nanan 35070க்கும் மேற்பட்ட பெரியாரியல் நூல்களை எழுதிக் குவித்துள்ள பேராசிரியர் நன்னன் அவர்களுக்கு இப்போது வயது 93. “முதுமைக்கான தளர்வுகள் இருந்தாலும் மூளை மட்டும் 24 மணி நேரமும் பெரியார் மற்றும் தமிழ் குறித்து அசை போட்டுக் கொண்டே இருக்கிறது” என்கிறார்.

சில பெயர்களை உடனே நினைவுக்குக் கொண்டு வருவதில் மறதி குறுக்கிட்டாலும் ஊன்றி நிற்கும் கொள்கை உணர்வுகள் சொற்களாக வெடிக்கின்றன. சென்னையில் உள்ள அவரது ‘சிறுகுடில்’ இல்லத்தில் ‘நிமிர்வோம்’ பேட்டிக்காக சந்தித்தோம், “மய்யமான பிரச்சினைகளை விட்டு விலகி நான்பேசிக்கொண்டேஇருப்பேன்.

நீங்கள்தான் மீண்டும் தொடங்கிய இடத்துக்கு என்னை இழுத்து வரவேண்டும்” என்ற நிபந்தனையோடு உரையாடத் தொடங்கினார். உரையாடல் 3 மணி நேரம் வரை நீண்டது. உண்மை பெரியாரிஸ்டுகளுக்கே உரிய தன்னடக்கம், மிகைப்படக் கூறாமை, தெளிவான சிந்தனை என்ற தனித்துவத்தோடு அவர் நிகழ்த்திய உரையாடல்களின் தொகுப்பு:

கேள்வி: திராவிடர் இயக்கம் நோக்கி ஈர்க்கப்பட்டது எப்படி?

பதில்: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நான் மாணவராக சேர்ந்தபோது எனக்கு திராவிட இயக்கக் கொள்கையில் அவ்வளவு ஈடுபாடு எல்லாம் கிடையாது. “சாமி இல்லை; மதம் இல்லை என்று கூறுகிறீர்கள். பிறகு தமிழே இல்லை என்று கூறுவீர்கள்” என்றுதான் கூறி வந்தேன். அரசியல் ரீதியாக முதன்முறையாக என்னை ஈர்த்தது எம்.என்.ராய் நடத்திய கம்யூனிஸ்ட் கட்சிதான். அதுவே கம்யூனிஸ்ட் கட்சிகளிலேயே மிகச் சிறந்தது என்பது எனது கருத்து. அந்த அமைப்பின் ஆதரவாளராக இளங்கோ என்ற மாணவர் என்னுடன் படித்தார். அவர் மூலமாகவே அந்தக்கட்சி எனக்கு அறிமுகம். இளங்கோவன் சகோதரர் பெரியாரோடு ரஷ்யாவுக்கு சென்றவர். அவரது பெயர் எனக்கு இப்போது நினைவில்லை.

நான் அண்ணாமலை பல்கலையில் படித்தபோது நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன், இரா. செழியன், நீடாமங்கலம் சரவணன் போன்றவர்கள் தீவிர திராவிடர் இயக்கத்தினராக இருந்தனர். அப்போது பல்கலைக் கழகத்தில் தமிழிசை இயக்கம் தீவிரம் பெற்றிருந்தது. தண்டபாணி தேசிகர் தமிழிசை நிகழ்ச்சி பல்கலைக்கழக இசைத் துறையின் சார்பில் நடந்தது. தண்டபாணி தேசிகர் பாடத் தொடங்கியவுடன் சில மாணவர்கள் ‘ஒன்ஸ்மோர்’ என்று கிண்டலாக கூச்சல் போட்டு பாட விடாது தொல்லைக் கொடுத்தனர். ஒரு கட்டத்தில் தண்டபாணி தேசிகர் பாடுவதை நிறுத்திவிட்டு, மேடையில் எழுந்து நின்று, வணக்கம் போட்டுவிட்டு மனக்குமுறலுடன் வெளியேறி விட்டார்.

குழப்பம் உருவாக்கியவர்கள் சில மலையாள மாணவர்கள். அவர்களிடம் விசாரித்தபோது, “எங்களுக்கு எதுவும் தெரியாது; பார்ப்பனர்கள்தான் குழப்பம் செய்யச் சொன்னார்கள்” என்று உண்மையை கூறிவிட்டனர். கட்சிகளைத் தாண்டி மாணவர்களிடையே பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் உணர்வு - தமிழிசை இயக்கத்தின் வழியாக பீறிட்டு நின்றது.

திருவையாற்றில் பார்ப்பனர் தியாகய்யர் உற்சவம் நடத்துவதைப் போலவே அண்ணாமலை பல்கலைக் கழகத்திலும் நடத்துவது வழக்கம். தண்டபாணி தேசிகர், தமிழிசை நிகழ்ச்சியை நிறுத்தியது, பார்ப்பனரல்லாத மாணவர்களை கொதிப்படையச் செய்துவிட்டது. இந்த நிலையில் மதுரை மணி அய்யர் கச்சேரியை நடத்துவதற்கு இரகசியமாக திட்டமிட்டனர். இசைக் கல்லூரி முதல்வராக இருந்தவர் டைகர் வரதாச்சாரி.

பார்ப்பனர்; நல்ல குண்டு உருவம். மதுரை மணி அய்யர் வரவிருக்கும் செய்தி எங்களுக்கு முன்கூட்டியே கிடைத்துவிட்டது. அதை நடத்தவிடக் கூடாது என்று முடிவெடுத்தோம். நான் அப்போது வயதில் மிகவும் இளையவன். எதிர்ப்பு தெரிவித்தவர்களோடு நானும் கலந்து கொண்டேன். அவ்வளவுதான். காந்தி அப்போது ஏதோ ஒரு பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்தார். காந்தி உண்ணாவிரதம் இருக்கும்போது, இசைக் கச்சேரி நடத்தக் கூடாது என்று ஒரு காரணத்தைத் தேர்ந்தெடுத்தோம்.

மணி அய்யர்மேடைக்கு வந்தார். பக்க வாத்தியக்காரர்கள் சுதி சேர்த்துக் கொண்டிருந்தார்கள். மணி அய்யர், ‘ஸ்வரம்’ பாடத் தொடங்கியவுடனேயே கூட்டத்திலிருந்து அதற்கு நேர் எதிராக ‘சிக்னல்’ ஒலி கிடைத்தவுடன் மேடையில் புகுந்து உதைப்பது என்பது எங்கள் திட்டம். அதுதான் நடந்தது. மணி அய்யருக்கு செம்மையாக அடி; ஜன்னல் வழியாக தாவிக் குதித்து ஓட்டம் பிடித்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழக ஜன்னல்களில் அப்போது கம்பிகள் இருக்காது. டைகர் வரதாச்சாரி, நடுங்கிப் போய் தனது பெரிய உடலை சுமந்து கொண்டு, அவரும் ஜன்னல் வழியே குதித்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அவருக்கு அடி ஏதும் விழவில்லை.

அதற்குப் பிறகு ‘தமிழிசைக் கழகத்தைத்’ தொடங்கினோம். இந்த நிகழ்வுகள்தான் என்னை திராவிடர் இயக்கம் நோக்கி ஈர்த்தது. நாவலர் நெடுஞ்செழியன் ஏராளமாக ‘குடி அரசு’ இதழகளை எனக்கு படிக்கத் தருவார். பக்குவமாக திராவிடர் இயக்கக் கருத்துகளை எனக்கு எடுத்துச் சொல்லி திராவிடர் இயக்கத்திற்கு என்னைக் கொண்டு வந்தவர், நாவலர்தான்! அவர் அமைச்சராக இருந்தபோதும் சரி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்தபோதும் சரி, அதே உணர்வோடு பழகினார்.

பெரியார் நூற்றாண்டின்போது தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக அவரை சந்திக்கச் சென்றபோது, “ஏதோ, இந்தக் கட்சியில் (அ.இ.அ.தி.மு.க.) இருக்கிறேன்; இது ஒரு காட்டுக் கூட்டம், ஒரு கொள்கையும் இங்கே கிடையாது” என்று என்னிடம் மனம் உடைந்து பேசினார். பேராசிரியர் அன்பழகன் மாணவர் பருவத்தில் கருத்துகளை சற்று கடுமையாகத்தான் பேசுவார். நாவலர் அப்படி அல்ல. கடவுள் பற்றிய விவாதங்கள் வந்தபோது முதலில் ‘கடவுள்’ என்று எதைக் கூறுகிறாய்? என்று தொடங்கி நாவலர் பேசுவார்.

மாணவர்கள் மட்டுமின்றி,அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு உணர்வுடன் பெரியார் மீது பற்றுக் கொண்ட பல பேராசிரியர்கள் இருந்தார்கள். தமிழ்த் துறைத் தலைவராக இருந்த கா.சுப்பிரமணிய பிள்ளை பெரியார் மீது பற்றுக் கொண்டவர். சைவர். அவரது கை சரியாக செயல்படாது. சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டுதான் பாடங்களை நடத்துவார். மிகப் பெரிய தமிழ் மேதை!

பார்ப்பனரல்லாத மாணவர்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றவர். மாணவர்களை உரிமையோடு ‘வாடா போடா’ என்று தான் அழைப்பார். மாணவர்களும் அப்படி அவர் அழைப்பதையே விரும்புவார்கள். மதுரை மணி அய்யரை மாணவர்கள் அடித்து விரட்டியபோது எங்களை சமாதானப்படுத்த அவரைத்தான் அழைத்து வந்தார்கள். அதேபோல்அண்ணாமலைபல்கலைக்கழகத்தைநிறுவிய அண்ணாமலை செட்டியாரும் சரி; அவரைத் தொடர்ந்து வேந்தராக இருந்த முத்தையா செட்டியாரும் சரி; தமிழின உணர்வாளர்கள்; தமிழிசையை வளர்த்தவர்கள்.

குறிப்பாக அண்ணாமலை செட்டியாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இந்தி எதிர்ப்புப் போரில் 1939ல் மரணமடைந்த தாளமுத்துவின் சடலத்தை தோளில் சுமந்து சென்றவர் முத்தையா செட்டியார்.

மீண்டும் தண்டபாணி தேசிகரை அழைத்து அதே தமிழிசை மண்டபத்தில் தமிழிசை நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது தண்டபாணி தேசிகர் பல்கலைக்கழகத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அதற்குப் பிறகுதான் பல்கலைக்கழகத்தில் தமிழிசைக் கல்லூரியின் முதல்வரானார். அண்ணாமலை பல்கலையில் நடந்த தமிழிசை இயக்கம் தான் என்னை திராவிடர் இயக்கம் நோக்கித் தள்ளியது.

கேள்வி: பெரியாருடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது?

பதில்: அன்றைக்குமாயவரம்(மயிலாடுதுறை)அருகே உள்ள வடகரை எனும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஊரில் மிலாது நபி பொதுக் கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. பெரியார் பேச அழைக்கப்பட்டிருந்தார். கூட்டத்துக்கு மாணவர் பேச்சாளர் ஒருவர் வேண்டும் என்று கேட்டார்கள். அப்போது பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியனுக்கு தேர்வு நடந்து கொண்டிருந்தது. எனக்கு தேர்வுகள் முடிந்திருந்தன. அப்போது வடகரை கூட்டத்திற்கு என்னைப் போகச் சொன்னார்கள். எனக்கு பெரியார் கொள்கைகள் அவ்வளவாக தெரியாது. ஏதோ இரண்டு மூன்று செய்திகள் மட்டும் தெரியும். தயக்கத்தோடு ஒப்புக் கொண்டேன்.

அடுத்த நாள் கூட்டம். சிதம்பரத்திலிருந்து மாயவரம் போக வேண்டும். பேராசிரியர் அன்பழகன் தந்தை கல்யாணசுந்தரம் என்னை அவரது வீட்டில் தங்க வைத்து வடகரைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தார். அப்போது உலக யுத்தம் நடந்த நேரம். சிதம்பரத்திலிருந்து மாயவரம் போக வேண்டுமானால் ‘பாசஞ்சர்’ இரயிலில்தான் போக முடியும். விரைவு வண்டியில்100மைலுக்குகுறைந்ததூரத்துக்குடிக்கட்தர மாட்டார்கள். பாசஞ்சர் இரயில் போய்விட்டது. அப்போது ‘போட் மெயில்’ என்ற விரைவு இரயில் மட்டுமே ஓடியது. என்னிடம் காலணா காசுகூட கிடையாது. சிதம்பரத்தில் ‘போட் மெயில்’ நிற்கும். ஒரு ‘பிளாட்பாரம்’ டிக்கெட்டை மட்டும் எனக்கு வாங்கிக் கொடுத்து, டிக்கெட் பரிசோதகர் இல்லாத பெட்டியைப் பார்த்து என்னை ஏற்றி விட்டார்.

வடகரைக் கூட்டத்தில் நான் சிறிது நேரம் பேசினேன். பெரியார் தான் சிறப்புரை. மசூதிக்கு வெளியே தான் சாப்பாடு போட்டார்கள். கடும் வெய்யிலில் பெரியார் சாப்பிட்டார். எனக்கு ஒரே ஆச்சரியம். அது பற்றி எல்லாம் பெரியார் கவலைப்படுவதே இல்லை. அந்தக் கூட்டத்தில் முஸ்லிம் பெண்கள் முக்காடு போடுவது பற்றியும் நான் குறை கூறி பேசினேன். சாப்பிடும்போது பெரியார் அது பற்றிக்கூட என்னிடம் எடுத்துக் கூறி திருத்தினார். ‘ஏதோ நம்மைப் பேச அழைக்கிறார்கள்; அதைப் பயன்படுத்திக் கொண்டு பொதுவான சமுதாயக் கருத்துக்களைத்தான் கூற வேண்டும்; அழைத்தவர்களையே குறை கூறிக் கொண்டிருக்கக் கூடாது” என்று எடுத்துச் சொல்லி திருத்தினார்.

“படித்து முடித்துவிட்டாய் அடுத்து என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டார். “ஒன்றும் திட்டமில்லை; ஊருக்குப் போக வேண்டியதுதான் ” என்றேன். “என்னோடு வருகிறாயா?” என்றார். உடனே ‘சரி’ என்று கூறிவிட்டேன். அடுத்து மாயவரத்திலோ அல்லது கும்பகோணத்திலா என்று நினைவில்லை. அங்கே ஒரு பூங்காவில் பொதுக் கூட்டம். நெடும்பலம் சாமியப்ப முதலியார் தலைமையில் நடந்தது. கூட்டத்தை முடித்துக் கொண்டு பெரியாரோடு ஈரோடு போய்விட்டேன்.

இதெல்லாம் எங்கள் வீட்டுக்கு எதுவும் தெரியாது. அப்போது பெரியாருக்கு உதவியாளராக கஜேந்திரன் என்பவர் இருந்தார். அவரை எனக்கு நன்றாகத் தெரியும். அவருக்கும் எனக்கும் நீண்ட காலம் நட்பு தொடர்ந்தது. நான் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக பதவி ஏற்றபோதுகூட என்னை வந்து சந்தித்து, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினார். அவரும் பெரியாரோடு வருமாறு என்னை அழைத்தார். “ஈரோட்டில் ‘குடிஅரசு’ அலுவலகத்தில் வேலை செய்கிறாயா? அல்லது என்னுடன் பயணத்துக்கு வருகிறாயா?” என்று பெரியார் கேட்டார்.

நான் அலுவலகத்தில் வேலை செய்வதாக கூறினேன். சாப்பாடு பெரியார் வீட்டில். இரவு தூங்குவது ‘குடிஅரசு’ அலுவலகம். மாதம் 50 ரூபாய் ஊதியம். ஈரோடு ‘குடிஅரசு’ அலுவலகத்தின் நிர்வாகியாக இருந்தவர் கலிவரதசாமி. அய்யாவுக்கு உறவினர். வரவு செலவு எல்லாம் அவர்தான். என்னைப்போல் பணி செய்கிறவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். இளைஞனாகிய எனக்கு அது பிடிக்கவில்லை. அது மட்டுமின்றி ‘குடிஅரசு’ பத்திரிகைக்கு கூட்டம் குறித்து செய்திகளை எழுதும்போது சில தவறுகளை செய்து விட்டேன்.

திருச்செங்கோட்டில் பெரியார் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மின்சாரம், டாக்டர் சுப்பராயன் வீட்டிலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. ‘குடிஅரசு’க்கு செய்தி எழுதிய நான், “டாக்டர் சுப்பராயன் மின்சாரம் தந்து உதவினார்” என்பதை குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். “உதவி செய்தவருக்குநன்றிகூறாமல்இப்படிஅலட்சியம் காட்டலாமா?” என்று பெரியார் கடுமையாக கோபித்தார். தொடர்ந்து, இதுபோல் சில தவறுகளை செய்தேன்.

ஈரோட்டிலிருந்து கிளம்பிவிட முடிவு செய்து விட்டேன். அப்போது ஒரு செய்தித் தாளில் ‘தமிழ் ஆசிரியர்கள் தேவை’ என்று விளம்பரம் வந்தது. உடனே நான் சில ஊர்களுக்கு, தமிழாசிரியர் வேலைக்காக மனுப் போட்டேன். அப்போது எனது பெயர் மு. திருஞானசம்பந்தம். விண்ணப்பங்களில் எனது இருப்பிட முகவரியாக மே/பா. பெரியார், ஈரோடு என்று குறிப்பிட்டிருந்தேன். நான் விண்ணப்பித்த அனைத்து ஊர்களிலிருந்தும் வேலைக்கு அழைத்து கடிதங்கள், ஈரோடு பெரியார் முகவரிக்கே வந்தன.

நான் ஈரோட்டில் இருக்க விரும்பவில்லை என்பதை பெரியார் புரிந்து கொண்டுவிட்டார். அவரே நான் வேறு ஊர்களுக்கு வேலைக்குப் போவதைவிட, சென்னைக்குப் போவதே நல்லது; அதுவே என் முன்னேற்றத்துக்கு உதவும் என்று முடிவு செய்து சென்னையிலிருந்த ஒரு பள்ளி தந்த வேலை வாய்ப்பை தேர்வு செய்தார். அப்படி நான் சென்னைக்கு பணியாற்ற வந்ததால்தான் ஆசிரியர் என்ற நிலையிலிருந்து, கல்லூரி பேராசிரியராக உயர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் என்ற நிலையை எட்ட முடிந்தது.

ஜோலார்பேட்டைக்கு நான் வந்திருந்தேன். அங்கே பார்த்தசாரதி என்று ஒரு பெரியார் தொண்டர் இருந்தார். (பின்னால் ஜீவாவோடு பெரியார் இயக்கத்திலிருந்து வெளியேறியவர்) அவருக்கு அங்கே ஒரு சினிமா தியேட்டர்கூட இருந்தது. பெரியார் அவருக்கு கடிதம் எழுதி, என்னை சென்னைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். பார்த்தசாரதி எனக்கு 2 வேட்டிகள், 2 துண்டுகள், பனியன்கள் வாங்கித் தந்து கையில் ரூ.20 பணமும் தந்து, சென்னைக்கு அனுப்பினார். சூளையில் உள்ள ‘இந்து செகன்டரி பள்ளியில்’ தமிழாசிரியராக சேர்ந்தேன்.

கேள்வி: அந்தக் காலம் நடந்த கூட்டங்கள் -ஆதரவு -எதிர்ப்புகள் - உங்கள் அனுபவங்கள் பற்றி கூறுங்கள்...

பதில்: அப்போதெல்லாம் கூட்டங்களில் எதிர்ப்புகள் கூடுதலாக இருக்கும். கூட்டமும் பெரிய அளவில் சேராது. ஒரு ‘லாந்தர்’ விளக்கை வைத்துக் கொண்டுதான் கூட்டம் நடக்கும். தகரக் குழயில் (மெகா போன்) பேசு வோம். கூட்டத்தில் பேசியவர்கள் பேசி முடித்தவுடன் கீழே போய் தரையில் உட்கார்ந்து கொள்வார்கள். பேச்சாளர்களுக்கு இரயில் டிக்கட் மட்டுமே எடுத்துத் தருவார்கள். இரயில் டிக்கெட் மூன்றே முக்கால் அணா என்றால் அவ்வளவுதான் தருவார்கள். நான்கு அணா தந்தால் கடலை வாங்கி சாப்பிடுவானே என்றுகூட கருத மாட்டார்கள்.

எங்களிடம் கையில் காசே இருக்காது. கூட்டம் என்றால் சுமார் பத்து இருபது பேர் மட்டுமே இருப்பார்கள். அவர்களிடம் தான் நாங்கள் “முழங்குவோம்”. ஆசிரியர் கி. வீரமணி, சிறுவன். அவரை மேஜை மீது ஏற்றிப் பேச வைப்பார்கள். அவர் கையை உடம்பை ஆட்டிப் பேசுவதைப் பார்க்க சிலர் வருவார்கள். பிறகு நாங்கள் பேசுவோம். ஒரு சில ஊர்களில் பேச முடியாமலேயே திரும்பியதும் உண்டு. குறிஞ்சிப்பாடியில் ஒரு கூட்டம்.

ஏற்பாடு செய்தவர் ஒரு சலவைத் தொழிலாளி. அந்த ஊர் நாட்டாமைக்காரர் அங்கே வந்தார். “யாரடா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது? கண்ட பயலும் இங்கே நாட்டாமை செய்யக் கிளம்பிட்டானா?” என்று சத்தம் போட்டார். அவ்வளவுதான். கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த சலவைத் தொழிலாளியே காணாமல் போய்விட்டார். எதிரே உட்கார்ந்திருந்த சிறுவர்களையும் பெற்றோர்கள் வந்து வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போய்விட்டனர். ஆட்களே இல்லாத இடத்தில், தகரக் குழாயில் (மெக்கா போன்) பேசினேன்.

கூட்டத்துக்கு வருவோரும் கூட கலாட்டா செய்வதற்கென்றே வருவார்கள். அப்படித்தான் கூட்டங்கள் நடக்கும். அங்கேதான் பேசினோம். ஆனால் இப்படியெல்லாம் பேசினாலும்கூட ஒவ்வொரு ஊரிலிருந்தும் கூட்டம் முடித்துத் திரும்பும்போது களத்திலிருந்து திரும்பும் ஒரு போர் வீரனைப் போன்ற உணர்வுதான் நிறைந்திருக்கும். இப்போதும்கூட அதே உணர்வோடுதான் உங்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். பெரியார் கொள்கைக்கு அத்தகைய வலிமையும் ஈர்ப்பும் உண்டு.

எங்களுக்கு கொள்கைப் பயிற்சி வகுப்புகள் நடக்கும். அய்யாவே(பெரியார்) பலமணி நேரம் வகுப்புநடத்துவார். கைவல்ய சாமியார் வகுப்பு நடத்துவார். அவருக்கு காது கேட்காது. இந்து மத சாஸ்திரங்களை கரைத்துக் குடித்தவர். அவர் பிறப்பால் ஒரு மலையாளி. ‘குடிஅரசு’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதுவார். மூவலூர் இராமாமிர்தம், திருச்சி ‘வக்கீல்’ வேதாசலம், ஈரோடு கலிவரதசாமி போன்றவர்கள் வகுப்பு எடுப்பார்கள். அப்போது பெரியார் கொள்கைகளை சைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். வடமொழியை ஆதரித்துப் பேசிய சைவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் பண்டிதமணி தமிழறிஞர் கதிரேசன் செட்டியார் பகிரங்க சவால் விட்டார். சைவர்கள் முன் வைத்த வாதங்களை உடைத்து நொறுக்கி குடலை உருவி எடுத்து வெளியே வீசுவார். ‘சைவம்’ என்பதே தமிழ் தானா என்று கேட்டார்.

மறைமலை அடிகளிடம் சைவர்கள் சென்று பெரியாரைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று கூறியபோது அவர் சொன்னார்: “முதலில் தமிழன் இருந்தால்தான் பிறகு சைவமே இருக்க முடியும். பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்து தமிழர்களுக்காகப் போராடுகிறார். இந்தப் போராட்டத்தை அவரால்தான் நடத்த முடியும். பெரியாரை எதிர்க்கக் கூடாது” என்று மறைமலை அடிகள் கூறிவிட்டார்.

நான் அரசு வேலைக்கு வந்த பிறகு இயக்கத்தில் நேரடிப் பங்களிப்பு ஏதும் இல்லை. ஆனால் பெரியார் கூட்டங்களுக்கு மட்டும் தவறாது செல்வேன். தொடர்ந்து ‘விடுதலை’ ஏட்டைப் படிப்பேன். 1944இல் புலவர் படிப்பை முடித்தேன்; 5 ஆண்டுகள் பெரியாரோடு இருந்தேன். 1949இல் தி.மு.க. பிரிந்தபோது தி.மு.க.வுக்கு வந்து விட்டேன். பெரியார் மிகவும் நம்பியவர்கள்கூட தி.மு.க.வுக்கு வந்து விட்டார்கள். அவர்களில் ஒருவர் குடந்தை கே.கே. நீலமேகம். அவரிடம் பெரியார் தனது பணத்தை நம்பிக்கையாகக் கொடுத்து வைப்பார். எந்தப் பத்திரமும் கிடையாது.

தனது சட்டைப் பையிலிருக்கும் டயரியில் மட்டும் ஒரு இடத்தில் குறித்து வைப்பார். அது அவருக்கு மட்டுமே புரியும். அவ்வளவுதான். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. கே.கே. நீலமேகம் தி.மு.க.வில் சேர முடிவெடுத்தபோது சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மீரான்சாகிபு தெருவில் இருந்த பெரியார் வீட்டுக்குப் போய் பெரியார் தன்னிடம் கொடுத்து வைத்திருந்த பணத்தை திரும்பித்தந்துவிட்டு தி.மு.க.வுக்குப் போகப் போவதாக கூறிவிட்டு வந்தார். நானும் அவருடன் சென்றிருந்தேன்.ஆனால்அய்யாவிடம் என்னை அழைத்துப் போகவில்லை.

மவுண்ட்ரோடு (அண்ணா சாலை) அருகே உள்ள ஒரு ஓட்டல் வாசலில் என்னை நிற்கச் சொல்லிவிட்டு, நீலமேகம் மட்டும் சென்றார். பெரியார் கொடுத்து வைத்திருந்த பணத்தைத் தந்துவிட்டு திரும்பி வரும்போது நீலமேகம் கண்ணீர் சிந்தியபடியே வந்தார். பெரியார் ஒருவர் மீது நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்றால் அவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட உண்மையான மனிதர்களாகத்தான் இருப்பார்கள்.

கேள்வி: பெரியார் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு 1978இல் நடத்தியபோது நீங்கள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனராக இருந்தீர்கள். அந்த விழாவில் உங்கள் பங்களிப்பு குறித்துக் கூறுங்கள்...

பதில்: அதை ஒரு நல்வாய்ப்பாகவே நான் கருதுகிறேன். நூற்றாண்டு விழாக் குழுவுக்கு என்னைத் தலைவராக முதல்வர் எம்.ஜி.ஆர். நியமித்தார். விழாக் குழுவில் திருவாரூர் தங்கராசு, நெ.து.சுந்தரவடிவேலு உள்ளிட்டோரும் இடம் பெற்றிருந்தனர். அய்யாவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒலி ஒளி காட்சி மிகச் சிறப்பாக சென்னை உள்ளிட்ட நகரங்களில் நடத்தப் பட்டது. அதை எழுதியது நான்தான். நூற்றாண்டு விழா வாய்ப்பைப் பயன்படுத்தி அய்யாவின் கருத்துகளை ஏராளமான நூல்களாக வெளியிட்டிருக்க முடியும். அய்யாவின் முழுமையான வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டிருக்க முடியும். அதற்கான வாய்ப்புகள் இருந்தன.

ஆனால், குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் தன்முனைப்புடன் கருத்து மோதல்களை உருவாக்கிக் கொண்டு ஒத்துழைப்புத் தரவில்லை இதுதான் உண்மை. எங்களது துறை சார்பில் பெரியார் கருத்துகளை வரலாற்றை ஏராளமாக திரட்டியும் கூட, அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. என்னிடம் இருந்த குறிப்புகளைத்தான் பணி ஓய்வுக்குப் பிறகு பல தொ-குதிகளாக வெளியிட்டேன். அய்யாவின் எழுத்து சீர்திருத்தத்தை அரசு அங்கீகரித்தது. ஆனால், ‘அய்’, ‘அவ்’ என்ற இரண்டு எழுத்துகளை மட்டும் மாற்றக் கூடாது என்று சிலர் பிடிவாதம் காட்டினர். ம.பொ.சி., கி.ஆ.பெ. விசுவநாதம், கி.வா.ஜகந்நாதன் ஆகியோர் முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

முதல்வரும்அவர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தில் ஏற்றுக் கொண்டார். அரசு ஆணையில் ‘அய், அவ்’ எழுத்து சீர்திருத்தம் இடம் பெற்றிருந்தது. பிறகு ஆணை அந்த இரண்டு எழுத்துகளுக்கும் திருத்தமின்றி வெளியிடப்பட்டது. நான் முதல்வரிடம் ‘ஆணையை மாற்ற வேண்டாம்’ என்று கூறினேன். ‘பரவாயில்லை கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவோம்’ என்று கூறி விட்டார். ஆனால், எனது எழுத்துகளில் நான் அய்யா முன் மொழிந்த ‘அய், அவ்’ சீர்திருத்த எழுத்து வடிவங்களையே இன்று வரை பின்பற்றி வருகிறேன்.

கேள்வி: திராவிட இயக்கக் கொள்கைகள் வெற்றி பெறவில்லை என்று ஒரு விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. நீங்கள் இது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

பதில்: திராவிட இயக்கக் கொள்கைகள் நிச்சயமாக வெற்றி பெற்றிருக்கிறது. மறுக்க முடியாது. ஆனால், வெற்றி பெற வேண்டிய அளவுக்கு வெற்றியடையவில்லை என்பதுதான் எனது கருத்து.

நான் தி.மு.க.வில் சேர்ந்தேன் என்றாலும் அய்யாவின் ஒரு கொள்கையில் இன்றும் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன். சமுதாய மாற்றத்துக்குப் போராட வேண்டிய இயக்கம் தேர்தல் அரசியலுக்குப் போகவே கூடாது என்பதுதான் எனது கருத்து. நாளைக்கு உங்கள் இயக்கம் அப்படி ஒரு முடிவை எடுத்தால்கூட அதை நான் அழுத்தமாகக் கண்டித்துத்தான் பேசுவேன்.

திராவிடர் இயக்கக் கொள்கைகளில் தி.மு.க. அதற்கான கொள்கை அடையாளங்களை இழந்து விட்டது. நூற்றாண்டு விழா மாநாட்டில் கலைஞரை வைத்துக்கொண்டே நான் இதைப் பேசினேன். விழாத் தலைவராக இருந்த மோகன், ஓய்வு பெற்ற நீதிபதி, உரையை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார். நான் அதைப் பொருட்படுத்தாது எனது கருத்துக்களை பதிவு செய்தேன். இறுதியில் பேசிய கலைஞர், பேச்சு முழுதும் என்னைப் பற்றியே இருந்தது. புலவர் கூறுவது உண்மைதான், மறுக்கவில்லை. ஆனால், இது கொள்கைபூர்வமான இயக்கமாக நிச்சயம் மாறும். உங்களது காலத்திலேயே பார்க்கத்தான் போகிறீர்கள் என்று உறுதியளித்தார். கலைஞரைப் பொறுத்த வரை அவரது உணர்வு உண்மையானது தான். அவரது கொள்கை உணர்வை நான் சந்தேதிக்க மாட்டேன். ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் அவர்களுக்கு தேர்தல்தான் முக்கியம். கொள்கையைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.

கேள்வி: பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் கொள்கையை முன் வைத்து தொடங்கப்பட்டது திராவிடர் இயக்கம். இந்த இயக்கத்தால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன் பெற்றிருக்கிறார்கள். தொடர்ந்து விழிப்புணர்வு பெற்று முன்னேறி வருகிறார்கள். ஆனால், தங்களை ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்களை எதிர்த்தவர்கள் தங்களுக்கு கீழ் உள்ள தலித் மக்கள் மீது ஜாதிய ஒடுக்குமுறையை திணிக்கிறார்கள் என்ற கருத்து வலிமை பெற்று வருகிறது. உங்களின் கருத்து...

பதில்: என்னைக் கேட்டால் ஜாதி ஒழிப்புதான் மிக முக்கியமான வேலை என்றே கூறுவேன். இதை மட்டும் பெரியார் இயக்கம் செய்தாலே போதும். கடவுள் நம்பிக்கையைக்கூட விட்டுவிடத் தயாராக இருப்பார்கள். ஆனால், ஜாதியை விட்டுத் தர முன் வர மாட்டார்கள். அதேபோல்தான் மத நம்பிக்கையும். நீங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து சிறந்த பெரியார் இயக்கமாக செயல்பட்டீர்கள்.

நான் மகிழ்ந்தேன். அப்படியே பிரியாமல் இருந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். நான் அண்மைக் காலமாக வெளியே நிகழ்ச்சிகளுக்குப் போவதில்லை. வீட்டிலேயே இருக்கிறேன். முதுமை காரணமாக அதற்குரிய தளர்வுகள் இருந்தாலும் மூளை மட்டும் 24 மணி நேரமும் பெரியார் சிந்தனைகளிலும் தமிழ் மொழி குறித்தும் அசைபோட்டுக் கொண்டேயிருக்கிறது. சிலப்பதிகாரத்துக்கு விளக்க உரை எழுதிக் கொண்டிருக்கிறேன். ‘அதேபோல பெரியாரிடம் கேளுங்கள்’ என்ற தலைப்பில் வினாக்களைத் தொகுத்து, அதற்கு பெரியார் கருத்துகளையே பதில்களாகத் தரும் நூல் ஒன்றை தயாரித்து வருகிறேன். இவ்வாண்டு, இரண்டு நூல்களும் வெளிவர இருக்கிறது.

ஆண்டுதோறும் எனது மகன் அண்ணல் நினைவு நாளில் நூல்களை வெளியிட்டு வருகிறேன். ஏராளமான பெரியார் பற்றிய நூல்களை வெளியிட்டது உங்களுக்குத் தெரியும். இப்போது சுயமரியாதை திருமணம் செய்யும் சிலரை தேர்வு செய்து நிதி வழங்குகிறேன். நான் சுயமரியாதைத் திருமணத்துக்கு, ‘உயர்தினை திருமணம்’ என பெயர் சூட்டியுள்ளேன். சுயமரியாதைத் திருமணம் மட்டுமே மக்கள் திருமண முறை என்பதை குறிக்கவே இந்த சொல்லை தேர்ந்தெடுத்தேன்.

கேள்வி: தமிழ்நாட்டில், ஜாதிகளைக் கடந்து வெவ்வேறு ஜாதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டால் குறிப்பாக அதில் ஒருவர் தலித் ஆக இருந்தால், படுகொலை செய்யப்படும ஜாதிவெறி அதிகரித்து வருகிறது. பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் இயக்கம் நடந்த தமிழகத்தில் தலித் - தலித் அல்லாதார் என்ற நிலை உருவாகி வருவதாகவே தெரிகிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: இது குறித்து விரிவாக ஏதும்அறியும்வாய்ப்புகள் எனக்கு இல்லை. நல்ல கேள்வியைத்தான் நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின்அடிப்படையான நோக்கமே அனைவருக்கும் சம உரிமை, சுய மரியாதை கிடைக்கப் பெற வேண்டும் என்பதுதான். சமத்துவமான சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே நோக்கம். அப்படி மனிதர்களிடம் சம உரிமைகளை பார்ப்பனியம்தான் பகிர்ந்து கொள்ள மறுக்கிறது, அதே பார்ப்பனியக் கருத்துகள். இப்போது வேறு களங்களை நோக்கித் தள்ளப்பட்டிருக்கிறது என்றுதான் இதைப் பார்க்க வேண்டும். இத்தகைய ஜாதி ஆணவப் போக்கு பார்ப்பனரல்லாதாரிடமிருந்து வரும்போது அதையும் எதிர்த்துப் போராடத்தான் வேண்டும். இது பெரியார் நடத்திய பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் போராட்டத்தின் நீட்சியாகவே நான் கருதுகிறேன்.

சமூகம்குறித்தசரியானபுரிதலுக்குநாம்வரவேண்டும். நான் ஒரு ஆலோசனையை முன் வைக்கிறேன். இதை நீங்கள் பரிசீலித்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நகரங்களைத் தவிர்த்து ஊராட்சி ஒன்றியங்களில் அறிவியல் ரீதியான கள ஆய்வு ஒன்றை நடத்தலாம் என்று கருதுகிறேன். தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பதற்கு நடத்தப்படும் கருத்துக் கணிப்புபோல் அதற்கான வினாப் பட்டியல்களைத் தயாரித்து, வெவ்வேறு நிலையில் உள்ளவர்களிடம் ஜாதி, மதம், மூட நம்பிக்கைகள் குறித்த கருத்துகளையும், அது குறித்து அவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பதையும் சேகரிக்க வேண்டும்.

எந்தக் கண்ணோட்டத்தில் ஆதரிக்கிறார்கள் அல்லது எதிர்க்கிறார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும். மக்கள் தெரிவிக்கும் கருத்துகள் இதுவரை நாம் சிந்திக்காத தளத்தில்கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. அப்போது சமூகம் குறித்த ஒரு சரியான பார்வையை நாம் பெற முடியும். அப்படி ஒரு திட்டத்தை நீங்கள் செயல்படுத்த முன் வந்தால் இதற்கான செலவில் ஒரு பகுதியை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.

நகரங்களில் கருத்து கேட்டால் அங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் உண்மையைப் பேசமாட்டார்கள்.என்னிடம் கருத்து கேட்டால் என்னுடைய விருப்பத்தையே மக்கள் கருத்தாகக் கூறிக் கொண்டிருப்பேன். அது சரியாக இருக்காது. பெரியார் இயக்கம், அறிவியல் இயக்கம். எனவே அறிவியல் அணுகுமுறைகளோடு நாம் சமூ கத்தைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அல்லது இயக்க ரீதியாகக்கூட தோழர்களை வைத்துக்கூட இந்த முயற்சியில் நீங்கள் ஈடுபடலாம். அதற்குப் பிறகு பெரியார் கொள்கைகளை மக்களிடம் கொண்ட செல்லும் புதிய பார்வைகள் நமக்குக் கிடைக்கும்.

ஜாதி ஒழிப்புக்கு அந்த காலங்களில் ‘சமபந்தி உணவு’ முறை பின்பற்றப்பட்டது. சுயமரியாதை இயக்க மாநாடுகளிலே நாடார் சமூகத்தினர் சமையல் என்று அ றிவிப்பு தரப்படும்; நாடார் சமூகம் அப்படி ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது அன்று. அவை எல்லாம் காலாவதியாகிப் போன செயல்முறை. நீடாமங்கலத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சாப்பாட்டு பந்தியில் ஒரு தாழ்த்தப்பட்டவர் -அமர்ந்து சாப்பிட்டார் என்பதற்காக அவரை காங்கிரசார் மொட்டை அடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள்.

சுயமரியாதை இயக்கமும் ‘குடிஅரசும்’ இதை எதிர்த்துப் போராடியது. அப்போது ‘சமபந்தி உணவு’ முறை என்ற போராட்டம் வடிவம் அப்போது சமூகத்தின் தேவை. இப்போது ஒவ்வொரு ஓட்டலிலும் ‘சமபந்தி’ தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அரசின் தீண்டாமை ஒழிப்புக்கான காவல்துறைப் பிரிவு இப்போது ‘சமபந்தி’ நடத்துகிறது. இவை சடங்குத்தனமானவை.எனவே,சமூகமாற்றங்களுக்கேற்ப நமது பரப்புரை, போராட்ட வடிவங்களில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. கருத்துகளை எடுத்துச் சொல்லும் முறைகளும் மாற வேண்டும். திருமணங்களில் நான்கூட பேசும்போது ‘கடவுள் இல்லை’ என்று நேரடியாக கூற மாட்டேன்.

‘‘கடவுள் ஒருவர் இல்லை என்பதற்காக நான் கவலைப்படுகிறேன்; கடவுள் இருந்திருந்தால், நமது நோயைத் தீர்த்திருப்பாரே. நாம் மருத்துவமனைக்குப் போகவும் செலவிடவும் அவசியமே இருந்திருக்காதே; வன்முறைகளை தடுத்து நிறுத்தியிருப்பாரே; காவல் நிலையமே தேவைப்பட்டிருக்காதே. உண்மையிலேயே கடவுள் ஒருவர் இல்லாமல் போய் விட்டாரே; அப்படி ஒருவர் இருந்திருக்கக் கூடாதா என்று தான் நாங்கள் கவலைப்படுகிறோம்” என்றுதான் பேசுவேன்.’’ நமது பரப்புரைக்கான கருத்துகளில் மாற்றங்கள், அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

dravidian 600கேள்வி: உங்கள் கருத்து தொடர்பாக நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன். வழக்கமாக பெரியார் நடத்தும் ‘நாத்திகர்கள் விழா’வை சற்று மாற்றி ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ சார்பில் ‘வேத மரபு எதிர்ப்பு மாநாடு’ என்றுசேலத்தில் நடத்தினோம்.அதில் வள்ளலார், சித்தர், புத்தர், திருமூலர், கபிலர் கூறிய வேத -பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை அத்துறை சார்ந்த சிந்தனையாளர்களைக் கொண்டு பேச வைத்தோம்.

பதில்: நான்கூட அந்த செய்திகளை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பத்திரிகையில் பார்த்தேன். இது மிக நல்ல முயற்சி. வேத எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் இலக்கியங்கள் நம்மிடம் ஏராளம் இருக்கின்றன. பெரும்பாலும் நமது சங்க இலக்கியங்களில் மூடநம்பிக்கைகளே இல்லை. காதலை, வாழ்வியலை அழகாகப் பேசுகின்றன. அதற்காக பிற்போக்கான கருத்துகளும் இல்லை என்று சொல்ல முடியாது. அவற்றைக் கைகழுவிவிட்டு, நல்ல முற்போக்கு கருத்துகளை நாம் பயன்படுத்த வேண்டும்.

அந்த நோக்கத்தோடு நான் சிலப்பதிகாரத்துக்கு சந்தம் பிரித்து பொருள் கூறி எனது விளக்கத்தையும் இணைத்து எழுதும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். இலக்கியங்களை முழுமையாக ஒதுக்கிவிட்டு இனத்தை அடையாளப்படுத்த முடியாது என்பது என் கருத்து. பெரியார், அவரது காலத்தில் சந்தித்த எதிரிகளிலே தமிழ் படித்த புலவர்கள் தான் பார்ப்பனர்களைவிட முதன்மையாக இருந்தார்கள். சமூக மாற்றத்துக்கான கருத்துகளை எதிர்த்தார்கள்; அவர்களால் செரிமானம் செய்ய முடியவில்லை.

அதனால்தான் புலவர்கள் மீதே பெரியாருக்கு கோபம் இருந்தது. தமிழ் இலக்கியங்களைக் கடந்து சென்றுதான் சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டிய நிலையில் துணிவுடன், அதை கடக்க முயன்றார். அப்படி எல்லாம் செயல்படும் துணிவு அவருக்குத்தான் உண்டு. அதேபோழ்து பெரியார்தான் திருக்குறள் மாநாட்டை நடத்தினார். நாலணா விலையில் திருக்குறளை அச்சிட்டுப் பரப்பினார். எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தினார். மறைமலை அடிகள் நூலை பல்கலைக்கழகப் பாடமாக வைத்ததற்கு பார்ப்பனர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தபோது மறைமலை அடிகளுக்கு ஆதரவாக நின்றவர் பெரியார்தான். இலக்கிய உலகத்தை நாம் விட்டுவிடக் கூடாது; அது நமக்கான அடையாளம்.

அதேநேரத்தில் பெரியார் முன்வைத்த அடிப்படையான கருத்துகளில் நாம் கை வைத்துவிடக் கூடாது. ஒன்று, பார்ப்பனர்களை இயக்கத்தில் சேர்க்கக்கூடாது என்பது; அதில் எனக்கு நூற்றுக்கு நூறு உடன்பாடு. மற்றொன்று தேர்தல் அரசியலுக்கு போகவே கூடாது என்பது.

இப்போது ஜாதி ஓட்டுகளைப் பெறுவதற்காக ஜாதி சங்கங்கள் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஜாதி சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கவே கூடாது. ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பல்வேறு ஜாதி சங்கங்கள், தங்கள் உரிமைகளுக்காக போராடின; அதில் நியாயம் உண்டு. இப்போது அதன் நோக்கம் திசை மாறிவிட்டது. ஜாதி ஆதிக்கத்தை விட்டுத்தர முடியாது என்பதற்கு சங்கம் வைக்கிறார்கள். மருத்துவர் இராமதாசு போன்ற பார்ப்பனரல்லாத தலைவர்களோடு இது குறித்து கலந்து பேசவேண்டும்; ஓர் உரையாடல் தேவை என்று நான் நினைக்கிறேன்.

இதற்காகவே ஒரு குழுவை நியமித்து ஜாதி சங்கம் நடத்தும் தலைவர்களை அழைத்து, தமிழர்களுக்குள் ஜாதி வேற்றுமை, ஜாதி மோதல்களைத் தவிர்க்கும் உடன்பாட்டை உருவாக்க முயற்சிக்க வேண்டும். பெரியார் காலத்திலிருந்து நாம் ஜாதி எதிர்ப்பை பேசி வருகிறோம். ஜாதியை ஒழித்து சமத்துவமான சமுதாயத்தைஉருவாக்கிடும்அனைத்துமுயற்சிகளையும் நம்முடைய காலத்திலேயே நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மணி, இராஜேந்திரன் போன்றவர்கள் இந்த ஜாதி ஒழிப்புக்கான இயக்கங்களை தொடர்ந்து நடத்த வேண்டும்.

அடுத்தடுத்து வரும் தலைமுறை இதை எப்படிப் பார்க்கும்? ஜாதி எதிர்ப்பு இயக்கத்தை நடத்துமா என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. வரலாற்றில் நாம் நீதிக் கட்சியையும் அதன் சாதனைகளையும் மறந்து விட்டோமே! அந்த வரலாற்றை இளைஞர்களிடம் எடுத்துச் சொல்லவேண்டும். முத்தையா முதலியார்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கொண்டு வந்தார். இதனால் அவருடைய ஜாதிக்கு ஒரு பயனும் கிடையாது. சொந்த ஜாதிக்காரர்கள் எதிர்த்தார்கள். ஆனாலும் அவர் கொண்டு வந்தார். இது மிகச் சிறந்த ஜாதி ஒழிப்பு நடவடிக்கை அல்லவா? அறநிலையத் துறைச் சட்டத்தை நீதிக்கட்சி தானே கொண்டு வந்தது?

கேள்வி: இளைஞர்களிடம் மாற்றம் வருவதாகவே தெரிகிறது. புத்தகக் கண்காட்சிகளில் பெரியார் நூல்கள் நல்ல விற்பனையாவதாக கூறுகிறார்கள். குறிப்பாக இளைஞர்களே அதிகம் வாங்கிச் செல்வதாக செய்திகள் வருகின்றன. படித்தப் பெண்கள் பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகளைப் பேசுகிறார்கள். இவர்கள் எல்லாம் பெரியார் இயக்கங்களில் இருப்பதாகக் கூற முடியாது. பெரியார் இயக்கங்களுக்கு வெளியே இருப்பவர்கள்தான் அதிகம் என்று சொல்ல முடியும். இந்த மாற்றங்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: நீங்கள் சொல்வது சரியாக இருக்குமானால் மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி. அண்மையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் திரண்டதை தொலைக்காட்சியில் பார்த்து வியந்து போனேன். தமிழ்நாட்டிலா இது நடக்கிறது என்று நினைக்கத் தோன்றியது. இவ்வளவு உணர்வுடன் இளைஞர்கள் திரளுவது, உண்மையிலேயே நல்ல நம்பிக்கையை தருகிறது. தமிழ் உணர்வுபட்டுப் போய்விடவில்லை என்று ஆறுதலடைந்தேன். இந்தியை எதிர்த்தபோது ஆச்சாரியின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்தபோது எல்லாம் வெடித்துக் கிளம்பிய உணர்வுகளின் தொடர்ச்சியாகவே இதை பார்க்கிறேன்.

அதுவும் மாணவர்கள் வன்முறை இல்லாமல் அமைதியாக இந்தப் போராட்டத்தை நடத்தியதுதான் இந்த வெற்றிக்குக் காரணம். பெரியாரின் போராட்ட முறையே இதுதானே? அவர் வன்முறையை எப்போதும் ஆதரித்ததுஇல்லை. நமது சமூகத்தில் வன்முறைப் போராட்டங்கள் வெற்றி பெறாது என்பதே அவரது கருத்து. கத்தி வைத்துக் கொல்லுங்கள் என்று அறிக்கை விடுவார். ஆனால் யாரையும் குத்தச் சொன்னதில்லை. கருத்துகள் அவ்வளவு கடுமையாக இருக்கும். ஆனால், வன்முறையை செயல்படுத்த அனுமதிக்கவே மாட்டார்.

கேள்வி: ‘ஜல்லிக்கட்டு’ குறித்து என்ன நினைக்கிறீங்க...

பதில்: ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று அவர்கள் கொண்டு வந்த தடையை நாம் உடைத்திருக்கிறோம். இது நமக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. ‘கோமாதா’வை வணங்க வேண்டும். அது புனிதமானது என்ற பார்ப்பன சிந்தனையே ஜல்லிக்கட்டு எதிர்ப்பிலும் இருப்பதாகவே நான் கருதுகிறேன். ‘ஜல்லிக்கட்டு’ நடத்துவதற்கு புரோகிதர்களை அழைத்து ‘புண்ணியாதனம்’ செய்ய வேண்டும். புரோகிதர்கள் வேதமந்திரம் ஓதி அவர்களுக்கு ‘தானம்’, ‘தட்சணை’ வைத்து ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்ற வேதப் பண்பாடு இதில் இடம் பெற்றிருந்தால் இந்த எதிர்ப்புகளே வந்திருக்காது.

‘பேஷா நடத்துங்கோ; வேத காலத்திலேயே இதெல்லாம் நடந்திருக்குது’ என்று கூறியிருப்பார்கள். பெண்கள், குழந்தைகள், குடும்பம் குடும்பமாக இரவு பகல் பார்க்காமல் கடற்கரையில் கூடினார்கள். இந்த உணர்வுகளை நல்ல திசையில் வளர்த்தெடுக்க வேண்டியது தான், உங்களைப் போன்றவர்களின் முக்கியமான தொண்டு, அதே நேரத்தில் அவர்களின் போராட்டத்தில் நேரடியாக நாம் தலையிடக் கூடாது; அவர்கள் போக்கிலேயே நடக்க வேண்டும்; அவர்கள் ஏதாவது கேட்டால் நாம் உதவலாம். அரசியல் கட்சிகளே வரவேண்டாம் என்று நல்ல முடிவை எடுத்தார்கள். அப்படி கட்சிகள் வந்திருந்தால் இவ்வளவு பெரிய ஒற்றுமையும் சிதறிப் போயிருக்கும்.

கேள்வி: சமுதாய மாற்றத்துக்கான இயக்கம் தேர்தல் அரசியலுக்கு போகவே கூடாது என்றாலும், பெரியார் கருத்தை நீங்கள் அழுத்தமாக ஆதரித்தீர்கள். இந்த மாணவர் போராட்டத்திலும் அரசியல் கட்சிகளை மாணவர்கள் விலக்கி வைத்து விட்டார்கள். பெரியார் சொன்ன அதே பார்வை தான், இந்த முடிவிலும் அடங்கியிருப்பதாக கூற முடியுமா?

பதில்: நான் நினைக்காத கோணத்தை நீங்கள் பிடித்து விட்டீர்கள். அடிப்படையான மாற்றங்களைக்கொண்டு வர அரசியல் கட்சிகளால் முடியாது. தமிழ் நாட்டிலே மிக சுலபமான வேலை அரசியல் கட்சி தொடங்குவதுதான். கட்சி தொடங்குவதற்கு கொள்கையோ, திட்டமோ தேவை இல்லை தானே. நீங்கள் விடாமல் தொடர்ந்து செயல்படுங்கள். அதுதான் வரலாற்றில் நிலைக்கும்.

பெரியார் கொள்கைக்காக உழைப்பது கடினமானது தான். இதில் சமுதாய நலன் என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த சுயநலமும் கிடையாது. பெரியாரின் கொள்கையை வாழ்வியலாகவே உண்மையாகப் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க முடியும். உயர்ந்த வாழ்க்கையாக இருக்கும். அதற்கு நானே உதாரணம். கையில் காலணா காசுகூட இல்லாமலே இருந்த நான், பெரியார் கொள்கை வழியில் வாழ்ந்தேன்; உயர்ந்தேன். இப்போது உங்களிடம் ஒரு திட்டத்தைக் கூறி அதற்கு நிதி உதவி செய்யவும் தயாராக இருக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறேன்.

அரசியலிலே பிழைப்பதற்கு நல்ல வழிகள் இருக்கின்றன. என் அண்ணன் காங்கிரஸ்காரர். அவர் ஒரு முறை சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தபோது கைது செய்யப்ப்டடார். போலீ ஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். நானும் சிறுவனாக அந்தப் போராட்டத்தில் பங்கேற்றேன். ஆனால், போலீஸ் வாகனத்தில் ஏற்ற மறுத்தார்கள். நான் ‘மைனர்’ என்று கூறி வாகனத்தில் இடமில்லை என்று என்னை இறக்கி விட்டார்கள். போலீஸ் வேனில் ஏற இடம் கிடைத்த என் அண்ணன் ‘தியாகி’யாக அங்கீகரிக்கப்பட்டார்.

மத்திய அரசு மாநில அரசுகளின் இரண்டு பென்ஷன்’களும், 10 ஏக்கர் நிலமும் கிடைத்தது. ‘மைனர்’ என்பதாலும், போலீஸ் வேனில் ஏற இடம் கிடைக்காது போனதாலும் எனக்கு இவை எதுவுமே கிடைக்கவில்லை. ‘தியாகி’ப் பட்டத்தை நல்ல அறுவடையாக்கிக் கொண்டவர்கள் காங்கிரஸ்காரர்கள். இங்கே பெரியார் இயக்கத்தில் எவ்வளவு பாடுபட்டாலும் எத்தனை சிறைக்குப் போனாலும் என்ன கிடைக்கப் போகிறது? சமுதாயத்துக்கு தொண்டு செய்தோம் என்ற ஒரு மனநிறைவுதான். ஆனால் அதற்கு இணை வேறு ஏதும் இல்லை.

இறுதியாக ஒன்றைக் கூற விரும்புகிறேன். பெரியார் அவரது காலத்தில் அந்த சமூகச் சூழலில் சிந்தித்தார். அதற்கேற்ற திட்டங்ளை வகுத்தார். பெரியார் சொன்னார்: “எனக்குப் பிறகு எவ்வளவோ மாற்றங்கள் வரலாம்; அப்போது இராமசாமி என்ற முட்டாள் இப்படி எல்லாம் உளறி விட்டுச் சென்றிருக்கிறான்” என்று பேசக்கூடிய ஒரு காலம் வரலாம் என்று கூறியிருக்கிறார். எனவே பெரியார் கொள்கைக்கு எல்லை வரம்பு கட்டாமல் அந்தக் கொள்கையை மேலும் காலத்தின் மாற்றத்துக்கேற்ப வளர்க்க வேண்டும். ‘பெரியார் தந்த புத்தியே போதும்’ என்று கூறுவது பெரியார் பேசிய பகுத்தறிவுக்கே எதிரானது.

சந்திப்பு - தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்