பார்ப்பது போலத் தான் தெரிகிறாய்
பாடல் ஒலிக்கிறதே
நீ சிலை என்றால் இனி நம்பாதே
*
நீ வீடு நுழையும் வரை
வெண்மேகத்தில் இருக்கிறது
நம் வீதி
*
உன்னை ஓடவிட்டு
நீயே துரத்துவது போல
உன் எல்லாக் கவிதைகளும்
*
குடத்தைக் கொட்டி நீரெடுக்கிறாய் நீ
உன்னைக் காட்டி
தேன் எடுக்கிறது நீர்
*
மனதின் நடுவே நீர்ப்பாறை உருள்கிறது
தூக்கத்தில் குழந்தை சிரிப்பது போல
பேசிக் கொண்டே இருக்கிறாய்
*
பகலிலும் நிலா வேஷம்
போட்டலைகிறாய்
வானச் சுமை எனக்கு
*
இருளுக்கு என்ன தெரியும்
கண்களை இறுக
மூடிக் கொள்வதைத் தவிர
*
மச்சக்காரர்கள் உள்ளே
பிச்சைக்காரர்கள் வெளியே
புது கோயிலிலும் பழைய முறைதானா
*
எத்தனை மரம் வெட்டியிருப்பான்
புத்தனை
வெட்ட நினைத்தவன்
*
நதியில் விழுந்த இலை காண்
அது மதியில் எழுந்த
நீர் மான்
- கவிஜி