பனை பூத்துக் கிடக்கும்
முதுவேனில் கோடையில்
மரங்கொத்திப் பறவையின்
டொக்டொக் ஓசையில் நிறைகிறது
சீமைக்கருவேல மரங்கள் மண்டிய
முல்லை.
எங்கிருந்தோ பறந்து வந்த
நெகிழிப்பைகளைப்
பிடித்துக் கொண்ட
புதர்ச் செடிகளில் நுழைந்த காற்று
வெளியேற முடியாமல்
சிக்கி மூச்சுத் திணறுகிறது
முகாரி ராகம் இசைத்து.
நிலமெங்கும் துருத்திக் கொண்டு
நிற்கிறது
விளைச்சலின் ஈரலில் குத்திக் கொன்ற
ரியல் எஸ்டேட் கற்கள்
நவீன நடுகல்லாய்.

- சதீஷ் குமரன்