முன்கூட்டியே தெரிந்து கொள்ள விரும்பும் மனத்தினவை நிமித்தம் குறிப்பு காட்டுமாம். பிரிந்து சென்ற கணவன் எப்போது திரும்பி வருவான் என மனம் துடிக்கும். மனைவியின் கண் இமை துடித்தல், பல்லியின் வாய் ஒலி வரும் திசை போன்றவை சகுனங்களாகக் கொள்ளப்பட்டன என்பதை அகநானூறு, குறுந்தொகைப் பாடல்கள் குறிக்கின்றன. நல்லவர்கள் வாய்ச் சொல்லும் நல்ல நிமித்தமாகக் கொள்ளப்பட்டன என்பதையும் குறுந்தொகை 223ஆம் பாடல் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

பேரூர் கொண்ட வார்கலி விழவிற்

கெல்வாஞ் செல்வா மென்றியன்றிவண்

நல்லோர் நல்லபல வாற்றில்ல..

என்ற பாடல் இதனைக் காட்டுகிறது. இப்படிப்பட்ட ‘நல்வாக்கு’ கூறுவோர்களாகக் குடுகுடுப்பைக்காரர்களையும் பெருமாள் பாட்டுக்காரர்களையும் தமிழர்கள் இன்றளவும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். எதிர்காலம் பற்றிக் கூறும் ஜோசியர்களையும் நம்பிக் கொண்டுள்ளனர். அதிலும் அரசியல்வாதிகள் ஜோசியர்களே கதி என்று கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இத்தகையவர்களை மேலை நாட்டினர் ஆறுதல் கூறுவோர் எனப் பொருள்படும் SOOTHE SAYERS என்றுதான் குறிப்பிடுகின்றனர். தமிழர்களோ நிமித்திகன், கணியன் என்று அழைக்கின்றனர்.

சிலப்பதிகாரக் கதையில் ஒரு நிமித்திகன் தொடர்புடைய நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. சேர மன்னனின் அரசவையில் நிமித்திகன், வாக்குப் பொய்த்துப்போன கதை எழுதப்பட்டுள்ளது. மன்னனுக்கு இரண்டு மகன்கள். அவர்களில் இளையவன்தான் நாடாள்வான் என நிமித்திகன் சொன்னான். அவையில் இரண்டு மகன்களும் இருந்தனர். நிமித்திகனின் சொல்லைக் கேட்ட வுடன், இளையமகன் எழுந்து, “இது கூடாது, நடக்காது. வழக்கம் ஒட்டி மூத்தவன்தான் நாடாள வேண்டும், நாடாளுவான்” என உறுதிப்படக் கூறினான். நிமித்திகன் சும்மா விடுவானா? சும்மா விட்டுவிட்டால் அவனுடைய எதிர்காலப் பிழைப்பு என்னாவது? “நான் போட்ட கணக்கு என்றுமே பிழைத்ததில்லை. நீங்கள் இருவரும் பிறந்த காலத்து இருந்த கோள்களின் நிலைகளைத் துல்லியமாகக் கணித்துக் கணக்குப் போட்டு நான் கூறுகிறேன். நான் கூறியதுதான் நடக்கும்” என்று நிமித்திகன் அடித்துக் கூறினான். அரசன் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்தான். அரசர்கள் பழக்கமே அதுதானே! அந்த நிலையில் இளைய மகன் எழுந்திருந்து சொன்னான், “மன்னரே! நிமித்திகன் சொன்னது நடக்காது, நடக்கக் கூடாது. நான் நாடாள வரமாட்டேன். நான் துறவு பூண்டு விடுவேன். இன்றே இப்போதே துறவியாகிவிட்டேன்” என்று அறிவித்துவிட்டு அரசவையை விட்டு வெளியேறி விட்டான். இளைய மகன் சொன்னது தான் நடந்தது. மூத்தவன் பட்ட மேற்றான். அவன் சேரன் செங்குட்டுவன். இளையவன் துறவுபூண்டு பெரும் புலவனானான். அவன் இளங்கோ அடிகள். சிலப்பதிகார ஆசிரியர், நிமித்திகன் நல்வாக்கு பொய்த்துப் போனது. எனினும் அந்த நம்பிக்கை நீடிக்கிறது என்பதுதான் கொடுமை! மூடநம்பிக்கை என்பது அறியப்பட்ட பிறகும் அதனை நம்புவது - மூடத்தனம்தானே!

பிறந்த நாள்

தமிழர்கள் பிறந்த நாள் விழாக் கொண்டாடுவது வழக்கமே மன்னர்களின் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட் டுள்ளன. அதுபோலவே புனலாட்டு விழா, பூந்தொடை விழா, உள்ளி விழா, ஓண விழா, கார்த்திகை விழா போன்ற பல்வேறு விழாக் களும் கொண்டாடப்பட்டன.

சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப்

பிறந்தகான் வயின் பெருங்கமலமும்...

என்று தொல்காப்பியம் கூறுகிறது. அரசனுக்குச் சொந்தமான மாமரம் ஒன்றிலிருந்து தானாகவே பழுத்துக் கீழே விழுந்து கிடந்திருந்த மாம்பழத்தை எடுத்துத் தின்றதற்காகப் பெண் ஒருத்தியை இரண்டாகக் கிழித்துக் கொன்ற நன்னன் எனும் மன்னனின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடினார்கள் என்று மதுரைக் காஞ்சி பெருமைப்படப் பாடுகிறது. குரவைப் பாட்டுகள், பலவகைக் கூத்துகள், புனைந்துரைகள் போன்றவற்றை நிகழ்த்தி சேரி மக்கள் நன்னன் பிறந்த நாளைக் கொண் டாடினார்கள் என்று அப்பாடல் கூறுகிறது.

மன்று தொறும் நின்ற குரவை சேரிதொறும்

உரையும் பாட்டும் ஆட்டும் வினாஇ

வேறுவேறு கம்பலை வெறிகொன்பு மயங்கிப் பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாள் சேரி விழவின் ஆர்ப்பெழுந் தாங்கு...

என மதுரைக் காஞ்சி பாடுகிறது.

பார்ப்பனர் வசிக்கும் பகுதி கிராமம் - வேளாளர் வசிக்கும் பகுதி ஊர் - ஒடுக்கப்பட் டோர் வசிக்கும் பகுதி சேரி - என்பது அக்கால வகைப்பாடு நால்வருண ஜாதிப் பாதிப்பு இலக்கியங்களில் பிரதிபலிக்கிறது.

புனலாடல்

மழை பொழிந்து ஆற்றில் நீர்ப் பெருக்கு ஏற்படும் காலத்தில் மகிழ்ச்சிப் பெருக்கால் ஆற்றில் நீராடி மகிழ்வது புனலாட்டு விழா எனப் பட்டது. ஆற்றில் புனலாடியதைப் பதிற்றுப் பத்தும் (பாடல் 48), கடலில் புனலாடியதைப் பட்டினப்பாலையும் (பாடல் 97) பாடுகின்றன. பொன்னாலான சங்கு, நண்டு, இறவு (இறால்), வாளை ஆகியவற்றைப் புதுப்புனலில் இட்டுப் போக்கி வேண்டிக் கொண்ட செயலைப் பரிபாடல் (பாடல் 10) எடுத்துக் கூறுகிறது. இவ்வேண்டுதலால் சங்கும் நண்டும், இறாடல், வாளை மீன்களம் ஆற்றில் நிறையக் கிடைக்கும் என்று தமிழரின் நம்பிக்கையாம். “தீது நீங்கக் கடலாடியும்....” எனப் பட்டினப்பாலைப் பாடல் 97 கூறுகிறது.

வாரனாசியோர் மறையோம்பாளன்

ஆரணவு வாத்திய பஞ்சிகனென்போன்

பார்ப்பனி சாலிகாப்புக் கடைகழிந்து

கொண்டோன் பிழைத்த தண்டமஞ்சித்

தென்றிசைக் குமரியாடிய வருவோள்...

என மணிமேகலையும், ‘குமரியம் பெருந் துறையாடி மீள்வேள்’ எனச் சிலப்பதிகாரமும் கடலில் நீராடுவதைப் பாடுகின்றன. இது எதற்காக? தீது நீங்கக் கடலாடுவதாம்! தீதைச் செய்யாமல் இருக்கலாமே! ஏன் செய்ய வேண்டும்? அதைப் போக்க ஏன் கடலில் குளிக்க வேண்டும்? குளித்தால் அழுக்குப் போகலாம், தீமை போகுமா? தீமை ‘பொருளா?’ தீமை ‘செயல்’ அல்லவா? சங்க இலக்கியங்களில் சுட்டப்பட்ட இந்தப் பழக்கம் தான் இன்றளவும் காசி இராமேசுவரம் போய்க் குளித்து வரும் வழக்கமாகத் தமிழர்களின் மரபாக நீடித்து வருகிறது!

ஓண விழா

மாவலி மன்னன் சேர நாட்டைப் பெரும்பேருடனும் புகழுடனும் ஆண்டவன், அவனை அழித்தற் பொருட்டு விஷ்ணு எனும் வைணவக் கடவுள் வாமன் எனும் குள்ளப் பார்ப்பான் உருவில் வந்து மூன்றடி மண் கேட்டான் எனவும், நிலத்தை ஓரடியாகவும் வானத்தை இரண்டாம் அடியாகவும் அளந்து விட்டு, மூன்றாம் அடியை மாவலியின் தலையில் வைத்து அழுத்தி நிலத்துக்குள் அழுத்தி அழித்து விட்டதாகப் பழங்கதை. மாவலியின் இறுதி விருப்பத்திற்கிணங்க அவன் ஆண்டுக்கொரு முறை தன் நாட்டைப் பார்க்க வருவதாகவும் அதனை அந்நாளில் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதாகவும் கூறப்படும் விழா ஓண விழா. மலையாள மக்களால் 7 நாள் விழாவாகக் கொண்டாடப்படும் விழா. தமிழர்களால் கொண்டாடப்படவில்லை. பண்டைக் காலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதாக மதுரைக் காஞ்சி ‘கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி’ (பாடல் 427) எனப் பாடுகிறது.

அழிக்கப்பட்ட மாவலி மன்னனின் பெருமை கூறும் விழாவாக மலையாள மக்களால் இன்றளவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணவிழா தமிழர்களால் கொண்டாடப்படுவதில்லை. அதைவிடக் கொடுமையாக அழித்தவனின் பெருமை பாடும் விழாவாக, பார்ப்பனர்கள் பூணூல் மாற்றும் சடங்கை ஓணத்திற்கு அடுத்த அவிட்ட நாளில் கொண்டாடுகிறார்கள். ஆவணி அவிட்டம் என்று பூணூல் புதுப்பிக்கும் விழாவாக மாற்றப்பட்டுவிட்டது. பண்பாடு அழிக்கப் பட்டதற்கு இதுவும் ஒரு சான்று.

கார்த்திகை விழா

மழைகால் நீங்கியமாக விசும்பிற்

குறுமுயல் மறுநிறங்கிளரமதி நிறைந்து

அறுமீன் சேரு மகலிருள் நடுநாள்

மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்

பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய

விழவுடனயர வருகதில்லம்ம...

என அகநானூறு எடுத்துக்கூறும் விழா கார்த்திகை விழா எனப்படுகிறது. மழையை வழியனுப்பத் தமிழர்கள் எடுத்த பண்பாட்டு விழா என்கிறார்கள். மழையை வழியனுப்ப வானத்தை நோக்கி நெருப்பைக் காட்டுகிறது இந்த விழா என்கிறார்கள். இதைத்தான் கார்த்திகை தீபம் என்கிறார்கள். திருவண்ணா மலை கோயிலில் பத்து நாள் விழா, பக்தர்கள் வீட்டினில் மூன்று நாள் விழா. மண்ணுக்கும் விண்ணுக்கும் நீண்ட ஒளி வடிவாய்ச் சிவபெருமான் நின்று பிரம்மா, திருமால் எனும் இரு கடவுள்களின் செறுக்கை அழித்ததாகவும் திருவண்ணாமலை தீபத்திற்கு விளக்கம் கூறுகிறது பழங்கதை. மழையை நிறுத்தும் செயல் என்பது அண்மைக்காலப் பேராசிரியர் களின் புதிய கண்டுபிடிப்போ? அயோத்திதாசப் பண்டிதர் என அழைக்கப்படும் காத்தவராயன் எனும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னோடித் தலைவர் இதனை ‘கார்த்துல தீபம்’ எனப் பெயர் மாற்றித் தமிழர் கொண்டாட வேண்டும் என்றேகூடப் பிரச்சாரம் செய்தார். இதற்கு என்ன விளக்கமோ?

ஆழியிழைத்தல்

கணவனைப் பிரிந்து தனிமையில் வாடும் பெண்டிர், தலைவனின் வருகையை அறிவதற்காகக் குறிபார்க்கும் முறை ஆழியிழைத்தல் எனப்படும். கடலிழைத்தல் என இலக்கியங்களில் குறிக்கப்பட்ட சடங்காகும். ஒரு வட்டம் வரைந்து, அதனுள் சிறு சிறு வட்டங்களை வரைந்து பின் அவற்றின் கூட்டுத் தொகையை அறிந்து ஒற்றைப் படை எண்ணாக இருந்தால் இன்ன பலன், இரட்டைப் படையாக இருந்தால் இன்ன பலன் என அறிவது இது. மற்றொரு முறையையும் கூறுகிறார்கள். கண்ணை மூடிக் கொண்டு மணலில் வட்டம் வரைய வேண்டுமாம். வட்டம் முழுமையாக அமைந்து கோடுகள் இணைந்திருந்தால் எண்ணியது நடக்கும். இல்லையேல் எண்ணியது நடக்காதாம். இப்படிப்பட்ட விளக்கங்களைத் திருவிருத்தம், திருக்கோவையார் நூல்கள் கூறுகின்றன. இவற்றைக் குறுந்தொகை (பாடல் 358), அகநானூறு (351), கலித்தொகை (பாடல் 142) போன்ற நூல்கள் கூறுகின்றன. ஒன்றையா, இரட்டையா எனச் சிறார்கள் விளையாடும் விளையாட்டுத்தனமான ‘நம்பிக்கை’ அல்லவா? அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதில் நம்பிக்கைக் கொண்டவர்கள், நடப்பதை எதிர்கொள்ள வேண்டியதுதானே! நடக்க இருப்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளத் துடிக்கும் மனம் குழந்தைத்தனம் அல்லவா? அது சிறுபிள்ளைத்தனத்திற்குத் தமிழர் சமுதாயம் தொடர்ந்து ஆளாகலாமா?

விரிச்சி கேட்டல்

ஒரு செயலைத் தொடங்குமுன் பிறர் தற்செயலாய்க் கூறும் சொல்லைச் சகுனமாகக் கொள்ளும் பழக்கம் தமிழர்களிடையே இருந்தது, இருக்கிறது. இதை அவர்கள் விரிச்சி என்றனர். இதனை அசரீரி எனவும் கூறுவர். இந்த அசரீரி என்பது உருவமற்று வானவெளியில் எதிர்பாராமல் தோன்றும் குரல் ஆதலால் விரிச்சிக்கு அசரீரியைக் கூறக்கூடாது என்றும் சிலர் கூறுவர். இலக்கியத்தில் இருது ‘வாய்ப்புள்’ எனக் கூறப்படுகிறது (முல்லைப் பாட்டு 18).

கொடுங்கோன்கோவலர் பின்னின்றுய்த்தர

இன்னே வருகுவர் தாயரென்போன்

நன்னர் நன்மொழி கேட்டனமதனால்

நல்லநல்லோர் வாய்ப்புள் தெவ்வர்

முனைகவர்ந்து கொண்ட திதையர் வினைமுடித்து

வருதல்தலைவர் வாய்வது நீ நின்

பருவர லெவ்வங் கனைமாயோயெனக்

                                    காட்டவும்...                                                     (முல்லைப் பாட்டு 15-22)

என்றவாறு விரிச்சி கேட்கும் முறையைத் தமிழ் இலக்கியம் கூறும். விரிச்சி கேட்கும்போது, தெய்வத்தைத் தொழுது கேட்பது வழக்கம். எனவே, தெய்வத்தோடு தொடர்புபடுத்தி இப் பழக்கத்தை ஊன்றி நட்டு வைத்துள்ளனர்.

ஆனால்,

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

நடுநாள் வந்து தும்பியும் துவைக்கம்

நெடுநகர்வரைப்பின் விளக்கும் நில்லா

துஞ்சாக்கண்ணே துயிலும் வேட்கும்

அஞ்சுவருகுரா அற்ற குரலுந் தூற்றும்

நெல்நீரெறிந்து விரிச்சசி ஓர்க்குஞ்

செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா...

எனும் புறநானூற்றுப் பாடல் (280) விரிச்சி வாக்குப் பொய்த்துப் போனதைச் சுட்டிக் காட்டுகிறது. என்றாலும், இதன்பால் ‘ஊட்டப்பட்ட’ நம்பிக்கை மறையவில்லை. இதுதான் பண்பாடோ? அய்யகோ!

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

பார்க்கும் பழக்கம் 3000 ஆண்டுகளுக்கு முன்பே ஊட்டப்பட்டு விட்டதைத் தொல்காப்பியம் (பொருள் 88) கூறுகிறது. அதனை வழிமொழிந்து புறநானூறு (204), அகநானூறு (141), நற்றிணை (161) போன்ற இலக்கியங்கள் உறுதிப்படுத்து கின்றன.

ஓந்தி-தாயத்து

சூழலுக்கேற்ற நிறம் மாறும் ஆற்றல் பெற்ற பங்சோந்திகூட நிமித்தம் (சகுனம்) உணர்த்தும் நிலையில் இருந்ததாகக் குறுந்தொகை (பாடல் 140) கூறுகிறதே! இந்த ஓந்தியின் வாலை ஞாயிற்றுக்கிழமையில் அறுத்துக் காயப்போட்டு தாயத்து செய்து அடைத்து குழந்தைகளின் கழுத்தில் காப்பு அணியாக அணிவிக்கும் பழக்கத்தையும் தமிழர்கள் கொண்டிருந்ததை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுக் கூறுகின்றனர்.

பல்லி சொல்

வெப்ப நாடுகளில் மிகுதியாகக் காணப்படும் ஊர்வன உயிர்களில் ஒன்று பல்லி. தொல் பழங்காலப் பெரு உயிரான டைனோசர் இனத்தின் அழிவுக்குப் பின்னர் உருமாற்றம் அடைந்த உயிரினம் பல்லி ஆகும். பல்லிகளில் சற்றொப்ப 70 வகைகளும் 300 இனங்களும் இருப்பதாகக் கலைக் களஞ்சியம் கூறுகிறது. இந்த நிலையில் அவற்றின் வாயொலியை நிமித்தமாகக் கருதினர் தமிழர். பல்லியின் ஒலியை நிமித்தமாக வடநாட்டார் கருதவில்லை என்று நிமித்தம் பற்றிக் கூறிய வடமொழி வராக மிகிரர் நூலை ஆதாரம் காட்டி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழன் மட்டுமே பல்லி சொல் கேட்டுப் பதறியது, பதறுவது பரிதாபமே!

பல்லியினம் நிலத்தில் வசிக்கும் வல்லமை பெற்ற முதல் உயிரியாக இருந்தமையால் அது படைப்புக் கர்த்தா எனக் கருதப்பட்டு வணங்கப்பட்டது எனக் ‘கலைமகள்’ ரகுநாதாச்சாரியார் கூறுகிறார் (கலைமகள் தொகுதி 6). வாயில் ஒலி எழுப்பிய முதல் உயிரி பல்லி என்பதால் பல்லி சொல்லுக்குப் பலன் ஏற்படுத்தினார்கள் என்றும் அவரே கூறுகிறார்.

சங்க காலத்தில் பல்லியின் ஒலி நிமித்தமாகக் கருதப்பட்டதைக் குறுந்தொகை (பாடல் 16), அகநானூறு (பாடல் 156), நற்றிணை (பாடல் 245, 333), அகம் 387 போன்ற இலக்கியங்களில் காணலாம். ஆனால், பல்லி இருக்கும் திக்கு, ஒலி கேட்ட கிழமை, ஒலிகளின் எண்ணிக்கை போன்றவற்றைக் கணக்கிட்டுப் பலன் கூறும் ‘கவுளி சாத்திரம்’ எந்தச் சுயநலக் கும்பலின் சதி? என்ற கேள்வி எழுகின்றது.

குறுந்தொகைப் பாடல் 16 பல்லி எழுப்பும் ஓசையை ‘உகிர்நுகி புரட்டும் ஓசைபோல்’ எனக் கூறுகிறது. கல்லில் தீட்டிய அம்பின் நுனியை, விரல் நுனியால் தடவிப் பார்க்கும்போது எழும் ஓசையோடு உதாரணம் காட்டுகிறது. அடுத்த வரியிலேயே, ‘செங்காற் பல்லி தன் துணை பயிறும்’ எனப் பாடி, சிவந்த கால்களை உடைய பல்லி தன் துணையை அழைக்கும் ஓசை எனப் ‘பல்லி சொல்லை’ விளக்குகிறது. ஆண் பல்லியோ, பெண் பல்லியோ தன் துணையை எதற்கு நாடும்? எதற்கு அழைக்கும் என்பது நாம் அறிந்தது தானே? அப்படி இருக்கையில் ‘அந்த ஒலி’ நமக்கு நல்ல ஒலி அல்லது தீய ஒலி எனக் கொள்வது அறிவார்ந்த தமிழ்ச் சமுதாயத்திற்குப் பொருத்தம் உடையதுதானா? அந்த ஒலி காதில் பட்டவுடன் பரிகாரமாகத் தரையை விரலால் தட்டும் தமிழர்கள் இருக்கிறார்களே! அந்த ஒலியைச் சிவனுடன் தொடர்புபடுத்துவதும் அதற்கு ஊறுவிளைவித்தால் நோய்வாய்ப்படுவர் என மிரட்டியிருப்பதும் பிராயச்சித்தமாக வெள்ளிப் பல்லி, தங்கப் பல்லி செய்து கோயிலில் வைப்பதுமான சடங்குகளில் ஆழ்ந்திருக்கிறார்களே, தமிழர்கள் திருக்காளத்தி கோயிலுக்கு வெள்ளியால் பல்லி செய்து அளித்தாரே, காஞ்சிபுரம் சங்கரமடத் தலைவர்! எப்படியெல்லாம் மூடத்தனத்தை வளர்க் கிறார்கள் என்பதைச் சிந்திப்பதே இல்லையே!

“ஊருக்குச் சொல்லுமாம் பல்லி! தானே விழுமாம் கழுநீர்ப் பானையில் துள்ளி” என்கிற சொலவடை உண்டே! பிறர்க்கு நிமித்தம் கூறும் பல்லி, கழுநீர்ப் பானையில் விழுந்து செத்துப் போகிறதே! மயிலின் இறகு வைக்கப்படும் இடத்தில் வரமறுக்கிறதே, பல்லி! ஏன்? யோசித்தோமா! யோசிக்க வேண்டாவா?

கண் துடித்தல்

ஆண்களின் கண் துடித்தல் சகுனமாகக் கருதப்படவில்லை. பெண்களின் கண் துடிப்பதை மட்டும் சகுனமாகக் கொள்ளும் வழக்கம் தமிழரிடையே இருந்துள்ளது. அதிலும் இடக்கண் துடித்தால் நல்ல சகுனம், வலது கண் துடித்தால் கெட்ட சகுனம் என்று ஒரே உடலின் உறுப்புகளில் பாகுபாடு செய்துள்ளனர். சிலப்பதிகாரம் ஒன்றில் மட்டுமே இந்த நம்பிக்கை குறிப்பிடப்படுகிறது. ‘எண்ணுமுறை யிடத்தினும் வலத்தினுந் துடித்தன’ எனப் பாடுகிறது. இந்திர விழா ஊரெடுத்த காதையில், ‘மாதவியின் வலக்கண் துடித்ததாம்; அதனால் கோவலன்-மாதவி ஊடல் நடந்து பெரிதாகிப் பிரிவில் முடிந்ததாம்’ எனக் கூறப்பட்டுள்ளது.

தும்மல்

தும்மலைச் சகுனமாகக் கொள்ளும் போக்கு தமிழரிடையே உள்ளது. தும்மல் வந்தால் பிறர் அவரை நினைப்பதுவாகக் கருதும் போக்கு உள்ளது. அறநூல் எனப் போற்றப்படும் திருக்குறளில் தும்மினால் பிறர் நினைப்பதாகக் கருதும் நிலை காட்டப்படுகிறது. யார் உம்மை நினைத்ததால் நீர் தும்மினீர் எனக் கேட்கும் பெண்ணைத் திருக்குறள் காட்டுகிறது. இதற்காக, வந்த தும்மலை அடக்கியபோது என்னிடம் ஏன் மறைக்கிறீர் எனக் கேட்டுச் சண்டை போட்ட பெண்ணையும் திருக்குறள் காட்டுகிறது. ஆக, தும்மல் பற்றிய நம்பிக்கை தமிழர்களிடையே அப்போதே நிலவியுள்ளளது.

நல் விழாக்கள் நடைபெறும் நேரத்தில் தும்முவது கெட்ட சகுனமாகக் கருதப்படுகிறது. திருமணங்களில் தும்முவது கெட்ட சகுனமாம். இதனால், கடவுள்களின் திருமணமே தடைப்பட்டிருப்பதைப் புராணக் கதைகள் கூறுகின்றன. இன்னும்கூட திருமணங்களில் தாலி கட்டும் நேரத்தில் யாரும் தும்மக் கூடாது என்பதில் குறியாக இருப்பார்கள். மீறி யாராவது தும்பி விட்டாலும் அச்சத்தம் பிறர்க்குக் காதில் விழாதவாறு அந்த நேரத்தில் வலுவாக எழுப்பப்படும் கொட்டுமேளச் சத்தம் அமுக்கிவிடும். அப்படி ஒரு பயன்பாடுகூட மேளம் அடிப்பதற்குக் காரணமாம்! என்ன விந்தை இது?

(தொடரும்)

(‘விழிகள் பதிப்பகம்’ வெளியிட்ட ‘திராவிடர் கழகம் கட்சி அல்ல; ஒரு புரட்சி இயக்கமே’ என்ற நூலிலிருந்து)

மதங்களைக் கைவிட்ட நாடுகளே பொருளாதார வளர்ச்சி அடைய முடியும்

“மதங்களைக் கொள்கையாக ஏற்றுக் கொண்ட மத ஆட்சிகள், அந்தக் கொள்கையை கைவிடுமானால், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற வாய்ப்புகள் உண்டு” என்று இங்கிலாந்தில் உள்ள ‘பிரிஸ்டல் பல்கலைக்கழகம்’ நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆய்வின் முடிவுகளை சர்வதேச புகழ் பெற்ற ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ (Science Advances) இதழ் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வு - புதிய வெளிச்சத்தைத் தந்திருக்கிறது. “ஒரு நாடு எந்த அளவுக்கு மத நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஏழ்மையில் சிக்குண்டு கிடக்கிறது” என்று புதிய ஆய்வு கூறுகிறது. அல்பேனியாவிலிருந்து ஜிம்பாவே வரை உள்ள உலகின் பல்வேறு நாடுகளின் தனி மனித வருவாய், சமூகப் பிரச்சினை, நாணய மதிப்பு, வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை சேகரித்து விரிவாக நடத்தப்பட்ட ஆய்வு இது. மதச்சார்பின்மை என்ற கொள்கை வளர்ச்சிக்கு ஒரு முன் நிபந்தனை. மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றுவதாலேயே பொருளாதார வளர்ச்சி தானாக வந்து விடும் என்பது இதன் அர்த்தமல்ல” என்று ஆய்வுக் குழுவை வழி நடத்திய டேமியன் ரக் (Damien Ruck) கூறியுள்ளார். “அதே நேரத்தில் மதச்சார்பின்மை என்ற கொள்கை வழியாக தனி மனித உரிமைகளையும் மாண்புகளையும் கூடுதலாக மதித்துப் பின்பற்றும்போது பொருளாதார முன்னேற்றத்தை அது சாத்தியமாக்குகிறது. இது எங்கள் ஆய்வில் கண்டறிந்த முடிவு” என்றார் ரக்.