அவளைச் சந்தித்தபின் வாய்க்கவேயில்லை
மிகப்பிரியத்திற்குரிய
என் தன்னந்தனிமை

சிறு சருகென தனித்திருக்கையில்
மெல்லிய சுழல் காற்றாய்
ஏந்திச் செல்கிறாள்

சலனமற்ற நீராய் படர்ந்திருக்கையில்
கல்லாய் விழுந்து
அலையெழுப்புகிறாள்

இருள்முகிலாய் மிதக்கையில்
சிறு ஒளிக்கீற்றாய் பரவி
வெண்பஞ்சாய்
உருமாற்றுகிறாள்

இனி எப்போதும் வாய்க்கப்போவதில்லை
நாவற்க்கனியாய் மிளிரும்
அவளின் நினைவெழாக்
காரிருள் தன்னந்தனிமை

- கா.சிவா