Vanniஅன்னியதேசத்து அகதியாய்
தனிமையின் தாவாரத்தில்
உட்காரும் போதெல்லாம்
உறங்கிய உணர்வுகள்
உசும்பிவிடுகின்றன

செழுமையான கிராமத்தூளியிலே
கண்மலர்ந்த மழலைகள்நாம்
அந்த செம்மண்புழுதி
சந்தணமாய் உடல்தழுவ
கிளித்தட்டு ஆடியவர்
ஆயிரம் கதைசொல்லி
அன்னை சோறூட்ட
சிரித்துக்களித்து
உருசித்து மகிழ்ந்தவர்கள்

சிட்டுக்குருவியாய்
சிறகடித்துப் பறந்தஇனம்
பட்டுக்களைத்து இங்கு
பரிதவித்துப் ஏங்கிறதே

இரும்புப் பறவையிடும்
எச்சத்தில் என்இனம்
சிக்கிச்சிதைந்து
செங்குருதிச் சேற்றில்
செத்துவீழ்கிறதே

பூமிக்குவந்து பத்தேநாள் ஆன
பிஞ்சு குழந்தையும்
நெஞ்சுபிளந்து பஞ்சாகிப்போகிறதே
விட்டில்ப+ச்சிகளாய்
பட்டினியோடு தெருவோடும்
மரநிழலோடும் அச்சத்தில்
அந்தரித்துக்கிடக்கிறதே என் இனம்

பேனாவைத்தூக்கியவர்
காணாமல் போகையிலே
உணர்வுகளின் உண்மைகளை
உரக்கச் சொல்லச்சக்தியில்லை
உறவுகள் சருகாகி
உதிர்ந்து போகையிலே
உறங்கிக் கிடப்பது
உத்தமம் ஆகுமோ

இதுவெல்லாம்
விதிவிட்ட வழியென்று
மதிகெட்டுப்பேசுவதோ
எம் உள்ளக்கிடக்கையை
ஊர்கேட்கச் சொல்கின்றோம்
செத்துவிட்ட உலகச்
செவிகட்குக் கேட்குமா?
இந்த மரணஓலம்! 

மானியூர் மைந்தன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.