அரிதாகத் தான்
இப்பொழுதும் பேசுகின்றேன்
அது என்னவோ
கொட்டித் தீர்ப்பதாகவே
இருப்பதாய்
"ம் “ என்பதை மட்டும்
இடைவெளிகளில் தருவிக்கின்றாய்
அத்தனை ஆரவாரங்கள்
எனக்குள் கொட்டமடிக்க
வெற்றுப் பிதற்றலில் மீள்கிறேன்
எல்லாம் முடிந்தபின்
நல்லா தூங்கு சரியா?! என்று
சாத்வீகமாய் தொனிக்கின்றாய்
பாவத்தில்
பங்கு எடுத்துக் கொள்ளும்
கடவுள் இந்த முறை
தூக்கத்தைப் பிடுங்கிவிட்டு
உனக்குக் கொடுக்கட்டுமென
உள்ளூரக் கிறுக்குகின்றது
ஒரு வரி இப்படியும்
இன்னொரு வரி அப்படியும்
முடிவில்
உன் வசம் சில கேள்விகளும்
என்னிடம்
மன்றாடிய அமைதியும்
ஒரே போல்
சொல்லி வைத்தன
விடியற்காலை சீக்கிரம்
எழவேண்டுமென.....!
- புலமி