சப் டைட்டில் - நித்திய சோதனை 

10.06.2010

வியாழக்கிழமை 

இன்று நான் அந்த குண்டுதாத்தா கடை வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தேன். அவர் கடையில் போன வாரம் உப்பில் ஊற வைத்த நெல்லிக்காயும், மிளகாய்ப் பொடி தடவிய மாங்காய் கீத்தும் வாங்கித் தின்றது ஒரு குற்றம் என்று கூறி வழக்கமாக கன்னத்தில் அறையும் ஆசிரியர் ரத்தினம், அன்று முதுகில் ஓங்கி ஓங்கிக் குத்தினார். அவருக்குப் பிடிக்காத உயிரினம் ‘ஈ’யாம். அது மொய்த்துவிட்டுப் போன நெல்லிக்காயைத் தின்றது தேசதுரோகக் குற்றமாம். 

முதுகில் குத்தும்போது நெஞ்சு பிடிப்பு ஏற்பட்டு ஒருவேளை நான் உயிரிழந்துவிட்டால், அதற்கு ஆசிரியர் ரத்தினம் தான் காரணம் என, ரெண்டுகோடு போட்ட அரைகுயர் நோட்டில் அழகாக எழுதி வைத்திருக்கிறேன், சென்னை கமிஷனர் ஆபிசில் உள்ள ராஜேந்திரன் அங்கிளுக்கு அனுப்புவதற்காக. ஆனால் முகவரி தெரியாத காரணத்தால் அதை கணக்குப் புத்தகத்தின் நடுவில் மயில் தோகை வைக்கப்பட்டிருக்கும் 23ம் பக்கத்திற்கு அடுத்த பக்கத்தில் வைத்திருக்கிறேன். 

இந்த முரண்பாட்டை நான் யாரிடம் போய் கேட்டுத் தெரிந்து கொள்வது? முதல் நாள் வகுப்பில் ஜீவகாருண்யத்தைப் பற்றி வகுப்பில் பாடம் எடுக்கிறார்கள். எந்த ஒரு உயிரினத்துக்கும் தீங்கு செய்யாதே என வள்ளலார் கூறியதாக கூறுகிறார்கள். மகாவீரர் நடந்து செல்லும் போது எந்த ஒரு உயிரினமும் காலில் மிதிபட்டு இறந்துவிடக் கூடாது என்பதற்காக மயில் தோகையால் கூட்டிக் கொண்டே சென்றதாக கூறுகிறார்கள். அன்று நான் கேட்ட சந்தேகத்திற்கு கூட சரியாக பதில் சொல்லவில்லை அந்த ஆசிரியர், அதாவது, மயில் தோகையால் கூட்டிக் கொண்டே சென்றவர் காலில் ஏதாவது உயிரினம் மிதிபட்டால் அது இறந்து விடாதா? இதை மகாவீரர் யோசிக்கவே இல்லையா என்று கேட்டது ஒரு குற்றமா? அதற்கு ஒரு அடி கன்னத்தில். நடத்துகிற பாடம் புரியவில்லை என்றால் தாராளமாக சந்தேகம் கேட்கலாம் என்று வாய் கூசாமல் வக்கனையாக வேறு கூறுகிறார் அந்த ஆசிரியர். ஆனால் ஈ போன்ற சிறு உயிரினங்களை மட்டும் வெறுக்கச் சொல்கிறார்கள். இந்த ஆசிரியர்களுக்கு சரியான கண்ணோட்டம் இல்லை. படிக்கிற காலத்தில் ஒழுங்காகப் படித்திருந்தால் இவ்வளவு முரண்பாட்டுக்கு அவர்கள் ஆளாகியிருக்க மாட்டார்கள். 

ஆனால் ஒரு விஷயம் எனக்கு மிக நன்றாகத் தெரியும். நான் பல மாதங்களாக வாங்கித் தின்னும் நெல்லிக்காய் மேல் ஈ உட்கார்ந்த விஷயம் இன்றுதான் இந்த ரத்தினம் ஆசிரியருக்கு உறைக்கிறது என்றால், அதன் உள்நோக்கம் என்னைப் போன்ற சிறுவர்களுக்குப் புரியாது என்று நினைத்துவிட்டார். அன்று ஒருநாள் என் பக்கத்து வீட்டு பெண் மல்லிகா ட்யூசன் விட்டு வருவதற்காக காத்துக்கொண்டிருந்த போது, ஆசிரியர் ரத்தினத்தின் மனைவியும், குண்டுதாத்தாவின் மனைவியும் ’16 வயதினிலே’ படத்தில் வரும் காந்திமதியைப் போல் விளக்கமாறை வானத்தை நோக்கி ஆட்டி ஆட்டி சண்டையிட்ட காட்சியை சற்றும் பயப்படாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். விசு படத்தில் வரும் வில்லி மனைவியைப் போல், இரவு நேரங்களில் குண்டுதாத்தாவின் வியாபாரத்தைக் கெடுக்கும்படி தனது கணவராகிய ரத்தினத்திடம் போட்டுக் கொடுத்திருப்பார் அந்த பெண்மணி, அதனால் அந்த ஒரே காரணத்தால் ஆசிரியர் ரத்தினத்துக்கு குண்டுதாத்தாவின் கடையில் நெல்லிக்காய் மேல் உட்கார்ந்திருந்த ‘ஈ’ கண்களை உறுத்த ஆரம்பித்துவிட்டது. பின் என் உடல்நிலை மேல் வேற அநியாயத்துக்கு அக்கறை செலுத்த ஆரம்பித்துவிட்டார். ஆனால் முதுகில் குத்தும் போதும், கன்னத்தில் அறையும்போதும் மட்டும் அவர் வருத்தப்படுவதேயில்லை என் உடல்நிலை பற்றி. 

இந்தியத் திருநாட்டில் மாடுகளை சாட்டையால் அடிப்பதையும், மாணவர்களை பிரம்பால் அடிப்பதையும், யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஏதேனும் ஒரு சக்தியின் உந்துதலின்பெயரில் ஒரு முரட்டு ஆசாமியின் (ஆசிரியரின்) முரட்டு ஈகோ தாக்குதல் சந்திக்கு வரும் பட்சத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அதைப் பற்றி பெரிதாகப் பேசுவார்கள், பின் அவரவர் வேலையை பார்க்கச் சென்று விடுவார்கள். இங்கே எதிர்த்து தாக்க முடியாதவர்கள் சாதுவான விலங்குகளும், குழந்தைகளும் தானே. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்கிற ஆதங்கம் என் நெஞ்சத்தின் ஆழத்தில் கொதித்துக் கொண்டுதான் இருக்கிறது. 

பின் குறிப்பு : 

கமிஷனர் அலுவலகத்தின் முகவரி தருகிறவர்களுக்கு பாதி பைவ் ஸ்டார் சாக்கலேட் (பாதி நான் தின்று விட்டேன்) மற்றும் கணக்குப் புத்தகத்தின் 23ம் பக்கத்தில் உள்ள மயில்தோகை போட்ட குட்டி, மற்றும் குண்டு தாத்தா கடையில் ஒரு ரூபாய்க்கு நெல்லிக்காய் இவை அனைத்தும் இலவசம். முந்துபவர்களுக்கு முன்னுரிமை. 

- சூர்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)