என்னை நிறுத்தி
என் கவிதைப்பற்றி
எதுவும் கேட்காதீர்கள்
அந்தக்கணத்தில்
பனியாய் இறங்கியவை
பறவையைப்போல்
சிறகு விரித்தவை
நானும் அந்தக்கணமும்
ஒன்றிப்புணர்ந்த பொழுதில்
சிந்தியவை;
சிந்தித்தவை
மீண்டும்
சேதாரமின்றிச்
சேகரிக்கமுடியாது
அந்த’நான்’
இப்போது என்னிடமில்லை
இப்போது என்னிடம்
வேறொரு நான்
நாளைக்கு
இன்னொரு நான்
காலநதியாய் ஓடிக்கொண்டிருக்கையில்
மீண்டும் நான் மீண்டு
நேற்றைக்கு வரமுடியாது
கால்கள் விரைய
வழிவிடுங்கள்
இன்னொரு நானும்
கவிதையும்
நாளை சந்திப்போம்