ஏ.எப்.எம். அஷ்ரப் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமலை அஷ்ரப், நேஹா, புரட்சி மகன், போன்ற பெயர்களில் கவிதை எழுதி வரும் இவர் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார். இவர் அறுவடைக் காலமும் கனவும் என்ற கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார். 64 பக்கங்களை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இந்தக் கவிதைத் தொகுதியில்  21 தலைப்புக்களில் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
 
இந்நூலுக்கு முன்னுரை வழங்கியிருக்கும் தென்கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் கலாநிதி செ. யோகராசா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். இத்தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள், இன்றைய ஈழத்தின் அரசியல் நிகழ்வுகள் பற்றியும் அல்லற்படுகின்ற மக்கள் பற்றியுமான பதிவுகளாகவும் விமர்சனமாகவும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட விடயங்களுள், கவிஞரது சொந்த மாவட்டமான திருகோணமலைப் பிரதேசத்தின் சிதைவு கவிஞரைப் பெருந்துயரத்தில் ஆழ்த்தியுள்ளமை புலப்படுகிறது என்கிறார்.
 
மனம் திறந்து சில வார்த்தைகள் என்ற தலைப்பில் நூலாசிரியர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
 
Asraff_250சிறுவயதிலிருந்து எனக்கு கவிதையில் ஈடுபாடு உண்டு. பாடசாலைக் காலத்தில் எனது தந்தையான கலைப் பிரியன் பரீட் அவர்களது வழிகாட்டலின் கீழ் அவ்வப்போது சில கவிதைகளை எழுதியிருக்கிறேன். ஈழத்து நவீன தமிழ் கவிதை வளர்ச்சியில் மஹாகவியும், நீலாவணனும் ஓர் சமூக ஒப்பீட்டாய்வு என்ற தலைப்பில் எனது முதுமாணி பட்டத்திற்கான ஆய்வினை மேற்கொண்டிருந்தபோது எனது கவிதை ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. அதன் விளைவுகளுள் ஒன்றுதான் இக்கவிதைத்தொகுதி. ஈழத்து நவீன தமிழ்க் கவிதை முன்னோடிகளான மஹாகவி, நீலாவணன் ஆகியோரின் கவிதைகளோடு எனக்கு ஏற்பட்ட பரிச்சயமே தீவிரமான எனது கவிதை வெளிப்பாட்டுக்கு காரணமாகியது. எனது கவிதைகளில் காணத்தகும் உருவ, உள்ளடக்கச் சிந்தனைகளுக்கு அவர்களது செல்வாக்கும் ஒரு காரணமே என்கிறார்.
 
நான் என்ற கவிதையில் போர்க்கால சூழல் தந்த தாக்கத்தை வெளிப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இயற்கையையும், இலக்கியத்தையும் காதலிக்கும் ஒரு சாதாரண கவிஞன், கனவுகள் சுமந்து இன்பக் கற்பனையில் மிதக்க விரும்புகிறான். ஆனாலும் திறந்த வெளிச்சிறையாக உலகம் மாறிவிட்டதால் தனது  கற்பனைகள் எதுவும் ஈடேறாமல் செயற்கையான வாழ்வினை வாழ்வதாக திரு. அஷ்ரப் அவர்கள் கீழுள்ள வரிகள் கொண்டு புரிய வைக்க முனைகிறார்.
 
கொலையும்
கொலைவெறியும் மிகைத்து
மனிதம் மறைந்துவிட்ட - இத்
து(ர்)ப்பாக்கிய தேசத்தில்
கானகத்தில் சிறைப்பட்ட
பறவைகளாய்
சுதந்திர நாட்டின்
அடிமைகளாய் நாம்        (பக்கம் 30)

தினம் தோறும் நாம் பலரைச் சந்திக்கிறோம். அவர்களில் எல்லோரும் நம்மோடு ஐக்கியப்பட்டவர்களல்லர். அதே போலதான் காத்தாயி என்ற பாத்திரம். காத்தாயி என்பவள்; பொதுப் பாதையை தினமும் கூட்டித் துப்பரவு செய்யும் பெண் என்பதனை இக்கவிதை மூலம் அறியமுடிகிறது. காலை வேலைகளிலேயே பாதைகளை சுத்தப்படுத்தி பொது மக்கள் அசௌகரியம் அடையா வண்ணம் சூழலை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு காத்தாயிக்குரியது. ஆனாலும் பெரும்பாலானவர்கள் இவ்வாறான தொழிலாளர்களைப் பற்றி எழுதுவதில்லை. திரு. அஷ்ரப் அவர்கள் இந்தக் கவிதையினூடாக காத்தாயியைப் பற்றி எழுதியிருக்கும் சில வரிகள் இதோ
 
மழையில் நனைந்து வெயிலிற் காய்ந்து
காலை மாலை வேளை மறந்து
வீதிகள் தோறும் விசராய் திரவாள்
காத்தாயி..  
அமர்களமான அவளது வாழ்வில்
நோயும் இல்லை நொடியும் இல்லை
நலமாய் வாழ நாங்கள் நாடும்
மாத்திரை இல்லை மருந்தும் இல்லை
பறபறவென்று பறந்து வாழும்
கலியுகர்போலே அவளிடம் - அந்த
காசும் இல்லை கவலையும் இல்லை      (பக்கம் 39)
 
நமது அன்றாட வாழ்வியல் யுத்தமுனை வார்த்தைகளைக் கொண்டே கழிகின்றது. துப்பாக்கிகள், குண்டுகள்தான் எமது உணர்வுகளாக இருக்கின்றன. ஆனால் வெற்றி கிடைப்பதற்காக வேண்டி சிறுவர்களையும், பெண்களையும் சீரழிப்பது தர்மமாகாது. அது போல நிம்மதியைக் குலைத்து எதிரிகளைச் சுட்டு வீழ்த்துவது வீரமும் அல்ல. அப்பாவிகளை அழிக்கக் கூடாது. மாற்றுக் கருத்துக்களுக்கும், மனித உணர்வுகளுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.
 
இப்பொழுது
போராட்டந்தான்
ஒரு பாசையாக
விளங்குகிறது..
துப்பாக்கிகளும்
ரவைகளும்
குண்டுகளும்
தீவைப்புந்தான்
எமது உணர்வுகளை
வெளிக்காட்டுகின்றன!      (பக்கம் 46)
 
ஏ ஆக்கிரமிப்பாளர்களே எனும் கவிதை சமாதானத்துக்கு தூது விடுவதாய் அமைந்துள்ளது. சமாதானத்தின் சின்னம் புறா. அமைதிக்கு உதாரணம் பூக்கள். இவைகள் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பதிலாக இருந்துவிட்டால் நமது தேசத்தின் ஆறாவடு என்றோ நீங்கியிருக்கும். அதைவிட்டுவிடாததன் காரணமாக யுத்ததத்தால் இன்று நாடு சின்னா பின்னமாகியிருக்கிறது. இவ்வாறான கருத்து புலப்பட தனது கவி வரிகளை கீழுள்ளவாறு எழுதியுள்ளார் திரு. அஷ்ரப் அவர்கள்.
 
இதய வேலிகளைப்
பிய்த்தெறிந்துவிட்டு
உங்கள்
துப்பாக்கிகளில்
ரவைகளுக்குப் பதிலாய்
மலர்ச் சொண்டுகளை
சூடுங்கள்..
ராக்கட்டுகளுக்குப் பதிலாய்
தோள்களில்
புறாக்களைச்
சுமந்து வாருங்கள்..
உங்கள் சொந்த தேசத்தின்
சுதந்திரத்தை
மீண்டும்; தருகிறோம்!
மீட்டுத் தருகிறோம்!!       (பக்கம் 50)
 
மேற்குறிப்பிட்ட விடயங்களை உள்ளடக்கியதாக புத்தகத்தைத் தந்திருக்கின்ற நூலாசிரியர் திருமலை அஷ்ரப்; அவர்கள் பாராட்டுக்குரியவர். யுத்த கால நிகழ்வுகளை தனது கவிதைகளினூடாக சொல்லியிருக்கிறார். யுத்தத்தால் பாதிக்கப்ட்ட மக்களுக்கு சிறப்பான எதிர்காலம் அமய நாமும் வாழ்த்துகிறோம்.!!!
 
நூல் - அறுவடைக் காலமும் கனவும்
நூலாசிரியர் - திருமலை ஏ.எப்.எம். அஷ்ரப்
தொலைபேசி - 0773081120
மின்னஞ்சல் - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
வெளியீடு - பெருவெளி பதிப்பகம்
விலை - 150