‘திராவிடர்’ என்ற சொல்லுக்கு, ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்போருக்கு பதிலளித்து மயிலாடு துறை கழகக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார்.

 

11.3.2011 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மயிலாடுதுறை சின்னகடைவீதியில் கழகம் சார்பாக தமிழர்களை  சுரண்டும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இர.ரசீத்கான் தலைமையில் நடைபெற்ற இப் பொதுக் கூட்டம், சமர் பா. குமரனின் இன எழுச்சிப் பாடல்களோடு துவங்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தமிழர் உரிமை மீட்பு இயக்கம் இரா. முரளிதரன், சுப்பு மகேசு, ம.தி.மு.க. நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினர்.

 

பெரியாரின் கொள்கைகளை, அந்தந்த கால கட்டத்தின் தேவையை கருதி நாம் பல்வேறு போராட்டங்களை, பரப்புரைகளை நடத்தி வருகிறோம். பெரியார் தொடக்கக் காலத்தில் சாதி ஒழிப்பை முதன்மை இலக்காகக் கொண்டிருந்தார். 1926 முதல் பெண் விடுதலையைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். 1928 இல் இருந்து பொது வுடைமை கொள்கைகளையும் இணைத்துக் கொள்கிறார். இதன் வளர்ச்சிப் போக்கில் 1938 ஆம் ஆண்டில் ‘தனித்தமிழ்நாடு’ என்ற முடிவுக்கு வருகிறார். (சாதி பேதமற்ற, பாலியல் பேதமற்ற, பொருளாதார பேதமற்ற சமுதாயத்தை அமைக்க வேண்டுமென்றால் அதற்கு தனித் தமிழ்நாடு தான் தீர்வு என முடிவு செய்கிறார்) இப்படிப்பட்ட கருத்துகளைக் கொண்ட பெரியாரியலை மக்கள் முன்னாள் எடுத்துச் செல்கின்ற நாங்கள், அதனுடைய ஒரு பகுதியாகத்தான், தமிழர்களை சுரண்டும் பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளை விளக்கப் பரப்புரையை செய்து வருகிறோம் என்று உரையைத் தொடங்கிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இடஒதுக்கீடு சிக்கல்கள் பற்றியும், இன்று தீண்டாமை ஒழிப்புச் சட்டங்கள் பல இருந்தாலும், அவைகளெல்லாம் நடைமுறைபடுத்தாமல்  இருப்பது பற்றியும், ஏன் பழங்குடி மக்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள் என்றால், அவரவர்கள் தங்களுக்கு தேவையான வற்றை தாங்களே உற்பத்தி செய்து கொள்வதை தடுக்க வேண்டும். எல்லோரும் வணிக நிறுவனத்தை நம்பித்தான் இருக்க வேண்டும் என்றச் சூழலை உருவாக்குவதற்காக பழங்குடி மக்கள் எல்லாம் தாக்கப்படுகிறார்கள். இடப்பெயர்வுக்கு ஆளாக்கப் படுகிறார்கள் என்றும் பச்சைவேட்டை பற்றியும் விரிவாக பேசினார்.

 

தொடர்ந்து பேசிய அவர்... “பரப்புரைக் கூட்டங்களில் இந்துமத எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரம் மட்டுமே இல்லாமல், பொருளியல் சிக்கல்களை பற்றியும் மக்களிடையே விளக்க வேண்டியதும், அதற்கான விழிப்புணர்வை மக்கள் பெற்றிட, இந்திய தேசிய - பன்னாட்டு திட்டங்களுக்கு எதிராக மெல்ல மெல்லவாகிலும், கிளர்ந்து எழ வேண்டும் என்பதை நோக்கமாகவும் கொண்டுதான் இந்த பரப்புரையை நடத்தி வருகிறோம். பெரியார் இறுதியாக நடத்திய மாநாடு தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு... அதோடு இழிவு ஒழிப்புக்காக எடுத்துக் கொண்ட திட்டம்தான் தனித் தமிழ்நாடு பரந்த சந்தை வேண்டும் என்று விரும்புகிற பனியாக்களுக்கு - வியாபார கூட்டத்திற்கு - சொந்த நாடே இல்லாத பார்ப்பனர்களுக்கு - வசதியாகவும் இந்திய தேசியத்தை  உருவாக்கிக் கொண்டார்கள்.

 

ஆனால், நாம் இழிவில் இருந்து விடுபடுவதற் கும், சுரண்டலில் இருந்து விடுபடுவதற்கும் இந்திய தேசியம் தடையாக இருக்கிறது. பார்ப்பன - இந்திய தேசியத்திற்கு எதிராகத்தான் திராவிடர்கள் என்ற அணியை பெரியார் உருவாக்கினார். “திராவிட நாடு வடநாட்டிலிருந்து பிரிந்து, தனியாக இருக்க விரும்பும் காரணம் கூட, இந்து மதத்தால் ஏற்பட்ட இழிவும், ஆரிய ஆதிக்கத்தில் இருக்கும் இழிவும், சுரண்டலும் ஒழிய வேண்டும் என்பதற்கும் ஆகும்” என்ற பெரியாரின் பேச்சு 1945 ஆம் ஆண்டு குடிஅரசில் இருக்கிறது. ஆரியர் திராவிடர் எல்லாம் கலந்து விட்டார்களே எப்படி பிரிப்பீர்கள் என்று அப்போது கேட்டார்கள். பெரியார் சொன்னார்... “அது எனக்கும் தெரியும். நான் இரத்த பரி சோதனை செய்து ஆரியர் - திராவிடர் என பிரிக்க வில்லை. அவர்களுடைய பழக்க வழக்கங்கள், ஆச்சார அனுஸ்டானங்களைப் பார்த்துதான் பிரிக்கிறேன்” என்று கூறினார். சுத்தமான தமிழ் இரத்தம் ஏதாவது கலந்துவிட்டதா என்று இப் போது பல அறிஞர்கள்(?) பிரித்துக் கொண்டிருக் கிறார்கள். பெங்களூரில் கூட ஒரு அறிஞர் இருக்கிறார். இவர் தெலுங்கர், கன்னடர் என்று ஆய்வு அறிக்கை எல்லாம் போடுவார். ஆனால் பெரியார், இனத்தூய்மை பார்த்து யாரையும் பிரிக்கவில்லை. இழிவில் இருந்து விடுபடுவதற்கு, அதற்கு தடையாக இருக்கிற ஒரே மக்கள் கூட்டத்தைத்தான் பிரித்து வைத்தார். இன்னொரு பக்கம் இதற்கு எதிராக பேசியவர்கள் இருந்தார்கள். தமிழ்நாட்டில்கூட ம.பொ.சி. இருந்தார்.

 

ம.பொ.சி. ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார்...

 

“பிராமணர் அல்லாதார் இயக்கத்திற்கு காரணமா னோர் யாரோ, அவர்கள்தான் தமிழ்நாட்டில் தமிழரல்லாதார் ஆதிக்கம் செலுத்த நேர்ந்ததற்கும் காரணம் ஆவார்கள். திராவிட மாயையில் இருந்து விடுபட்டதாக கூறிக்கொண்டு (?) மலையாளிகள் ஆதிக்கத்தை எதிர்த்து புறப்பட்ட பெரியார் ஈ.வெ.ரா. முதலில் பிராமணர் - பிராமணரல்லாதார் கூச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கட்டும். அப்போது தான் தமிழர் அல்லாதாரின் ஆதிக்கத்தை எதிர்த்து தமிழர் வாழ்வு பெற முடியும்” என்று ம.பொ.சி. எழுதினார்.

 

ஆனால், பெரியார் இதில் மாறுபட்டார். யாரை இணைத்துக் கொண்டார், யாரை விலக்கி வைத்தார் என்பதுதான். பெரியாருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வேறுபாடு திராவிடர் என்பதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, அகராதியில் பொருள் தேடக் கூடாது. அகராதியில் பார்க்கும் போது பலவற்றை தவறாக புரிந்து கொள்ள நேரிடும். எனது சிறுவயதில் நாங்கள் ஒரு நாடகம் நடத்தினோம். ஒருவர் ஆங்கிலத்தில் சொல்வார். அதை நான் தமிழில் மொழி பெயர்ப்பேன்... “லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என்பார். அதற்கு நான் “பெண்களே சாதுவான ஆண்களே” என்று மொழி பெயர்ப் பேன். “ஐ ஏம் கம்மிங் ப்ரம் கிரீன்லேண்ட்”என்பார். “நான் பச்சை நிலத்திலிருந்து வருகிறேன்” என்று மொழி பெயர்ப்பேன். “டூ யூ அண்டர்ஸ்டேண்ட்” என்பார்.  அதற்கு நான், “நீ அடியில் நிற்கிறாயா” என்பேன். “வெண்டைக்காயும் முருங்கைகாயும் சாப்பிடு” என்ற பொருளில், “ஈட் லேடீஸ் பிங்கர் அண்ட் டரம்ஸ்டிக்” என்பார். “பெண்கள் விரல்களையும் தப்பட்டை குச்சிகளையும் சாப்பிடுங்கள்” என்று மொழி பெயர்ப்பேன். அகராதியில் பார்த்தால் தவறாக இப்படித்தான் மொழி பெயர்க்க முடியும்.

 

“ஆட்டம்” (atom) என்ற சொல்லுக்கு லத்தீனில் பிளக்க முயாதது என்று பொருள். Dalton’s atomic Theoryசொல்கிறது... atom is indivisible (அணு என்பது பிளக்க முடியாதது) என்பதுதான். அப்போது நிலவிய விஞ்ஞான கொள்கை. ஆனால், இப்போது அதை புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என பிரிக்க முடியும் என்பதும், பிளக்கும் போது வெளிப்படும் ஆற்றலில் (அணு சக்தியில்) இருந்து பல்வேறு ஆக்க வேலைகளையும், அழிவு வேலைகளையும் செய்ய முடியும் எனக் கண்டுபிடித்துவிட்டார்கள். அணுவை பிளக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த காலத்தில், பிளக்க முடியாதது என்ற பொருளுள்ள ‘ஆட்டம்’ என்ற சொல்லை மாற்றிவிடவில்லை. பிளக்க முடியும் என தெரிந்த பின்னாலும் ‘ஆட்டம்’ என்பதை மாற்றவில்லை . ஒரு சொல்லில் ஏற்றப் பட்டிருக்கும் உள்ளடக்கம் தான் முக்கியம் அப்படித்தான் பெரியார், திராவிடர் என்ற சொல்லிற்கு ஒரு உள்ளடக்கத்தை கொடுத்துள்ளார்.

 

மக்களை பலவற்றிற்காக பிரிக்கலாம். பள்ளியில் மாணவர்களை பாட தெரிந்தவர் - பாட தெரியாதவர் என ஆசிரியர் பிரிப்பார் நாடகம் போடு வதற்காக! விளையாட்டு ஆசிரியர், உயரமானவர்கள் - உயரம் குறைந்தவர்கள் எனப் பிரிப்பார் கூடை பந்து விளையாட்டிற்கு! இரண்டு ஆசிரியர்களுக்கும் நோக்கம் வேறு. அதைப் போலதான் பெரியாரின் நோக்கம் இழிவு ஒழிப்பு. அதாவது சாதி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு பிரிக்கப்பட்ட பிரிவினைதான் ஆரியர் - திராவிடர். அந்த நோக்கம் இல்லாதவர்கள் மொழி வழியாக நாட்டை மட்டும் பிரித்துக் கொண்டால் போதும் என்று கருதுபவர்கள், இந்த மொழி பேசுபவர்கள், வேறு மொழி பேசுகவர்கள் என்று பிரித்துப் பார்க்கிறார்கள். பெரியாருக்கு தமிழர் என்று மொழி வாரியாக அடையாளப்படுத்துவதைவிட, ‘மனிதர்’ என்று எல்லோரையும் சமப்படுத்துவது தான் நோக்கம். இழிவை நீக்குவதற்கு தேவையான அடையாளங்களைப் பார்த்து பிரித்தார்.

 

இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது காங்கிரஸ்காரர்கள் எல்லாம் சொன்னார்கள்... உன் மொழி வேறு - என் மொழி வேறு. உன் பழக்க வழக்கம் வேறு - என் பழக்க வழக்கம் வேறு. உன் உடை வேறு - என் உடை வேறு. உன் உணவு முறை வேறு - என் உணவு முறை வேறு, உன் கலாச்சாரம் வேறு - என் கலாச்சாரம் வேறு. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர்களா எங்களை ஆள்வது? என்று.

 

இந்திய நாட்டு விடுதலைக்குப் பிறகு ஆறாயிரம் மைல் இரண்டாயிரம் மைல்களாக குறைந்திருப்பதை தவிர மற்றவை எல்லாம் அப்படியே தானே இருக்கிறது என்று பெரியார் கேட்டார். மைல்கள் குறைந்திருக்கிறதே தவிர, கேள்விகள் அப்படியேதான் இருக்கிறது. உன் மொழி வேறு - என் மொழி வேறு. உன் பழக்க வழக்கம் வேறு - என் பழக்க வழக்கம் வேறு. உன் உடை வேறு - என் உடை வேறு. உன் உணவு முறை வேறு - என் உணவு முறை வேறு, உன் கலாச்சாரம் வேறு - என் கலாச்சாரம் வேறு. நமது அடிமைத்தனம் அப்படியே தான் தொடர்கிறது. நமது அடிமைத்தனத்தை, பன்னாட்டுச் சுரண்டல், பன்னாட்டு சுரண்டலுக்கு துணையாக இருக்கிற பார்ப்பனர்கள் ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்து பார்க்க வேண்டியிருக்கிறது. சாதி அடிமட்டத்தில் இருக்கிற, எந்த மக்களை பெரியார் உயர்த்த வேண்டும் என விரும்பினாரோ, அந்த மக்களை உயர்த்துவதற்கு, அந்த மக்களை பாதுகாப்பதற்கு - அந்த மக்களின் பொருளியல் வளங்களை பேணுவதற்கு - நமக்கான நாட்டை உருவாக்கிக் கொள்வோம். நமக்கான பொருளாதாரத்தை கட்டமைக்க முயல்வோம். அதுவரை இந்த பொருளாதார சுரண்டல்களை - பார்ப்பன - இந்திய தேசிய - பன்னாட்டுக் கொள்ளையை தடுப்பதற்கு நாம் இணைந்து நிற்போம்” என்ற வேண்டுகோளோடு உரையை நிறைவு செய்தார்.

Pin It