cauvery urimai meetpu kuzhu 1

உழவர் பாலனைத் தாக்கிய காவலர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கக் கோரியும், உழவர் தற்கொலைகளைத் தடுக்க தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமெனக் கோரியும், தஞ்சையில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், நேற்று (24.03.2016) காலை, உழவர் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில், தஞ்சை தொடர்வண்டி நிலையம்அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழுவில் உறுப்பு வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தலைவருமான தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை கோரிக்கை முழக்கங்களை எழுப்ப, ஆர்ப்பாட்டத் தோழர்கள் அதை விண்ணதிர எதிரொலித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், உழவர் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக முன்மொழிந்து, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன் பேசினார். மூன்று மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. வலிவளம் மு. சேரன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலாளர் திரு. காவிரி தனபாலன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர்கள் திரு. அயனாபுரம் சி. முருகேசன், திரு. சதா முத்துக்கிருட்டிணன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சைமாவட்டத் துணைச் செயலாளர் திரு. செகதீசன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு.சிமியோன் சேவியராஜ், தலைமைக் கழகப் பேச்சாளர் திரு. ஆ.வி. நெடுஞ்செழியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், மனித நேய மக்கள் கட்சி வணிகப்பிரிவுத் தலைவர் திரு. ஜெ. கலந்தர், மனித நேய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. அகமது கபீர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் இணைச் செயலாளர் திரு. சி. அருண் மாசிலாமணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் பேசிய தோழர் பெ. மணியரசன், “கடன் நிலுவை தொகைக்காக உழவர்களைஅவமானப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உழவர் பாலன் தாக்கப்பட்டுள்ளார். அரியலூர் உழவர்அழகர் தர்கொலை செய்து கொண்டுள்ளார். இதுபோல் ஒரு சில நிகழ்வுகள் தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெளிச்சத்திற்கு வராத துயரங்கள் ஏராளம்.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் 2,422 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தேசியக் குற்றஆவணக் காப்பகம் (NCRB) கூறுகிறது. ஏன் இந்த நிலைமை?

உழவர்கள் உற்பத்தி செய்யும் விளைப்பொருட்களுக்கு இலாபகரமான விலை கிடைக்காததால்தான் உழவர்கள் கடன்சுமையில் சிக்கி வாழ்க்கையை இழக்கிறார்கள். வேளாண் விளை பொருட்களுக்கு உற்பத்தி செலவோடு சேர்த்து கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ணயிக்க வேண்டும்.

ஒரு மாதத்திற்கு 2 இலட்சம் டன் அரிசியை பொது வழங்கலுக்குத் தமிழ்நாடு அரசு இந்திய அரசிடமிருந்து வாங்குகிறது. அவை அனைத்தும் பஞ்சாப், அரியானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உற்பத்தியானவை. எட்டு கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு, தமிழ்நாட்டு உழவர்களுக்கு, தமிழ்நாட்டு வணிகர்களுக்கு சந்தையாக இல்லை; வெளி மாநிலங்களுக்குச் சந்தையாக இருக்கிறது.

எனவே, தமிழ்நாட்டு வேளாண் விளை பொருட்களுக்கு சந்தை மதிப்பு கிடைக்கும் வகையில் தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாடு தனி உணவு மண்டலம் ஆனால், வெளி மாநில உணவுப் பொருட்கள் தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் தமிழ்நாட்டுச் சந்தைக்கு வர முடியாது. தமிழ்நாட்டுக்கு பற்றாக்குறையை உள்ள தவசங்களை (தானியங்களை) தமிழ்நாடு அரசு முடிவு செய்து, வெளி மாநிலங்களிலிருந்து வாங்கிக் கொள்ளலாம். ஏற்கெனவே, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு தனி உணவு மண்டலமாகத்தான் இருந்தது. பின்னர்தான் அந்நிலை மாற்றப்பட்டது.

தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்கினால்தான், இங்குள்ள உழவர்களுக்கு இலாபகரமான விலை கிடைக்கும். வெளிச்சந்தையிலும் நெல்லுக்கு அதிக விலை கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் உழவர்களும், பெண்களும் திரளாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

- காவிரி உரிமை மீட்புக் குழு