கடந்த 2007 மார்ச் 5ம் தேதியன்று அப்போதைய அரசு தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி அவர்கள் மாநில திட்டக்குழு கூட்டத்தை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த போது அரசுப் பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை யோகா கல்வி அறிமுகம் என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பு கண்டு தாயக மருத்துவர் களாகிய நாங்கள் பெருமிதம் கொண்டோம். யோகா என்று சொல்லப்படும் ஓகப்பயிற்சி, இருக்கைப் பயிற்சி என்றும் அழைக்கப்படும். இது தமிழ்ச் சித்தர்களால் குறிப்பாக திருமூலரால் ஒழுங்கமைக்கபட்டது. தமிழ்ப் பாரம்பரியத்தின் கண்டுபிடிப்பு, நமது மரபுவழி அறிவுச் சொத்து. இதனை இடைக்காலத்தில் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடினாலும் நமக்கே சொந்தமானது. பல நோய்களை போக்கவும், எந்த நோயும் வராமல் காக்கவும் உதவக் கூடிய உடற்பயிற்சி முறை.

இத்தகைய சிறப்புகளுக்குரிய யோகாவை நமது பிள்ளைகளுக்கு தமிழக அரசு சொல்லிக் கொடுக்கப்போகிறேன் எனச் சொன்னது வரவேற்கத்தக்க ஒரு முடிவு. இதனை வரவேற்றும் இதன் பொருட்டு யோகாசன ஆசிரியர்களை நியமிக்கக் கோரியும் இக்கட்டுரையாளர் உள்ளிட்ட தாயக மருத்துவ முன்னோடிகள் ஆசனா ஆண்டியப்பன் அவர்கள் தலைமையில் 26-5-2007 அன்று சென்னையில் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அரசு முடிவும் மருத்துவர்கள் கோரிக்கையும் கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தன. பலமுறை அரசு அலுவலர்களைத் தொடர்பு கொண்டும் பதிலேதுமில்லாத நிலையே நீடித்து வந்தது. இந்நிலையில் திடீரென அதிர்ச்சியூட்டும் சுற்றறிக்கை ஒன்றை தமிழக பள்ளிக் கல்வித்துறை அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திலுள்ள உடல்கல்வி வகுப்பில் ஒன்றில் யோகா பயிற்சியளிப்பது என்றும் இப்பயிற்சியை தனியார் மனவளக்கலை மையத்தினர் அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ass="contentpane">மனவளக் கலை மன்றம் என்பது நவீன வடிவிலான இந்துத்துவா அமைப்பாகும். மட்டுமல்லாமல் மேற்கு மண்டலத்தில் உள்ள ஆதிக்க சாதியின் நடுத்தர வர்க்கத்தினர் சாதியப் பெருமிதத்தோடு அதனை மூடிமறைத்துக் கொண்டு ஆதிக்கத்தை தொடர்வதற்கான ஒரு அமைப்பாகவும் நடைமுறையில் உள்ளது. இந்த அமைப்பினர் கையாளும் யோகா முறையும் மேல்வலிக்காத’, பலனேதும் வழங்காத பாரம்பரிய முறைக்கு முரணான சிம்பிள் யோகாமுறையாகும். இவர்கள் யோகாவோடு வழங்கும் செயல்முறைக் குறிப்புகள் அறிவியல் முலாம் பூசப்பட்ட - புதிய மொந்தையில் நிரப்பப்பட்ட பழைய இந்துத்துவகள் தான். இவர்கள் நடத்தும் காயகல்ப பயிற்சி மற்றும் தியானத்தால் உடல் மனநலம் பாதிக்கப்பட்டோர் பலர்.

மேலும் சமூக சுரண்டலை மூடி மறைக்க உலக அமைதிவேள்வி, பெண்ணடிமைத் தனத்தை பேணிக்காக்க மனைவி நலவேட்பு நாள், இல்லாத இறைவனை தரிசிக்க பிரம்ம ஞானப்பயிற்சி, உலக நடப்புகளை அறிந்து கொள்ளாமல் தடுக்க அகத்தாய்வுப் பயிற்சி இப்படிப் பலப்பல.

இதற்கெல்லாம் ஆள்பிடிப்பதற்காக இலவசமாகவே யோகாப்பயிற்சியை பள்ளிகளில் நடத்த இம்மன்றத்தினருக்கு பள்ளிக் கல்வித்துறை பாதை திறந்துவிட்டுள்ளது. ஏற்கனவே இந்த அமைப்பினர் பல்வேறு பல்கலைக்கழகங்களோடு இணைந்து மொட்டை மாடிகளிலும், குடிசைகளிலும் மனித மாண்புக்கான பட்டய, பட்டங்களை வழங்கி வருகின்றனர். பள்ளிக் கல்வியைக் கூட நிறைவு செய்யாதவர்கள் இப்பயிற்சிகளுக்கு பேராசிரியர்களாகவும், துணைப் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

உலகத் தமிழர்களின் தலைவராக தன்னைக் கருதிக்கொள்ளும் தமிழக முதலமைச்சர் ஆளுகையிலுள்ள அரசின் பள்ளிக்கல்வித் துறை யோகாவின் பெயரால் இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் இந்துத்துவா நஞ்சை விதைக்க இடமளிக்கக் கூடாது. தமிழர் கலையான, மருத்துவமான ஓக முறையை - உரிய பயிற்சி பெற்றவர்களை ஆசிரியராக நியமித்து உரிய வழிமுறையில் பயிற்றுவிக்க ஆவனசெய்ய வேண்டும்.

இப்போது வந்துள்ள இந்த உத்தரவை திரும்பப் பெறவேண்டும். இது விடயத்தில் தமிழ் தேசிய சக்திகளும், பெரியாரிய பொதுவுடமை அமைப்புகளும், ass="contentpane">தாயக மருத்துவர்களும் தலை யிட்டு இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்தவும், உரிய மாற்று வழிகளை நடைமுறைப் படுத்த வேண்டியும் எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்ளவேண்டும். முளையிலே கிள்ளி எறியாத விஷ வித்து விருட்சமானால் விளைவுகள் மோசமானதாய் இருக்குமென்பதை உணர்வோமாக!

-மருத்துவர். நா. சண்முகநாதன்

Pin It