எனது எல்லா காதலிகளிலும்
அம்முவையே
முதலாவதாக நிறுத்துகிறென்...
அவளைக் காதலிக்கையில்தான்
நான் ரசிகனானேன்...
அவளை எழுதாத தருணங்களில்தான்
மிக மெல்லிய ஓடைக்குள்
பெயர் அறியா
மீனாகிப் போனேன்...
சுயமற்று பிச்சையெடுத்து
அவள் முன்னால் நிற்பதில்
என் பிறழ்வுகள்
நியாயமாகின்றன....
மதுக் கோப்பைகளற்ற
என் காட்டுக்குள் அடர்ந்த
இருட்டாகி விட்ட யட்சி அவள்...
தலை விரிந்து கிடக்கும்
அவளின் அறைக்குள்
மிகச் சாதாரணமாக நுழையும்
சாத்தானை ஒத்தது எனது
வரம்....
அவளை போலொரு தூரத்தில்
அடிப்பட்டு சாகவே
சிறகடிக்கிறது எனது
பட்டாம்பூச்சி பயணங்கள்...
பின் எப்போதைக்குமான
சண்டையின் வீரியத்தை
அவளோடு கொண்ட முதல்
முத்தத்திலேயே
விதைத்து விட்டேன்...
பாலைவன குளிர் போன்றது
என்னை வெறுக்கும்
அவளின் காதல்...
யுத்தமுனை கொட்டும் குருதி
ஆனது
அவளை அடியோடு வெறுக்கும்
எனது காதல்....
இப்படியாகத்தான் எப்படியாகவும்
முதலாவதாகவே
நின்று கொண்டிருக்கிறாள்
செத்த பிறகும்
கத்தும் குயிலோசையென
அம்மு என்றொரு என் காதலி...
- கவிஜி