மஞ்சள் அறையில்
மெல்லத் திறக்கும்
ஒற்றைக் கண் சிறகு

சிறகு முளைத்த மறுகணம்
மடமடவென உடல் பூட்டி
கழுத்து நிரம்ப
தலைக்குத்தான் சற்று நேரம்
எடுத்தது

தலையும் பூட்டி தகதகவென
மின்னும்
வண்ணம் பூசி
அசைய விடுகையில்
அத்தனை ஆனந்தம்

மெய்நிகர் பூரிப்பில்
மேல் தோலில் புள்ளி புள்ளி
கோலமிட்டு புது வகைமையில்
பார்த்த போது யாவும் புதிதாய்
தோன்றியது

பின்,
அறையிலிருந்து ஜன்னல் வழியே
பறந்து போனது
பறவையா? நானா?

- கவிஜி