இன்றும் அதே சிந்தனைகள் இன்னுமொரு ஆடை பூண்டு
பூதாகரமாய் உருவெடுக்கும்
உங்கள் மீதான தூற்றங்களை
அள்ளிக் கூட்டி விசிறிக் கடாசப்பட்ட
புணர் ஜென்ம ஊழ் வினைகளை
மீண்டும் தட்டியெடுத்து வெள்ளையடிக்கும்
திரண்டு உருண்ட உறுப்புகள் சுருங்கி
பெருகியோடும் உங்கள் வாய் வீரங்களை மறந்து
மீண்டும் ஒரு குழந்தையாவீர்கள்,
உங்கள் பாதம் தொட்டு நீண்ட சேவகர்களும்
ஆமென்று ஆமோதித்துக் கிடக்கும்
உங்களைச் சுற்றிய உங்களுக்கான
தலையை விட தலைப்பாகை கணக்கும் பிரதானிகளும்
இன்னுமோர் உச்சத்தில் உங்களையிருத்தக்கூடும்,
என்றென்றும் விவரிக்கயியலாதொரு உலகில்
விழியெங்கும் கனவுகள் விரிய உங்களுக்கானவைகளை
கனவுப் பாத்திரங்கள் மூலம் சேகரம் செய்து கொண்டிருப்பீர்கள்,
முற்றிலும் வர்ணங்களிலானதொரு உலகை
உங்கள் விரல் நுனியில் இசைந்தாடும சூரிய சந்திரன்களை
மெல்லப் பனியிடரும் சாமப் பொழுதுகளை
கட்டியாண்டு சளைத்துவிட்டதாய் சடைவீர்கள்,
சூரியப் பொழுதிலும் கூட ராக்கனவு ராசாவாய்
பகட்டு ராஜாங்கமேற்றுத் திரிகையிலும் கூட
உங்கள் பிடரி வழியாய் ஒழுகும் குருதியை
மறந்துதான் போவீர்கள்.

 - எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)